பதிவு செய்த நாள்
13
ஜன
2018
11:01
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கத்தில், நேற்று பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில், வைரமுத்துவை கண்டித்து, கண்டன பேரணி நடந்தது. அம்மா மண்டபத்தில் துவங்கிய பேரணி, ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவில், நான்கு ராஜ வீதிகளிலும் நடந்தது. உருவ பொம்மைகளை எரிக்க முயன்றதை போலீசார் தடுத்தனர். இதில், ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் சம்பத் குமார ராமானுஜ ஜீயர் தலைமையில் நடந்த கண்டன பேரணியில், ஸ்ரீரங்கத்தில் உள்ள மடங்களின் ஜீயர்களும், பல்வேறு இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும், ஆன்மீக சொற்பொழிவாளர்களும், ரெங்கநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், ஸ்ரீரங்கம் பகுதி பெண்கள் என, 1,000க்கும் மேற்பட்டோர், கையில் ஆண்டாள் படத்துடன் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், சாரங்கபாணி கோயில் ராஜகோபுர வாசலிலிருந்து, பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், திருப்பாவை பாடியவாறு, காந்தி பூங்காவுக்கு ஊர்வலமாக சென்றனர். வைரமுத்துவை கண்டித்து, கோஷங்கள் எழுப்பி, ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை பாடி, அதன் பொருளையும் விளக்கிப் பேசினர். இந்த நுாதன போராட்டத்துக்கு, பகவத் கைங்கர்ய சபா தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார்.