Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » நான்காவதாயிரம்
நான்காவதாயிரம் (நம்மாழ்வார் திருவாய்மொழி)
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 டிச
2011
03:12

திருவாய்மொழித் தனியன்கள்

நாதமுனிகள் அருளிச்செய்த பக்தர்களுக்கு அமுதம்

பக்தாம்ருதம் விஸ்வஜநாநுமோ தநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீஸடகோப வாங்மயம்
ஸஹஸ்ரஸா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம்த்ராவிடவேத ஸாகரம்

நேரிசை வெண்பா

ஈஸ்வரமுனிவர் அருளிச்செய்தது...

நம்மாழ்வாரையே சிந்தித்திரு

திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்
மருவினிய வண்பொருநல் என்றும்-அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே! தெளிந்து

சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது

ஆழ்வார் திருவடிகளே நமக்குத் தஞ்சம்

மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன்-தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று

ஆனந்தாழ்வான் அருளிச்செய்தது

இராமானுசனின் திருவடிகளையே வணங்குகிறேன்

ஏய்ந்தபெருங் கீர்த்தி யிராமா னுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன்-ஆய்ந்த பெருஞ்
சீரார் சடகோபன் செந்தமிழ்வே தந்தரிக்கும்
பேராத வுள்ளம் பெற

பட்டர் அருளிச்செய்தவை

முதல் தாய் சடகோபன்; இதத்தாய் இராமானுசன்

வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும்-ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தா யிராமா னுசன்

நம்மாழ்வார் அர்த்த பஞ்சகத்தைக் கூறுகிறார்

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் -தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை னேதத் தியல்

ஆழ்வார் திருவடிகளே சரணம்

மணவாள மாமுனிகள் அருளிச்செய்தவை

நேரிசை வெண்பா

திருவாய்மொழி நூற்றந்தாதி தனியன்கள்

சொல்லும் பொருளும் தொகுத்துரைத்தார் மணவாள மாமுனிகள்

அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்கட்குச்
சொல்லும் பொருளுந் தொகுத்துரைத்தான்-நல்ல
மணவாள மாமுனிவன் மாறன் மறைக்குத்
தணவாநூற் றந்தாதி தான்

திருவாய்மொழி நூற்றந்தாதி தேனேதான்

மன்னு புகழ்சேர் மணவாள மாமுனிவன்
தன்னருளா லுட்பொருள்கள் தம்முடனே- சொன்ன
திருவாய் மொழிநூற்றந் தாதியாந் தேனை
ஒருவா தருந்துநெஞ்சே! உற்று

நம்மாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய திருவாய்மொழி

திருவாய்மொழி

திருவாய்மொழியை அருளியவர் நம்மாழ்வார். இவருக்குச் சடகோபன் என்பது திருநாமம். இவர் திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியில் அவதரித்தவர். இவர் அவதரித்தது வைகாசி விசாகம். இவர் அருளிய பிரபந்தங்களுள் இது சரமப்பிரபந்தமாகும். திருவாய்மொழி த்வயமந்திரத்தின் பொருளைத் தெளிவாக உணர்த்துகிறது என்றும். அர்த்த பஞ்சகத்தை விளக்கச் சொல்கிறது என்றும் கூறுவார்கள். நம்மாழ்வாரைப் பிரபன்னஜன கூடஸ்தரென்றும், அவயவி என்றும் சொல்லுகிறார்கள். மற்ற திவ்வியப் பிரபந்தங்களைப் போல் திருவாய்மொழியை வீதிகளில் சொல்லுவதில்லை; ஓரிடத்தில் அமர்ந்தே ஸேவிப்பது வழக்கம்

முதற்பத்து

முதல் திருமொழி

1. உயர்வு

பகவான் கல்யாண குணங்களை உடையவன்; உடலில் உயிர் இருப்பதுபோல், எல்லாப் பொருள்களிலும் இருப்பவன் என்று அவனுடைய பரத்துவத்தைக்கூறி, அவனது சுடரடி தொழுதொழு என்று தம் நெஞ்சுக்கு உபதேசிக்கிறார் ஆழ்வார்

கலி விருத்தம்

அமரர்கள் அதிபதியைத் தொழு

2899. உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.

பகவானே என் உயிர்

2900. மனனக மலமற மலர்மிசை யெழுதரும்
மனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன்
இனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும்
இனனிலன், னெனனுயிர், மிகுநரை யிலனே.

பகவானே நலனுடையவன்

2901. இலனது வுடையனி தெனநினை வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன் , ஒழிவிலன், பரந்த அந்
நலனுடை யொருவனை நணுகினம் நாமே.

எல்லாமாய் நிற்பவன் பகவானே

2902. நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள்
தாமவரிவருவர், அதுவிது வுதுவெது
வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை
ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே.

அநதர்யாமியாக இருப்பவன் பகவான்

2903. அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவ ரிறையவ ரெனவடி யடைவர்கள்
அவரவ ரிறையவர் குறைவில ரிறையவர்
அவரவ விதிவழி யடையநின் றனரே.

வேத ப்ரமாணங்களால் பகவானை உணரலாம்

2904. நின்றனரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலரிருந்திலர் கிடந்திலர்திரிந்திலர்
என்றுமோரியல்வினர் எனநினைவரியவர்
என்றுமோரியல்வொடு நின்றவெந்திடரே.

எங்கும் நிறைந்தவன் பகவான்

2905. திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே.

மும்மூர்த்திகளின் செயல்களைச் செய்பவன் இவனே

2906. சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்
வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்
புரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து
அரனயன் எனவுல கழித்தமைத் துளனே.

எல்லாக் காலங்களிலும் எங்கும் இருப்பவன் இவன்

2907. உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்
உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்
உளனென விலனென விவைகுண முடைமையில்
உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே.

ஒவ்வொரு பொருளிலும் மறைந்திருப்பவன் இவன்

2908. பரந்ததண் பரவையுள்நீர்தொறும் பரந்துளன்
பரந்தஅ ண்டமிதென நிலவிசும் பொழிவற
கரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்
கரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே.

இப்பத்துப் பாடல்களும் மோட்சம் அளிக்கும்

2909. கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
வரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற
பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்
நிரனிறை யாயிரத் திவைபத்தும் வீடே.

நேரிசை வெண்பா

இப்பகுதி, மக்களின் மயக்கத்தைப் போக்கும்

உயர்வே பரன்படியை யுள்ளதெல்லாந் தான்கண்டு
உயர்வேத நேர்கொண் டுரைத்து-மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன்சொல்
வேராக வேவிளையும் வீடு (1)

இரண்டாந் திருமொழி

2. வீடுமின்

உடல் நிலையானது அன்று என்றறிந்து மனம், வாக்கு, செயல்களை பகவானுக்கே இட்டு, அகங்காரம் பற்று முதலியவற்றை நீக்கி, உயர்வற உயர் நலமுடைய ஸ்ரீமந்நாராயணனின் திருவடிகளை ஆச்ரயிங்கள் என்று ஆழ்வார் ஈண்டு உபதேசிக்கிறார்.

வஞ்சித்துறை

பகவானைத் தவிர மற்ற எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்

2910. வீடுமின் முற்றவும் வீடுசெய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடுசெய்ம்மினே.

ஆக்கைகள் நிலையில; பகவானை நினை

2911. மின்னின் நிலையில--மன்னுயி ராக்கைகள்
என்னு மிடத்து இறை--உன்னுமின் நீரே.

இறையைச் சேர்மின்

2912. நீர்நும தென்றிவை, வேர்முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதனேர்நிறை யில்லே.

எம்பெருமானைப் பற்று

2913. இல்லது முள்ளதும் அல்ல தவனுரு
எல்லையி லந்நலம் புல்குபற் றற்றே.

பற்று நீங்கினால் ஆத்மா மோக்ஷம் பெறும்

2914. அற்றது பற்றெனில் உற்றது வீடுஉயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே.

பகவான் எல்லாப் பொருள்களாகவும் இருக்கிறான்

2915. பற்றில னீசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலை யாய் அவன் முற்றி லடங்கே.

எல்லா ஐசுவர்யங்களும் அவனே

2916. அடங்கெழில் சம்பத்து அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழி லஃதென்று--அடங்குக வுள்ளே.

மனோவாக்குக் காயங்களைப் பகவானிடம் செலுத்து

2917. உள்ள முரைசெயல் உள்ளவிம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை யுள்ளிலொ டுங்கே.

உடல் நீங்கும் நாளை எதிர்பார்த்திரு

2918. ஒடுங்க அவன்கண் ஒடுங்கலு மெல்லாம்
விடும்பின்னு மாக்கை விடும்பொழு தெண்ணே.

நாரணன் கழல் சேர்

2919. எண்பெருக் கந்நலத்து ஒண்பொரு ளீறில
வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே.

இப்பத்துப் பாடல்களும் நன்மை தரும்

2920. சேர்த்தடத் தென்குரு கூர்ச்ட கோபன்சொல்
சீர்த்தொடை யாயிரத்து ஓர்த்தவிப் பத்தே.

நேரிசை வெண்பா

இப்பத்தும் நாரணன் அருளைத் தரும்

வீடுசெய்து மற்றெவையும் மிக்கபுகழ் நாராணன்றாள்
நாடுநலத் தாலடைய நன்குரைக்கும்-நீடுபுகழ்
வண்குருகூர் மாறனிந்த மாநிலத்தோர் தாம்வாழப்
பண்புடனே பாடியருள் பத்து (2)

மூன்றாந் திருமொழி

3. பத்துடை

பகவானிடம் பரத்வம் இருப்பது போல், ஸெளலப்யமும் இருக்கிறது. இத்திருவாய்மொழியில் ஸெளலப்ய குணம் கூறப்படுகிறது. இப்பண்பு ஆழ்வாரை ஆறு மாத காலம் மோஹிக்கச் செய்தது

கலி நிலைத்துறை

அடியவர்க்கு எளியவன் அரி

2921. பத்துடை யடியவர்க் கெளியவன், பிறர்களுக் கரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே.

நம் அகத்தும் புறத்தும் உள்ளான் அவன்

2922. எளிவரு மியல்வினன் நிலைவரம் பிலபல பிறப்பாய்,
ஒளிவரு முழு நலம் முதலில கேடில வீடாம்,
தெளிதரும் நிலைமைய தொழிவிலன் முழுவதும், மிறையோன்,
அளிவரு மருளினோ டகத்தனன், புறத்தன னமைந்தே..

அவனது அவதார இரகசியம் யாருக்குத் தெரியும்?

2923. அமைவுடை யறநெறி முழுவது முயர்வற வுயர்ந்த,
அமைவுடை முதல்கெடல் ஒடிவிடை யறநில மதுவாம்,
அமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம,
அமைவுடை நாரணன் மாயையை யறிபவர் யாரே?

ஆயிரம் பேருடையவன் எம்பெருமான்

2924. யாருமோர் நிலைமைய னெனவறி வரிய வெம்பெருமான்,
யாருமோர் நிலைமைய னெனவறி வெளியவெம் பெருமான்,
பேருமோ ராயிரம் பிறபல வுடையவெம் பெருமான்,
பேருமோ ருருவமு முளதில்லை யிலதில்லை பிணக்கே.

ஆதியந்தம் இல்லாதவன் அவன்

2925. பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த,
கணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்,
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு,
உணக்குமின் பசையற அவனுடை, யுணர்வுகொண் டுணர்ந்தே.

பகவானிடம் நாமங்களைப் பலமுறை சொல்லுக

2926. உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந்நிலைமை,
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலையுணர்வரி துயிர்காள்,
உணர்ந்துணர்ந் துரைத்துரைத் தரியய னரனென்னுமிவரை,
உணர்ந்துணர்ந் துரைத்துரைத் திறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே.

மும்மூர்த்திகளைக் கருத்தில் இருத்துக

2927. ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற,
நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னு மிவரை,
ஒன்றநும் மனத்து வைத் துள்ளிநும் இருபசை யறுத்து,
நன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே.

ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளையே நினை

2928. நாளு நின் றடு நமபழ மையங் கொடுவினையுடனே
மாளும், ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி,
நாளூநந் திருவுடை யடிகள்தம் நலங் கழல் வணங்கி,
மாளுமோ ரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே.

பகவான் மும்மூர்த்தி ஸ்வரூபன்

2929. வலத்தனன் திரிபுர மெரித்தவ னிடம்பெறத் துந்தித்
தலத்து, எழுதிசைமுகன் படைத்தநல் லுலகமும் தானும்
புலப்பட பின்னும்தன் உலகத்தி லகத்தனன் தானே
சொலப்புகில் இவைபின்னும் வயிற்றுள இவையவன் துயக்கே.

பகவானின் மாயைகள் பெரியவை

2930. துயக்கறு மதியில்நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்,
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்,
புயற்கரு நிறத்தனன் பெரு நிலங் கடந்தநல் லடிப்போது ,
அயர்ப்பில னலற்றுவன் தழுவுவன் வணங்குவ னமர்ந்தே.

இவற்றைப் படித்தோர் பிறப்பறுப்பர்

2931. அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை,
அமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற்றேவல்கள்,
அமர்சுவை யாயிரத் தவற்றினு ளிவைபத்தும் வல்லார்
அமரரோ டுயர்விற்சென் றறுவர்தம் பிறவியஞ் சிறையே.

நேரிசை வெண்பா

பிறவித் துன்பம் நீங்கும்

பத்துடையோர்க் கென்றும் பரனெளிய னாம்பிறப்பால்
முத்திதரு மாநிலத்தீர்! மூண்டவன்பால்-பக்திசெயும்
என்றுரைத்த மாறன்றன் இன்சொல்லாற் போம், நெடுகச்
சென்றபிறப் பாமஞ் சிறை (3)

நான்காந் திருமொழி

4. அஞ்சிறை

நம்மாழ்வாருக்குப் பராங்குசன் என்றும் பெயர். இவர் தலைவியாய் இருந்து பாடும்போது பராங்குச நாயகி என்று இவரைக் கூறுவார்கள். எம்பெருமானாகிற தலைவனைக் குறித்து நாரை, வண்டு, பூவை முதலியவற்றைத் தூது விடுகிறார் ஞான அனுட்டானங்களைக் கொண்ட ஆசாரியர்களையே பறவைகளாகக் கொள்ள வேண்டும். எம்பெருமானை அடைவிக்குமாறு ஆசாரியர்களை வேண்டுவதாகப் பொருள் கொள்ளல் தக்கது.

கொச்சகக் கலிப்பா

நாராய்! திருமாலிடம் தூது சென்று எனக்கருள்

2932. அஞ்சிறைய மடநாராய். அளியத்தாய் நீயும்நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி
வெஞ்சிறைப்புள் ளுயர்த்தாற்கென் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டா லென்செய்யுமோ?

குயில்காள்! தூது செல்க

2933. என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க் கென்தூதாய்
என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள். நீரலிரே?
முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்
முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே?

அன்னங்காள்! என் மயக்கத்தை வாமனனுக்குக் கூறுக

2934. விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்.
மதியினால் குறள்மாணாய் உலகிரந்த கள்வற்கு
மதியிலேன் வல்வி னையே மாளாதோ வென்று , ஒருத்தி
மதியெல்லாம் முள்கலங்கி மயங்குமால் என்னீரே.

கிரவுஞ்சப் பட்சிகளே! தூது சென்றருள்க

2935. என்நீர்மை கண்டிரங்கி யிதுதகா தென்னாத
என்நீல முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ
நன்னீர்மை யினியவர் கண் தங்காதென் றொருவாய்ச்சொல்
நன்னீல மகன்றில்காள். நல்குதிரோ நல்கீரோ?

குருகே! நாரணனிடம் தூது சென்றருள்க

2936. நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே,
நல்கத்தா னாகாதொ? நாரணனைக் கண்டக்கால்
மல்குநீர்ப் புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே.
மல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங்கொண் டருளாயே.

வண்டே! என் கருத்தை ஆழியானிடம் சொல்

2937. அருளாத நீரருளி யவராவி துவராமுன்
அருளாழிப் புட்கடவீர் அவர்வீதி யொருநாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி
யருள் ஆழி வரிவண்டே. யாமுமென் பிழைத் தோமே?

என்ன குற்றம் செய்தேன்? கிளியே ! திருமாலைக் கேள்

2938. என்பிழைகோப் பதுபோலப் பனிவாடை யீர்கின்றது
என்பிழையே நினைந்தருளி யருளாத திருமாலார்க்கு
என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென் றொருதவாய்ச்சொல்
என்பிழைக்கும் இளங்கிளியே யான்வளர்த்த நீயலையே?

நாகணவாய்ப்புள்ளே! தூது செல்லாவிடில் தண்டிப்பேன்

2939. நீயலையே சிறுபூவாய். நெடுமாலார்க் கென்தூதாய்
நோயெனது நுவலென்ன, நுவலாதே யிருந்தொழிந்தாய்
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே.

குளிர்காற்றே! என்னைத் துன்புறுத்தாதே

2940. நாடாத மலர்நாடி நாள்தோறும் நாரணந்தன்,
வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று,
வீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ?
ஊடாடு பனிவாடாய். உரைத்தீராய் எனதுடலே.

மனமே! ஆழியானிடம் எனது நிலையைக் கூறு

2941. உடலாடிப் பிறப்புவீ டுயிர்முதலா முற்றுமாய்,
கடலாழி நீர்தோற்றி யதனுள்ளே கண்வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி
விடலாழி மடநெஞ்சே. வினையோமொன் றாமளவே.

இவற்றைப் பாடுக: தேவருலகு கிடைக்கும்

2942. அளவியன்ற ஏழுலகத் தவர்பெருமான் கண்ணனை
வளவயல்சூழ் வண்குருகூர்ச்சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற அந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெருவளமே.

நேரிசை வெண்பா

இப் பாடல்கள் மாறனின் பக்தி வளமே

அஞ்சிறைய புட்கடமை ஆழியா னுக்கு, நீர்
என்செயலைச் சொல்லும் எனவிரந்து- விஞ்ச
நலங்கியதும் மாறனிங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம் (4)

ஐந்தாந் திருமொழி

5. வளவேழ்

ஆழ்வார் தம் நிலைமைகளைக் கூறிப் பகவானை விட்டு அகன்றுவிட்டுப் பார்த்தார். அவரது பிரிவைப் பொறுக்கமாட்டாத பகவான் தன் சீல குணங்களைக் காட்டி ஆழ்வாரோடு கலக்கின்றான். இதனைக் கூறுகிறது இப்பகுதி.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கண்ணனே என்தந்தை என்பேன்

2943. வளவே ழுலகின் முதலாய் வானோ ரிறையை அருவினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன், பின்னையும்,
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லா னாயர் தலைவனாய்,
இளவே றேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்துநைந்தே.

மாயோனே! எனக்கு அருளினால் உன் பெருமை உயரும்

2944. நினைந்து நைந்துள் கரைந்துருகி, இமையோர் பலரும் முனிவரும்,
புனைந்த கண்ணி நீர்சாந்தம் புகையோ டேந்தி வணங்கினால்,
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய், முதலில் சிதையாமே,
மனஞ்செய் ஞானத் துன்பெருமை மாசூ ணாதோ மாயோனே.

எல்லாவுயிர்க்கும் தாயாக இருப்பவன் திருமாலே

2945. மாயோ னிகளாய் நடைகற்ற வானோர் பலரும் முனிவரும்,
நீயோ னிகளைப் படை என்று நிறைநான் முகனைப் படைத்தவன்
சேயோ னெல்லா அறிவுக்கும், திசைக ளெல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா வெவ்வுயிர்க்கும் தாயோன் தானோ ருருவனே.

வானோர் பெருமானே என் தலைவன்

2946. தானோ ருருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மாமாயன் வைகுந் தன்எம் பெருமானே.

மதுசூதா! நின் திருவடியை நான் சேர அருள்

2947. மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!
வானார் சோதி மணிவண்ணா. மதுசூ தாநீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே.

கேசவா! வினைதீர்க்கும் மருந்து நீயே

2948. வினையேன் வினைதீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா!
மனைசே ராயர் குலமுதலே மாமா யன்னே மாதவா!
சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா!
இனையா யினைய பெயரினாய் என்று நைவன் அடியேனே!

கண்ணனைக் காண நான் துடிக்கிறேன்

2949. அடியேன் சிறிய ஞானத்தன், அறித லார்க்கு மரியானை
கடிசேர் தண்ணந் துழாய்க்கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ஆக்கை யடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன், இதனில் மிக்கோர் அயர்வுண்டே?

மாயோனே! நின் மாயைதான் என்னே!

2950. உண்டா யுலகேழ் முன்னமே, உமிழ்ந்து மாயை யால்புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர் உவலை யாக்கை நிலையெய்தி
மண்டான் சோர்ந்த துண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண்கரைய நெய்யூண் மருந்தோ? மாயோனே

கண்ணனே என் தலைவன்

2951. மாயோம் தீய அலவ லைப் பெருமா வஞ்சப் பேய்வீய
தூயகுழவி யாய்விடப்பால் அமுதா அமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்த னெவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மா னென்னம்மான் அம்மாமூர்த்தி யைச்சார்ந்தே.

என்னைத் திருத்துபவன் நெடுமால்

2952. சார்ந்த இருவல் வினைகளும் சரித்து மாயப் பற்றறுத்து
தீர்ந்து தன்பால் மனம்வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்,
ஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ்மேல் அளவிறந்து,
நேர்ந்த வுருவாய் அருவாகும் இவற்றி னுயிராம் நெடுமாலே.

