திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத்திருவிழா ஜன.,27 ல் நடப்பதை முன்னிட்டு, ஜி.எஸ்.டி., ரோட்டிலுள்ள தெப்பக்குளத்திற்குள் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இக்குளத்தில் தை மாதம்கோயில் சார்பில் மிதவை தெப்பம் அமைத்து, அதில் சுவாமி, தெய்வானை எழுந்தருளுவர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மிதவை தெப்பம் காலையில் மூன்று சுற்றுக்கள் சுற்றிவரும். இரவில் தெப்பக்குளம் மைய மண்டப ஊஞ்சலில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி பக்தி உலாத்துதல் முடிந்து, மீண்டும் மிதவை தெப்பத்தில் எழுந்தருளுவர். தெப்பம் மூன்று முறை வலம் வந்து தெப்பத் திருவிழா நடக்கும். இந்த ஆண்டு ஜன.,27ல் தெப்பத் திருவிழா நடக்கிறது. அதற்காக ஆழ்குழாயிருந்து தண்ணீர் நிரப்பப்படுகிறது. கடந்த ஆண்டு தண்ணீரின்றி நிலை தெப்பத்தில் திருவிழா நடந்தது. இந்த ஆண்டு பெய்த மழையால் ஆழ்குழாயில் தண்ணீர் உள்ளது. குளத்திற்குள் விடப்படும் தண்ணீர் ஓரளவிற்கு பூமிக்குள் சென்றுவிடும். அதனால் தெப்பக்குளம் முழுமையாக நிரம்புமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.