பதிவு செய்த நாள்
03
ஜன
2018
02:01
தொண்டாமுத்துார்;கோவை, பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோவிலில் மார்கழி திருவாதிரை உற்சவ விழாவின் பத்தாம் நாளான நேற்று, ஆருத்ரா தரிசனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்து அருள்பெற்றனர். அதிகாலை, 3.30 மணிக்கு பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. உற்சவர் நடராஜ பெருமான், சிவகாமி அம்பாளுக்கு திருமஞ்சனமும், தொடர்ந்து கோ பூஜையும் நடந்தன. அதிகாலை 4 மணிக்கு, நடராஜ பெருமானுக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள், பன்னீர், விபூதி, மாவுப்பொடி, குங்குமம், நெல்லி, திருமஞ்சாரம், வில்வபொடி, பஞ்சாமிர்தம், பழச்சாறு, சபண கலச அபிஷேகம் என, 21 அபிஷேகங்கள் நடைபெற்றன. காலை 8 மணியளவில், அலங்கரிக்கப்பட்ட நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள், கோவிலின் உள் வீதிகள் வழியாகவும், ராஜகோபுரம் வழியாகவும், வெளிவீதிகளிலும் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து, நடராஜர் சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்தனர். ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், நேற்று முன்தினம் இரவு முதலே, சுவாமியை தரிசித்து சென்றனர்.