மாமாயனே என்றால் துன்பம் வராது

2953. மாலே மாயப் பெருமானே மாமா யனே என்றென்று
மாலே யேறி மாலருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழ ரிசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவைபத்தும் வல்லார்க் கில்லை பரிவதே.

நேரிசை வெண்பா

மாறனைத் தம்மிடம் சேர்த்துக் கொண்டார் திருமால்

வளமிக்க மால்பெருமை மன்னுயிரின் றன்மை
உளமுற்றங் கூடுருவ வோர்ந்து-தளர்வுற்று
நீங்கநினை மாறனைமால் நீடிலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து (5)

ஆறாந் திருமொழி

6. பரிவதில்

பத்ரம், புஷ்பம், பலம், தோயம் என்று பக்தியோடு எதைக்கொடுத்தாலும், அதைப்பெற்று மனநிறைவு கொள்பவன் பகவான். திருமால் பூசைக்கு எளியவன்

வஞ்சி விருத்தம்

ஈசனைப் பாடிப் பூசியுங்கள்

2954. பரிவதி லீசனைப் பாடி
விரிவது மேவ லுறுவீர்
பிரிவகை யின்றிநன் னீர்தூய்
புரிவது வும்புகை பூவே.

வேத முதல்வனுக்கே பணி செய்க

2955. மதுவார் தண்ணந் துழாயான்
முதுவே தமுதல் வனுக்கு
எதுவே தென்பணி என்னா
ததுவே யாட்செய்யு மீடே.

ஈசனையே என் மனம் பாடும்

2956. ஈடு மெடுப்புமி லீசன்
மாடு விடாதென் மனனே
பாடுமென் நாவலன் பாடல்
ஆடுமெ னங்கம ணங்கே.

வணங்கி வழிபடத் தகுந்தவன் ஈசன்

2957. அணங்கென ஆடுமெ னங்கம்
வணங்கி வழிபடு மீசன்
பிணங்கி யமரர் பிதற்றும்
குணங்கெழு கொள்கையி னானே.

உள் கலந்தார்க்கு ஈசன் அமுது

2958. கொள்கைகொ ளாமையி லாதான்
எள்கலி ராகமி லாதான்
விள்கைவிள் ளாமைவி ரும்பி
உள்கலந் தார்க்கோ ரமுதே.

அமிழ்தினும் இனியவன் நெடுமால்

2959. அமுதம் அமரகட் கீந்த
நிமிர்சுட ராழி நெடுமால்
அமுதிலு மாற்ற இனியன்
நிமிர்திரை நீள்கட லானே.

இராமபிரான் திருவடிகளை வணங்குக

2960. நீள்கடல் சூழிலங் கைக்கோன்
தோள்கள் தலைதுணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கள் தலைக்க ழிமினே.

ஈசனைத் தொழுதால் தீவினை மாளும்

2961. கழிமின்தொண் டீர்கள் கழித்துத்
தொழுமீன் அவனைத் தொழுதால்
வழிநின்ற வல்வினை மாள்வித்து
அழிவின்றி யாக்கம் தருமே.

திருமால் நம் இரு வினைகளைத் துரத்துவார்

2962. தரும அரும்பய னாய
திருமக ளார்தனிக் கேள்வன்,
பெருமை யுடைய பிரானார்,
இருமை வினைகடி வாரே.

மாதவனார் நம் தீவினைகளை விரைவில் ஓட்டுவார்

2963. கடிவார் தீய வினைகள்
நொடியா ருமள வைக்கண்
கொடியா அடுபுள் ளுயர்த்த
வடிவார் மாதவ னாரே.

பிறவியை நீக்கும் வழி

2964. மாதவன் பால்சட கோபன்
தீதவ மின்றி யுரைத்த
ஏதமி லாயிரத் திப்பத்து
ஓதவல் லார்பிற வாரே.

நேரிசை வெண்பா

இவற்றை ஓதினால் பிறப்பு நீங்கும்

பரிவதிலீ சன்படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆரா தனைக்கென்று-உரிமையுடன்
ஓதியருள் மாறன் ஓழிவித்தா னிவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு (6)

ஏழாந் திருமொழி

7. பிறவித்துயர்

பகவானை அடைந்து பெற்ற இன்பங்களை ஆழ்வார் கூறுகிறார். தன்னைப் பூசிப்பார்க்குத் திருமால் இனியவன்.

கலி விருத்தம்

கைவல்யார்த்திகளும் ஈசனைப் போற்றுவர்

2965. பிறவித்துயரற ஞானத்துள் நின்று,
துறவிச்சு டர்விளக்கம் தலைப்பெய்வார்,
அறவனை யாழிப்படை யந்தணனை,
மறவியை யின்றி மனத்துவைப் பாரே.

கண்ணனே நம்மை எந்நாளும் காக்கும் மருந்து

2966. வைப்பாம்மருந்தா மடியரை, வல்வினைத்
துப்பாம் புலனைந்தும் துஞ்சக கொடானவன்,
எப்பால் யவர்க்கும் நலத்தா லுயர்ந்துயர்ந்து,
அப்பால வனெங்க ளாயர் கொழுந்தே.

கண்ணனை வழிபட்டேன்: என் மயக்கம் தீர்ந்தேன்

2967. ஆயர் கொழுந்தா யவரால் புடையுண்ணும்,
மாயப் பிரானையென் மாணிக்கச் சோதியை,
தூய அமுதைப் பருகிப்பருகி, என்
மாயப் பிறவி மயர்வறுத் தேனே.

ஆதிமூலத்தை நான் விடமாட்டேன்

2968. மயர்வறவென்மனத்தே மன்னினான் றன்னை,
உயர்வினை யேதரும் ஒண்சுடர்க் கற்றையை,
அயர்வில் அமரர்கள் ஆதிக்கொழுந்தை, என்
இசைவினையென்சொல்லி யான்விடுவேனே.

கண்ணனை யான் விடுவேனோ?

2969. விடுவேனோவென் விளக்கைஎன்னாவியை,
நடுவேவந்துய்யக் கொள்கின்றநாதனை,
தொடுவேசெய்திள ஆய்ச் சியர்க்கண்ணினுள்,
விடவேசெய்து விழிக்கும்பிரானையே.

திருத்துழாயான் என் உள்ளத்தில் இருக்கிறான்

2970. பிரான்பெருநிலங் கீண்டவன், பின்னும்
விராய்மலர்த்துழாய் வேய்ந்தமுடியன்,
மராமரமெய்த மாயவன், என்னுள்
இரானெனில்பின்னை யானொட்டுவேனோ.

மாயவன் என் உயிரோடு கலந்து விட்டான்

2971. யானொட்டியென்னுள் இருத்துவ மென்றிலன்,
தானொட்டி வந்தென் தனிநெஞ்சை வஞ்சித்து,
ஊனொட்டி நின்றென் உயிரில் கலந்து, இயல்
வானொட்டு மோஇனி யென்னை நெகிழ்க்கவே.

கண்ணனால் என் நெஞ்சைவிட்டுப் பிரிய இயலாது

2972. என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சந்
தன்னை, அகல்விக்கத் தானும்கில்லானினி,
பின்னை நெடும்பணைத் தோள்மகிழ் பீடுடை,
முன்னை யமரர் முழுமுத லானே.

கண்ணன் என்னை இனிப் பிரிய வழியில்லை

2973. அமரர் முழுமுத லாகிய ஆதியை,
அமரர்க் கமுதீந்த ஆயர் கொழுந்தை,
அமர அழும்பத் துழாவியென் னாவி,
அமரர்த் தழுவிற் றினிய கலுமோ.

பகலும் இரவும் கண்ணனையே பாடுவோம்

2974. அகலில் அகலும் அணுகில் அணுகும்,
புகலு மரியன் பொருவல்ல னெம்மான்,
நிகரில் அவன்புகழ் பாடி யிளைப்பிலம்,
பகலு மிரவும் படிந்து குடைந்தே.

நோய்கள் ஓட்டும் பாடல்கள் இவை

2975. குடைந்துவண் டுண்ணும் துழாய்முடி யானை,
அடைந்த தென் குருகூர்ச்சட கோபன்,
மிடைந்த சொல்தொடை யாயிரத்திப்பத்து,
உடைந்து நோய்களை யோடு விக்குமே.

நேரிசை வெண்பா

மனமே! திருமால் திருவடிகளையே துணையாகக்கொள்

பிறவியற்று நீள்விசும்பிற் பேரின்ப முய்க்கும்
திறமளிக்குஞ் சீலத் திருமால், அறவினியன்
பற்றுமவர்க் கென்று பகர்மாறன் பாதமே
உற்றுதுணை யென்றுளமே! ஓடு (7)

எட்டாந் திருமொழி

8. ஓடும்புள்

பகவான் என்ன நினைக்கிறானோ அதையே சொல்லுவான்; சொன்னதையே செய்வான் என்று அவனது நேர்மையின்(செம்மைப் பண்பின்) சிறப்பை ஆழ்வார் ஈண்டுக் கூறுகிறார்.

வஞ்சித்துறை

கருடன்மீது அமர்ந்து செல்வான் திருமால்

2976. ஓடும்புள்ளேறி, சூடும தண்டுழாய்,
நீடு நின்றவை, ஆடும் அம்மானே.

எல்லாப் பண்புகளையும் உடையவன் கண்ணன்

2977. அம்மானாய்ப் பின்னும், எம்மாண புமானான,
வெம்மா வாய்கீண்ட, செம்மா கண்ணனே.

திருவேங்கட வெற்பன் எல்லோர்க்கும் கண்

2978. கண்ணா வானென்றும், மண்ணோர்விண்ணோர்க்கு,
தண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே.

எம்பெருமான் குணத்தையே சொல்லுவேன்

2979. வெற்பை யொன்றெடுத்து, ஒற்க மின்றியே,
நிற்கும் அம்மான்சீர், கற்பன் வைகலே.

என் மெய் கலந்தவன் கண்ணன்

2980. வைகலும் வெண்ணெய், கைகலந்துண்டான்,
பொய்கலவாது, என் - மெய்கலந்தானே.

மூவடி யளந்து நிலம் கொண்டவன் என் நாதன்

2981. கலந்தென்னாவி, நலங்கொள் நாதன்,
புலங்கொள் மாணாய், நிலம்கொண் டானே.

என் எண்ணத்தையே உடையவன் கண்ணன்

2982. கொண்டா னேழ்வி டை, உண்டா னேழ்வையம்,
தண்டா மஞ்செய்து, என்  எண்டா னானானே.

பகவானின் அவதாரங்களுக்கு எல்லை இல்லை

2983. ஆனா னானாயன், மீனோ டேனமும்,
தானா னானென்னில், தானா யசங்கே.

எங்கும் நிரம்பி இருப்பவன் திருமால்

2984. சங்கு சக்கரம், அங்கையில் கொண்டான்,
எங்கும் தானாய, நங்கள் நாதனே.

வேதம் கூறும் தன்மைகளை உடையவன் திருமால்

2985. நாதன்ஞாலங்கொள்  பாதன்,என்னம்மான்,
ஓதம் போல்கிளர், வேதநீரனே.

இவற்றைப் படியுங்கள்

2986. நீர்புரை வண்ணன், சீர்ச்சடகோபன்,
நெர்த லாயிரத்து, ஓர்தலிவையே.

நேரிசை வெண்பா
 
நெடுமாலின் செம்மையை மாறன் உரைத்தான்

ஓடுமனஞ் செய்கையுரை யொன்றினில்லா தாருடனே
கூடிநெடு மாலடிமை கொள்ளுநிலை,-நாடறிய
ஓர்ந்தவன்றன் செம்மை யுரைசெய்த மாறனென
ஏய்ந்துநிற்கும் வாழ்வாம் இவை  (8)

ஒன்பதாந் திருமொழி

9. இவையும் அவையும்

குழந்தைக்குத் தாய் உணவிட்டு வளர்ப்பதுபோல், பகவானும் அடியார்களுக்குத் தன்னை அனுபவிக்கும் இன்பத்தைச் சிறிது சிறிதாகவே தருகிறான். நம்மாழ்வாரின் திருமுடியிலே வந்து அமரவேண்டும் என்று எண்ணிய பகவான், ஆழ்வாரின் சுற்றுப் பக்கத்தில் நின்றான்; அருகில் வந்தான்; கூடி நின்றான்; இடுப்பில் அமர்ந்தான்; மார்பில் இருந்தான்; தோள் மீது உட்கார்ந்தான்; நாவில் புகுந்து, கண்ணுள்ளும் நெற்றியுள்ளும் நின்று, திருமுடியில் வந்து நிலையாக அமர்ந்தான் இக் கருத்தையே இப்பகுதி கூறுகிறது.

ஆறுசீர் ஆசிரிய விருத்தம்

கண்ணன் என் சுற்றுப் பக்கத்தில் உள்ளான்

2987. இவையும் அவையும உவையம் இவரும் அவரும் உவரும்
எவையும் யவரும் தன்னுள்ளே ஆகியுமாக்கியுங்காக்கும்
அவையுள் தனிமுதலெம்மான் கண்ணபிரானென்னமுதம்
சுவையன் திருவின்மணாளன் என்னுடைச் சூழலுளானே.

கண்ணன் என் அருகில் வந்தான்

2988. சூழல் பலபல வல்லான் தொல்லையங் காலத் துலகை
கேழலொன் றாகியி டந்த கேசவ னென்னுடை யம்மான்,
வேழ மருப்பையொ சித்தான் விண்ணவர்க் கெண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவனென னருகலி லானே.

என்னோடு கூடி நின்றான் கண்ணன்

2989. அருகலி லாய பெருஞ்சர் அமரர்கள் ஆதி முதல்வன்,
கருகிய நீலநன் மேனி வண்ணன்செந தாமரைக் கண்ணன்,
பொருசிறைப்புள்ளுவந்தேறும் பூமகளார்தனிக்கேள்வன்,
ஒருகதியின்சுவைதந்திட் டொழிவிலனென்னோடுடனே.

என் இடுப்பில் அமர்ந்தான் கண்ணன்

2990. உடனமர்க்காதல்மகளிர் திருமகள்மண்மகள் ஆயர்
மடமகள், என்றிவர்மூவர் ஆளும் உலகமும்மூன்றே,
உடனவையொக்கவிழுங்கி ஆலிலைச்சேர்ந்தவனெம்மான்,
கடல்மலிமாயப்பெருமான் கண்ணனென் ஒக்கலை யானே.

என் நெஞ்சில் புகுந்தான் கண்ணன்

2991. ஒக்கலைவைத்துமுலைப்பால் உண்ணென்றுதந்திடவாங்கி,
செக்கஞ்செகவன்றவள்பால் உயிர்செகவுண்டபெருமான்,
நக்கபிரானோடயனும் இந்திரனும்முதலாக,
ஒக்கவும்தோற்றிய ஈசன் மாயனென்னெஞ்சினுளானே.

என் தோள்களில் தங்கினான் கண்ணன்

2992. மாயனென்னெஞ்சினுள்ளன் மற்றும்யவர்க்கும் அஃதே,
காயமும்சீவனும்தானே காலுமெரியும் அவனே,
சேயன் அணியன்யவர்க்கும் சிந்தைக்கும் கோசர மல்லன்,
தூயன் துயக் கன்மயக்கன் என்னுடைத்தோளிணையானே.

என் நாவில் வந்து அமர்ந்தான் கண்ணன்

2993. தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும்,
தாளிணைமேலும்பு னைந்த தண்ணந்துழாயுடையம்மான்
கேளிணையொன்றுமிலாதான் கிளரும்சுடரொளிமூர்த்தி,
நாளணைந்தொன்றுமகலான் என்னுடைநாவினுளானே.

என் கண்ணுள் நின்றான் கண்ணன்

2994. நாவினுள்நின்றுமலரும் ஞானக்கலைகளுக்கெல்லாம்,
ஆவியுமாக்கையும்தானே அழிப்போடளிப்பவன்தானே,
பூவியல் நால்தடந்தோளன் பொருபடையாழிசங்கேந்தும்,
காவிநன்மேனிக்கமலக் கண்ணனென்கண்ணினுளானே.

என் நெற்றியில் இருந்தான் கண்ணன்

2995. கமலக்கண்ணனென்கண்ணினுள்ளான் காண்பன்அவன் கண்களாலே,
அமலங்க ளாக விழிக்கும் ஐம்புல னுமவன்மூர்த்தி,
கமலத்தயன்நம்பிதன்னைக் கண்ணுதலானொடும்தோற்றி
அமலத்தெய்வத்தோடுலகம் ஆக்கியென்நெற்றியுளானே.

என் உச்சியில் நிலையாக அமர்ந்தான் கண்ணன்

2996. நெற்றியுள்நின்றென் னையாளும் நிரைமலர்ப்பாதங்கள்சூடி,
கற்றைத்துழாய்முடிக்கோலக் கண்ணபிரானைத்தொழுவார்,
ஒற்றைப்பிறையணிந்தானும் நான்முகனும் இந்திரனும்,
மற்றையமரருமெல்லாம் வந்தெனதுச்சியுளானே.

இவற்றைப் பாடினால் கண்ணனடி சேரலாம்

2997. உச்சியுள்ளேநிற்கும்தேவ தேவற்குக்கண்ணபிராற்கு,
இச்சையுள்செல்லவுணர்த்தி வண்குருகூர்ச்சடகோபன்,
இச்சொன்ன ஆயிரத்துள் இவையுமோர்பத்தெம்பிராற்கு,
நிச்சலும்விண்ணப்பம்செய்ய நீள்கழல்சென்னிபெருமே.

நேரிசை வெண்பா

இவற்றைப் பாடுக: திருமால் திருவடி கிட்டும்

இவையறிந்தோர் தம்மளவி லீசனுவந் தாற்ற
அவயவங்க டோறு மணையும்-சுவையதனைப்
பெற்றார்வத் தால்மாறன் பேசினசொற் பேசமால்
பொற்றாள்நஞ் சென்னி பொரும்     (9)

பத்தாந் திருமொழி

10. பொருமாநீள்படை

பகவான் நம் மீது கொண்டிருக்கும் அன்பு, இரக்கம், அனுக்ரஹம் ஆகியவை இயற்கை. இவை நம் செயலால் ஏற்படுபவை அல்ல என்கிறார் ஆழ்வார்.

கலி விருத்தம்

கருமாணிக்கம் என் கண்ணில் உள்ளது

2998. பொருமாநீள்படை யாழிசங்கத்தொடு,
திருமாநீள்கழல் ஏழுலகும்தொழ,
ஒருமாணிக்குற ளாகிநிமிர்ந்த, அக்
கருமாணிக்கமென் கண்ணுளதாகுமே.

பக்தியுடன் தொழுதால் பரமன் எதிரில் நிற்பான்

2999. கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால்தொழில்,
எண்ணிலும்வரு மென்னினிவேண்டுவம்?
மண்ணும்நீரு மெரியும் நல்வாயுவும்,
விண்ணுமாய்விரியு மெம்பிரானையே.

மனமே! எம்பிரானையே தொழு

3000. எம்பிரானையெந்தை தந்தைதந்தைக்கும்
தம்பிரானை, தண்தாமரைக்கண்ணனை,
கொம்பராவு நுண்ணேரிடைமார்வனை,
எம்பிரானைத் தொழாய்மடநெஞ்சமே.

நெஞ்சே! நீ எப்போதும் எம்பெருமானை விடாதே!

3001. நெஞ்சமேநல்லை நல்லை,உன்னைப்பெற்றால்
என்செய்யோம், இனியென்னகுறைவினம்?
மைந்தனை மலராள்மணவாளனை,
துஞ்சும்போதும் விடாதுதொடர்க்கண்டாய்.

நெஞ்சே! மூவடி கொண்டானை நீயும் கண்டாயே!

3002. கண்டாயேநெஞ்சே கருமங்கள்வாய்க்கின்று, ஓர்
எண்டானுமின்றியே வந்தியலுமாறு,
உண்டானையுலகேழு மோர்மூவடி
கொண்டானை, கண்டு கொண்டனைநீயுமே.

நாம் துன்பத்தை அடைய விடான் மணிவண்ணன்

3003. நீயும்நானுமிந் நேர்நிற்கில், மேல்மற்றோர்,
நோயும்சார்க்கொடான் நெஞ்சமே, சொன்னேன்,
தாயும்தந்தையுமா யிவ்வுலகினில்,
வாயுமீசன் மணிவண்ணனெந்தையே.

எந்தையே! எம்பெருமானே! என்று சொல்வேன்

3004. எந்தையேயென்று மெம்பெருமானென்றும்,
சிந்தையுள்வைப்பன் சொல்லுவன்பாவியேன்,
எந்தையெம்பெருமானென்று வானவர்,
சிந்தையுள் வைத்துச் சொல்லும்செல்வ னையே.

செல்வ நாரணன் என்னை விடான்

3005. செல்வநாரண னென்றசொல்கேட்டலும்,
மல்கும்கண்பனி நாடுவன்மாயமே,
அல்லும்நன்பகலு மிடைவீடின்றி,
நல்கியென்னை விடான்நம்பி நம்பியே.

ஆதியஞ்சோதியை நான் மறப்பேனோ?

3006. நம்பியைத் தென் குறுங்குடிநின்ற, அச்
செம்பொனேதிக ழும்திருமூர்த்தியை,
உம்பர்வானவ ராதியஞ்சோதியை,
எம்பிரானையென் சொல்லிமறப்பனோ.

என் மணியை இனி மறவேன்

3007. மறப்பும்ஞானமும் நானொன் றுணர்ந்திலன்,
மறக்குமென்று செந்தாமரைக்கண்ணொடு,
மறப்பற என்னுள்ளே மன்னினான் றன்னை,
மறப்பனோவினி யானென்மணியையே?

இவற்றைப் படித்தால் கல்வியறிவு வாய்க்கும்

3008. மணியை, வானவர் கண்ணனை, தன்னது ஓர்
அணியை, தென் குருகூர் கடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல், கல்வி வாயுமே.

