பதிவு செய்த நாள்
12
ஜன
2018
01:01
ஆர்.கே.பேட்டை: சுடுநீர் கொதிக்க வைக்கக்கூட, அடுப்பங்கரை பக்கம் செல்லாத பெண்களும், பொங்கல் பண்டிகையின் போது, மண் பானையை வைத்து, பொங்கல் வைக்க ஆர்வம் காட்டுவது தான், தமிழர் திருநாளின் பெருமை. இதற்காக, மண் பானைகளை வாங்க, மண்பாண்ட கலைஞர்களை தேடி செல்பவர்கள், தயாரிக்கப்படும் விதத்தையும் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும். ஆர்.கே.பேட்டை அடுத்த, ராஜா நகரம், சிங்கசமுத்திரம், புதுார் மேடு, கோபாலபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மண் பாண்ட கலைஞர்கள் பாரம்பரியமாக, பானை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
1980கள் வரை, கிராமங்களில் மண் பானைகள் அதிகளவில் புழக்கத்தில் இருந்தன. தண்ணீர் பானைகள், மொந்தை, மடக்கு, அகல் விளக்கு, தானிய குதிர் என, வீட்டு உபயோகம், சமையல் பாத்திரங்கள் என, அனைத்தும் மண் பாண்டங்களாகவே இருந்தன. அப்போது, மண்பாண்ட கலைஞர்களின் வாழ்வாதாரமும் சிறப்பாக அமைந்திருந்தது. அதன் பின், காஸ் அடுப்பு பிரபலம் ஆனதும், எரிவாயுவை சேமிக்கும் விதமாக, மண்பாண்டங்கள் வழக்கொழிந்து, உலோக பாத்திரங்கள் பயன்பாடு தலை துாக்க துவங்கியது. ஆனால், பொங்கல் பண்டிகையின் போது மட்டும், மண் பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடும் வழக்கம் இன்றும் உள்ளது.
கிராமங்களில் மட்டும் இன்றி, நகரங்களிலும், பள்ளி, கல்லுாரி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களாக இருந்தாலும், மண் பானை பொங்கல் தான். தமிழர்களின் இந்த உணர்வு மட்டுமே, மண்பாண்ட கலைஞர்களை இன்றும் வாழ வைத்து கொண்டுள்ளது. கிராமங்களில் மட்டும் இன்றி, பெருநகரங்களில் இருந்தும் பானைகளுக்கான, ’ஆர்டர்’கள் குவிவதால், அதற்கான தயாரிப்பில், கலைஞர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். தயாரிக்கப்படும் பானைகளை, வாரச் சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்த தயாரிப்பாளர்கள், தற்போது வீட்டில் இருந்தே விற்பனை செய்து வருகின்றனர். சூளையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பானைகள், அடுத்த சில மணி நேரத்தில், விற்று தீர்ந்து விடுகின்றன. பானை வாங்குவதற்காக, மண்பாண்ட கலைஞர்களின் வீடு தேடி வருபவர்களுக்கு, பானை தயாரிக்கும் விதத்தை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சாதாரண களிமண், கலைஞர்களின் கைவண்ணத்தில், அற்புதமான வடிவத்தை பெறுவதை கண்டு வியக்கின்றனர்.