பதிவு செய்த நாள்
15
டிச
2017
12:12
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று, கார்த்திகை மாத தெப்பத் திருவிழா கோலாகலமாக நடந்தது. திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான, திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், நேற்று, கார்த்திகை மாதம், சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, தெப்ப திருவிழா நடந்தது. விழாவையொட்டி, காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை, 4:30 மணிக்கு, உற்சவர் கோவிலில் இருந்து, சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக புறப்பட்டு, கோவில் மாடவீதிகள் வழியாக, இரவு, 7:00 மணிக்கு, கோவிலின் பின்புறம் உள்ள ஆலங்காட்டீசர் சென்றாடு தீர்த்த குளத்திற்கு வந்தார்.பின், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், உற்சவர் வண்டார் குழலியம்மன் உடனுறை வடாரண்யேஸ்வர சுவாமி சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளினார். தொடர்ந்து, பக்தி இன்னிசை கச்சேரியுடன் உற்சவ பெருமான், மூன்று முறை குளத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.