நேரிசை வெண்பா

மாறனை வணங்கி வாழ்த்திடுக

பொருமாழி சங்குடையோன், பூதலத்தே வந்து
தருமாறோ ரேதுவறத் தன்னை,-திரமாகப்
பார்த்துரைசெய் மாறன் பதம்பணிக என்சென்னி
வாழ்த்திடுக என்னுடை வாய்  (10)
**************
இரண்டாம் பத்து

முதல் திருமொழி

1. வாயுந்திரை

உலகிலுள்ள எல்லா உயிரினங்களும் தம்மைப் போலவே பகவானை விட்டுப் பிரிந்து வருந்துகின்றன என்று நினைத்தார் நம்மாழ்வார், நாரை, அன்றில், கடல், காற்று, சந்திரன் ஆகியவற்றைக் கண்டார்; அவற்றிற்கு உண்டான் சில தன்மைகளை இயற்கையாக எண்ணாமல், அவை பகவானைவிட்டுப் பிரிந்ததால் வருந்துகின்றன என்று நினைத்து, அவற்றிற்காக இரங்குகிறார்.

தரவு கொச்சகக் கலிப்பா

நாராய்! திருமாலினிடம் நெஞ்சைப் பறி கொடுத்தாயா?

3009. வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்,
ஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால்,
நோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல்,
நீயும்திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே.

அன்றிலே! நீயும் திருத்துழாய் மாலைக்கு ஏங்குகிறாயா?

3010. கோட்பட்டசிந்தையாய்க் கூர்வாய அன்றிலே,
சேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால்,
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்,
தாட்பட்ட தண்டுழாய்த் தாமம்கா முற்றாயே.

கடலே! யாமுற்ற துன்பம் நீயும் உற்றாயோ?

3011. காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல்,
நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த,
யாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே

வாடையே! நீயும் என்னைப்போல் உறங்குவதில்லையே!

3012. கடலும்மலையும் விசும்பும் துழாயெம்போல்,
சுடர்க்கொளிராப்பகல் துஞ்சாயால்தண்வாடாய்,
அடல்கொள்படையாழி அம்மானைக்காண்பான்நீ,
உடலம்நோயுற்றாயோ வூழிதோறூழியே.

மேகமே! நீயும் மதுசூதனனிடம் பாசம் வைத்தாயா?

3013. ஊழிதோறூழி யுலகுக்குநீர்க்கொண்டு,
தோழியரும்யாமும்போல் நீராய்நெகிழ்கின்ற,
வாழியவானமே, நீயும் மதுசூதன்,
பாழிமையிற் பட்டவன்கட்பாசத்தால்நைவாயே

சந்திரனே! ஆழியானை நம்பி ஒளி இழந்தாயோ!

3014. நைவாய எம்மேபோல் நாண்மதியே நீயிந்நாள்,
மைவான் இருளகற்றாய் மாழாந்துதேம்புதியால்,
ஐவாய் அரவணைமே லாழிப்பெருமானார்,
மெய்வாசகம் கேட்டுன் மெய்ந்நீர்மை தோற்றாயே.

இருளே!  எங்களை மேலும் துன்புறுத்துகிறாயே!

3015. தோற்றோம்மடநெஞ்ச மெம்பெருமான்நாரணற்கு
எம்ஆற்றாமைசொல்லி யழுவோமை நீநடுவே,
வேற்றோர்வகையில் கொடிதாயெனையூழி,
மாற்றாண்மைநிற்றியோ வாழிகனையிருளே.

உப்பங்கழியே! நீயும் எம்பெருமான் செயலில் அகப்பட்டாயோ!

3016. இருளின்திணிவண்ணம் மாநீர்க்கழியே,போய்,
மருளுற்றிராப்பகல் துஞ்சிலும் நீதுஞ்சாயால்,
உருளும்சகடம் உதைத்தபெருமானார்,
அருளின்பெருநசையா லாழாந்துநொந்தாயே.

நந்தாவிளக்கே! நீயும் எம்போல் வெதும்புகிறாயோ?

3017. நொந்தாராக்காதல்நோய் மெல்லாவியுள்ளுலர்த்த,
நந்தாவிளக்கமே நீயுமளியத்தாய்,
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாயெம்பெருமான்,
அந்தாமத்தண்டுழா யாசையால்வேவாயே.

கண்ணா! இனி என்னை விட வேண்டா

3018. வேவாராவேட்கைநோய் மெல்லாவியுள்ளுலர்த்த,
ஓவாதிராப்பக லுன்பாலேவீழ்த்தொழிந்தாய்,
மாவாய்பிளந்து மருதிடைபோய்மண்ணளந்த,
மூவா முதல்வா இனியெம்மைச்சோரேலே

இவற்றைப் படிப்போர் வைகுந்தம் எய்துவர்

3019. சோராத வெப்பொருட்கு ஆதியாம் சோதிக்கே,
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்,
ஓராயிரம் சொன்ன அவற்றுளி வைப்பத்தும்,
சோரார் விடார்க்கண்டீர் வைகுந்தம் திண்ணெனவே.

நேரிசை வெண்பா

மாறன் அருள் கிட்டும்

வாயுந் திருமால் மறையநிற்க, ஆற்றாமை
போய்விஞ்சி மிக்க புலம்புதலாய்-ஆய
அறியாத வற்றோ டணைந்தழுத மாறன்
செறிவாரை நோக்குந் திணிந்து (11)

இரண்டாந் திருமொழி

2. திண்ணன் வீடு

ஆழ்வார்க்கு உண்டான ஆற்றாமை தீரும்படி பகவான் எதிரில் வந்து முகம் காட்டி நின்றான். அவனுடைய குணங்களை அனுபவிக்கத் தொடங்கிய ஆழ்வார். நிலைகுலையப் பண்ணும் சவுலப்ய குணத்தை விட்டு, பரத்துவ குணத்தை அனுபவிக்கிறார். அவ்வாறு அனுபவிக்கும் பொழுது திருமாலின் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக்காட்டுகிறார்.

கலி விருத்தம்

கண்ணன் கண்களே கண்கள்

3020. திண்ணன்வீடு முதல்முழுதுமாய்,
எண்ணின்மீதிய னெம்பெருமான்,
மண்ணும்விண்ணுமெல்லா முடனுண்ட,
நங்கண்ணன் கண்ணல்ல தில்லையோர்க்கண்ணே.

கோபால கோளரியே அருள்வார்

3021. ஏபாவம்,பரமே, யேழுலகும்,
ஈபாவஞ்செய் தருளாலளிப்பாரார்,
மாபாவம்விட அரற்குப்பிச்சைபெய்,
கோபாலகோளரி யேறன்றியே.

திருவிக்கிரமனே உயர்ந்த தெய்வம்

3022. ஏறனைப்பூவனைப் பூமகள்தன்னை,
வேறின்றிவிண்தொழத் தன்னுள்வைத்து,
மேல்தன்னைமீதிட நிமிர்ந்துமண்கொண்ட,
மால்தனில்மிக்குமோர் தேவுமுளதே.

எம்பெருமானுக்கே பூவும் பூசனையும் தகும்

3023. தேவுமெப் பொருளும்படைக்க,
பூவில்நான் முகனைப்படைத்த,
தேவனெம் பெருமானுக்கல்லால்,
பூவும்பூசனையும் தகுமே.

கண்ணனை உண்மையாக அறிவார் இலர்

3024. தகும்சீர்த் தன்தனிமுதலினுள்ளே,
மிகும்தேவு மெப்பொருளும்படைக்க,
தகும்கோலத் தாமரைக்கண்ணனெம்மான்,
மிகும்சோதி மேலறிவார்யவரே.

ஞானச் சுடரே பாற்கடற் பள்ளியான்

3025. யவரும்யாவையு மெல்லாப்பொருளும்,
கவர்வின்றித் தன்னுளொடுங்கநின்ற,
பவர்க்கொள்ஞான வெள்ளச்சுடர்மூர்த்தி,
அவரெம் ஆழியம் பள்ளியாரே.

மாயன் மனக்கருத்தை அறிவார் யார்?

3026. பள்ளியாலிலை யேழுலகும்கொள்ளும்,
வள்ளல் வல்வயிற்றுப்பெருமான்,
உள்ளுளா ரறிவார் அவன்றன்,
கள்ளமாய மனக்கருத்தே.

மாயப்பிரான் செயலை வேறு யாரால் செய்ய முடியும்?

3027. கருத்தில்தேவு மெல்லாப்பொருளும்,
வருத்தித்தமர்யப் பிரானையன்றி,
ஆரே திருத்தித்திண்ணிலை மூவுலகும்
தம்முள் இருத்திக்காக்கு மியல்வினரே.

எல்லா உலகங்களையும் படைத்தவன் கண்ணன்

3028. காக்குமியல்வினன் கண்ணபெருமான்,
சேர்க்கைசெய்து தன்னுந்தியுள்ளே,
வாய்த்ததிசைமுக னிந்திரன்வானவர்,
ஆக்கினான் தெய்வவுலகுகளே.

தேவர்கள் யாவரும் கருட வாகனனைப் பணிவர்

3029. கள்வா எம்மையு மேழுலகும்,
நின் னுள்ளேதோற்றிய இறைவா என்று,
வெள்ளேறன்நான்முக னிந்திரன்வானவர்,
புள்ளூர்திகழல் பணிந்தேத்துவரே.

இவற்றைப் படித்தோர்க்கு ஊனமே ஏற்பட்டது

3030. ஏத்தவேழுலகுங் கொண்டகோலக்
கூத்தனை, குருகூர்ச்சடகோபன்சொல்,
வாய்த்தவாயிரத்துள் ளிவைபத்துடன்,
ஏத்தவல்லவர்க் கில்லையோர்ஊனமே.

நேரிசை வெண்பா

இவற்றைப் படியுங்கள்; ஊனமின்றி வாழலாம்

திண்ணிதா மாறன் றிருமால் பரத்துவத்தை
நண்ணியவ தாரத்தே நன்குரைத்த-வண்ணமறிந்
தற்றார்கள் யாவர் அவரடிக்கே ஆங்கவர்பால்
உற்றாரை மேலிடா தூன் (12)

மூன்றாந் திருமொழி

3. ஊனில்வாழ்

ஆதாம் பகவானைப் பிரிந்த ஆற்றாமை தீர, பகவான் வந்து கலந்ததாலுண்டான இன்பத்தை அனுபவிக்க இவ்வுகில் யாரேனும் உளரோ என்று நம்மாழ்வார் சிந்தித்தார்; உண்டியே உடையே என்று உகந்து ஓடும் இவ்வுலகில் ஒருவரும் இல்லை என்பதை அறிந்தார்; நித்ய சூரிகளின் கூட்டத்தில் புகுந்து பகவானை இடைவிடாமல் அனுபவிக்கும் காலம் என்றைய தினம் வாய்க்குமோ என்று தம் குறைகளை இத்திருவாய்மொழியில் கூறுகிறார்.

கலி விருத்தம்

பகவான் சேர்க்கை மிகவும் சுவைக்கும்

3031. ஊனில்வாழுயிரே நல்லைபோஉன்னைப்பெற்று,
வானுளார்பெருமான் மதுசூதனென்னம்மான்,
தானும்யானுமெல்லாம் தன்னுள்ளேகலந்தொழிந்தோம்,
தேனும்பாலும்நெய்யும் கன்னலுமமுதுமொத்தே

அறியாதன அறிவித்தவன் மாயன்

3032. ஒத்தார்மிக்காரை இலையாயமாமாய,
ஒத்தாயெப்பொருட்கு முயிராய், என்னைப்பெற்ற
அத்தாயாய்த்தந்தையா யறியாதனவறிவித்த,
அத்தா, நீ செய்தன அடியேனறியேனே.

தொண்டு செய்யத் தூண்டியவன் வாமனன்

3033. அறியாக்காலத்துள்ளே யடிமைக்கணன்புசெய்வித்து,
அறியாமாமாயத் தடியேனைவைத்தாயால்,
அறியாமைக்குறளாய் நிலம்மாவலிமூவடியென்று,
அறியாமைவஞ்சித்தா யெனதாவியுள்கலந்தே.

என் ஆத்மாவுக்கும் நீ ஆத்மா

3034. எனதாவியுள்கலந்தபெரு நல்லுதவிக்கைம்மாறு,
எனதாவிதந்தொழிந்தே னினிமீள்வதென்பதுண்டே,
எனதாவியாவியும்நீ பொழிலேழுமுண்டவெந்தாய்,
எனதாவியாரயானார தந்தநீகொண்டாக்கினையே.

வாரகனே! நின் பாதத்தை நான் சேர்ந்தேன்

3035. இனியார்ஞானங்களா லெடுக்கலெழாதவெந்தாய்,
கனிவார்வீட்டின்பமே யென்கடற்படாவமுதே,
தனியேன்வாழ்முதலே, பொழிலேழுமேனமொன்றாய்,
நுனியார்க்கோட்டில்வைத்தா யுன்பாதம்சேர்ந்தேனே.

இராமபிரானே! நின்னையே அடைந்தேன்

3036. சேர்ந்தார்தீவினைகட் கருநஞ்சைத்திண்மதியை,
தீர்ந்தார்தம்மனத்துப் பிரியாதவருயிரை,
சோர்ந்தேபோகல்கொடாச் சுடரை அரக்கியைமூக்
கீர்ந்தாயை அடியேனடைந்தேன் முதல்முன்னமே.

கண்ணா! என்னை நினைவில் வை

3037. முன்நல்யாழ்பயில் நூல் நரம்பின்முதிர்சுவையே,
பன்னலார்பயிலும் பரனே,பவித்திரனே,
கன்னலே,அமுதே, கார்முகிலே,என்கண்ணா,
நின்னலாலிலேன்கா ணென்னைநீகுறிக்கொள்ளே.

பிறவித்துயர் கடிந்து நின்னை எய்தினேன்

3038. குறிக்கொள்ஞானங்களா லெனையூழிசெய்தவமும்,
கிறிக்கொண்டிப்பிறப்பே சிலநாளிலெய்தினன்யான்,
உறிக்கொண்டவெண்ணெய்பா லொளித்துண்ணுமம்மான்பின்,
நெறிக்கொண்டநெஞ்சனாய்ப் பிறவித்துயர்க்கடிந்தே

பவித்திரனைப் பாடிக் களித்தேன்

3039. கடிவார்தண்ணந்துழாய்க் கண்ணன்விண்ணவர்பெருமான்,
படிவான்மிறந்த பரமன்பவித் திரன்சீர்,
செடியார்நோய்கள்கெடப் படிந்துகுடைந்தாடி,
அடியேன்வாய்மடுத்துப் பருகிக்களித்தேனே.

அடியார் கூட்டத்தை எப்பொழுது கூடுவேன்?

3040. களிப்பும்கவர்வுமற்றுப் பிறப்புப்பிணிமூப்பிறப்பற்று,
ஒளிக்கொண்ட சோதியுமா யுடன்கூடுவதென்றுகொலோ,
துளிக்கின்றவானிந்நிலம் சுடராழிசங்கேந்தி,
அளிக்கின்றமாயப்பிரானடியார்கள் குழாங்களையே.

அடியாருடன் கூடி நின்றாடுமின்

3041. குழாங்கொள்பேரரக்கன் குலம்வீயமுனிந்தவனை,
குழாங்கொள்தென்குருகூர்ச் சடகோபன்தெரிந்துரைத்த,
குழாங்கொளாயிரத்து ளிவைபத்துமுடன்பாடி,
குழாங்களாயடியீருடன் கூடிநின்றாடுமினே.

நேரிசை வெண்பா

மனமே! மாறன் அடியாருடன் ஆடு

ஊன மறவேவந் துள்கலந்த மாலினிமை
யானது, அனுபவித்தற் காந்துணையா-வானில்
அடியார் குழாங்கூட ஆசையுற்ற மாறன்
அடியா ருடன்நெஞ்சே! ஆடு (13)

நான்காந் திருமொழி

4. ஆடியாடி

பகவானே! தேவரீர் எப்போதும் எல்லோருடைய துன்பங்களையும் நீங்குவதையே இயல்பாகக் கொண்டிருக்கிறீர்! தங்கள்மீது கொண்ட பேரன்பின் காரணமாக என் பெண் அவதிப்படுகிறாளே! இவளுக்காக நீர் என்ன செய்ய நினைத்திருக்கிறீர்! என்று தாய் தன் பெண்ணாகிய பராங்குச நாயகியைப் பற்றி எம்பெருமானிடம் கேட்பதுபோல் அமைந்துள்ளது இப்பகுதி.

வஞ்சி விருத்தம்

நரசிங்கா என்று பாடி வாடுகிறாள் என் மகள்

3042. ஆடியாடி யகம்கரைந்து, இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்
நாடிநாடி நரசிங்காவென்று,
வாடிவாடு மிவ்வாணுதலெ.

கண்ணபிரானே! நின்னைக் காண என் மகள் ஆசைப்படுகிறாள்

3043. வாணுதலிம்மடவரல், உம்மைக்
காணுமாசையுள் நைகின்றாள், விறல்
வாணனாயிரந்தோள்துணித்தீர், உம்மைக்
காண நீரிரக்கமிலீரே.

நுமக்காக என் மகள் உருகுகிறாள்

3044. இரக்கமனத்தோ டெரியணை,
அரக்குமெழுகு மொக்குமிவள்,
இரக்கமெழி ரிதற்கென்செய்கேன்,
அரக்கனிலங்கை செற்றீருக்கே.

நுமது நினைவால் என் மகள் புலம்புகிறாள்

3045. இலங்கைசெற்றவனே! என்னும், பின்னும்
வலங்கொள்புள்ளுயர்த்தாய்! என்னும், உள்ளம்
மலங்கவெவ்வுயிர்க்கும், கண்ணீர்மிகக்
கலங்கிக்கைதொழும் நின்றிவளே.

நும் திருத்துழாயை என் மகள் விரும்புகிறாள்

3046. இவளிராப்பகல் வாய்வெரீஇ, தன
குவளையொண்கண்ணநீர் கொண்டாள், வண்டு
திவளும்தண்ணந் துழாய்கொடீர், என
தவளவண்ணர் தகவுகளே.

என் மகள் உள்ளூர உருகுகிறாள்

3047. தகவுடையவனே யென்னும், பின்னும்
மிகவிரும்பும்பிரான் என்னும், என
தகவுயிர்க்கமுதே, என்னும், உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே.

என் மகள் கண்ணன் பெருமையையே பேசுவாள்

3048. உள்ளுளாவி யுலர்ந்துலர்ந்து, என
வள்ளலே கண்ணனேயென்னும், பின்னும்
வெள்ளநீர்க்கிடந்தாய்,என்னும், என்
கள்விதான்பட்ட வஞ்சனையே.

என் மகள் நின்னையே அடைக்கலம் அடைந்தாள்

3049. வஞ்சனே, என்னும் கைதொழும், தன்
நெஞ்சம்வே வநெடிதுயிர்க்கும், விறல்
கஞ்சனைவஞ்சனை செய்தீர், உம்மைத்
தஞ்சமென்றிவள் பட்டனவே.

என் மகள் பற்றி நுங்கள் இஷ்டம் என்ன?

3050. பட்டபோதெழு போதறியாள், விரை
மட்டலர்தண்துழாய் என்னும், சுடர்
வட்டவாய்நுதி நேமியீர், நும
திட்டமென்கொ லிவ்வேழைக்கே.

கண்ணா! என் மகளை வாட்டாதே

3051. ஏழைபேதை யிராப்பகல், தன
கேழிலொண்கண்ணநீர் கொண்டாள், கிளர்
வாழ்வைவேவ விலங்கை செற்றீர், இவள்
மாழைநோக்கொன்றும் வாட்டேன்மினே.

இவற்றைப் பாடி திருமாலைத் துதியுங்கள்

3052. வாட்டமில்புகழ் வாமனனை, இசை
கூட்டிவண்சடகோபன் சொல், அமை
பாட்டோராயிரத்திப் பத்தால், அடி
குட்டலாகு மந்தாமமே.

நேரிசை வெண்பா

பகவானிடம் அன்பு கொண்டார் நிலையை மாறன் உரைத்தான்

ஆடிமகிழ் வானி லடியார் குழாங்களுடன்
கூடியின்ப மெய்தாக் குறையதனால் வாடிமிக
அன்புற்றார் தந்நிலைமை யாய்ந்துரைக்க மோகித்துத்
துன்புற்றான் மாறனந் தோ! (14)


ஐந்தாந் திருமொழி

5. அந்தாமத்தன்பு

ஆழ்வார் படும் வருத்தம் தீருமாறு பகவான் வந்து ஆழ்வாரோடு கலந்ததை மகிழ்ந்து பேசும் பாடல்கள் இவை.

ஆழ்வார் மகிழ்தல்

திருமாலின் அவயவங்கள் தாமரைப் பூக்களே

3053. அந்தாமத்தன்புசெய் தென்னாவிசேரம்மானுக்கு,
அந்தாமவாழ்முடிசங் காழிநூலாரமுள,
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாய்செங்கமலம்,
செந்தாமரையடிக்கள் செம்பொன்திருவுடம்பே.

திருமால் என்னுள் கலந்தவன்

3054. திருவுடம்புவான்சுடர் செந்தாமரைகண்கைகமலம்,
திருவிடமேமார்வ மயனிடமேகொப்பூழ்,
ஒருவிடமுமெந்தை பெருமாற்கரனேயோ,
ஒருவிடமொன்றின்றி யென்னுள்கலந்தானுக்கே

திருமாலிடம் கலவாத பொருளே இல்லை

3055. என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்,
மின்னும்சுடர்மலைக்குக் கண்பாதம்கைகமலம்,
மன்னுமுழுவேழுலகும் வயிற்றினுள,
தன்னுள்கலவாத்து தெப்பொருளும்தானிலையே

தெவிட்டாத அமிழ்தம் திருமால்

3056. எப்பொருளும்தானாய் மரகதக்குன்றமொக்கும்,
அப்பொழுதைத்தாமரைப்பூக் கண்பாதம்கைகமலம்,
எப்பொழுதும்நாள்திங்க ளாண்டூழியூழிதொறும்,
அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே.

