பதிவு செய்த நாள்
18
டிச
2017
05:12
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி உற்ஸவங்கள் நாளை முதல் துவங்குகிறது.ஆண்டுதோறும் மார்கழியில் ஆண்டாள் கோயிலில் பகல்பத்து, ராப்பத்து, எண்ணெய்காப்பு உற்சவங்கள் மற்றும் வைகுண்ட ஏகாதசி வைபவங்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு டிச.19 முதல் 2018 ஜனவரி 14 வரை மார்கழி உற்ஸவங்கள் நடக்க உள்ளன.
பகல்பத்து உற்ஸவம் : இவ்விழாவின் முதல்நாளான நாளை மாலை 5:00 மணிக்கு வேதபிரான் திருமாளிகைக்கு ஆண்டாள், ரெங்கமன்னர் எழுந்தருளி பச்சைபரத்தலை காண்கின்றனர்.இதனையடுத்து பகல்பத்து உற்ஸவம் துவங்குகிறது. இதில் தினமும் காலை 10:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளுகிறார். இங்கு அரையர்சேவை, திருவாராதனம், பெரியபெருமாள் பக்தி உலவுதல் முடிந்து இரவு ஆண்டாள், ரெங்கமன்னார் மூலஸ்தானம் வந்தடைவர்.
ராப்பத்து உற்ஸவம் : டிச.29 முதல் ஜனவரி 8 வரை ராப்பத்து உற்ஸவம் வடபத்ரசயனர் சன்னதியில் நடக்கிறது. 8ம் திருநாள் ஆண்டாள் சன்னதியிலும் நடக்கிறது. பத்து, மற்றும் 11ம் திருநாள் எண்ணெய்காப்பு உற்ஸவம் நிறைவு பெற்ற பிறகுஆண்டாள் சன்னதியில் ராப்பத்து உற்சவம் நடக்கிறது.
பரமபதவாசல் திறப்பு : டிச.29 வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு பெரியபெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் வேதவிண்ணப்பமாதல் நடக்கிறது. தொடர்ந்து காலை 7:05 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக எழுந்தருள்கின்றனர்.
எண்ணெய் காப்பு உற்ஸவம் : 2018 ஜனவரி 7 முதல் 14 வரை ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்ஸவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு ஆண்டாள் தினமும் சன்னதியிலிருந்து புறப்பட்டு, மாடவீதிகள் வழியாக எண்ணெய்காப்பு மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு மதியம் 3:00 மணிக்கு எண்ணெய்காப்பு உற்ஸவம் நடக்கிறது.