பதிவு செய்த நாள்
14
டிச
2017
11:12
சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரத்தில் புதையுண்ட 12 ம் நூற்றாண்டு கோயிலை தொல்லியல்துறையினர் பாதுகாக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. இந்த ஊரில் சோழ மன்னர் தங்கியிருந்தபோது, வழிபாட்டிற்காக சிவலிங்கம் ஒன்றை நிறுவினார். இதனால் சோழபுரம் எனப் பெயர்பெற்றது. இங்கு புகழ்பெற்ற அருள்மொழி நாதர், அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயில் உள்ளது.
இக்கோயில் பின்புறம் வடைகரை காளியம்மன் கோயில் செல்லும் வழியில் பழமையான கோயில் மண்ணில் புதையுண்டும், சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இக்கோயிலில் சுவாமி சிலை எதுவும் இல்லை. கோயில் சுவர்களில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இதில் 12 ம் நூற்றாண்டு பாண்டியர் காலத்து கல்வெட்டுகளும், 13 ம் நூற்றாண்டு சோழர் காலத்து கல்வெட்டுகளும் கலந்து காணப்படுகின்றன. சமீபகாலமாக கோயில் சுவர்களில் இருந்து, கற்கள் பெயர்ந்து கீழே விழுந்து வருகின்றன. கல்வெட்டுகளை தொல்லியல்துறையினர் முழுமையாக ஆய்வு செய்தால் கோயில் விபரம், மற்றும் தானம், சொத்துக்கள் குறித்து அறியலாம்.
சோழபுரம் சுப. சண்முகசுந்தரம் கூறுகையில், இதனை ஓட்ட மண்டபம் என்று கூறுவோம். அந்த காலத்தில் வேட்டையாட வரும் மன்னர்கள் இந்த மண்டபத்தில் தங்கி செல்வதாக கூறுவர். சிலர் கோயில் என்றும் கூறுகின்றனர். முழுமையாக எங்களுக்கு தெரியவில்லை,” என்றார்.
தொல்லியல்துறையினர் கூறியதாவது: தகவல் அறிந்து கோயிலை கல்வெட்டுகளை ஆய்வு செய்தோம். அவை 12 மற்றும் 13 ம் நூற்றாண்டு பாண்டியர், சோழர் காலத்து கல்வெட்டுகள். பத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அவை மாறி, மாறியுள்ளதால் படிப்பதில் சிரமம் உள்ளது. முதற்கட்டமாக அவற்றை படி எடுத்துள்ளோம். அவற்றை வாசிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அப்போது கோயில் குறித்த முழுமையான விபரம் கிடைக்கும், என்றனர்.