பாரத தேசத்தின் தொன்மையான மரங்களில் பனையும் ஒன்று. கண்ணபிரானின் அண்ணனாகிய பலராமன், பனை மரத்தைக் கொடியாகக் கொண்டிருந்தான் என்கிறது மகாபாரதம். தாலம் என்ற பனையின் பெயராலேயே திருமணத்தில் சூடும் மங்கல அணி தாலி என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். பனை ஓலையைச் சுருட்டி காதணியாக அணிவார்கள். இது, ஓலைக்குழை எனப்படும். பனங்குலைகளும், பனம்பூக்களும் மங்கலச் சின்னங்களாகும். விழா நாட்களில் வாழை மரங்களுடன் தென்னங்குலைகளையும் பனங்குலைகளையும் கட்டுகின்றனர். பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் பனையபுரம், பனங்காடு, திருப்பனையூர், திருப்பனைந்தாள், திருஓத்தூர் ஆகிய ஐந்தும் பனை மரங்களை தலமரமாகக் கொண்டவை.
தெருவடிச்சான் அல்லது சகோபுரம் என அழைக்கப்படும் பெரிய சப்பரங்கள் பனை ஒலைகளைக்கொண்டே அலங்கரிக்கப்படுகின்றன. இதுபோன்று ஓலைப் பல்லக்கும் உண்டு. பனை ஓலைகளில் செய்யப்பட்ட பைகள், பெட்டிகள் புனிதம் மிக்கவையாகப் போற்றப்படுகின்றன. ஆசார சீலர்கள், தமது உடைகளை மாசுபடாமல் வைத்திருக்க, அவற்றை பனை ஓலைகளால் ஆன குடலைகளில் வைத்திருந்தனர். அவை, மடிசஞ்சி எனப்பட்டன. காசியின் காவல் தெய்வங்களில், தாலஜங்கேசுவரி என்ற பெண் தெய்வம் வேருடன் பிடுங்கிய பனை மரத்தையே ஆயுதமாகக் கொண்டிருக்கிறாள். தமிழகத்திலும் பனையடி முனீஸ்வரர், பனையாத்தம்மன் போன்ற கிராமிய தெய்வங்கள் உண்டு.