கண்ணனின் வாய் பவளம்; பிற அவயவங்கள் தாமரை

3057. ஆராவமுதமர் யல்லாவியுள்கலந்த,
காரார்க்கருமுகில்போ லென்னம்மான்கண்ணனுக்கு,
நேராவாய்செம்பவளம் கண்பாதம்கைகமலம்,
பேராரநீண்முடிநாண் பின்னுமிழைபலவே.

பாம்பணையானுக்கு உருவும் பண்பும் பலப்பல

3058. பலபலவேயாபரணம் பேரும்பலபலவே,
பலபலவேசோதிவடிவு பண்பெண்ணில்,
பலபலகண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம்,
பலபலவேஞானமும் பாம்பணைமேலாற்கேயோ.

பாம்பணையானே கண்ணனும் இராமனும்

3059. பாம்பணைமேல்பாற்கடலுள் பள்ளியமர்ந்ததுவும்,
காம்பணைதோள்பின்னைக்கா எறுடனேழ்செற்றதுவும்,
தேம்பணையசோலை மராமரமேழெய்ததுவும்,
பூம்பிணையதண்துழாய்ப் பொன்முடியம் போரேறே.

திருமாலை என்னால் முற்ற முடிய வர்ணிக்க முடியாது

3060. பொன்முடியம் போரேற்றை யெம்மானைநால்தடந்தோள்,
தன்முடிவொன்றில்லாத தண்டுழாய்மாலையனை,
என்முடிவுகாணாதே யென்னுள் கலந்தானை,
சொல்முடிவுகாணேன்நான் சொல்லுவதென்சொல்லீரே.

என் உயிருக்கு உயிர் போன்றவன் கண்ணன்

3061. சொல்லீரென்னம்மானை யென்னாவியாவிதனை,
எல்லையில்சீரென் கருமாணிக்கச்சுடரை,
நல்லவமுதம்பெற்றற்கரிய வீடுமாய்,
அல்லிமலர்விரையொத் தாணல்லன்பெண்ணல்லனே.

எம்மானின் உருவை உள்ளபடி உரைக்க இயலாது

3062. ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்,
கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே.

இவற்றைப் பாடினால் வைகுந்தம் கிடைக்கும்

3063. கூறுதலொன்றாராக் குடக்கூத்தவம்மானை,
கூறுதலேமேவிக் குருகூர்ச்சடகோபன்,
கூறினவந்தாதி யோராயிரத்துளிப்பத்தும்,
கூறுதல்வல்லாருளரேல் கூடுவர்வைகுந்தமே.

நேரிசை வெண்பா

சடகோபன் திருவடிக்கே அன்பு காட்டுக

அந்தாமத் தன்பால் அடியார்க ளோடிறைவன்
வந்தாரத் தான்கலந்த வண்மையினால்- சந்தாபம்
தீர்ந்தசட கோபன் திருவடிக்கே நெஞ்சமே
வாய்ந்தஅன்பை நாடோறும் வை (15)

ஆறாந் திருமொழி

6. வைகுந்தா

ஆழ்வாரோடு வந்து கலந்த எம்பெருமான் திருப்தியடைந்தான்; இவருக்கு என்ன உதவி செய்யலாம்? என்று யோசித்து நின்றான்; பெறமுடியாத ஆழ்வாரைப் பெற்றோம். இவர் தமக்கு இல்லாத தாழ்மைகளை எல்லாம் ஏறிட்டுச் சொல்லிக் கொண்டு நம்மை விட்டுப் பிரிந்து விடுவாரோ! என்று எண்ணினான். இதனை அறிந்த ஆழ்வார், நான் பிடித்தபிடி சாதாரணமன்று; இனி ஒரு நாளும் உன்னை விடமாட்டேன். திடமாகப்பற்றிக் கொண்டேன் என்று கூறி இறைவனைச் சிக்கெனப் பிடித்தார்.

இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்

ஆசிரியத்துறை

வைகுந்தா! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

3064. வைகுந்தாமணிவண்ணனே, என்போல்லாத்திருக்குறளா,
என்னுள்மன்னி, வைகும்வைகல்தோறும் அமுதாயவானேறே,
செய்குந்தாவருந்தீமையுன்னடியார்க்குத்தீர்த்தசுரர்க்குத்தீமைகள்
செய்குந்தா, உன்னைநான் பிடித்தேன் கொள்சிக்கெனவே.

தாமரைக் கண்ணன் என்னையே நோக்குகின்றான்

3065. சிக்கெனச்சிறுதோரிடமும் புறப்படாத்தன்னுள்ளே, உலகுகள்
ஒக்கவேவிழுங்கிப் புகுந்தான்புகுந்ததற்பின்,
மிக்கஞானவெள்ளச்சுடர்விளக்காய்த் துளக்கற்றமுதமர்ய், எங்கும்
பக்கநோக்கறியானென் பைந்தாமரைக்கண்ணனே.

வள்ளலே! என்னே நின்னருள்!

3066. தாமரைக்கண்ணனைவிண்ணோர் பரவும்தலைமகனை, துழாய்விரைப்
பூமருவுகண்ணி யெம்பிரானைப்பொன்மலையை,
நாமருவி நன்கேத்தியுள்ளி வணங்கி நாம்மகிழ்ந்தாட, நாவலர்
பாமருவிநிற்கத்தந்த பான்மையேவள்ளலே.

வள்ளலே! உன்னை எங்ஙனம் விடுவேன்?

3067. வள்ளலே,மதுசூதனா, என்மரகதமலையே, உனைநினைந்து,
தெள்கல்தந்த எந்தாய் உன்னையெங்ஙனம்விடுகேன்,
வெள்ளமேபுரைநின்புகழ்குடைந்தாடிப்பாடிக்களித்துகந்துகந்து
உள்ளநோய்களேல்லாம் துரந்துய்ந்து போந்திருந்தே

எந்தாய்! நின்னை நினைத்து நின் அடிமை ஆனேன்

3068. உய்ந்து போந்தென்னுலப்பிலாத வெந்தீவினைகளை நாசஞ்செய்துஉன்
தந்தமிலடிமையடைந்தேன் விடுவேனோ,
ஐந்துபைந்தலையாடரவணைமேவிப்பாற்கடல்யோகநித்திரை,
சிந்தைசெய்தவெந்தாய் உன்னைச்சிந்தைசெய்துசெய்தே.

நரசிம்மா! எனக்கு முடியாதது ஒன்றுண்டோ?

3069. உன்னைச் சிந்தைசெய்துசெய்துன்நெடுமாமொழியிசைபாடியாடிஎன்
முன்னைத்தீவினைகள்முழுவேரரிந்தனன்யான்,
உன்னைச்சிந்தையினாலிகழ்ந்த இரணியன் அகல்மார்வங்கீண்ட,என்
முன்னைகோளரியே, முடியாததென்னெனக்கே?

இறைவன் என்னுள் புகுந்தான்: நாகம் இல்லை

3070. முடியாத்தென்னெக்கேலினி முழுவேழுலகு முண்டான்  உகந்துவந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானு மல்லனினி
செடியார்நோய்களெல்லாந்துரந்து எமர்கீழ்மேலெழுபிறப்பும்
விடியாவெந்நகரத்து என்றும் சேர்ந்தல்மாறினரே.

எந்தாய்! என்னிடமிருந்து உன்னை நீக்காதே

3071. மாறிமாறிப்பலபிறப்பும்பிறந் தடியையடைந்துள்ளந்தேறி
ஈறிலின்பத்திருவெள்ளம் யான்மூழ்கினன்,
பாறிப்பாறியசுர ர்தம்பல்குழாங்கள்நீறெழ, பாய்பறவையொன்
றேறிவீற்றிருந்தாய் உன்னை யென்னுள்நீக்கேலெந்தாய்

எந்தாய்! இனி என்னை விட்டுப் போக முடியாது

3072. எந்தாய்தண்திருவேங்கடத்துள் நின்றாய்! இலங்கைசெற்றாய், மராமரம்
பைந்தாளேழுருவவொரு வாளிகோத்தவில்லா!
கொந்தார்தண்ணந்துழாயினாயமுதே! உன்னையென்னுள்ளே குழைத்தவெம்
மைந்தா! வானேறே, இனியெங்குப்போகின்றதே?

வேங்கடவா! முக்காலங்களிலும் தாய்தந்தை நீயே

3073. போகின்றகாலங்கள்போயகாலங் கள்போகுகாலங்கள், தாய்தந்தையுயி
ராகின்றாய் உன்னைநானடைந்தேன்விடுவேனோ,
பாகின்றதொல்புகழ்மூவுலகுக்கும் நாதனே. பரமா, தண்வேங்கட
மேகின்றாய்தண்டுழாய் விரைநாறுகண்ணியனே.

இவற்றைப் பாடுக: கேசவன் அடியார் ஆகலாம்

3074. கண்ணித்தண்ணந்துழாய்முடிக் கமலத்தடம்பெருங் கண்ணனை, புகழ்
நண்ணித்தென்குருகூர்ச்சடகோபன்மாறன்சொன்ன,
எண்ணில்சோர்விலந்தாதியாயிரத் துள்ளிவையுமோர்பத்திசையொடும்,
பண்ணில்பாடவல்லாரவர் கேசவன்தமரே.

நேரிசை வெண்பா

சடகோபன் பாடல்களால் கேசவன் வலிமை பெற்றான்

வைகுந்தன் வந்து கலந்ததற்பின் வாழ்மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து நைகின்ற
தன்மைதனைக் கண்டுன்னைத் தான்விடே னென்றுரைக்க
வன்மையடைந் தான்கேச வன்  (16)

ஏழாந் திருமொழி

7. கேசவன் தமர்

பகவான் தம்மீது வைத்திருக்கும் பேரன்பைக் கண்டு, அவரது பேருதவியை ஆழ்வார் விரிவாகக் கூறுகிறார்.

பன்னிரு நாமப் பாட்டு

கலி நிலைத்துறை

கேசவனாகிய நாராயணனால் யான் பெற்ற பெருவாழ்வு

3075. கேசவன்தமர்க்கீழ்மே லெமரேழெழுபிறப்பும்,
மாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா,
ஈசனென்கருமாணிக்கமென் செங்கோலக்கண்ணன்
விண்ணோர் நாயகன், எம்பிரானெம்மான்நாராயணனாலே

மாதவனே எல்லா உலகங்களுக்கும் நாயகன்

3076. நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன்வேதமயன்,
காரணம்கிரிசை கருமமிவைமுதல்வனெந்தை,
சீரணங்கமரர்பிறர் பலரும்தொழுதேத்தநின்று,
வாரணத்தைமருப்பொசித்த பிரானென்மாதவனே.

கரும்புக் கட்டிதான் கோவிந்தன்

3077. மாதவனென்றதேகொண் டென்னையினியிப்பால்பட்டது,
யாதவங்களும்சேர்க்கொடேனென் றென்னுள்புகுந்திருந்து,
தீதவம்கெடுக்குமமுதம் செந்தாமரைக்கட்குன்றம்,
கோதவமிலென்கன்னற்கட்டி யெம்மானென்கோவிந்தனே

மகாவிஷ்ணு என் பாவங்களைப் போக்கினான்

3078. கோவிந்தன் குடக்கூத்தன் கோவலனென் றென்றேகுனித்து
தேவும்தன்னையும் பாடியாடத்திருத்தி, என்னைக் கொண்டென்
பாவந்தன்னையும் பாறக்கைத் தெமரேழெழு பிறப்பும்,
மேவும்தன்மைய மாக்கினான் வல்லனெம் பிரான்விட்டுவே.

மதுசூதனனின் திருக்கோலம் என்னே!

3079. விட்டிலங்குசெஞ்சோதித் தாமரைபாதம்கைகள்கண்கள்,
விட்டிலங்குகருஞ்சுடர் மலையேதிருவுடம்பு,
விட்டிலங்குமதியம்சீர் சங்குசக்கரம்பரிதி,
விட்டிலங்குமுடியம்மான் மதுசூதனன்தனக்கே.

எந்நிலையிலும் யான் திரிவிக்கிரமனையே பாடுவேன்

3080. மதுசூதனையன்றிமற்றிலேனென் றெத்தாலும்கருமமின்றி,
துதிசூழ்ந்தபாடல்கள் பாடியாட நின்றூழியூழிதொறும்,
எதிர்சூழல்புக்கெனைத்தோர்பிறப்புமெனக்கேயருள்கள்செய்ய,
விதிசூழ்ந்ததாலெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே.

வாமனா! ஊழிதோறும் நின்னையே தொழுவேன்

3081. திரிவிக்கிரமன்செந்தாமரைக்கணெம்மானேன்செங்கனிவாய்
உருவில்பொலிந்தவெள்ளைப்பளிங்குநிறத்தனனென்றென்று,
உள்ளிப் பரவிப்பணிந்து பல்லூழியூழிநின்பாதபங்கயமே,
மருவித்தொழும்மனமேதந்தாய் வல்லைகாணென்வாமனனே

ஸ்ரீதரா! நினக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்?

3082. வாமனனென்மரகதவண்ணன் தாமரைக்கண்ணினன்
காமனைப்பயந்தாய், என்றென்றுன்கழல்பாடியேபணிந்து,
தூமனத்தனனாய்ப் பிறவித்துழ திநீங்க, என்னைத்
தீமனங்கெடுத்தா யுனக்கென்செய்கேனென்சிரீ தரனே.

இருடீகேசா! உன்னை என்னுள் வைத்தாயே!

3083. சிரீஇதரன்செய்யதாமரைக்கண்ணனென்றென்றிராப்பகல்வாய்
வெரீஇ, அலமந்துகண்கள்நீர்மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து
மரீஇயதீவினைமாளவின்பம்வளர வைகல்வைகல்
இரீஇ, உன்னையென்னுள்வைத்தனை யென்னிருடீகேசனே.

மனமே! பத்மநாபனை விடாதே

3084. இருடீகேசனெம்பிரா னிலங்கையரக்கர்க்குலம்,
முருடுதீர்த்தபிரானெம்மா னமரர்பெம்மானென்றென்று,
தெருடியாகில்நெஞ்சே,வணங்கு திண்ணமறியறிந்து,
மருடியேலும்விடேல்கண்டாய் நம்பிபற்பநாபனையே

தேவர்பிரான் எந்தை தாமோதரன்

3085. பற்பநாபனுயர்வறவுயரும் பெருந்திறலோன்,
எற்பரனென்னையாக்கிக் பு காண்டெனக்கேதன்னைத்தந்த
கற்பகம், என்னமுதம் கார்முகில்போலும்வேங்கடநல்
வெற்பன், விசும்போர்பிரா னெந்தைதாமோதரனே.

ஆழிவண்ணனின் தரத்தை யாரும் அறியார்

3086. தாமோதரனைத்தனிமுதல்வனை ஞாலமுண்டவனை,
ஆமோதரமறிய வொருவ ர்க்கென்றெதொழுமவர்கள்,
தாமோதரனுருவாகிய சிவற்கும்திசைமுகற்கும்,
ஆமோதரமறிய எம்மானையென்னாழிவண்ணனையே.

இப்பாடல்களைப் பாடுக: கண்ணன் அருள் கிட்டும்

3087. வண்ணமாமணிச்சோதியை யமரர்தலைமகனை,
கண்ணனைநெடுமாலைத் தென்குருகூர்ச்சடகோபன்,
பண்ணியதமிழ்மாலை யாயிரத்துள்ளிவைபன்னிரண்டும்,
பண்ணில்பன்னிரு நாமப் பாட்டண்ணல்தாளணைவிக்குமே.

நேரிசை வெண்பா

சடகோபன் திருவடிகளே உயிர்களை உய்விக்கும்

கேசவனா லெந்தமர்கள் கீழ்மே லெழுபிறப்பும்,
தேசடைந்தார் என்று சிறந்துரைத்த-வீசுபுகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கெல் லாமுய்கைக்கு
ஆறென்று நெஞ்சே! அணை (17)

எட்டாந் திருமொழி

8. அணைவது

ஆழ்வார், உலகத்தாருக்கு அரிய உபதேசங்களைச் செய்கிறார்.

எம்பெருமானது வீடு அளிக்கும் தன்மை

கொச்சகக் கலிப்பா

பிறவிக்கடல் கடத்தும் தெப்பம்

3088. அணைவதரவணைமேல் பூம்பாவையாகம்
புணர்வது, இருவரவர்முதலும் தானே,
இணைவனாமெப்பொருட்கும் வீடுமுதலாம்,
புணைவன் பிறவிக்கடல்நீந்துவார்க்கே.

எம்பெருமானது தொடர்பின் சிறப்பு

3089. நீந்தும்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்,
நீந்தும் துயரில்லா வீடுமுதலாம்,
பூந்தண்புனல்பொய்கை யானைஇடர்க்கடிந்த,
பூந்தண்துழாயென் தனிநாயகன் புணர்ப்பே.

மும்மூர்த்தியானவன் திருமாலே

3090. புணர்க்குமயனா மழிக்குமரனாம்,
புணர்த்ததன்னுந்தியோ டாகத்துமன்னி,
புணர்ததிருவாகித் தன்மார்வில்தான்சேர்,
புணர்ப்பன்பெரும்புணர்ப் பெங்கும்புலனே.

திருமால் புகழையே ஓதுக: மோட்சம் உண்டு

3091. புலனைந்துமேயும் பொறியைந்துநீக்கி,
நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர்,
அலமந்துவீய வசுரரைச்செற்றான்,
பலமுந்துசீரில் படிமினோவாதே.

ஹயக்ரீவனாக அவதரித்தவன் தேவாதிதேவன்

3092. ஒவாத்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்,
மூவாத்தனிமுதலாய் மூவுலகும்காவலோன்,
மாவாகியாமையாய் மீனாகிமானிடமாம்,
தேவாதிதேவபெருமா னென்தீர்த்தனே.

பைந்துழாயான் பெருமையே பெருமை

3093. தீர்த்தனுலகளந்த சேவடிமேல்பூந்தாமம்,
சேர்த்தியவையே சிவன்முடிமேல்தான்கண்டு,
பார்த்தன்தெளிந்தொழிந்த பைந்துழாயான்பெருமை,
பேர்த்துமொருவரால் பேசக்கிடந்ததே?

திருமாலின் மாயை யாருக்குத் தெரியும்?

3094. கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்புக்
கிடந்திடும், தன்னுள்கரக்குமுமிழும்,
தடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும்
மடந்தையை, மால்செய்கின்றமாலார்க்காண்பாரே.

எங்குமுள்ள கண்ணன்

3095. காண்பாரா ரெம்மீசன் கண்ணனை யென்காணுமாறு,
ஊண்பேசி லெல்லா வுலகுமோர் துற்றாற்றா,
சேண்பால வீடோ வுயிரோமற்றெப் பொருட்கும்,
ஏண்பாலும் சோரான் பரந்துளனா மெங்குமே.

சிங்கபிரான் பெருமையை யாராலும் உணரமுடியாது

3096. எங்கும்முளன்கண்ண னென்றமகனைக்காய்ந்து,
இங்கில்லையால் என் றிரணியன் தூண்புடைப்ப,
அங்கப்பொழுதே அவன்வீயத்தோன்றிய, என்
சிங்கப்பிரான்பெருமை யாராயும்சீர்மைத்தே.

எல்லாமாய் நின்ற கண்ணனைக் கண்டேன்

3097. சீர்மை கொள்வீடு சுவர்க்க நரகீறா,
ஈர்மை கொள்தேவர் நடுவாமற்றெப் பொருட்கும்,
வேர்முதலாய் வித்தாய்ப் பரந்துதனிநின்ற,
கார்முகில் போல்வண்ணனென் கண்ணனை நான்கண்டேனே.

இவற்றை படிப்போர் சுவர்க்கம் ஆள்வர்

3098. கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை,
வண்ட லம்பும்சோலை வழுதி வளநாடன்,
பண்டலையில் சொன்னதமி ழாயிரத்திப்பத்தும் வல்லார்,
விண்டலை யில்வீற்றிருந் தாள்வரெம் மாவீடே

நேரிசை வெண்பா

மாறன் திருவடிகளே சுவர்க்கம்

அணைந்தவர்க டம்முடனே ஆயனருட் காளாம்
குணந்தனையே கொண்டுலகைக் கூட்ட-இணங்கிமிக
மாசிலுப தேசஞ்செய் மாறன் மலரடியே
வீசு புகழெம்மா வீடு  (18)

ஒன்பதாந் திருமொழி

9. எம்மாவீடு

பகவானே! எனக்கென்று எதுவும் வேண்டா. உன் திருவுள்ளத்திற்கு விருப்பமானதே எனக்கு வேண்டும். மோக்ஷமோ, கைவல்யமோ, ஆத்ம நாசமோ நரகமோ, நீ எது கொடுத்தாலும் எனக்குக் கவலை இல்லை. உன் விருப்பத்திற்கு ஏற்றதே எனக்கு வேண்டும் என்று ஆழ்வார் பிரார்த்திக்கிறார். தத்வஹித புருஷார்த்தங்களில் புருஷார்த்தத்தை இப்பதிகம் கூறுகிறது.

வேண்டிப் பெறுதல் ஈதே என்னல்

ஆதிமூலமே! நின் திருவடிகளே எனக்கு வேண்டும்

3099. எம்மாவீட்டுத் திறமும்செப்பம், நின்
செம்மாபாதபற்புத் தலைசேர்த்தொல்லை,
கைம்மாதுன்பம் கடிந்தபிரானே,
அம்மாவடியென் வேண்டுவதீதே.

