திருச்சி உறையூரில் எழுந்தருளியுள்ள அன்னை இராமலிங்க சவுடேஸ்வரி திருக்கோயில் மிகவும் பழமையானது. இத்திருக்கோயிலில் தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதித் திருநாளில் பக்தர்கள் வித்தியாசமாகத் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர். ‘கத்திப்போடும் விழா ’ எனப்படும் இவ்விழா பல ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது. ஆடு, மாடு, கோழி இவற்றைப் பலி கொடுப்பதைவிட, தங்கள் வம்சத்தினரைக் காக்கும் ஈஸ்வரிக்குத் தங்களது ரத்தத்தையே காணிக்கையாகச் செலுத்துவதுதான் இந்தக் கத்தி போடும் விழா. ஒவ்வொரு வருடமும் ஆண்களும், பெண்களும் விரதம் கடைப்பிடித்து இக்கோயிலின் வடபுறம் ஓடும் காவேரி நதியிலிருந்து குடத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு கோயிலுக்கு ஊர்வலமாக வருவார்கள். அப்போது வழியில் கூர்மையான கத்தியால் ஆண்கள் தங்கள் கைகளிலும், தோள்களிலும் கீறிக்கொண்டு வருவார்கள். இந்த வித்தியாசமான நேர்த்திக்கடனை தேவாங்க சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் இராமலிங்க சவுடேஸ்வரிக்குச் செலுத்துகிறார்கள். இத்திருக்கோயில் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து உறையூர் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் வழியில் சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ளது. கோவை நகரிலுள்ள கோனியம்மன் கோயிலில் மாசி மகத் திருவிழாவில் சிவன் அம்பிகை திருக்கல்யாணம் நடக்கும். அன்று யாக குண்டத்தில் எரியும் அக்னியை சிவனாகக் கருதி வழிபடுவர். பூஜை செய்த தீர்த்தக் கலசத்தின் மீது இருக்கும் திருமாங்கல்யத்தை அம்பிகைக்கு அணிவிப்பர். அக்னி வடிவில் சிவன், அம்பிகையைத் திருமணம் செய்து கொள்வதாக ஐதீகம்.