பதிவு செய்த நாள்
14
டிச
2017
01:12
கோவை: சபரிமலை யாத்திரையின் போது, வழி தவறிபோகும் குழந்தைகளை எளிமையாக கண்டறிய, புதிய, ரேடியோ டிராக்கிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மகர விளக்கு விழா : ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவுக்கு, நாடு முழுவதிலும் இருந்து பெருந்திரளான, பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். பம்பைக்கும், சன்னிதானத்துக்கும் இடையே மலைப்பாதையில் யாத்திரை செல்லுகையில், குழந்தைகள் காணாமல் போவதாக, கேரள போலீசுக்கு அதிக புகார்கள் வருகின்றன. இதை தடுக்க முதல் முறையாக, கேரள போலீஸ் மற்றும் வோடபோன் தொலை தொடர்பு நிறுவனம் இணைந்து, ஆர்.எப்.ஐ.டி., எனும், ரேடியோ அதிர்வெண் டிராக்கிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் குடும்பத்தினர், இந்த சேவையைப் பெற, பம்பையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்த ஒவ்வொரு குழந்தைக்கும், ஒரு ஆர்.எப்.ஐ.டி., அட்டை வழங்கப்படும். அதில், அந்த குழந்தையின் பெயர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், அவர்களது மொபைல் எண்கள் உள்ளிட்ட பிற விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, குழந்தைகளின் கழுத்தில் அட்டை தொங்கவிடப்படும். குழந்தைகள் கூட்டத்தில் தொலைந்து அங்குமிங்கும் சுற்றித் திரிந்தால், போலீசார், குழந்தைகளை மீட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து செல்வர்.
பிரத்யேக கருவி : ஆர்.எப்.ஐ.டி., அட்டை யில் உள்ள பிரத்யேக கருவி மூலம் பெற்றோரின் மொபைல் எண்ணுக்கு தகவல் சென்று விடும் என்பதால், குழந்தைகளை எளிதில் கண்டறியலாம்.பத்தனம்திட்டா மாவட்ட எஸ்.பி., சதீஷ் பினோகூறுகையில், குழந்தைகள் காணாமல் போனால், அவர்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பது போலீசுக்கு பெரும் சவாலாக இருந்தது.இந்த தொழில்நுட்பம் எங்கள் பணியை எளிமையாக்கியுள்ளது. இந்த சேவை மகர விளக்கு பூஜை விழா வரை தொடரும், என்றார்.