பதிவு செய்த நாள்
09
ஜன
2018
03:01
சாதனை திலகமாக விளங்கும் விருச்சிக ராசி அன்பர்களே!
கேது தரும் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். சூரியன் சாதகமான3-ம் இடத்திற்கு சென்றுள்ளார். சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மைகளை தருவார். பொருளாதார வளம் கூடும். உடல் நலம் மேம்படும். 2-ம் இடத்தில் இருக்கும் புதனால் அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு ஏற்படலாம். அவர் ஜன. 22- முதல் பிப்.7 வரை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திற்கு செல்கிறார். அப்போது பகைவர்களால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. அதன்பிறகு இடர்பாடுகள் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குரு பகவான் ராசிக்கு 12-ம் இடத்தில் இருப்பதால் பொருள் விரயம் ஏற்படும்.தொல்லைகள், மனதில் வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும்.
சனியும் ஏழரையாகத் தொடர்கிறார். கடவுளின் கருணையே உங்களுக்கு கண்கண்ட மருந்து. இம்மாதம் உங்களுக்கு நல்லபடியாக அமைய சுக்கிர வழிபாடு செய்யுங்கள். அவர் மிக சாதகமான இடத்தில் உள்ளதால், மற்ற கிரகங்கள் தரும் சிரமங்களைத் தடுப்பார். அவரை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சேர்ந்து கொள்வர். ஜன. 14,பிப்.8,9,10 ஆகிய தேதிகளில் விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு சூரியனால் பொருளாதார வளம் கூடும். லாபம் சிறப்பாக இருக்கும். ஜன.21-க்கு பிறகு போட்டியாளர்களால் இடையூறு வரலாம். அரசின் மூலம் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். எனவே வரவு- செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
ஜன.15,16,பிப்.6,7,11,12-ல் கல்லாப்பெட்டி உங்கள் பொறுப்பில் இருப்பது நல்லது. ஜன.24,25-ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். சனி பகவானால் பொருட்களை களவு கொடுக்க நேரிடும். எனவே தொழில் நிறுவனத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை மறையும். அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். பைல் விஷயங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. உங்கள் பொறுப்புகளை நீங்களே கவனிக்க வேண்டுமே தவிர, மற்றவர்களிடம் ஒப்படைத்து பிரச்னையை வரவழைத்துக் கொள்ளக்கூடாது. எதிர்பார்க்கும் பதவி உயர்வு கிடைக்கும். பிப்.2,3-ல் முக்கிய கோரிக்கைகளை முன் வைக்கலாம். மாதக்கடைசியில் சம்பள உயர்வு, முக்கிய பொறுப்பு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு தருவர்.
கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு, புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் உயர்ந்த அந்தஸ்தை பெறலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் சற்று தாமதம் ஆகலாம்.
மாணவர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அலட்சியமாக இருக்கக்கூடாது. சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும். ஆசிரியரின் ஆலோசனை கிடைக்கும்.போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டி வரும். கேழ்வரகு, சோளம் காய்கறி, பழவகை மூலம் நல்ல வருமானம் காணலாம். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்காது. சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிபோகும். பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். வாழ்க்கையில் ஆனந்தம் அதிகரிக்கும். வேலை பார்ப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு நல்ல லாபம் இருக்கும்.
* நல்ல நாள்: ஜன. 14,17,18,19,24,25,26,27,28 பிப், 2,3,4,5,8,9,10
* கவன நாள்: ஜன.29,30 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,3 நிறம்: சிவப்பு, வெள்ளை
பரிகாரம்:
● சனிக்கிழமை பெருமாளுக்கு துளசி அர்ச்சனை
● வெள்ளியன்று ராகு காலத்தில் நாகர் வழிபாடு
● செவ்வாயன்று முருகனுக்கு பாலபிஷேகம்