பதிவு செய்த நாள்
03
ஜன
2018
11:01
திருவாலங்காடு : திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை நடந்த ஆருத்ரா அபிஷேகத்தில், 33 பழ வகையான அபிஷேகங்கள் நடராஜ பெருமானுக்கு நடத்தப்பட்டது. இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், சிவபெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில், முதல் சபை என்பதால். ரத்தினசபை என்றழைக்கப்படுகிறது. மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜருக்கு அபிஷேகம் நடப்பதையே, ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு, திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஆருத்ரா அபிஷேக விழா நடந்தது.
தொடர்ந்து, இரவு, 9:00 மணிக்கு, ரத்தின சபாபதிப் பெருமான், கோவில் வளாகம் பின்புறத்தில் உள்ள ஸ்தல விருட்சத்தின் கீழ், புதிதாக நிர்மாணித்துள்ள ஆருத்ரா அபிஷேக மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில், நேற்று முன்தினம், இரவு, 9:40 மணிக்கு, விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா அபிஷேகம் விழா துவங்கியது. பின், நடராஜருக்கு, 33 வகையான அபிஷேகங்கள், நேற்று, அதிகாலை, 3:30 மணி வரை, நடத்தப்பட்டது. காலை, 5:00 மணிக்கு, நடராஜ பெருமான் ஆலமர பிரகாரத்தை வலம் வந்து, கோபுர தரிசனத்திற்கு வந்த பின், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்று, பிற்பகல், 1:00 மணியளவில் அனுக்க தரிசனம் நடந்தது. ஆருத்ரா அபிஷேகத்தை துாரத்தில் அமர்ந்திருந்த பக்தர்கள், காணும் வகையில், ஆங்காங்கே வண்ண தொலைக் காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. பல்வேறு குழுவினரால் பரத நாட்டியம், சிவபக்தர்கள், தனியார் தொண்டு நிறுவனத்தினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார், ஜெய்சங்கர், இணை ஆணையர், சிவாஜி மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர். திருத்தணி, டி.எஸ்.பி., பாலசந்திரன் தலைமையில், 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மாவட்ட ஆட்சியர், சுந்தரவல்லி, காஞ்சிபுரம் சரக, டி.ஐ.ஜி., தேன்மொழி, உட்பட ஒரு லட்சம் பக்தர்கள் ஆருத்ரா அபிஷேகத்தில் வழிபட்டனர்.