உண்ணும் உணவான பொங்கலை இப்பண்டிகையின் பெயராக வைத்திருப்பது வேடிக்கையாக தோன்றலாம். ஆனால் இதன் உண்மையை உணர்ந்தால் அதன் பெருமை விளங்கும். பொங்கல் என்பது “பொங்கு” என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும். வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்க வேண்டும் என்ற சிந்தனையை தரும் விழா. அதனையே, பொங்கல் பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல்” என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லி ஆரவாரம் செய்வர். மங்கல ஒலியாக குலவையிட்டு பானையில் அரிசியையும், பாலையும் இட்டு மகிழ்வர்.