சபரிமலை: சபரிமலையில் நாள் முழுவதும் பெய்த மழையால் பக்தர்கள் சிரமப்பட்டனர். மலையில் கடுமையான குளிர் நிலவுகிறது. சில நாட்கள் இடைவெளிக்கு பின்னர் சபரிமலையில் நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்ய தொடங்கியது. ஒரு மணி நேரம் பலமாக பெய்த மழை பின்னர் சாரலாக மாறியது. நேற்று காலையில் 10:00 மணி வரை மழை பெய்யவில்லை. அதன் பின்னர் மேகமூட்டம் அதிகரித்து 11:30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை மாலையிலும் நீடித்தது. மதியம் உச்சபூஜை நேரத்திலும் மழை கொட்டியது. இதனால் தந்திரியும், பூஜாரிகளும் குடை பிடித்து களபபவனி நடத்தினர். பக்தர்கள் தண்ணீர் சொட்ட மழையில் நனைந்த படி தரிசனம் செய்தனர். மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் சறுக்கல் ஏற்பட்டு பக்தர்கள் மலையேற சிரமப்ப்பட்டனர். இடைவிடாது பெய்த மழையால் சன்னிதானத்தில் அதிக குளிர் இருந்தது.