பதிவு செய்த நாள்
08
ஜன
2018
12:01
சபரிமலை: ’திருவாபரண பாதை, புண்ணிய பாதையாக அறிவிக்கப்பட்டு, அதன் வழியாக, பக்தர்கள் சபரிமலை வர நிரந்தர ஏற்பாடுகள் செய்யப்படும்’ என, தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பந்தளத்தில் வளர்ந்த அய்யப்பன், சபரிமலையில் குடிகொண்டதாக வரலாறு. அய்யப்பனை காண, பந்தளம் மன்னர், ஆபரணங்களுடன், காடுகள் வழியாக வந்த பாதைதான், திருவாபரண பாதை.இந்த பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சீரமைக்கப்படும். இந்த பாதையின் மொத்த தூரம் 83 கி.மீ., இதில் ஒவ்வொரு, 8 கி.மீ., தூரத்திலும், பக்தர்கள் தங்கும் மையம் ஏற்படுத்தப்படும். இங்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும்.இந்த தங்கும் மையங்கள், அந்தந்த பகுதி தேவசம்போர்டு கோவில் நிர்வாக அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருக்கும்.பணிகள் முடிவடைந்ததும், திருவாபரண பாதை, புண்ணிய பாதையாக தேவசம்போர்டால் அறிவிக்கப்படும். அதன் பின், அய்யப்பன் பயணம் செய்த பாதை வழியாக, சபரிமலை வந்து, பக்தர்கள் தரிசனம் நடத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.