பதிவு செய்த நாள்
12
ஜன
2018
12:01
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிராம புறங்களில் உள்ள பழங்கால வரலாற்றை பறை சாற்றும் நடுகற்கள், நவகண்டம் மற்றும் கல் பதுக்கைகளை சேகரித்து, ஒரே இடத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும்’ என, வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கற்காலம் தொட்டு மனிதர்கள் வாழ்ந்தற்கான பெருமையை கொண்டது, கிருஷ்ணகிரி மாவட்டம். இந்த பகுதியை, பல்லவர்கள், கங்கர்கள், நுளம்பர்கள், சோழர்கள், பிற்கால அதியர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள், திப்பு சுல்தான், ஜெகதேவராயர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடுகற்கள், நவகண்டங்கள், கல்வெட்டுகள், மற்றும் கல் பதுக்கைகள் அதிகளவில் உள்ளன. போரில் வீரமரணம் அடைந்த வீரரின் நினைவாக, பல இடங்களில் நடுகற்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வீரர் போரிட்டது மற்றும் அதற்கு துணையாக இருந்த அவரது மனைவி ஆகியோரின் உருவம் பொறித்திருக்கும்.
மேலும், போரில் வீர மரணம் அடைந்த வீரரின் நினைவாக நவகண்டம் கற்களில் செதுக்கப்பட்டிருக்கும். இதே போல் நடுகற்கள் அமைத்து, மூன்று பக்கங்களிலும் கற்களால் மூடி கல் பதுகைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடுகற்கள், நவகண்டங்கள், கல் பதுகைகள் சின்னக்கொத்துார், கீழ் குந்தானி, மேல் குந்தானி, ஜெகதேவி, பென்னேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, மத்துார் பகுதியில் அதிகம் உள்ளன. பழங்காலத்து வரலாற்றை பறை சாற்றும் இந்த சிற்பங்கள் அனைத்தையும் சேகரித்து, அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜன் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல கிராமங்களில், நடுகற்கள், நவகண்டங்கள் மற்றம் கல் பதுகைகள் உள்ளன. அவற்றை எடுத்து வர சென்றால், பல தலைமுறைகளாக குல தெய்வமாக வணங்கி வருவதாக கூறுவதால், அதை எடுத்து வர பொதுமக்கள் அனுமதிப்பதில்லை. மேலும், கல் சிற்பங்களுக்கு பெயின்ட் அடித்து, அதை அம்மனாக மாற்றி கிராம வாசிகள் வழிப்பட்டு வருகின்றனர். ஒரு சில கிராமத்தில் நடுகற்களை எடுத்து செல்ல பொதுமக்கள் அனுமதிக்கின்றனர். இவைகள் அனைத்தையும் எடுத்து வந்து அருங்காட்சியகத்தில் வைக்க, தொல்லியல் துறை மூலமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.