எந்தாய் ஞானக்கை தா

3100. இதேயானுன்னைக் கொள்வதெஞ்ஞான்றும், என்
மைதோய்சோதி மணிவண்ணவெந்தாய்,
எய்தாநின்கழல் யானெய்த, ஞானக்
கைதா காலக்கழிவுசெய்யேலே.

கண்ணபிரானே! நின்கழல் ஏத்த அருள்

3101. செய்யேல் தீவினையென் றருள் செய்யும்,என்
கையார்ச்சக்கரக் கண்ணபிரானே,
ஐயார்க்கண்டமடைக்கிலும் நின்கழல்
எய்யாதேத்த, அருள்செய்யெனக்கே.

கண்ணா! உனக்காகவே என்னை ஏற்க வேண்டும்

3102. எனக்கே யாட்செய் யெக்காலத்து மென்று,என்
மனக்கே வந்திடை வீடின்றி மன்னி,
தனக்கே யாக வெனைக் கொள்ளுமீதே,
எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.

எந்தக் கதி கிடைத்தாலும் கண்ணனை மறவேன்

3103. சிறப்பில்வீடு சுவர்க்கம் நரகம்,
இறப்பிலெய்துக வெய்தற்க, யானும்
பிறப்பில் பல்பிறவிப் பெருமானை,
மறப்பொன்றின்றி யென்றும் மகிழ்வேனே.

திருமாலே! நின்னை வணங்கவேண்டும்: வருக

3104. மகிழ்கொள் தெய்வ முலோகம் அலோகம்,
மகிழ்கொள்சோதி மலர்ந்தவம்மானே,
மகிழ்கொள்சிந்தை சொல்செய்கைகொண்டு, என்றும்
மகிழ்வுற்றுன்னை வணங்கவாராயே.

கண்ணா! உன் திருவடி அடையும் அருள் தா

3105. வாராயுன் திருப்பாதமலர்க்கீழ்,
பேராதேயான் வந்தடையும்படி
தாராதாய், உன்னையென்னுள்வைப்பிலென்றும்
ஆராதாய், எனக்கென்றுமெக்காலே.

சர்க்கரைக்கட்டியே! என் மனத்தில் தங்குக

3106. எக்காலத்தெந்தையா யென்னுள்மன்னில், மற்
றெக்காலத்திலும் யாதொன்றும்வேண்டேன்,
மிக்கார்வேத விமலர்விழுங்கும், என்
அக்காரக்கனியே, உன்னையானே.

தேவதேவனே! யானே நீ; என் செல்வமும் நீ

3107. யானேயென்னை அறியகிலாதே,
யானேயென்தனதே யென்றிருந்தேன்,
யானேநீயென் னுடைமையும்நீயே,
வானேயேத்து மெம்வானவரேறே.

இராமபிரானே! என்னை நின்னடி சேர்த்துக்கொள்

3108. ஏறேலேழும்வென் றேர்க்கொளிலங்கையை,
நீறேசெய்த நெடுஞ்சுடர்ச்சோதி,
தேறேலென்னையுன் பொன்னடிச்சேர்த்தொல்லை,
வேறேபோக எஞ்ஞான்றும்விடலே.

இவற்றைப் பாடுக: மோட்சம் கிடைக்கும்

3109. விடலில் சக்கரத் தண்ணலை,மேவல்
விடலில் வண்குருகூர்ச் சடகோபன்சொல்,
கெடலி லாயிரத்துள் ளிவைபத்தும்,
கெடலில் வீடுசெய்யும் கிளர்வார்க்கே.

நேரிசை வெண்பா

மனமே! மாறன் திருவடிகளைச் சூடு

எம்மாவீ டும்வேண்டா என்றனக்குன் றாளிணையே
அம்மா! அமையும் என் ஆய்ந்துரைத்த-நம்முடைய
வாழ்முதலாம் மாறன் மலர்த்தாள் இணைசூடிக்
கீழ்மையற்று நெஞ்சே! கிளர் (19)

பத்தாந் திருமொழி

10. கிளரொளி

பூதேவியின் திருமார்பகமாக விளங்குவன இரண்டு மலைகள். ஒன்று திருவேங்கடம்; மற்றொன்று திருமாலிருஞ்சோலை மலை. பகவானுக்கு இவ்விரண்டு மலைகளிலும் விருப்பம் மிகுதி. இது திருமாலிருஞ்சோலையைப் பற்றிய பகுதி. அழகர் விரும்பியுறையும் இம்மலையை நினைப்பதும், வணங்குவதும், இம்மலையில் சில நாட்களேனும் வாழ்வதும் மிகச் சிறந்த செயல்களாகும். இளமை நீங்குவதற்கு முன்பே திருமாலிருஞ்சோலைக்குச் செல்ல வேண்டும் என்கிறார் ஆழ்வார்.

திருமாலிருஞ்சோலையை அடைந்து வணங்குக எனல்

கலி விருத்தம்

திருமாலிருஞ்சோலையை விரைவில் அடைக

3110. கிளரொளியிளமை கெடுவதன்முன்னம்,
வளரொளிமாயோன் மருவியகோயில்,
வளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை,
தளர்விலராகில் சார்வதுசதிரே.

திருமாலிருஞ்சோலையைத் தொழுவதே புருஷார்த்தம்

3111. சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது,
அதிர்க்குரல்சங்கத் தழகர்தம்கோயில்,
மதிதவழ்குடுமி மாலிருஞ்சோலை,
பதியதுவேத்தி யெழுவதுபயனே.

திருமாலிருஞ்சோலைக்கு அருகிலாவது செல்க

3112. பயனல்லசெய்து பயனில்லை நெஞ்சே
புயல்மழைவண்ணர் புரிந்துறைகோயில்
மயல்மிகுபொழில்சூழ் மாலிருஞ்சோலை
அயன்மலையடைவது அதுகருமமே.

திருமாலிருஞ்சோலையை அடைவதே நியாயம்

3113. கரும வன் பாசம் கழித்து உர்ன்று உய்யவே,
பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில்
வரு மழை தவழும் மாலிருஞ்சோலைத்
திருமலை அதுவே, அடைவது திறமே.

அருகிலுள்ள மலையை அடைவதும் நல்வழிதான்

3114. திறமுடைவலத்தால் தீவினைபெருக்காது
அறமுயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண்சுனைசூழ் மாலிருஞ்சோலை
புறமலைசாரப் போவதுகிறியே.

மாலிருஞ்சோலையை அடைய நினைப்பதே நல்லது

3115. கிறியெனநினைமின் கீழ்மைசெய்யாதே
உறியமர்வெண்ணெய் உண்டவன்கோயில்
மறியொடுபிணைசேர் மாலிருஞ்சோலை
நெறிபடவதுவே நினைவதுநலமே.

மாலிருஞ்சோலையை வலம் வருவது வலிமை

3116. நலமெனநினைமின் நரகழுந்தாதே
நிலமுனமிடத்தான் நீடுறைகோயில்
மலமறுமதிசேர் மாலிருஞ்சோலை
வலமுறையெய்தி மருவுதல்வலமே.

மலையை வலம் வருவது நல்ல வழக்கம்

3117. வலஞ்செய்து, வைகல் வலம் கழியாதே,
வலஞ்செய்யும் ஆய – மாயவன் கோயில்,
வலஞ்செய்யும் வானோர் மாலிருஞ்சோலை,
வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே.

மலையை வணங்க நினைப்பதுகூடச் சிறந்தது

3118. சூதென்றுகளவும் சூதும்செய்யாதே
வேதமுன்விரித்தான் விரும்பியகோயில்
மாதுறுமயில்சேர்மாலிருஞசோலை
போதவிழ்மலையே புகுவதுபொருளே.

இத்திருமலையை அடைவதே பொருள்

3119. சூது என்று களவும் சூதும் செய்யாதே,
வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில்,
மாது உறு மயில் சேர் மாலிருஞ் சோலைப்
போது அவிழ் மலையே, புகுவது பொருளே.

இவற்றைப் பாடுக: கண்ணன் திருவடி சேரலாம்

3120. பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ்மேல்
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்து
அருளுடையவன் – தாள் அணைவிக்கும் முடித்தே.

நேரிசை வெண்பா

சோலைமலையைச் சேர்க்க என்ற மாறனை வணங்குக

கிளரொளிசேர் கீழுரைத்த பேறு கிடைக்க
வளரொளிமால் சோலை மலைக்கே-தளர்வறவே
நெஞ்சைவைத்துச் சேரும் எனும் நீடுபுகழ் மாறன்றாள்
முன்செலுத்து வோமெம் முடி  (20)
**********
மூன்றாம் பத்து

முதல் திருமொழி

1. முடிச்சோதி

திருமாலிருஞ்சோலையில் கேட்டார்க்கு வரமளிக்கும் கற்பக மரம் போல் இருக்கும் அழகரின் வடிவழகை அனுபவித்து ஆழ்வார் இன்பமடைகிறார்.

அழகரின் வடிவழகில் ஈடுபடல்

அழகரின் சோதி உருவம் என்ன!

3121. முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலந்ததுவோ,
அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ,
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய், நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே. கட்டுரையே.

அழகா! நின் சோதிக்கு இணையில்லை

3122. கட்டுரைக்கில் தாமரைநின் கண்பாதம் கையொவ்வா,
கட்டுரைத்த நன் பொன்னுள் திருமேனி ஒளி ஒவ்வாது,
ஒட்டுரைத்திவ் வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்,
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ.

பரஞ்சோதீ! நின் பண்புதான் என்னே!

3123. பரஞ்சோதி. நீபரமாய் நின்னிகழ்ந்து பின், மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிகழ்கின்ற,
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த,எம்
பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே.

திருமாலே! நீ திருத்துழாயை விரும்பினாயே!

3124. மாட்டாதே யாகிலுமிம் மலர்தலைமா ஞாலம்,
நின் மாட்டாய மலர்ப்புரையும் திருவுருவும் மனம்வைக்க
மாட்டாத பலசமய மதிகொடுத்தாய், மலர்த்துழாய்
மாட்டேநீ மனம்வைத்தாய் மாஞாலம் வருந்தாதே.

திருமாலே! நீ எங்கும் எதிலும் உள்ளாய்

3125. வருந்தாத அருந்தவத்த மலர்க்கதிரின் சுடருடம்பாய்,
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்,
வருங்காலம் நிகழ்காலம் கழிகால மாய்,உலகை
ஒருங்காக அளிப்பாய்சீர் எங்குலக்க ஓதுவனே?

நின்னை முற்ற முடிய வாழ்த்துதல் அரிது

3126. ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத் தெவ்வெவையும்,
சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை,
போதுவாழ் புனந்துழாய் முடியினாய், பூவின்மேல்
மாதுவாழ் மார்ப்பினாய். என்சொல்லியான் வாழ்த்துவனே?

நான்முகனைப் படைத்தவனே! நின் புகழ் என்னே!

3127. வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை,
மூழ்த்தநீ ருலகெல்லாம் படையென்று முதல்படைத்தாய்
கேழ்த்தசீ ரரன்முதலாக் கிளர்தெய்வ மாய்க்கிளர்ந்து,
சூழ்த்தமரர் துதித்தாலுன் தொல்புகழ்மா சூணாதே?

மாலே! நின் ஒளி மழுங்காது

3128. மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது,
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்,
மாசூணா வான்கோலத் தமரர்க்கோன் வழிபட்டால்,
மாசூணா உன்பாத மலர்சோதி மழுங்காதே?

புள்ளூர்தியானே! நின் சோதி மறையானது

3129. மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய்,
தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே,
மழுங்காத ஞானமே படையாக, மலருலகில்
தொழும்பாயார்க் களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே?

வேத மலர்ச் சுடரே! நீயே தலைவன்

3130. மறையாய நால்வேதத் துள்நின்ற மலர்சுடரே,
முறையாலிவ் வுலகெல்லாம் படைத்திடந்துண் டுமிழ்ந்தளந்தாய்,
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இதுவியப்பே?

இவற்றைப் பாடுக; பிறவித் துன்பம் நீங்கும்

3131. வியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை,
சயப்புகழார் பலர்வாழும் தடங்குருகூர் சடகோபன்,
துயக்கின்றித் தொழுதுரைத்த ஆயிரத்து ளிப்பத்தும்,
உயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலிமுந்நீர் ஞாலத்தே.

நேரிசை வெண்பா

அழகர் வடிவழகை அனுபவித்தவன் மாறன்

முடியார் திருமலையில் மூண்டுநின்ற மாறன்
அடிவாரந் தன்னில் அழகர்-வடிவழகைப்
பற்றி, முடியும் அடியும் படிகலனும்
முற்றும் அனுபவித்தான் முன்  (21)

இரண்டாந் திருமொழி

2. முந்நீர் ஞாலம்

ஆழ்வார், தரித்திருக்கமாட்டாத துடிப்புடன் (பகவானிடம்) கூறும் வார்த்தைகள் நிரம்பிய பகுதி

அழகரை முற்ற முடிய அனுபவிக்க இயலாமல் ஆழ்வார் கலங்க, அவரது கலக்கத்தை அழகர் தீர்த்தல்

கலி விருத்தம்
 
அழகா! யான் உன்னை எந்நாள் கூடுவேனா ?

3132. முந்நீர் ஞாலம் படைத்தவெம் முகில்வண்ணனே,
அந்நாள்நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன்,
வெந்நாள்நோய் வீய வி னைகளைவேர் அறப்பாய்ந்து,
எந்நாள்யான் உன்னை இனிவந்து கூடுவனே?

வாமனா! நின் தாள் அடைந்து நிற்பது என்றோ?

3133. வன்மா வையம் அளந்த எம் வாமனா,நின்
பன்மா மாயப் பல்பிறவியில் படிகின்றயான்,
தொன்மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து,
நின்மாதாள் சேர்ந்து நிற்பதெஞ் ஞான்றுகொலோ?

கண்ணா! நான் உன்னை அடையும் வழி கூறு

3134. கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப்போர்,
எல்லாச் சேனையும் இருநிலத் தவித்தவெந்தாய்,
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கலறா,
சொல்லாய்யா னுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே.

எந்தாய்! நின் திருவடி சேரும் வகையை அருள்க

3135. சூழ்ச்சி ஞானச் சுடரொளி யாகி,என்றும்
ஏழ்ச்சிக்கே டின்றி எங்கணும் நிறைந்தவெந்தாய்,
தாழ்ச்சிமற் றெங்கும் தவிர்ந்துநின் தாளிணக்கீழ்
வாழ்ச்சி,யான் சேரும் வகையருளாய் வந்தே!

எந்தாய்! நான் உன்னை எங்கு வந்து அணுகுவேன்?

3136. வந்தாய்போ லேவந்தும் என்மனத் தினைநீ,
சிந்தாமல் செய்யாய் இதுவே யிதுவாகில்,
கொந்தார்க்கா யாவின் கொழுமலர்த் திருநிறத்த
எந்தாய்,யானுன்னை எங்குவந் தணுகிற்பனே?

பரமா! நின் தாள்களைக் கிட்டுவது என்றோ?

3137. கிற்பன் கில்லேன் என்றிலன் முனநாளால்,
அற்பசா ரங்கள் அவைசுவைத் தகன்றொழிந்தேன்,
பற்பல் லாயிரம் உயிர்செய்த பரமா,நின்
நற்பொற்சோ தித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே?

மனமே! கண்ணனை என்றைக்கு அடைவது?

3138. எஞ்ஞான்று நாமிருந் திருந்திரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞான மின்றி வினையியல் பிறப்பழுந்தி,
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்துநின்ற,
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே?

கண்ணா! நின்னை எங்கேயாவது காணவேண்டும்

3139. மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்,
ஓவுதலின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்,
பாவுதொல் சீர்க்கண்ணா. என் பரஞ்சுடரே,
கூவுகின்றேன் காண்பான் எங்கொய்தக் கூவுவனே?

உலகளந்தவனை எங்கு அடைவேன்?

3140. கூவிக்கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பலகாலம் வழிதிகைத் தலமர்க்கின்றேன்,
மேவியன் றாநிரை காத்தவ னுலகமெல்லாம்,
தாவிய அம்மானை எங்கினித் தலைப்பெய்வனே?

கண்ணனைக் கண்டபின் என் உயிர் நிலை பெற்றது

3141. தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம்விட்டால்,
அலைப்பூ ணுண்ணுமவ் வல்லலெல் லாமகல,
கலைப்பல் ஞானத்தென் கண்ணனைக் கண்டுகொண்டு,
நிலைப்பெற்றென் னெஞ்சம் பெற்றது நீடுயிரே.

இப்பாடல்கள் நம் பிறப்பை ஒழிக்கும்

3142. உயிர்க ளெல்லா உலகமு முடையவனை,
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்,
செயிரில்சொல் இசைமாலை ஆயிரத்து ளிப்பத்தும்,
உயிரின்மே லாக்கை ஊனிடை ஒழிவிக்குமே.

நேரிசை வெண்பா

சடகோபனின் கலக்கத்தைக் கண்ணன் ஒழித்தான்

முன்னம் அழகரெழில் மூழ்குங் குருகையர்கோன்
இன்னஅள வென்ன எனக்கரிதாய்த்-தென்ன
கரணக் குறையின் கலக்கத்தை, கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து  (22)

மூன்றாந் திருமொழி

3. ஒழிவில் காலம்

ஆழ்வாரே! நம்மோடு பரிமாறுவதற்கு இப்பிறப்பு தடை இல்லை. உம்மை அடிமை கொள்வதற்காகவன்றோ திருவேங்கடமலையில் நிற்கிறேன். அங்கு வந்து அடிமை செய்து வாழலாமே! என்று கூறித் திருவேங்கமுடையார் தம் நிலையைக் காட்ட, அவரது திருவடிகளில் எல்லா அடிமைகளையும் செய்ய வேண்டும் என்று பாரிக்கிறார் ஆழ்வார்

திருவேங்கமுடையானுக்கு அடிமை செய்க எனல்

கலி விருத்தம்

வேங்கடவனுக்கு அடிமை செய்

3143. ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ,
வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,
தெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து,
எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே.

வேங்கடவனே யாவர்க்கும் தந்தை

3144. எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை, வானவர் வானவர் கோனொடும்,
சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,
அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே.

திருவேங்கடத்து அண்ணலே ஈசன்

3145. அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன், செங்கனி வாய்க்கரு மாணிக்கம்,
தெண்ணி றைச்சுனை நீர்த்திரு வேங்கடத்து,
எண்ணில் தொல்புகழ் வானவ ரீசனே.

என்னிடம் பாசம் வைத்தவன் வேங்கடவன்

3146. ஈசன் வானவர்க் கென்பனென் றால்,அது
தேச மோதிரு வேங்கடத் தானுக்கு?,
நீச னென் நிறை வொன்றுமி லேன்,என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.

வேங்கடத்தானை முழுமையாக வர்ணிக்க முடியாது

3147. சோதி யாகியெல் லாவுல கும்தொழும்,
ஆதி மூர்த்தியென் றாலள வகுமோ?,
வேதி யர்முழு வேதத் தமுதத்தை,
தீதில் சீர்த்திரு வேங்கடத் தானையே.

வேங்கடத்துறைவார்க்கு உறவாதல் நம் கடமை

3148. வேங்க டங்கள்மெய்ம் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார்,
வேங்க டத்துறை வார்க்கு நமவென்ன
லாங்க டமை,அதுசுமந் தார்க்கட்கே.

திருவேங்கடக்குன்றமே சுவர்க்கம் தரும்

3149. சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம்கொண்டு,
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்,
நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு,
சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே.

வேங்கடமலை தொழுதால் தீவினை மாளும்

3150. குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை,
ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே.

வேங்கடவன் நம் பிறப்பு இறப்புகளை நீக்குவான்

3151. ஓயு மூப்புப் பிறப்பிறப் புப்பிணி,
வீயு மாறுசெய் வான்திரு வேங்கடத்
தாயன், நாண்மல ராமடித் தாமரை,
வாயுள் ளும்மனத் துள்ளும்வைப் பார்கட்கே.

முதுமை வருமுன் திருவேங்கடம் அடைக

3152. வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று,
எய்த்தி ளைப்பதன் முன்னம் அடைமினோ,
பைத்த பாம்பணை யான்திரு வேங்கடம்,
மொய்த்த சோலைமொய் பூந்தடம் தாழ்வரே.

இவற்றைப் படித்தால் புகழுடன் வாழலாம்

3153. தாள்ப ரப்பிமண் வதாவிய ஈசனை,
நீள்பொ ழில்குரு கூர்ச்சட கோபன்சொல்,
கேழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.

நேரிசை வெண்பா

மனமே! மாறன் திருவடிகளைப் புகழ்

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி
வழுவிலா ஆட்செய்ய மாலுக்கு-எழுசிகர
வேங்கடத்தைப் பாரித்த மிக்கநலஞ் சேர்மாறன்
பூங்கழலை நெஞ்சே! புகழ்  (23)

நான்காந் திருமொழி

4. புகழுநல் ஒருவன்

பகவான் உலகிலுள்ள எல்லாப் பொருள்களாக இருக்கிறான் என்பதை இப்பகுதி கூறுகிறது.

ஆன்மாக்கள் அனைத்தும் கண்ணனே எனல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கண்ணனை என்னவென்று கூறியழைப்பேன்?

3154. புகழுநல்லொருவனென்கோ பொருவில்சீர்ப்பூமியென்கோ
திகழுந்தண்பரவையென்கோ தீயென்கோவாயுவென்கோ
நிகழுமாகசமென்கோ நீள்சுடரிரண்டு மென்கோ
இகழ்விலிவ்வனைத்துமென்கே கண்ணனைக்கூவுமாறே.

