மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2): சுற்றி வளைத்து தாக்கினாலும் அதிலும் சுகம் இருக்குது!
பதிவு செய்த நாள்
01
ஜன 2018 11:01
மனதாலும் பிறருக்கு துன்பம் நினைக்காத மகர ராசி அன்பர்களே!
கடந்த சில ஆண்டுகளாக உங்கள் ஆட்சி நாயகன் சனி பகவான் 11-ம் இடத்தில் இருந்து நன்மைகள் தந்தார். இந்த ஆண்டு அவர் 12-ம் இடமான தனுசு ராசியில் இருக்கிறார். அவரால் நற்பலனை கொடுக்க முடியாது. இது உங்களுக்கு ஏழரை சனி ஆரம்ப காலம். சனி 12ம் இடத்தில் இருக்கும் போது பணஇழப்பு வரலாம். குடும்பத்தை விட்டு வெளியூரில் தங்கும் நிலை ஏற்படும். எதிரிகளின் இடையூறு வரலாம். சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும் 7-ம் இட பார்வை மிதுனத்தில் விழுவதால் முயற்சித்தால் வெற்றி தருவார்.
பத்தில் குரு பதவிக்கு இடர் என்பர். அவர் பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். ஆனால் அவரது 5-ம் இடத்துப் பார்வை மூலம் சிரமங்கள் ஓரளவு குறையும். பிப்.14 -முதல் ஏப்.8 வரை அவர் 11-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறும் போது, கஷ்டங்களின் தாக்கம் குறையும். ராகு 7-ம் இடத்தில் இருக்கிறார். அவர் இடமாற்றம் தரலாம். பெண்கள் விஷயத்தில் அவப்பெயரை சந்திக்க நேரலாம். கேதுவும் உங்கள் ராசியில் இருப்பதால் திட்டங்களில் தடையையும், உடல் உபாதையையும் தரலாம்.
எல்லா முக்கிய கிரகங்களும் சுற்றி வளைத்து தாக்கி கஷ்டம் தந்தாலும், அதில் கிடைக்கும் அனுபவங்கள் எதிர்கால திட்டங்களை சுபமாக முடிக்க உதவும்.அலைச்சலும், வேலைப்பளுவும் கூடும். உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை வெளியூர் மாற்ற வேண்டி இருக்கும். சுபங்கள் தள்ளிப்போகலாம். இருப்பினும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள் அரசின் சோதனைக்கு ஆளாகலாம். எந்த தொழிலிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். பிப்.13– ஏப்.8 வரை ஓரளவு லாபம் கிடைக்கும். வெளியூர் பயணம் சாதக பலனை கொடுக்கும். போட்டியாளர்களை சமாளித்து விடுவீர்கள். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு இடையூறை முறியடித்து, வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெறுவீர்கள். அரசு வகையில் ஏற்பட்ட இடைஞ்சல் குறையும். பணியாளர்களுக்கு ஆண்டு ஆரம்பத்தில் வேலைப்பளுவும், அலைச்சலும் இருக்கும். அதிக முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும். அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். பிப்.13- முதல் ஏப்.8 வரை ஓரளவு திருப்திகரமான நிலை இருக்கும். பதவி, சம்பள உயர்வு கேட்டுப் பெற இது உகந்த காலம். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை மீண்டும் பின்தங்கிய நிலை ஏற்படும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் பலனை எதிர் பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் சிறப்பு பெறுவர். நல்ல மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய பாடம் பெறலாம். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை சிரத்தை எடுத்து படிக்க வேண்டி வரும். ஆகஸ்டிற்கு பிறகு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகளில் வெற்றி காணலாம். விவசாயிகக்கு நெல், கோதுமை, பயறு வகைகளில் நல்ல லாபம் கிடைக்கும். சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். கைத்தொழில் செய்பவர்கள் மனநிம்மதியுடன் காணப்படுவர். வழக்கு,விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். பெண்கள் குடும்ப விஷயங்களில் பொறுமையாகவும், விட்டுக்கொடுத்தும் போகவும். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை மன நிம்மதி குறையும்.
பரிகாரம் * சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்கு செல்லுதல். * சனி, ராகு, கேதுவுக்கு அர்ச்சனை. * ஆஞ்சநேயரை வழிபடுதல்.செல்ல வேண்டிய தலம்விழுப்புரம் மாவட்டம் பரிக்கல் நரசிம்மர் கோயில்.
|