பதிவு செய்த நாள்
15
டிச
2017
11:12
திருமலையில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி அன்று, கோவில் கருவறையை ஒட்டி உள்ள வைகுந்த வாயில் திறக்கப்படும். வைகுண்ட ஏகாதசியன்று இரவு, 1:30 மணிக்கு திறக்கப்படும் வைகுந்த வாயில், மறுநாள் துவாதசி நள்ளிரவு, 12:00 மணிக்கு மூடப்படும். இரண்டு நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் வைகுந்த வாயில் வழியாக செல்ல, பக்தர்கள் கூட்டம் திருமலையில் அலைமோதும். இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி, டிச., 29 வெள்ளிக்கிழமை வருகிறது. வாரந்தோறும், வெள்ளிக்கிழமை காலை, தங்க கிணற்று நீரால், ஏழுமலையானுக்கு அபிஷேகம் நடத்தப்படும். அதனால், வைகுண்ட ஏகாதசி அன்று அபிஷேகம், தோமாலை, அர்ச்சனை, திருப்பாவை உள்ளிட்ட சேவைகள், ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்பட உள்ளன. இந்த சேவைகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.
அபிஷேகம் முடிந்த பின், வி.வி.ஐ.பி.,க்கள் வைகுண்ட ஏகாதசி அன்று, காலை, 5:30 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே தரிசன டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி.,க்களின் தரிசனம் முடிந்ததும், தர்ம தரிசனம் என்ற இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். வைகுண்ட ஏகாதசி அன்று, ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்கள், டிச., 28 காலை, 10:00 மணி முதல் காத்திருப்பு அறைகளில் காத்திருக்க அனுமதிக்கப்படுவர். காத்திருப்பு அறைகள் நிரம்பிய பின், ஆழ்வார் குளம், மேதரமிட்டா, நாராயணகிரி தோட்டம், வடக்கு மாடவீதி, வட்ட பாதை மற்றும் வைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தரிசன வரிசைகளில் காத்திருக்க அனுமதிக்கப்படுவர். காத்திருப்பு அறையில் உள்ள பக்தர்கள், 24 மணி நேர காத்திருப்பிற்கு பின், டிச., 29 காலை, 8:00 மணி முதல், ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். மேலும், டிச., 28 முதல், ஜன., 2ம் தேதி வரை, தர்ம தரிசன பக்தர்களுக்கு, ’ஆக்சிஸ் கார்டு’ வழங்குதல், நேர ஒதுக்கீடு முறை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளது. காத்திருக்கும் பக்தர்கள் அனைவருக்கும், 24 மணி நேரமும் அன்னதானம், சிற்றுண்டி, பால், டீ, காபி, மோர் உள்ளிட்டவை வழங்கப்படும்.
டிச., 28 முதல் ஜன., 2ம் தேதி வரை, திருமலையில் ஆர்ஜித சேவைகள், திவ்ய தரிசனம் என்ற பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கான தரிசனம், வி.ஐ.பி., பிரேக், முதன்மை தரிசனங்களான கைக்குழந்தை பெற்றோர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நன்கொடையாளர்கள் உள்ளிட்டோரின் தரிசனங்கள் அனைத்தையும், தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. டிச., 29ல் வைகுண்ட ஏகாதசியன்று மட்டும், தர்ம தரிசன வரிசையில் வரும் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில், தேவஸ்தானம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவு தரிசன, 300 ரூபாய் டிக்கெட், டிச., 30ல், 5,000 பேருக்கும், ஜன., 1ல், 10 ஆயிரம் பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தர்ம தரிசனத்தில் வரும் பக்தர்கள், 24 மணி நேரம் காத்திருந்தால், கண்டிப்பாக தரிசனம் பெற முடியும் என தேவஸ்தானம் தரப்பில் கூறப்படுகிறது. டிச., 28 - ஜன., 2ம் தேதி வரை, திருமலை மலைப் பாதை மார்க்கங்கள், பாதயாத்திரை பக்தர்கள் நடந்து வரும் பாதை உள்ளிட்டவை, 24 மணி நேரமும் திறந்திருக்கும். ஐந்து நாட்களும் திருமலை - திருப்பதி இடையே, ஐந்து நிமிடத்திற்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. - நமது நிருபர் -