எல்லாமாக இருப்பவனை என்ன சொல்லி அழைப்பது?

3155. கூவுமா றறிய மாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ,
மேவுசீர் மாரி என்கோ விளங்குதா ரகைகள் என்கோ,
நாவியல் கலைகள் என்கோ ஞானநல் லாவி என்கோ,
பாவுசீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ண னையே.

சக்கரதாரியை நான் எப்படி வர்ணிப்பேன்?

3156. பங்கையக் கண்ணன் என்கோ பவளச்செவ் வாயன் என்கோ,
அங்கதிர் அடியன் என்கோ அஞ்சன வண்ணன் என்கோ,
செங்கதிர் முடியன் என்கோ  திருமறு மார்வன் என்கோ,
சங்குசக் கரத்தன் என்கோ  சாதிமா ணிக்கத் தையே.

அச்சுதனை நான் எப்படிப் புகழுவேன்?

3157. சாதிமா ணிக்கம் என்கோ சவிகோள்பொன் முத்தம் என்கோ,
சாதிநல் வயிரம் என்கோ, தவிவில்சீர் விளக்கம் என்கோ,
ஆதியஞ் சோதி என்கோ ஆதியம் புருடன் என்கோ,
ஆதுமில் காலத் தெந்தை அச்சுதன் அமல னையே.

அறுசுவை அமிழ்து அன்னவன் அச்சுதன்

3158. அச்சுதன் அமலன் என்கோ, அடியவர் வினைகெடுக்கும்,
நச்சுமா மருந்தம் என்கோ நலங்கடல் அமுதம் என்கோ,
அச்சுவைக் கட்டி என்கோ அறுசுவை அடிசில் என்கோ,
நெய்ச்சுவைத் தேறல் என்கோ கனியென்கோ பாலென் கேனோ.

கண்ணனை முற்றமுடியப் புகழமுடியாது

3159. பாலென்கோ நான்குவேதப்பயனென்கோ சமயநீதி
நூலென்கோ நுடங்குகேள்வியிசை யென்கோ  இவற்றுள்நல்ல
மேலென்கோ வினையின்மிக்க பயனென்கோ  சண்ணனென்கோ
மாலென்கோமாயனென்கோ வானவராதியையே.

தேவர்கட்கெல்லாம் தலைவன் மணிவண்ணன்

3160. வானவராதியென்கோ வானவர்தெய்வமென்கோ
வானவர்போகமென்கோ வானவர்முற்றுமென்கோ
ஊனமில்செல்வமென்கோ ஊனமில்சுவர்க்கமென்கோ
ஊனமில்மோக்கமென்கோ ஒளிமணிவண்ணனையே

கண்ணனே மும்மூர்த்தி ஸ்வரூபன்

3161. ஒளிமணி வண்ணன் என்கோ. ஒருவனென் றேத்த நின்ற
நளிர்மதிச் சடையன் என்கோ. நான்முகக் கடவுள் என்கோ,
அளிமகிழ்ந் துலகமெல்லாம் படைத்தவை ஏத்த நின்ற,
களிமலர்த் துளவ னெம்மான் கண்ணனை மாய னையே.

கண்ணனை உள்ளவாறு உணர்ந்து நினைத்தல் அரிது

3162. கண்ணனை மாயன் றன்னைக் கடல்கடைந் தமுதங் கொண்ட,
அண்ணலை அச்சு தன்னை அனந்தனை அனந்தன் தன்மேல்,
நண்ணிநன் குறைகின் றானை ஞாலமுண் டுமிழ்ந்த மாலை,
எண்ணுமா றறிய மாட்டேன், யாவையும் யவரும் தானே.

ஞான ஸ்வரூபியைக் கூடும் வழி

3163. யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயந் தோறும்,
தோய்விலன் புல னைந் துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி,
ஆவிசேர் உயிரின் உள்ளால் அதுமோர் பற்றி லாத,
பாவனை அதனைக் கூடில் அவனையும் கூட லாமே.

இவற்றைப் படித்தால் சுவர்க்க போகம் கிட்டும்

3164. கூடிவண் டறையும் தண்தார்க்கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடலர் பொழில்கு ருகூர் வண்சட கோபன் சொன்ன,
பாடலோர் ஆயி ரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார்,
வீடில போக மெய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே

நேரிசை வெண்பா

திருமாலை உள்ளவாறு காண்டியவன் மாறன்

புகழொன்று மாலெப் பெருள்களுந் தானாய்
நிகழ்கின்ற நேர்காட்டி நிற்க-மகிழ்மாறன்
எங்கும் அடிமைசெய இச்சித்து வாசிகமாய்
அங்கடிமை செய்தான்மெய்ம் பால்   (24)

ஐந்தாந் திருமொழி

5. மொய்ம்மாம்

பகவானின் குணானுபவத்தால் பேரன்பு விஞ்சி ஆடிப்பாடிப் பரவசமடையும் மெய்யன்பர்களை வாழ்த்தியும், இப்படிப்பட்ட அனுபவத்தை (நிலையை)ப் பெறாதவர்களைத் தாழ்த்தியும் இப்பகுதி கூறுகிறது.

திருமாலின் அன்பர்களை ஆதரித்தலும் அல்லாதவர்களை நிந்தித்தலும்

ஆறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

கண்ணனைத் துதியாவிடில் பயனேயில்லை

3165. மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற,
கைம்மா வுக்கருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,
எம்மா னைச்சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும்துள் ளாதார்,
தம்மால் கருமமென் சொல்லீர் தண்கடல் வட்டத்துள் ளீரே.

திருமாலைப் பாடாதார்க்குப் பிறவித் துன்பம் இல்லை

3166. தண்கடல் வட்டத்துள் ளாரைத் தமக்கிரை யாத்தடிந் துண்ணும்,
திண்கழற் காலசு ரர்க்குத் தீங்கிழைக் கும்திரு மாலை,
பண்கள் தலைக்கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்துழ லாதார்,
மண்கொள் உலகில் பிறப்பார் வல்வி னை மோத மலைந்தே.

கண்ணனைத் தொழாவிடில் நரகம்தான் கிட்டும்

3167. மலையை யெடுத்துக்கல் மாரி காத்துப் பசுநிரை தன்னை,
தொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச்சொல் லிநிறெப் போதும்,
தலையினோ டாதனம் தட்டத் தடுகுட்ட மாய்ப்பற வ நூதார்,
அலைகொள் நரகத் தழுந்திக் கிடந்துழைக் கின்ற வம்பரே.

கண்ணனைத் துதியாவிடில் என்ன பயன் கிட்டும்?

3168. வம்பவிழ் கோதை பொருட்டா மால்விடை யேழும் அடர்த்த,
செம்பவ ளத்திரள் வாயன் சிரீதரன் தொல்புகழ் பாடி,
கும்பிடு நட்டமிட் டாடிக் கோகுகட் டுண்டுழ லாதார்,
தம்பிறப் பால்பய னென்னே சாது சனங்க ளிடையே?

கண்ணனையே பஜனை செய்யுங்கள்: புகழ் உண்டு

3169. சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்ப தற்கு,
ஆதியஞ் சோதி யுருவை அங்குவைத் திங்குப் பிறந்த,
வேத முதல்வ னைப் பாடி வீதிகள் தோறும்துள் ளாதார்,
ஓதி யுணர்ந்தவர் முன்னா என்சவிப் பார்ம னிசரே?

எம்பிரானை வணங்குவோரே எல்லாம் உணர்ந்தவர்கள்

3170. மனிசரும் மற்றும் முற்றுமாய் மாயப் பிறவி பிறந்த,
தனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல் சேர்ந்த பிரானை,
கனியைக் கரும்பினின் சாற்றைக் கட்டியைத் தேனை அமுதை,
முனிவின்றி ஏத்திக் குனிப்பார் முழுதுணர் நீர்மையி னாரே.

கண்ணனிடம் நெஞ்சம் குழைக

3171. நீர்மை நூற்றுவர் வீய ஐவர்க் கருள்பு சய்து நின்று,
பார்மல்கு சேனை அவித்த பரஞ்சுட ரைநினைந் தாடி.
நீர்மல்கு கண்ணின ராகி நெஞ்சம் குழைந்துநை யாதே,
ஊர்மல்கி மோடு பருப்பார் உத்தமர்க்கட் கென்செய் வாரே?

வேங்கடவனின் அன்பரை தேவர் தொழுவர்

3172. வார்ப்புனல் அந்தண் ணருவி வடதிரு வேங்கடத் தெந்தை,
பேர்ப்பல சொல்லிப் பிதற்றிப் பித்தரென் றேபிறர் கூற,
ஊர்ப்பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்கநின் றாடி,
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படு வாரே.

திருமாலினிடம் அன்பிலாதார் துன்புறுவர்

3173. அமரர் தொழப்படு வானை அனைத்துல குக்கும் பிரானை,
அமரர் மனத்தினுள் யோகு புணர்ந்தவன் தன்னோடொன் றாக,
அமரத் துணியவல் லார்கள் ஒழியஅல் லாதவ ரெல்லாம்,
அமர நினைந்தெழுந் தாடி அலற்றுவ தேகரு மமே.

அறியாமையை அகற்றி எம்பிரான் புகழ் பேசுக

3174. கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னை,
திருமணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை,
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளங் குழைந்தெழுந் தாடி,
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதமை தீர்ந்தே.

இவற்றைப் பாடுக: வினைகள் அழியும்

3175. தீர்ந்த அடியவர் தம்மைத்திருத் திப் பணிகொள்ள வல்ல,
ஆர்ந்த புகழச் சுதனை அமரர் பிரானையெம் மானை,
வாய்ந்த வளவயல் சூழ்தண் வளங்குரு கூர்ச்சடகோபன்,
நேர்ந்தவோ ராயிரத் திப்பத் தருவினை நீறு செய்யுமே.

நேரிசை வெண்பா

மனமே! மாறனிடம் பக்திகொள்

மொய்ம்பாரும் மாலுக்கு முன்னடிமை செய்துவப்பால்
அன்பாலாட் செய்பவரை யாதரித்தும்-அன்பிலா
மூடரைநிந் தித்தும் மொழிந்தருளும் மாறன்பால்
தேடரிய பத்திநெஞ்சே! செய்   (25)

ஆறாந் திருமொழி

6. செய்ய தாமரை

முன்பகுதியில் நிந்திக்கப்பட்டவர்களையும் கைவிடலாகாது என்ற கருணையினால், அவர்களையும் வழிப்படுத்திக்கொள்ள நினைத்த ஆழ்வார், யாவரும் நன்கு அறிந்து கொள்ளும்படி பகவானின் சவுலப்ய குணத்தை ஈண்டு விரிவாக எடுத்துக் கூறுகிறார்.

அர்ச்சாவதாரமே சுலப விஷயம் எனல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

செந்தாமரைக் கண்ணனே மும்மூர்த்தி

3176. செய்ய தாமரைக் கண்ண னாயுல கேழு முண்ட அவன்கண்டீர்,
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்,
செய்ய சூழ்சு டர் ஞான மாய்வெளிப் பட்டி வைபடைத் தான்பின்னும்,
மொய்கொள் சோதியொ டாயி னானொரு மூவ ராகிய மூர்த்தியே.

கண்ணனை வணங்குக

3177. மூவ ராகிய மூர்த்தி யைமுதல் மூவர்க் குமுதல் வன்றன்னை,
சாவ முள்ளன நீக்கு வ நூனைத் தடங்க டல்கிடந் தான்தன்னைத்,
தேவ தேவனைத் தென்னி லங்கை எரியெ ழச்செற்ற வில்லியை,
பாவ நாசனைப் பங்க யத்தடங் கண்ண னைப்பர வுமினோ.

கண்ணனையே இரவு பகல் துதியுங்கள்

3178. பரவி வானவ ரேத்த நின்ற பரம னைப்பரஞ் சோதியை,
குரவை கோத்த குழக னைமணி வண்ண னைக்குடக் கூத்தனை,
அரவ மேறி யலைக டலம ரும்து யில்கொண்ட அண்ணலை,
இரவும் நன்பக லும்வி டாதென்றும் ஏத்து தல்மனம் வைம்மினோ.

மாயவன் திருவடிகளையே நினைக

3179. வைம்மின் நும்மனத் தென்று யானுரைக் கின்ற மாயவன்
சீர்மையை எம்ம னோர்க ளுரைப்ப தென்? அது நிற்க நாஞூடொறும்,
வானவர் தம்மை யாளும் அவனும் நான்முக னும்ச டைமுடி அண்ணலும்,
செம்மை யாலவன் பாத பங்கயம் சிந்தித் தேத்தி திரிவரே.

கண்ணன் தோற்றம் பஞ்ச பூதஸ்வரூபமாக இருக்கும்

3180. திரியும் கற்றொ டகல்வி சும்பு திணிந்த மண்கிடந் தகடல்,
எரியும் தீயொ டிருசு டர்தெய்வம், மற்றும் மற்றும் முற்றுமாய்,
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன்விண் ணோரிறை,
சுரியும் பல்கருங் குஞ்சி யெங்கள் சுடர்மு டியண்ணல் தோற்றமே.

செங்கண்மாலையே யான் ஏழு பிறப்பிலும் வணங்குவேன்

3181. தோற்றக் கேடவை யில்ல வனுடை யான வனொரு மூர்த்தியாய்,
சீற்றத் தோடருள் பெற்ற வனடிக் கீழ்ப்பு கநின்ற செங்கண்மால்,
நாற்றத் தோற்றச் சுவையொ லிஊ றல் ஆகி நின்ற,எம் வானவர்
ஏற்றை யேயன்றி மற்றொ ருவரை யானி லேனெழு மைக்குமே.

கண்ணனைத் தொழுக : துயரங்கள் நீங்கும்

3182. எழுமைக் குமென தாவிக் கின்னமு தத்தி னைஎன தாருயிர்,
கெழுமி யகதிர்ச் சோதி யைமணி வண்ண னைக்குடக் கூத்தனை,
விழுமி யவம ரர்மு நிவர்வி ழுங்கும் கன்னல் கனியினை,
தொழுமின் தூயம னத்த ராயிறை யும்நில் லாதுய ரங்களே.

அச்சுதனிடமே நான் அடைக்கலம் புகுவேன்

3183. துயர மேதரு துன்ப இன்ப வினைக ளாய்அ வை அல்லனாய்,
உயர நின்றதோர் சோதி யாயுல கேழு முண்டுமிழ்ந் தான்தன்னை,
அயர வாங்கு நமன்த மர்க்கரு நஞ்சி னையச்சு தன்தன்னை,
தயர தற்கும கனறன் னையன்றி மற்றி லேன்தஞ்ச மாகவே.

கடல் வண்ணன் எல்லாமாக உள்ளான்

3184. தஞ்ச மாகிய தந்தை தாயொடு தானு மாயவை அல்லனாய்,
எஞ்ச லிலம ரர்க்கு லமுதல் மூவர் தம்முள்ளு மாதியை,
அஞ்சி நீருல கத்துள் ளீர்கள் அவனி வனென்று கூழேன்மின்,
நெஞ்சி னால்நினைப் பான்ய வனவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.

கண்ணனைக் காணும் நாள் எந்நாளோ?

3185. கடல்வண் ணன்கண்ணன் விண்ண வர்க்கரு மாணிக் கமென தாருயிர்
படவ ரவின ணைக்கி டந்த பரஞ்சு டர்ப்பண்டு நூற்றுவர்,
அடவ ரும்படை மங்க ஐவர்க்கட் காகி வெஞ்சமத்து, அன்றுதேர்
கடவி யபெரு மான்க னைகழல் காண்ப தென்றுகொல் கண்களே?

இவற்றைப் பாடிப் பக்தர்கள் ஆகுக

3186. கண்கள் காண்டற் கரிய னாய்க்கருத் துக்கு நன்றுமெ ளியனாய்,
மண்கொள் ஞாலத்து யிர்க்கெல் லாமருள் செய்யும் வானவ ரீசனை,
பண்கொள் சோலை வழுதி நாடன் குருகைக் கோன்சட கோபன்சொல்,
பண்கொள் ஆயிரத் திப்பத் தால்பத்த ராகக் கூடும் பயலுமினே.

நேரிசை வெண்பா

அர்ச்சாவதாரமே எளிது என்றான் மாறன்

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
துய்ய விபவமுமாய்த் தோன்றிவற்றுள், எய்துமவர்க்
கிந்நிலத்தில் அர்ச்சாவ தாரம் எளிதென்றான்
பன்னுதமிழ் மாறன் பயின்று  (26)

ஏழாந் திருமொழி

7. பயிலும் சுடரொளி

பகவானுக்கு அடிமை செய்துகொண்டு அடியவராக இருப்பது மிகவும் ஏற்றம். அவனடியார்களுக்கு அடிமை செய்துகொண்டு அடியவராக இருப்பது அதைவிட ஏற்றம். பாகவத சேஷத்வம் என்கிற பரமபுருஷார்த்தத்தை ஆழ்வார் இப்பகுதியில் அருளிச்செய்கிறார்.

பகவானிடம் அடியார்க்கு அடியாரை வணங்குவதில் விசேஷம் எனல்

கலி நிலைத்துறை

கண்ணனின் அடியார்களே எம்மையாள்பவர்

3187. பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை,
பயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை,
பயிலும் திருவுடை யார்யவ ரேலும் அவர்க்கண்டீர்,
பயிலும் பிறப்பிடை தோற்றெம்மை யாளும் பரமரே.

கண்ணனைப் பணிவோர் எம்மையாளுடை நாதர்

3188. ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான்றன்னை,
தோளுமோர் நான்குடைத் தூமணி வண்ணனெம் மான்தன்னை
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியும் அவர்க்கண்டீர்,
நாளும் பிறப்பிடை தோறு எம்மை யாளுடை நாதரே.

கண்ணனின் அடியார்க்கடியார் எம்மையாள்பவர்

3189. நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனை, பொன்னெடுஞ் சக்கரத் தெந்தை பிரான்தன்னை
பாதம் பணியவல் லாரைப் பணியும் அவர்க்கண்டீர்,
ஓதும் பிறப்பி டை தோறெம்மை யாளுடை யார்களே.

நாரணன் தொண்டர் தொண்டர்களே பெருமக்கள்

3190. உடையார்ந்த வாடையன் கண்டிகை யன்உ டை நாணினன்
புடையார்ப்பொன் னூலினன் பொன்முடி யன்மற்றும்பல் கலன்,
நடையா வுடைத்திரு நாரணன் தொண்டர்தொண் டர்க்கண்டீர்,
இடையார் பிறப்பி டைதோறெமக் கெம்பெரு மக்களே.

திருமாலைப் புகழ்வோரின் அடியார்கள் நம் ஸ்வாமிகள்

3191. பெருமக்க ளுள்ளவர் தம்பெரு மானை, அமரர்கட்
கருமை யொழிய அன்றாரமு தூட்டிய அப்பனை,
பெருமை பிதற்றவல் லாரைப் பிதற்றும் அவர்க்கண்டீர்,
வருமையு மிம்மையும் நம்மை யளிக்கும் பிராக்களே.

கண்ணனை நினைப்பவரே நம்மைக் காப்பர்

3192. அளிக்கும் பரமனை கண்ணனை ஆழிப் பிரான்தன்னை,
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணனெம் மான்தன்னை,
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளும் அவர்க்கண்டீர்,
சலிப்பின்றி யாண்டெம்மைச் சன்மசன் மாந்தரங் காப்பரே.

கண்ணனின் அடியார்க்கடியார் நம்மை உய்விப்பர்

3193. சன்மசன் மாந்தரங் காத்தடி யார்களைக் கொண்டுபோய்,
தன்மை பொறுத்தித்தன் தாளிணைக் கீழ்க்கொள்ளும்அப்பனை,
தொன்மை பிதற்றவல் லாறைப் பிதற்றும் அவர்கண்டீர்,
நம்மை பெறுத்தெம்மை நாளுய்யக் கொள்கின்ற நம்பரே.

மாலின் அடியார் நரகராயினும் தொழுகுலமே

3194. நம்பனை ஞாலம் படைத்தவ னைதிரு மார்பனை,
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வரி யான்தன்னைக்,
கும்பிநரகர்கள் ஏத்துவ ரேலும் அவர்கண்டீர்,
எம்பல் பிறப்பிடை தோறெம் தொழுகுலம் தாங்களே.

கண்ணனின் அடியார் சண்டாளராயினும் அவரது அடியார்க்கு அடியார் எம் தலைவர்

3195. குவலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து, எத்தனை
நலந்தா னிலாதசண் டாளசண் டாளர்க ளாகிலும்,
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்றுள்
கலந்தார், அடியார் தம்மடி யாரெம் மடிகளே.

ஏழு தலைமுறைகள் அடியார்களாக இருப்பவர்களுக்கே நாங்கள் அடிமைகள்

3196. அடியார்ந்த வையமுண் டாலிலை யன்ன சஞ்செய்யும்,
படியாது மில்குழ விப்படி யெந்தைபி ரான்றனக்கு,
அடியார் அடியார் தமடி யார்அ டி யார்தமக்
கடியார் அடியார் தம்,அடியாரடி யோங்களே.

இவற்றைப் படியுங்கள்; ஜன்மமே இராது

3197. அடியோங்கு நூற்றவர் வீயஅ ன் றைவருக் கருள்செய்த
நெடியோனை, தென்குரு கூர்ச்சட கோபன்குற் றேவல்கள்,
அடியார்ந்த ஆயிரத் துள்ளிவை பத்தவன் தொண்டர்மேல்
முடிவு,ஆரக் கற்கில் சன்மம்செய் யாமை முடியுமே.

