ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2): மன உறுதி கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
பதிவு செய்த நாள்
01
ஜன 2018 11:01
தடுமாற்றம் இருந்தாலும் தாங்கிப் பிடிக்க ஆட்கள் உண்டு
உங்கள் ஆட்சி நாயகன் சுக்கிரன் எட்டாம் இடத்தில் இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி தந்து கொண்டிருக்கும் தருணத்தில் இந்த ஆண்டு மலர்கிறது. செவ்வாயும் சாதகமாக உள்ளது. ஆண்டு தொடக்கத்தில் சுமாரான பலன் என்றாலும் பிற்பகுதி சிறப்பாக அமையும். சனி பகவான் 8-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவர் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும், கருத்துவேறுபாடும் ஏற்படும். ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். ஆனால் இந்த கெடு பலன்கள் ஏப்.28-முதல் செப். 11-வரை சனிபகவான் வக்ரத்தில் உள்ள காலக்கட்டத்தில் குறையும்.
ராகு 3-ம் இடமான கடகத்தில் உள்ளார். அவர் காரிய அனுகூலத்தையும், உடல் சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும், கொடுப்பார். கேது 9-ம் இடமான மகரத்தில் இருக்கிறார். அவரால் செலவையும், சிறு தடைகளையும் சந்திக்க நேரலாம். தடுமாற்றம் இருந்தாலும் தாங்கிப்பிடிக்க சிலர் வருவர்.
குரு தற்போது 6-ம் இடத்தில் உள்ளது சிறப்பானதல்ல. எனினும், அவரது 9-ம் இடத்து பார்வை மூலம் தடைகளை தடுத்து நிறுத்தலாம். அவர் பிப். 14 முதல் ஏப்.9 வரை 7-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இந்த நேரத்தில் அவர் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சிகளை நடத்துவார். மொத்த கிரகங்களின் அடிப்படையில் ஆண்டின் தொடக்கத்தில் சில சிரமங்களை பொறுத்துக் கொள்ளுங்கள். பின் வளமான வாழ்வை காணலாம். கணவன் -மனைவி விட்டுக் கொடுத்து போகவும். சிலர் குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரியும் நிலை உருவாகும். உறவினர்கள் மோதுவர். சிலர் வீடு வாங்குவர் அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுகலாம். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் பெறுவர்.
பணியாளர்களுக்கு வேலைப் பளு அதிகமாக இருக்கும். பிப். 13-க்கு பிறகு முன்னேற்றம் காணலாம். பளு குறையும். புதிய பதவி கிடைக்கும். சம்பள உயர்வு வரும். ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க பெறலாம். ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்க பெறுவர். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். குருவின் வக்ர காலத்தில் சற்று கவனமாக இருக்கவும்.
தொழில், வியாபாரம் பிப்ரவரிக்குப் பின் முன்னேற்றம் அடையும். லாபத்திற்கேற்ப அஷ்டமச்சனியால் விரயம் ஏற்படும். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். பங்கு வர்த்தகத்தில் அதிக வருவாய் பெறலாம். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை போட்டியாளர்கள் வகையில் ஒரு கண் இருப்பது நல்லது. கலைஞர்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முன்னேற்றமான பலனை காணலாம். ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு விரும்பிய பாடம் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறலாம்.
விவசாயிகளுக்கு அதிக செலவு பிடிக்கும். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு முன்னேற்றமான பலனை காணலாம். மொச்சை, கடலை, கேழ்வரகு, நெல், மஞ்சள் போன்றவை நல்ல மகசூலை கொடுக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்குவிவகாரங்கள் சாதகமாக இருக்கும். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சகோதரர்கள் ஆதரவுடன் இருப்பர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். விட்டுக் கொடுத்து போவது நல்லது. அண்டை வீட்டாரிடம் வளவள பேச்சு வேண்டாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம் * ஆஞ்சநேயர் வழிபாடு. * ஏழைகளுக்கு உதவி * சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்குச் செல்லுதல்.செல்ல வேண்டிய தலம் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி தட்சிணாமூர்த்தி கோயில்.
|