பதிவு செய்த நாள்
01
ஜன
2018
11:01
அன்புள்ளம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
புத்தாண்டில் நீங்கள் அறிவை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பட்ட கஷ்டங்கள் எல்லாம் பலனாக மாறும். குரு பிப். 14-ல் 8-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அங்கு அவர் நிலையற்ற தன்மையைக் கொடுப்பார். பொருளாதார சரிவு, சில பிரச்னைகளைத் தருவார். ஆனால் அவரது 7-ம் இடத்துப் பார்வையால் உங்களது ஆற்றல் மேம்படும். பகைவர்களின் சதி எடுபடாது. ஏப்.9 -முதல் செப்.3 -வரை வக்கிரம் அடையும் குருவால் நன்மையே நடக்கும்.
சனிபகவான் இந்த ஆண்டு முழுவதும் தனுசு ராசியில் இருப்பதால் முயற்சிகளில் தடைகள் வரலாம், எதிரிகளின் இடையூறு தலைதூக்கும், பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். அவர் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3,7,10ம் இட பார்வை பொருளாதார வளத்தையும் தொழிலில் முன்னேற்றத்தையும் தரும். பொன், பொருள் கிடைக்கும்.
மகிழ்ச்சி அதிகரிக்கும். ஏப்.28- முதல் செப்.11- வரை அவர் தனுசு ராசிக்குள்ளேயே வக்கிரம் அடைகிறார். வக்கிரத்தில் சிக்கும்போது அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சாதகமற்ற இடத்தில் இருக்கும் சனிபகவான் வக்கிரம் அடைந்தால் உங்களுக்கு கெடு பலன்கள் குறைந்து விடும். ராகு கடகத்திலும், கேது மகரத்திலும் இருப்பது சிறப்பானது அல்ல. அவர்கள் அலைச்சலையும், சில பிரச்னையையும் உருவாக்கலாம். மொத்தத்தில் குரு, சனி பகவானின் பார்வை பலத்தால் இந்த ஆண்டு உற்சாகமாக அமையும். உங்கள் முயற்சியில் தடைகள் வந்தாலும் எளிதில் முறியடிப்பீர்கள். பொருளாதாரம் மேம்படும். தடைகள் விலகி எடுத்த காரியங்கள் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மன உளைச்சல் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குரு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அப்போது செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள் கிடைக்கும். திருமணம், சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வீடு-, மனை, வாகனம் வாங்கலாம். குடும்பத்தில் கடந்த ஆண்டு இருந்த பூசல்கள் மறையும். கணவன், -மனைவி ஒற்றுமை ஏற்படும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். சிலர் வசதியான வீட்டுக்கு குடிபுகுவர். வாகனம் வாங்க வாய்ப்பு கிடைக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு இருக்கும். சிலருக்கு கோயில்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு சனியால் பிரச்னை அதிகரித்தாலும், உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும் போகாது. பங்குதாரர்களிடையே ஒற்றுமை, மனநிம்மதி ஏற்படும். சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்துவர். வியாபார விஷயமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
பணியாளர்களுக்கு வளர்ச்சி இருக்கும். வேலைப்பளு குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கை நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பதவி, சம்பள உயர்வு கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். கலைஞர்கள் புகழும் பெருமையும் கிடைக்க பெறுவர். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவர். மேற்படிப்பு தொடரும். விவசாயிகள் வளத்தோடு மன நிம்மதியும் காண்பர். புதிய சொத்து வாங்குவர். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். புத்தாடை, அணிகலன்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர்.
பரிகாரம்:
* பவுர்ணமியன்று சித்திர புத்திர நாயனாரை வணங்குதல்
* ஏழைகளுக்கு உதவி.
* சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம்.செல்ல வேண்டிய தலம்- திருநாகேஸ்வரம் நாகநாதர் (ராகு) கோயில்.