பதிவு செய்த நாள்
05
ஜன
2018
02:01
பகவத்கீதை சமஸ்கிருத ஸ்லோகங்களைக் கொண்டது. அதன் தமிழாக்கத்தைப் படித்தாலே தலை சுற்றும். பலமுறை படித்தால் தான் கிருஷ்ணர் அதில் என்ன சொல்லியிருக்கிறார் என புரியும். அதில் 700 ஸ்லோகங்கள் உண்டு. திருப்பாவையில் முப்பதே பாடல்கள். எளிய தமிழில் இருக்கிறது. அத்தனையும் இனிய கானங்கள். அதிலும் எம். எல்.வசந்தகுமாரி போன்றவர்கள் பாடிக்கேட்டால் காதுகளுக்கு குலோப்ஜாமூனாக இருக்கும். கீதையின் நடை கடினமானது. பல விஷயங்களைச் சொன்ன கிருஷ்ணன், இதையெல்லாம் கடைபிடித்தால் நீ என்னை அடையலாம், என்று கடைசியில் சொன்னார்.மாம் ஏகம் சரணம் வ்ரஜ ( நான் ஒருவனே சரணடையத்தக்கவன்) என்ற வரி இதை உறுதிப்படுத்தும். ஆனால், திருப்பாவையில் ஆண்டாள் முதல் பாடலிலேயே மார்கழி நோன்பிருந்து அவனைச் சரணடைந்தால் அவன் தன்னையே நமக்கு தருவான் எனச் சொல்லி விட்டாள். நாராயணனே நமக்கே பறை தருவான் என்பது அந்த வரி. எனவே, கிருஷ்ணரின் கீதையைக் காட்டிலும் ஆண்டாளின் திருப்பாவை மிக மிக உயர்ந்ததாகிறது.