பதிவு செய்த நாள்
14
டிச
2017
01:12
சென்னை: கோவில் சொத்துக்கள் வாயிலாக, ஆறு ஆண்டுகளில், 838 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. சொத்துக்களை பாதுகாக்க, பிற துறைகளின் ஒத்துழைப்பு தேவை என, அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக கோவில்களின் சொத்துக்கள் தொடர்பாக, அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து, 685 கோவில்கள் உள்ளன. இவற்றுக்கு சொந்தமாக, 4.80 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. சொத்துக்களை பெருக்கும் வகையில், 22 ஆயிரத்து, 600 கட்டடங்கள், 33 ஆயிரத்து, 665 மனைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள், 1.23 லட்சம் விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இதன்படி, ஆறு ஆண்டுகளில், கோவில்களுக்கு, 838 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. கோவில்களின் விவசாய நிலங்கள், வாடகை நிலுவை தொடர்பான வழக்குகளை முடிக்க, 1961 முதல், தனி ஆட்சியர் தலைமையில், தமிழகத்தில், 10 இடங்களில், வருவாய் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் வாயிலாக, 9,629 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. தனியாரின் பிடியில் இருந்த, 5,559 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு, மீண்டும் கோவில் பெயரில், பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2,887 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், மனை, கட்டடங்கள் மீட்கப் பட்டுள்ளன. அறநிலையத் துறையின் முயற்சிகளுக்கு, வருவாய், சுற்றுலா, காவல் துறை உள்ளிட்ட பல துறைகளின் ஒத்துழைப்பு கிடைத்தால் தான், கோவில் சொத்துக்களை முழுமையாக பாதுகாக்க முடியும். இவ்வாறு அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.