நேரிசை வெண்பா

மாறனுக்கு அடிமையாகுக: பிறப்பே இராது

பயிலுந் திருமால் பதந்தன்னில், நெஞ்சம்
தயலுண்டு நிற்குந் ததியர்க்கு-இயல்வுடனே
ஆளானார்க் காளாகும் மாறன் அடியதனில்
ஆளாகார் சன்மமுடி யா (27)

எட்டாந் திருமொழி

8. முடியானே

பகவானை அடைந்து அனுபவிக்கவேண்டும் என்று ஆழ்வாருக்கு ஆசை. அவருடைய ஐம்புலன்களும் பரமனை நினைத்துக்கண்டு பாடிப் பெருமைப்படவேண்டும் என்று ஆசைப்படுகின்றன. இவ்வாறு ஆற்றாமையால் நோவுபட்டுப் பகவானை ஆழ்வார் கூப்பிடும் முறையை இப்பகுதி கூறுகிறது.

ஐம்புலன்களும் தாமும் பெருவிடாய்ப் பட்டுப் பேசுதல்

கலி விருத்தம்

நெடியானே! என் மனம் நின்னையே நினைத்துருகும்

3198. முடியானே மூவுலகும் தொழுதேத் தும்சீர்
அடியானே, ஆழ்கடலைக் கடைந்தாய் புள்ளூர்
கொடியானே, கொண்டல்வண் ணா அண்டத் தும்பரில்
நெடியானே, என்று கிடக்குமென் நெஞ்சமே.

வாமனா! என் வாசகம் உன்னைப் பற்றியதே

3199. நெஞ்சமே. நீள்நக ராக இருந்தவென்
தஞ்சனே, தண்ணிலங் கைக்கிறை யைச்செற்ற
நஞ்சனே, ஞாலங்கொள் வான்குற ளாகிய வஞ்சனே,
என்னுமெப் போதுமென் வாசகமே.

கண்ணா! என் கைகள் உன்னையே தேடுகின்றன

3200. வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்தம்
நாயகனே, நாளிளந் திங்களைக் கோள்விடுத்து,
வேயகம் பால்வெண்ணெய் தொடுவுண்ட ஆனாயர்
தாயவனே, என்று தடவுமென் கைகளே.

பாம்பணையானே! என் கண்கள் உன்னையே காண விரும்பும்

3201. கைகளால் ஆரத் தொழுது தொழுதுன்னை,
வைகலும் மாத்திரைப் போதுமோர் வீடின்றி,
பைகொள் பாம்பேறி உறைபர னே,உன்னை
மெய்கொள்ளக் காண விரும்புமென் கண்களே.

நினது கருடனின் சிறகொலி கேட்கக் காதுகள் விரும்பும்

3202. கண்களால் காண வருங்கொலைன் றாசையால்,
மண்கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்துசெல்,
பண்கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்து,
திண்கொள்ள ஓர்க்கும் கிடந்தென் செவிகளே.

சக்ரதாரீ! என் உயிர் உன்னையே விரும்புகிறது

3203. செவிகளால் ஆரநின் கீர்த்திக் கனியென்னும்
கவிகளே காலப்பண் தேனுறைப் பத்துற்று,
புவியின்மேல் பொன்னெடுஞ் சக்கரத் துன் னையே
அவிவின்றி யாதரிக் கும்என தாவியே.

கருடவாகனா! உன்னை அழைத்தேன்; வரவில்லையே

3204. ஆவியே. ஆரமுதே என்னை ஆளுடை,
தூவியம் புள்ளுடை யாய்! சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும்,
கூவியும் காணப் பெறேனுன கோலமே.

கண்ணா! உன்னை என்றுதான் காண்பேனோ!

3205. கோலமே தாமரைக் கண்ணதோர் அஞ்சன
நீலமே,நின்றென தாவியை யீர்கின்ற சீலமே,
சென்றுசொல் லாதன முன்நிலாம் காலமே,
உன்னையெந் நாள்கண்டு கொள்வனே?

கண்ணா! உன்னை என்று அடைவேனோ!

3206. கொள்வன்நான் மாவலி மூவடி தா என்ற
கள்வனே, கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓராயிரம் தோள்துணித்த
புள்வல்லாய், உன்னையெஞ் ஞான்று பொருந்துவனே?

கண்ணா! எத்தனை காலம் கதறுவேன்!

3207. பொருந்திய மாமரு தின்னிடை போயவெம்
பெருந்தகாய், உன்கழல் காணிய பேதுற்று,
வருந்திநான் வாசக மாலைபு காண்டு உன்னையே
இருந்திருந் தெத்தனை காலம் புலம்புவனே.

இவற்றைப் பாடினால் தேவருலகு கிடைக்கும்

3208. புலம்புசீர்ப் பூமி அளந்த பெருமானை,
நலங்கொள்சீர் நன்குரு கூர்ச்சட கோபன்,சொல்
வலங்கொண்ட ஆயிரத் துள்ளிவை யுமோர்ப்பத்து,
இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே.

நேரிசை வெண்பா

தமது ஆசையைக் கூறிய மாறன்

முடியாத ஆசைமிக முற்றுகர ணங்கள்
அடியார்தம் மைவிட் டவன்பால் படியா,ஒன்
றொன்றின் செயல்விரும்ப உள்ளதெல்லாந் தாம்விரும்பத்
துன்னியதே மாறன்றன் சொல்  (28)

ஒன்பதாந் திருமொழி

9. சொன்னால்

பகவானையே புகழவேண்டும் அவனுடைய குணங்களையே கூறவேண்டும். இவற்றை விட்டு மனிதனைப் பாடுவார்களா? இவ்வாறு செய்வதால் என்ன பயன்? பகவான் கொடுத்த ஞானம், நாவன்மை ஆகியவற்றை அவனுக்கே பயன்படுத்த வேண்டாமா? என்கிறார் ஆழ்வார்.

மனிதரைப் பாடாது மாதவனை ஏத்துக எனல்

கலி நிலைத்துறை

திருவேங்கடமுடையானையே பாடுவேன்

3209. சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ,
என்னாவில் இன்கவி யானொருவ ர்க்கும் கொடுக்கிலேன்,
தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து,
என்னானை என்னப்பன் எம்பெருமானுள னாகவே.

திருக்குறுங்குடி எம்பெருமானையே பாடுவேன்

3210. உளனாக வேயெண்ணித் தன்னையொன்றாகத்தன்
செல்வத்தை வளனா மதிக்குமிம் மானிடத்தைக்கவி பாடியென்,
குளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,
உளனாய எந்தையை எந்தைபெம்மானை ஒழியவே?

புலவர்களே! மானிடரைப் பாடாதீர்

3211. ஒழிவென்றில் லாதபல் ஊழிதோறூழி நிலாவ,போம்
வழியைத் தரும்நங்கள் வானவர் ஈசனை நிற் கப்போய்,
கழிய மிகநல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்,
இழியக் கருதியோர் மானிடம் பாடலென் னாவதே.

தேவதேவனைப் பாடுக: ஜன்மமே இராது

3212. என்னாவ தெத்தெனை நாளைக்குப் போதும் புலவீர்காள்,
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்?,
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாக வேகொண்டு சன்மம்செய்யாமையும் கொள்ளுமே.

மணிவண்ணனைப் பாட வாருங்கள்

3213. கொள்ளும் பயனில்லைக் குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,
வள்ளல் புகழ்ந்துநும் வாய்மை இழக்கும் புலவீ ர்காள்,
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல் லாம்தரும் கோதில்,என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.

திருமாலைப் பற்றியே கவிதை இயற்றுங்கள்

3214. வம்மின்புலவீர்! நும் மெய்வருத்திக்கை செய் துய்ம்மினோ,
இம்மன் னுலகில் செல்வரிப்போதில்லை நோக்கினோம்,
நும்மின் கவிகொண்டு நும்நுமிட்டாதெய்வம் ஏத்தினால்,
செம்மின் சுடர்முடி என்திருமாலுக்குச் சேருமே.

மனிதரைப் புகழ்ந்து பொய்க் கவி பாடாதீர்

3215. சேரும் கொடைபுகழ் எல்லையிலானை,ஓராயிரம்
பேரும் உடைய பிரானையல்லால் மற்று யான்கிலேன்,
மாரியனையகை மால்வரையொக்கும்திண் தோளென்று ,
பாரிலோர் பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள் வேயவே.

நப்பின்னை மணாளனையே பாடுவேன்

3216. வேயின் மலிபுரை தோளிபின்னைக்கு மணாளனை,
ஆய பெரும்புகழ் எல்லையிலாதன பாடிப்போய்,
காயம் கழித்துஅ வன் தாளிணைக்கீழ்ப்புகுங் காதலன்,
மாய மனிசரை என்சொல்லவல்லேனென் வய்கொண்டே?

கண்ணனைப் பாடினால் இருமையின்பமும் கிடைக்கும்

3217. வாய்கொண்டு மானிடம் பாடவந்தகவி யேனல்லேன்,
ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக் கேயுளன்,
சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்,
நீகண்டு கொள் என்று வீடும் தரும்நின்று நின்றே.

கண்ணனையே பாடுவேன் : மனிதரைப் பாடேன்

3218. நின்றுநின் றுபல நாளுய்க்கும் இவ்வுடல் நீங்கிப்போய்,
சென்றுசென் றாகிலும் கண்டுசன் மங்கழிப் பானெண்ணி,
ஒன்றியொன் றியுல கம்படைத் தாங்கவி யாயினேற்கு,
என்றுமென் றுமினி மற்றொரு வர்க்கவி யேற்குமே?

இவற்றைப் பாடுக: ஜன்மமே இராது

3219. ஏற்கும் பெரும்புகழ் வானவர் ஈசன்கண் ணன்தனக்கு,
ஏற்கும் பெரும்புகழ் வண்குரு கூர்ச்சட கோபன் சொல்,
ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத் துள்ளிவையும் ஓர்ப்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்லவல்லார்க்கில்லை சன்மமே.

நேரிசை வெண்பா

மாறன் அருளால் பிறவித்துயர் நீங்கும்

சொன்னாவில் வாழ்புலவீர்! சோறுகூ றைக்காக
மன்னாத மானிடரை வாழ்த்துதலால்-என்னாகும்?
என்னுடனே மாதவனை ஏத்தும் எனுங்குருகூர்
மன்னருளான் மாறுஞ்சன் மம்    (29)

பத்தாந் திருமொழி

10. சன்மம் பலபல

பகவானைத் துதிப்பதை விட்டு மனிதர்களைத் துதித்துக் கவி பாடும் புலவர்களை அறிவுரைகளால் திருத்தப் பார்த்தார் ஆழ்வார். அவர்கள் திருந்தவில்லை. தாம் ஒருவராவது நரஸ்துதி செய்யாமல் மீண்டதை நினைத்துப் பெருமைப்படுகிறார். பகவானின் பண்புகளில் மூழ்கி அவனை அனுபவிக்கும் பேறு பெற்றோமே என்று நினைத்து ஆழ்வார் உள்குழைத்து பேசுகிறார்.

திருமாலைத் துதிக்கும் தமக்கு ஒரு குறையும் இல்லை எனல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அடியேனுக்கு ஒரு குறையும் இல்லை

3220. சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம்வில்,
ஒண்மை யுடைய வுலக்கையொள் வாள்தண்டு கொண்டுபுள் ளூர்ந்து,உலகில்
வன்மை யுடைய அரக்கர் அசுரரை மாளப் படைபொருத,
நன்மை யுடையவன் சீர்ப்பர வப்பெற்ற நானோர் குறைவிலனே.

கண்ணனைப் பாடுக: தட்டுப்பாடு இராது

3221. குறைவில் தடங்கடல் கோளர வேறித்தன் கோலச்செந் தாமரைக்கண்,
உறைபவன் போலவோர் யோகு புணர்ந்த ஒளிமணி வண்ணன் கண்ணன்,
கறையணி மூக்குடைப் புள்ளிக் கடாவி அசுரரைக் காய்ந்தவம்மான்,
நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யானொரு முட்டிலனே.

கண்ணனைப் பாடினால் துன்பமே இல்லை

3222. முட்டில்பல் போகத் தொருதனி நாயகன் மூவுல குக்குரிய,
கட்டியைத் தேனை அமுதைநன் பாலைக் கனியைக் கரும்புதன்னை,
மட்டவிழ் தண்ணந்து ழாய்முடி யானை வணங்கி அவன்திறத்துப்
பட்டபின்னை,இறை யாகிலும் யானென் மனத்துப் பரிவிலனே.

அச்சுதனை அடைந்தேன்: இடையூறே இல்லை

3223. பரிவின்றி வாணனைக் காத்தும் என் றன்று படையொடும் வந்தெதிர்ந்த திரிபுரம்
செற்றவ னும்மக னும்பின்னும் அங்கியும் போர்தொலைய,
பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொற்சக்கரத்
தரியி னை, அச்சுத னைப்பற்றி யானிறை யேனும் இடரிலனே.

கண்ணனைப் பற்றினேன்: துயரம் துடைத்தேன்

3224. இடரின்றி யேயொரு நாளொரு போழ்திலெல் லாவுல கும்கழிய,
படர்ப்புகழ்ப் பார்த்தனும் வைதிக னுமுடன் ஏறத்திண் தேர்க்கடவி,
சுடரொளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை,
உடலொடும் கொண்டு கொடுத்தவ னைப்பற்றி ஒன்றும் துயரிலனே.

கண்ணனைப் புகழ்கிறேன் : துன்பம் ஓடிவிட்டது

3225. துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற் கவே,
துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக்கண் காணவந்து,
துயரங்கள் செய்து நன் தெய்வ நிலையுலகில் புக வுய்க்குமம்மான்,
துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற யானோர்து ன்பமிலனே.

கண்ணனைச் சேர்ந்தேன்: அல்லல் அகன்றது

3226. துன்பமும் இன்பமு மாகிய செய்வினை யாயுல கங்களுமாய்,
இன்பமில் வெந்நர காகி இனியநல் வான் சுவர்க் கங்களுமாய்,
மன்பல் லுயிர்களு மாகிப் பலபல மாய மயக்குகளால்,
இன்புரும் இவ்விளை யாட்டுடை யானைப்பெற் றேதுமல் லலிலனே.

கண்ணன் தாள் பற்றியதால் துக்கம் இல்லை

3227. அல்லலில் இன்பம் அளவிறந் தெங்கும் அழகமர் சூழொளியன்,
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்குமம்மான்,
எல்லையில் ஞானத்தன் ஞானமஃதேகொண்டெல் லாக்கரு மங்களும்செய்,
எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி யானோர்துக் கமிலனே.

திருமாலைச் சேர்ந்தேன்: தளர்ச்சி நீங்கியது

3228. துக்கமில் ஞானச் சுடரொளி மூர்த்தி துழாயலங் கல்பெருமான்,
மிக்கபன் மாயங்க ளால்விகிர் தம்செய்து வேண்டும் உருவுகொண்டு,
நக்கபி ரானோ டயன்முத லாகஎல் லாரும் எவையும்,தன்னுள்
ஒக்கவொ டுங்கவி ழுங்கவல் லானைப்பெற் றொன்றும் தளர்விலனே.

கண்ணனைப் பாடுவதால் கேடின்றி இருக்கிறேன்

3229. தளர்வின்றி யேயென்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானமொன்றாய்,
அளவுடை யைம்புலன் களறி யாவகை யாலரு வாகிநிற்கும்,
வளரொளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை யிருசுடரை,
கிளரொளி மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி யானென்றும் கேடிலனே.

இவற்றைப் பாடுக; மூவுலகத் தலைமை கிடைக்கும்

3230. கேடில்வி ழுப்புகழ்க் கேசவ னைக்குரு கூர்ச்சட கோபன் சொன்ன,
பாடலோ ராயிரத் துளிவை பத்தும் பயிற்றவல் லார்கட்கு,அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை யூர்தி பண்ணி,
வீடும்பெறுத் தித்தன் மூவுல குக்கும் தருமொரு நாயகமே.

நேரிசை வெண்பா

மாறனை நாத்தழும்பத் துதிமின்

சன்மம் பலசெய்து தானிவ் வுலகளிக்கும்
நன்மையுடை மால்குணத்தை நாடோறும்-இம்மையிலே
ஏத்துமின்பம் பெற்றேன் எனுமா றனையுலகீர்
நாத்தழும்ப ஏத்துமொரு நாள்   (30)
************
நான்காம் பத்து

முதல் திருமொழி

1. ஒரு நாயகம்

பகவானை அடைந்ததால், தாம் ஒரு குறையும் இல்லாதவராய் இருப்பதாக உணர்ந்த ஆழ்வார். தம்மைப் போலவே பூமியிலுள்ளார் அனைவரும் குறைவின்றி வாழவேண்டும் என்று நினைத்தார். எனவே பகவானை அடைவதைத் தவிர மற்றவை நிலையில்லாதவை என்று ஈண்டுக் கூறுகிறார்.

ஸ்ரீ ராமானுஜர் இத்திருவாய்மொழிப் பகுதியைத் திருநாராயணபுரத்திலுள்ள திருநாராயணப்பெருமாளுக்கு ஸமர்ப்பித்ததாகக் கூறுகிறார்.

செல்வம் நிலையாதது; நாரணன் அடிமையே நிலைபெற்றது எனல்

கலி நிலைத்துறை

திருநாராணன் தாள் பெறச் சிந்திக்கவேண்டும்

3231. ஒருநா யகமாய் ஓட,வுலகுட னாண்டவர்,
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்,
பெருநாடு காண இம்மையிலேபிச்சை தாம்கொள்வர்,
திருநாரணன்தாள் காலம் பெறச்சிந்தித் துய்ம்மினோ.

திருமால் திருவடிகளை விரைந்து பணியுங்கள்

3232. உய்ம்மின் திறைகொணர்ந் தென்றுலகாண்டவர், இம்மையே
தம்மின் சுவைமட வாரைப்பிறர் கொள்ளத் தாம்விட்டு
வெம்மி னொளிவெயில் கானகம்போய்க்குமை தின்பர்கள்,
செம்மின் முடித்திரு மாலைவிரைந்தடி சேர்மினோ.

கண்ணன் கழலிணைக் கருதுக

3233. அடிசேர் முடியின ராகியரசர்கள் தாம்தொழ,
இடிசேர் முரசங்கள் முற்றத்தியம்ப இருந்தவர்,
பொடிசேர் துகளாய்ப் போவர்களாதலின் நொக்கென
கடிசேர் துழாய்முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.

குவலயா பீடத்தை அழித்தவனை வணங்குக

3234. நினைப்பான் புகில்கடல் எக்கலின் நுண்மண லிற்பலர்,
எனைத்தோ ருகங்களும் இவ்வுல காண்டு கழிந்தவர்,
மனைப்பால் மருங்கற மாய்தலல்லால்மற்றுக் கண்டிலம்,
பனைத்தாள் மதகளி றட்டவன் பாதம் பணிமினோ.

மாயவன் பேர் சொல்லி வாழுங்கள்

3235. பணிமின் திருவருள் என்னும்அஞ் சீதப் பைம்பூம்பள்ளி,
அணிமென் குழலார் இன்பக்கலவி அமுதுண்டார்,
துணிமுன்பு நாலப்பல் லேழையர் தாமிழிப் பச்செல்வர்,
மணிமின்னு மேனிநம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ.

எதுவும் நிலையாது : எனவே அண்ணல் அடிகளை அடைக

3236. வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து,
ஆழ்ந்தாரென் றல்லால் அன்று முதலின் றறுதியா,
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென் பதில்லை நிற்குறில்,
ஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.

பகவானின் திருக்குணங்களையே அனுபவியுங்கள்

3237. ஆமின் சுவையவை ஆறொடடிசிலுண் டார்ந்தபின்,
தூமென் மொழிமட வாரிரக்கப்பின்னும் துற்றுவார்,
ஈமின் எமக்கொரு துற் றென்றிடறுவ ராதலின்,
கோமின் துழாய்முடி ஆதியஞ்சோதி குணங்களே.

அரவணையான் திருநாமங்களைச் சொல்லுங்கள்

3238. குணங்கொள் நிறைபுகழ் மன்னர்க்கொடைக்கடன் பூண்டிருந்து,
இணங்கி யுலகுட னாக்கிலும் ஆங்கவ னையில்லார்,
மணங்கொண்ட கோபத்து மன்னியு மீள்வர்கள் மீள்வில்லை,
பணங்கொள் அரவணை யான்திரு நாமம் படிமினோ.

கருடவாகனனின் திருவடிகளை அணுகுக

3239. படிமன்னு பல்கலன் பற்றோடறுத்துஐம் புலன்வென்று,
செடிமன்னு காயம்செற்றார்களு மாங்கவ னையில்லார்,
குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியுமீள்வர்கள் மீள்வில்லை,
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ.

பகவானை அடைதலே சிறந்த புருஷார்த்தம்

3240.குறுக மிகவுணர் வத்தொடு நோக்கியெல் லாம்விட்ட,
இறுக லிறப்பென்னும் ஞானிக்கும் அப்பய னில்லையேல்,
சிறுக நினைவதோர் பாசமுண்டாம்பின்னும் வீடில்லை,
மறுபகலில் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடஃதே

இவற்றைப் பாடுதலே உய்யும் வழி

3241. அஃதே உய்யப் புகுமாறென்று கண்ணன் கழல்கள்மேல்,
கொய்பூம் பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் குற்றேவல்,
செய்கோலத் தாயிரம் சீர்த்தொடைப்பாடல் இவைபத்தும்,
அஃகாமற் கற்பவர் ஆழ்துயர் போயுய்யற் பாலரே.

