பதிவு செய்த நாள்
03
ஜன
2018
12:01
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆருத்ரா உற்சவ விழாவில், சிவாலயங்களில் சிறப்பு வழிபாடும், காலையில் சுவாமி புறப்பாடும் நடந்தது. மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திர பவுர்ணமியன்று, ஆண்டு தோறும் ஆருத்ரா உற்சவம், அனைத்து சிவலாயங்களிலும் நடைபெறும். கோவிலில் உள்ள நடராஜ பெருமானுக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகமும் மற்றும் சுவாமி ஊர்வலம் நேற்று காலை நடந்தது. காஞ்சிபுரம் சிவன் கோவில்களில் உள்ள நடராஜர், அம்பிகை அலங்கரிக்கப்பட்டு, நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
உத்திரமேரூர்: களியாம்பூண்டி, இஷ்ட சித்தி வினாயகர் கோவிலில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி, நேற்று கோலாகலமாக நடந்தது. அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து, ஆருத்ரா நிகழ்ச்சி நடைபெற்றது. காலை, 5:00 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இஷ்ட சித்தி வினாயகர், முருகன் மற்றும் வள்ளி, தெய்வானையுடன் அப்பகுதி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தார்.
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. நால்வரால் பாடல் பெற்ற இக்கோவிலின் தாழக்கோவிலான பக்தவச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு விஷேச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடராஜர் மற்றும் சிவகாமி தாயாருடன் மலர் அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் உலா வந்தார். மேலும், 24ம் தேதியிலிருந்து மாணிக்கவாசகர் உற்சவ விழா நடந்து வந்தது. இந்த விழாவின் நிறைவும் நேற்று நடந்தது. இதில், நடராஜருடன், இவரும் வீதிஉலா வந்தார். நால்வர் கோவிலில் நடந்த மாணிக்கவாசகர் நிறைவு விழாவை, அப்பர் தொண்டர் அணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
செங்கல்பட்டு: வ.உ.சி., தெருவில், ஏகாம்பரேஸ்வர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், ஆருத்ரா உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு, ஆருத்ரா உற்சவம், நேற்று முன்தினம், நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, ஆருத்ரா தரிசனத்தில், சிவகாம சுந்தரி, நடராஜர் சுவாமி எழுந்தருளினார். அதன் பின், சிவகாம சுந்தரியுடன், நடராஜர் சுவாமி வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கச்சூர் கிராமத்தில், மருந்தீஸ்வரர் மற்றும் தியாகராஜர் கோவில்கள் உள்ளது. இங்கு, 20 ஆண்டுகளுக்கு பின், நேற்றுமுன்தினம், ஆருத்ரா உற்சவம் நடந்தது. இதில், நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று காலை, 6:30 மணிக்கு, நடராஜர், கோபுர தரிசனத்தில், எழுந்தருளினார். அப்போது, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அதன்பின், சுவாமி வீதியுலா நடந்தது. விழாவில், கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குன்றத்துார்: குன்றத்துாரில் பிரசித்தி பெற்ற திருநாகேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரக ராகு தலமாக கருதப்படும் இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இதேப்போல் குன்றத்துார் அடுத்த சோமங்கலம் பகுதியில் காமாட்சி அம்மன் உடனுறை சோமநாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் சந்திரன் தலமாக விளக்கும் இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. சதுரதாண்டவ மூர்த்தி திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், நேற்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நேற்று காலை, 4:30 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து, 10:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ராமலிங்கேஸ்வரர் வீதியுலா வந்தார். அதுபோல, கைலாசநாதர் சமேத தட்சிணாமூர்த்தி கோவிலில், நேற்று காலை, 5:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. உற்சவர் கைலாசநாதர் மலர் அலங்காரத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.