திருப்பதி: திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணதிர சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருமலை மூலவரான சீனிவாசப்பெருமாள் சன்னதிக்கு பக்கம் உள்ள சொர்க்கவாசல் வைகுண்ட ஏகாதசி நாளான்று மட்டும் திறக்கப்படும். வருடத்தில் ஒரு நாள் மட்டும் கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு பக்தர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் திரண்டு வந்திருந்தனர். மூலவரை பார்த்துவிட்டு பின் சொர்க்கவாசல் எனப்படும் வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஏகாதசியை முன்னிட்டு கோவிலின் கோபுரம் முழுவதும் மின் விளக்குகளாலும் கொடிமரம் இருக்கும் பகுதி மலர்களாலும் சிறப்புற அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காத்திருந்த பக்தர்களுக்காக விடிய விடிய பல இடங்களில் பெருமாளின் புகழ்பாடும் பஜன் நடைபெற்றது.நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.