பதிவு செய்த நாள்
04
ஜன
2018
01:01
சென்னை: தமிழகத்தில், கோவில்களுக்கு சொந்தமான, 47 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள், 30 ஆண்டுகளில் கபளீகரம் செய்யப்பட்டு உள்ள தகவல் தெரிய வந்துள்ளது.இது குறித்து, ஆலய வழிபடுவோர் சங்க தலைவர், டி.ஆர்.ரமேஷ் அளித்த பேட்டி:சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில்; திருவான்மியூர், மருந்தீஸ்வரர்; திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி; மதுரை, தியாகராஜசுவாமி உள்ளிட்ட, 17 கோவில்களுக்கு என, சட்டப்படி செயல் அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை. கூடுதல் பொறுப்புமாறாக, மற்ற கோவில் செயல் அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு அளித்து, இக்கோவில்களும் நிர்வகிக்கப்படுகின்றன.
அதேபோல, உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாகவும், அறநிலையத் துறை சட்டப்படியும், ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவில்; மதுரை, மீனாட்சி அம்மன், திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர்... திருவையாறு, தியாகராஜ சுவாமி உள்ளிட்ட, 40 கோவில்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை, அறநிலையத் துறை, 1966 ஜூலையிலேயே இழந்து விட்டது. அதன்பிறகும், அறநிலையத் துறை இந்த கோவில்களை ஒப்படைக்காமல், செயல் அலுவலர் வாயிலாக நிர்வகிக்கிறது.
இந்த இரண்டு வகையான சட்டமீறல் காரணமாக, கோவில் வருமானத்தில் இருந்து, 16 சதவீதம், நிர்வாக செலவுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கடந்த, 1986ல், 5.25 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள், கோவில்களுக்கும், கட்டளைகளுக்கும் சொந்தமாக இருந்தன. தற்போது, 4:78 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தான் உள்ளன என, அறநிலையத் துறை கூறுகிறது. அப்படியானால், 47 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் எங்கே போயின?அறநிலையத் துறை அலுவலகத்தில், தணிக்கை துறையில் குளிர்சாதன வசதி செய்ய, மூன்று கோவில்களில் இருந்து பணம் எடுத்துள்ளனர். கார் வாங்கினர்திருவேற்காடு, கருமாரியம்மன் கோவில், திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் ஆகியவற்றின் காணிக்கை பணத்தை எடுத்து, அறநிலையத்துறை அமைச்சர் பயன்படுத்த, கார் வாங்கப்பட்டுள்ளது.அதேபோல், சமயபுரம், மயிலாப்பூர் கோவில் பணத்தில், அறநிலையத்துறை கமிஷனருக்கு, கார் வாங்கப்பட்டுள்ளது. அந்த கார்களுக்கான பெட்ரோல், பராமரிப்பு செலவு, டிரைவர் சம்பளம் உள்ளிட்டவை, கோவில் பணத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, நீதிமன்றத்தை நாடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.