சபரிமலை: சபரிமலை வருமானம் புதிய சாதனையை நோக்கி செல்கிறது. மண்டல மகரவிளக்கு கால மொத்த வருமானம் இன்று 200 கோடி ரூபாயை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டிச.,26-ம் தேதியுடன் முடிவடைந்த மண்டலகாலத்தில் எல்லா நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் தேவசம்போர்டின் வருமானம் புதிய சாதனையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பொதுவாக மண்டல-, மகரவிளக்கு கால வருமானத்தை இணைத்தால் தான் 100 கோடி ரூபாயை தாண்டும். ஆனால் நடப்பு சீசனில் மண்டல காலத்தில் வருமானம் 150 கோடியை எட்டியது. தற்போது இது 200 கோடியை தாண்டும் நிலையில் உள்ளது.கடந்த 4-ம் தேதி வரை மொத்த வருமானம் 190 கோடியே 44 லட்சம் ரூபாய் ஆகும். இன்று இது 200 கோடியை தாண்டும் என்று தேவசம்போர்டு அதிகாரி ஒருவர் கூறினார். மகரவிளக்கு சீசன் முடிவடைய 14 நாட்கள் உள்ள நிலையில் மொத்த வருமானம் 300 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.