பதிவு செய்த நாள்
20
டிச
2017
11:12
அலங்காநல்லுார்:மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு விழாவை முன்னிட்டு, காளியம்மன் கோயிலுக்கு நேற்று மாலை சாற்றுதல் வைபவம் நடந்தது. அம்மன், சூலாயுதத்திற்கு காப்பு கட்டி ஜல்லிக்கட்டு பணிகள் துவங்கின. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி இந்தாண்டு பிப்.,10ல் பாலமேட்டிலும், அதை தொடர்ந்து அலங்காநல்லுாரிலும் ஜல்லிக்கட்டு விழா நடந்தது. வரும் ஆண்டும் வழக்கம் போல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது.அதன்படி 2018 ஜன., 14ல் அவனியாபுரம், ஜன.,15ல் பாலமேடு, ஜன.,16ல் அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடத்த கிராம பொது கமிட்டி கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அம்மனுக்கு சாற்றுதல்: மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், நோய் நொடிகள் அண்டாமல் இருக்கவும், கால்நடைகள் வளம் காண வேண்டியும் ஆண்டு தோறும் அலங்காநல்லுார் காளியம்மன் கோயிலுக்கு, டிச.,19 ல் சாற்றுதல் செய்விக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். இதன்படி நேற்று மாலை 6:45 மணிக்கு அலங்காநல்லுார் கிராம மக்கள் சார்பில் காளியம்மன் கோயிலுக்கு சாற்றுதல் நடத்தப்பட்டது. அம்மன், சூலாயுதத்திற்கு காப்பு கட்டி சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கைகளில் காப்பு கட்டி விரத காலத்தை துவக்கினர்.
ஜன.,2ல் கரகம் எடுப்பு: அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவர் சுந்தர்ராஜன், செயலாளர் சுந்தரராகவன் கூறியதாவது: காளியம்மனுக்கு சாற்றுதல் செய்வது குறித்து, கிராம மக்கள் மந்தையில் கூடி முடிவு செய்தோம். பின் அம்மனுக்கு சாற்றுதல் செய்விக்கப்பட்டது. பதினைந்து நாட்கள் சாற்று கடைப்பிடிக்கப்படும். ஜன., 2ல் அம்மனுக்கு கரகம் எடுக்கும் விழா மாலையில் நடக்கிறது. ஜன.,3ல் மதியம் கூழ் ஊற்றி வழிபாடுகள் நடத்தப்படும். மாலையில் ஆற்றில் கரகம் விடப்படும். காப்பு கட்டிய நாளில் இருந்து ஜல்லிக்கட்டுக்கான பணிகள் துவங்குவதாக ஐதீகம், என்றனர்.
அலங்காநல்லுார் காளை வளர்க்கும் கோவிந்தராஜன் கூறியதாவது: ஜல்லிக்கட்டு காளைக்கு நாட்டு மாடுகளின் கன்றுகளை தேர்வு செய்வோம். சுறுசுறுப்பாக... துருதுருவென... துள்ளிக்குதித்து ஓடும். அகலமான கருவிழியுடன், திமில் உயரமாக பிரமிடு போல் தோற்றம் கொண்டிருக்க வேண்டும். வாலின் முடி கருப்பாகவும், மயில் தோகை போல் மென்மையாகவும், பார்த்ததுமே அலேக்காகத் துாக்கி குழந்தையை கொஞ்சுவது போல் கொஞ்சத்தோன்றும் அழகான கன்றுகள் மட்டுமே ஜல்லிக்கட்டு காளைகளாக பிற்காலத்தில் மிளிரும்.
விட்டுக்கொடுக்கும் தன்மை கொண்டதாக கன்றுகளை வளர்க்கக்கூடாது. திமிலை சிலிர்த்து திமிரை காட்டும் முரட்டுக் காளையாகவும், அன்புக்கு கட்டுப்படும் அன்புக்காளையாகவும் வளர்க்க வேண்டும். சத்தான உணவு வழங்குவதால் உடலில் கொழுப்பு சத்து சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக, காளைகள் நீச்சல் பயிற்சிக்கு வாரம் ஒரு முறை கண்மாயில் விடப்படுகிறது. முன்னோர் காலத்தில் இருந்து ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பது வழக்கம். தற்போது நான்கு காளைகள் வளர்க்கிறேன், என்றார்.