பதிவு செய்த நாள்
12
ஜன
2018
12:01
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில் இருந்து, ஏழாவது ஆண்டாக காவடி குழுவினர், முத்துமலை முருகன் மலை கோவிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். கிணத்துக்கடவு காவடி குழுவினர், மார்கழி மாதத்தில் மாலை அணிந்து, விரதமிருப்பது வழக்கம். தொடர்ந்து, பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில் இருந்து, காவடி எடுத்து முத்துக்கவுண்டனுார் முத்துமலை முருகன் மலை கோவிலுக்கு செல்வார்கள். அதன்படி இந்தாண்டு, இக்குழுவினர் வரும் மாட்டுப் பொங்கலன்று காலை, 4.00 மணிக்கு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலுக்கு வந்து, வேலாயுதசுவாமியை வழிபட்டு, கிரிவலம் வருகின்றனர். பின், ஏழாம் ஆண்டு பாதயாத்திரையை துவக்குகின்றனர். சிங்கையன்புதுார் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வழிபாடு முடித்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அங்கிருந்து சொக்கனுார் வழியாக முத்துக்கவுண்டனுார் முத்து மலை முருகன் மலை கோவிலுக்கு செல்கின்றனர். அங்கு பிற்பகல், 12.00 மணியளவில் நடக்கும் பூஜையில் பங்கேற்று, பாதயாத்திரையாக கொண்டு வந்த காவடியை செலுத்திவிட்டு, முருகனை வழிபட்டு பாதயாத்திரையை நிறைவு செய்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை குருசாமி ஆறுமுகம் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.