பதிவு செய்த நாள்
13
ஜன
2018
10:01
கோபி: பாரியூர் கொண்டத்து காளியம்மன் தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் தேர்த்திரு விழாவில், பூ மிதிக்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருக்குண்டம் நேற்று சமன் செய்யப்பட்டது. இதையடுத்து குண்டத்தின் மீது, மிளகு கலந்த உப்பு கொட்டி, பக்தர்கள் வழிபட்டனர். ஒரு சிலர் குண்டத்தின் முன், நெய் தீபம் ஏற்றியும், மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்தும் வழிபாடு செய்தனர். இந்நிலையில் தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. கொண்டத்து காளியம்மன் ஒரு தேரிலும், சூலவேல் மற்றும் விநாயகர் ஒரு தேரிலும் அலங்கரிக்கப்பட்டு, தேர்வீதி, பெருமாள் கோவில் வீதி வழியாக சென்று, ஈஸ்வரன் கோவில் அருகே நிலை நிறுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஆகமவிதிப்படி, இரு தேர்களும், இன்று நிலை சேர்கிறது.