நேரிசை வெண்பா

மாலடிமையே இனிது என்றார் மாறனார்

ஒருநா யகமாய் உலகுக்கு, வானோர்
இருநாட்டில் ஏறியுய்க்கும் இன்பம்-திரமாகா
மன்னுயிர்ப்போ கந்தீது மாலடிமை யேயினிதாம்
பன்னியிவை மாறனுரைப் பால் (31)

இரண்டாந் திருமொழி

2. பாலனாய்

ஆழ்வார் உலகத்தாருக்குச் செய்த உபதேசங்களெல்லாம், அவருக்குப் பகவானிடம் அன்பு மீதூர்ந்து செல்லக் காரணமாயின. பகவான் அன்று செய்த செயல்களை எல்லாம் நேரில் காண அவர் ஆசைப்பட்டார்; ஆனால் கிடைக்கவில்லை. எம்பெருமானோடு கலந்து பிரிந்த நாயகியின் நிலையை அடைந்து மோகித்துக் கிடக்கிறார் அவர். அந்நாயகியின் தாய் தன் பெண்ணின் நிலை கண்டு இரங்குகிறாள். திருத்துழாயைப்பற்றியே இப்பகுதி அமைந்துள்ளது.

தலைவியின் நிலைகண்டு தாய் இரங்கல்

கலி விருத்தம்

திருத்துழாயினிடமே என் மகள் மயங்கிவிட்டாள்

3242. பாலனா யேழுல குண்டு பரிவின்றி,
ஆலிலை யன்னவ சஞ்செய்யும் அண்ணலார்,
தாளிணை மேலணி தண்ணந் துழாயென்றே
மாலுமால், வல்வினை யேன்மட வல்லியே.

துழாய் என்றே என் மகள் அடிக்கடி சொல்கிறாள்

3243. வல்லிசேர் நுண்ணிடை யாய்ச்சியர் தம்மொடும்,
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்,
நல்லடி மேலணி நாறு துழாயென்றே
சொல்லுமால், சூழ்வினை யாட்டியேன் பாவையே.

துழாய் என்றே என் மகள் கூவுகிறாள்

3244. பாவியல் வேதநன் மாலை பலகொண்டு,
தேவர்கள் மாமுனி வரிறைஞ் சநின்ற
சேவடி மேலணி செம்பொற் றுழாயென்றே
கூவுமால், கோள்வினை யாட்டியேன் கோதையே.

துழாய் என்றே என் மகள் ஓதும்

3245. கோதில வண்புகழ் கொண்டு சமயிகள்,
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான்பரன்,
பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே
ஓதுமால், ஊழ்வினை யேன்தடந் தோளியே

துழாய் என்று கூறி உருகுகிறாள் என் மகள்

3246. தோளிசேர் பின்னை பொருட்டெரு தேழ்தழீஇக்
கோளியார் கோவல னார்க்குடக் கூத்தனார்,
தாளிணை மேலணி தண்ணந்து ழாயென்றே
நாளுநாள், நைகின்ற தால்எ ன்தன் மாதரே.

துழாயினிடம் பித்துக் கொண்டுவிட்டாள் என் மகள்

3247. மாதர்மா மண்மடந் தைபொருட் டேனமாய்,
ஆதியங் காலத் தகலிடம் கீண்டவர்,
பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே
ஓதும்மால், எய்தினள் என்தன் மடந்தையே

துழாய்க்கு அடிமையாகிவிட்டாள் என் மகள்

3248. மடந்தையை வண்கம லத்திரு மாதினை,
தடங்கொள்தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்,
வடங்கொள்பூந் தண்ணந் துழாய்மலர்க் கேயிவள்
மடங்குமால், வாணுத லீர்!என் மடக்கொம்பே.

துழாயை என் மகள் நம்பிவிட்டாளே!

3249. கொம்புபோல் சீதை பொருட்டிலங் கைநகர்
அம்பெரி யுய்த்தவர் தாளிணை மேலணி,
வம்பவிழ் தண்ணந்து ழாய்மலர்க் கேயிவள்
நம்புமால், நானிதற் கென்செய்கேன் நங்கைமீர்.

சங்கு, சக்கரம், துழாய் என்கிறாள் என் மகள்

3250. நங்கைமீர். நீரும்ஓர் பெண்பெற்று நல்கினீர்,
எங்ஙனே சொல்லுகேன் யான்பெற்ற ஏழையை,
சங்கென்னும் சக்கர மென்னும் துழாயென்னும்,
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்?

துழாயைத் தழுவ விரும்புகிறாள் என் மகள்

3251. என்செய்கேன் என்னுடைப் பேதையென் கோமளம்,
என்சொல்லும் என்வச முமல்லள் நங்கைமீர்,
மின்செய்பூண் மார்பினன் கண்ணன் கழல்துழாய்,
பொன்செய்பூண் மென்முலைக் கென்று மெலியுமே.

இவற்றை பாடுக; தேவர் பாராட்டுவர்

3252. மெலியுநோய் தீர்க்கும்நங் கண்ணன் கழல்கள்மேல்,
மலிபுகழ் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்,
ஒலிபுகழ் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,
மலிபுகழ் வானவர்க் காவர்நற் கோவையே.

நேரிசை வெண்பா

பேரின்பத்தை விரும்பினார் சடகோபர்

பாலரைப்போற் சீழ்கிப் பரனளவில் வேட்கையால்
காலத்தாற் றேசத்தாற் கைகழிந்த-சால
அரிதான போகத்தில் ஆசையுற்று நைந்தான்
குருகூரில் வந்துதித்த கோ (32)

மூன்றாந் திருமொழி

3. கோவை வாயாள்

பராங்குச நாயகி ஆசைப்பட்டபடியே பகவான் அவரோடு வந்து கலந்து தன் பேரன்பை வெளியிட்டான். ஆழ்வார் அவனது பிரணயித்வ குணத்தை இப்பகுதியில் புலப்படுத்துகிறார்.

நாராயணன் சேர்க்கையால் அடைந்த இன்பம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

எம் மனமே! கண்ணனுக்குப் பூசும் சந்தனம்

3253. கோவை வாயாள் பொருட்டேற்றின் எருத்தம் இறுத்தாய், மதிளிலங்கைக்
கோவை வீயச் சிலைகுனித்தாய்! குலநல் யானை மருப்பொசித்தாய்,
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கே னேலும்,நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்தென் னெஞ்சமே.

ஏக மூர்த்திக்கு ஆடையும் அணிகலனும் என் பாடல்களே

3254. பூசும் சாந்தென் னெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய,
வாச கம்செய் மாலையே வான்பட் டாடை யுமஃதே,
தேச மான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே,
ஈசன் ஞால முண்டுமிழ்ந்த எந்தை யேக மூர்த்திக்கே.

நாராயணா! நின்னை நினைத்தேன்; துன்பம் துடைத்தேன்

3255. ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பலமூர்த்தி
ஆகி, ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி,
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாரா யணனே,உன்
ஆகம் முற்றும் அகத்தடக்கி ஆவி யல்லல் மாய்த்ததே.

எனதுயிரே கண்ணனுக்குத் தலைமாலை

3256. மாய்த்தல் எண்ணி வாய்முலை தந்த மாயப் பேயுயிர்
மாய்த்த, ஆய மாயனே. வாமனனே மாதவா,
பூத்தண் மாலை கொண்டுன்னைப் போதால் வணங்கே னேலும்,நின்
பூத்தண் மாலை நெடுமுடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.

என் காதலே கண்ணனுக்கு அணிகலன்கள்

3257. கண்ணி யெனதுயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா,
எண்ணில் பல்க லன்களும் ஏலு மாடை யுமஃதே,
நண்ணி மூவு லகும்நவிற்றும் கீர்த்தி யுமஃதே,
கண்ண னெம்பி ரானெம்மான் கால சக்கரத் தானுக்கே.

நாராயணா! உன் திருவடிகளே என்னுடைய அணிகள்

3258. கால சக்க ரத்தோடு வெண்சங் கம்கை யேந்தினாய்,
ஞால முற்று முண்டுமிழ்ந்த நாரா யணனே என்றென்று,
ஓல மிட்டு நானழைத்தால் ஒன்றும் வாரா யாகிலும்,
கோல மாமென் சென்னிக்குன் கமலம் அன்ன குரைகழலே.

மாயனே! நின்னுருவம் என் உயிர்மேல் உள்ளது

3259. குரைக ழல்கள் நீட்டிமண் கொண்ட கோல வாமனா,
குரைக ழல்கை கூப்புவார்கள் கூடநின்ற மாயனே,
விரைகொள் பூவும் நீரும்கொண்டேத்த மாட்டே னேலும்,உன்
உரைகொள் சோதித் திருவுருவம் என்ன தாவி மேலதே.

கண்ணா! நான் உன்னை என்னவென்று உரைக்க வல்லேன்!

3260. என்ன தாவி மேலையாய் ஏர்கொள் ஏழு லகமும்,
துன்னி முற்று மாகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்,
உன்ன தென்ன தாவியும் என்ன துன்ன தாவியும்
இன்ன வண்ண மேநின்றாய் என்று ரைக்க வல்லேனே?

மேன்மக்களுடன் நானும் துதித்தேன்

3261. உரைக்க வல்லேன் அல்லேனுன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன்நான்? காதல் மையல் ஏறினேன்,
புரைப்பி லாத பரம்பரனே. பொய்யி லாத பரஞ்சுடரே,
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்.

யான் உய்ய எம்பெருமானையே ஏத்தினேன்

3262. யானும் ஏத்தி ஏழுலகும் முற்றும் ஏத்தி, பின்னையும்
தானும் ஏத்தி லும்தன்னை ஏத்த ஏத்த எங்கெய்தும்,
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திப்ப,
யானு மெம்பி ரானையே ஏத்தி னேன்யா னுய்வானே.

இவற்றை படியுங்கள்: விண்ணையும் ஆளலாம்

3263. உய்வு பாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண்கழல்கள்மேல்
செய்ய தாம ரைப்பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன்,
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.

நேரிசை வெண்பா

மாறனின் அருளால் இவ்வுலகு வாழ்கின்றது

கோவான ஈசன் குறைவெல்லாந் தீரவே
ஓவாத காலத் துவாதிதனை மேவிக்
கழித்தடையக் காட்டிக் கலந்தகுண மாறன்
வழுத்துதலால் வாழ்ந்ததிந்த மண் (33)

நான்காந் திருமொழி

4. மண்ணை

பகவானோடு தொடர்பு கொண்ட பொருள்களையும் மற்றப் பொருள்களையும் காணும்போது பகவானையே கண்டதாக மகிழ்வதே சிறந்த ஸ்ரீவைஷ்ணவத்வமாகும். ஆழ்வாரின் இத்தகைய நிலைமையை இத்திருவாய்மொழி கூறுகிறது.

திருமாலாகிய நாயகனின் பிரிவையாற்றாத ஆழ்வாராகிய நாயகியின் நிலையைத் தாய் உரைத்தல்

ஆறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வாமனன் என் மகளை மயக்கிவிட்டானே!

3264. மண்ணை இருந்து துழாவி, வாமனன் மண் இது என்னும்,
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம் என்று கை காட்டும்,
கண்ணை உள்நீர் மல்க நின்று, கடல்வண்ணன் என்னும், அன்னே! என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே?

என் மகள் பிதற்றுகிறாளே! என் செய்வேன்?

3265. பெய்வளைக் கைகளைக் கூப்பிப் பிரான்கிடக் கும்கடல் என்னும்,
செய்யதோர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தியீ தென்னும்,
நையும்கண் ணீர்மல்க நின்று நாரணன் என்னுமன்னே,என்
தெய்வ வுருவில் சிறுமான் செய்கின்ற தொன்றறி யேனே.

என் மகளின் செய்கை எனக்குப் புரியவில்லையே!

3266. அறியும்செந் தீயைத் தழுவி அச்சுதன் என்னும்மெய் வேவாள்,
எறியும்தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தன் என்னும்,
வெறிகொள் துழாய்மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே.

நாரணன் என் மகளை இப்படி மாற்றிவிட்டானே!

3267. ஒன்றிய திங்களைக் காட்டி ஒளிமணி வண்ணனே என்னும்
நின்றகுன்றத்தினை நோக்கி நெடுமாலே! வா என்று கூவும்,
நன்றுபெய் யும்மழை காணில் நாரணன் வந்தான் என்றாலும்,
என்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத் தையே.

மாயோன் என் மகளை ஆட்டிவைக்கின்றானே!

3268. கோமள வான்கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும்,
போமிள நாகத்தின் பின்போய் அவன்கிடக் கையீ தென்னும்,
ஆமள வொன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற,
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே.

கண்ணனிடம் என் மகள் பித்துக் கொண்டுவிட்டாளே!

3269. கூத்தர் குடமெடுத் தாடில் கோவிந்த னாம் எனா ஓடும்,
வாய்த்த குழலோசை கேட்கில் மாயவன் என்றுமை யாக்கும்,
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவனுண்ட வெண்ணெயீ தென்னும்,
பேய்ச்சி முலைசுவைத் தாற்கென் பெண்கொடி யேறிய பித்தே.

என் மகள் மாயோன் வசப்பட்டு விட்டாள்

3270. ஏறிய பித்தினோ டெல்லா வுலகும்கண் ணன்படைப் பென்னும்
நீறுசெவ் வேயிடக் காணில் நெடுமால் அடியார் என் றோடும்,
நாறு துழாய்மலர் காணில் நாரணன் கண்ணியீ தென்னும்,
தேறியும் தேறாது மாயோன் திறத்தன ளேயித் திருவே.

கண்ணன் கழல்களை விரும்புகிறாள் என் மகள்

3271. திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்,
உருவுடை வண்ணங்கள் காணில் உலகளந் தான்என்று துள்ளும்,
கருவுடைத் தேவில்க ளெல்லாம் கடல்வண்ணன் கோயிலே என்னும்
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.

கண்ணன் என் பெண்ணை மிரட்டி வைத்திருக்கின்றானே!

3272. விரும்பிப் பகைவரைக் காணில் வியலிடம் உண்டானே என்னும்,
கரும்பெரு மேகங்கள் காணில் கண்ணன் என் றேறப் பறக்கும்,
பெரும்புல ஆநிரை காணில் பிரானுளன் என்றுபின் செல்லும்,
அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின் றானே.

கண்ணனிடம் மையல் கொண்டுவிட்டாளே என் மகள்!

3273. அயர்க்கும்சுற் றும்பற்றி நோக்கும் அகலவே நீள் நோக்குக் கொள்ளும்,
வியர்க்கும் மழைக்கண் துளும்ப வெவ்வுயிர்க் கொள்ளும்மெய் சோரும்,
பெயர்த்தும் கண்ணா என்று பேசும், பெருமானே வாஎன்று கூவும்,
மயல்பெருங் காதலென் பேதைக் கென்செய்கேன் வல்வினை யேனே.

இவற்றைப் படிப்போர் வைகுந்தத்தில் வீற்றிருப்பர்

3274. வல்வினை தீர்க்கும் கண்ணனை வண்குரு கூர்ச்சட கோபன்,
சொல்வினை யால்சொன்ன பாடல் ஆயிரத் துள்ளிவை பத்தும்,
நல்வினை யென்றுகற் பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணி,
தொல்வினை தீரவெல் லாரும் தொழுதெழ வீற்றிருப் பாரே.

நேரிசை வெண்பா

மாறனின் பாடல்களின் மீதுமையல் கொள்க

மண்ணுலகில் முன்கலந்து மால்பிரிகை யால் மாறன்
பெண்ணிலைமை யாய்க்காதற் பித்தேறி-எண்ணிடில்முன்
போலிமுத லான பொருளையவ னாய்நினைந்து
மேல்விழுந்தான் மையல்தனின் வீறு (34)

ஐந்தாந் திருமொழி

5. வீற்றுருந்து

பகவானின் திருவருள் பெற்ற ஆழ்வாரின் ஆனந்தம் வெள்ளம்போல் புரண்டோடுகிறது இப்படிப்பட்ட எனக்கு நிகராவார் யார்? என்று ஆழ்வார் இத்திருவாய்மொழியில் கூறுகிறார். நிகரற்ற ஆனந்தானுபவம் இவருக்கின்றி யாருக்குக் கிடைக்கும்?

எம்பெருமானின் இருப்பைக் கண்டு இன்புறுதல்

கலி நிலைத்துறை

ஏழு பிறப்புகளிலும் எனக்கு ஒரு குறையும் இல்லை

3275. வீற்றிருந் தேழுலகும் தனிக்கோல் செல்ல, வீவில்சீர்,
ஆற்றல்மிக் காளும் அம்மானைவெம்மா பிளந்தான்தன்னை,
போற்றி யென்றே கைகளாரத் தொழுது சொல்மாலைகள்,
ஏற்ற நோற்றேற் கினியென்னகுறை யெழுமையுமே?

திருமாலை ஏத்தினேன்; நோய்கள் அழிந்துவிட்டன

3276. மைய கண்ணாள் மலர்மேலுறைவா ளுறைமார்பினன்,
செய்ய கொலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை
மொய்ய சொல்லா லிசைமாலைகளேத்தி யுள்ளப் பெற்றேன்,
வெய்ய நோய்கள் முழுதும் வியன்ஞாலத்து வீயவே.

அச்சுதனை ஏத்தினேன் : அழிவற்ற இன்பத்தில் இருக்கிறேன்

3277. வீவி லின்ப மிகஎல்லை நிகழ்ந்தநம் அச்சுதன்,
வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை,
வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்,
வீவி லின்பமிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.

ஆழியான் ஏத்தினேன்: மெய்ம்மறந்தேன்

3278. மேவி நின்று தொழுவார் வினைபோக மேவும்பிரான்,
தூவியம் புள்ளு டையான் அடலாழியம் மான்றன்னை,
நாவிய லாலிசை மாலைக ளேத்திநண் ணப்பெற்றேன்,
ஆவியென் னாவியை யானறியேன்செய்த வாற்றையே.

எம்மானை ஏத்தினேன் : தீவினைகள் அழிந்தன

3279. ஆற்ற நல்ல வகைகாட்டும் அம்மானை, அமரர்தம்
ஏற்றை யெல்லாப் பொருளும் விரித்தானை எம்மான்தன்னை,
மாற்ற மாலை புனைந்தேத்தி நாளும் மகிழ்வெய்தினேன்,
காற்றின் முன்னம் கடுகி வினைநோய்கள் கரியவே.

கண்ணனை ஏத்தினேன் ; இனி எனக்கு எதுவும் அரியதில்லை

3280. கரிய மேனிமிசை வெளிய நீறுசிறி தேயிடும்,
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை,
உரிய சொல்லா லிசைமாலைகள் ஏத்தியுள்ளப் பெற்றேற்கு,
அரிய துண்டோ எனக்கின்று தொட்டுமினி யென்றுமே?

கண்ணனைப் பாடினேன் ; இனிக் குறையே இல்லை

3281. என்றும் ஒன்றாகி யொத்தாரும்மிக் கார்களும், தன்றனக்
கின்றி நின்றானை யெல்லாவுலகும் உடையான் தன்னை,
குன்ற மொன்றால் மழைகாத்தபிரானைச்சொன் மாலைகள்,
நன்று சூட்டும் விதியெய் தினம் என்ன குறைநமக்கே?

திருமாலைப் பாடினேன்: எனக்கு வானவரும் நிகரில்லை

3282. நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை, ஞாலத்தார்
தமக்கும் வானத் தவர்க்கும் பெருமானை, தண்டாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொன்மாலைகள், சொல்லுமா
றமைக்க வல்லேற் கினியாவர் நிகரகல் வானத்தே?

கண்ணனைப் பாடும் எனக்கு  நிகர் உண்டோ?

3283. வானத்தும் வானத்துள் ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும், எண்டிசை யும்தவி ராதுநின் றான்தன்னை,
கூனற்சங் கத்தடக் கையவனைக் குடமாடியை வானக்
கோனைக், கவிசொல்ல வல்லேற் கினிமா றுண்டோ?

திருமாலைப் பாட நான் பெருந்தவம் செய்திருக்கிறேன்

3284. உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும்நின்றும்,
கொண்ட கோலத் தொடுவீற் றிருந்தும் மணங்கூடியும்,
கண்ட வாற்றால் தனக்கே யுலகென நின்றான்தன்னை,
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க் கின்பமாரியே.

இவற்றைப் பாடுக; இலக்குமியின் அருள் கிட்டும்

3285. மாரி மாறாத தண்ணம்மலை வேங்கடத் தண்ணலை,
வாரி வாறாத பைம்பூம் பொழில்சூழ் குருகூர்நகர்,
காரி மாறன் சடகோபன் சொல்லாயிரத் திப்பத்தால்,
வேரி மாறாத பூமே லிருப்பாள் வினைதீர்க்குமே.

நேரிசை வெண்பா

தன் பெருமைகளை நன்குரைத்தான் மாறன்

வீற்றிருக்கும் மால்விண்ணில் மிக்க மயல்தன்னை
ஆற்றுதற்காத் தன்பெருமை யானதெல்லாம், தோற்ற
நன்றுகலக் கப்போற்றி நன்குகந்து வீறுரைத்தான்
சென்ற துயர்மாறன் தீர்ந்து  (35)

ஆறாந் திருமொழி

6. தீர்ப்பாரை

பராங்குச நாயகியின் மனநோயை அறிந்து, அவளது நோயைத் தீர்க்கும் வழி முறைகளை கூறி, வேறு பரிஹாரங்கள் அவளது நோயைத் தீர்க்கமாட்டா என்று தோழி கூறுதல் போல் இப்பகுதி அமைந்துள்ளது.

வேலனைக்கொண்டு வெறியாட்டு அயர்தலைத் தடுத்தல்-வெறி விலக்கு

கலி நிலைத்துறை

கண்ணனையே எண்ணுகிறாள் தலைவி

3286. தீர்ப்பாரை யாமினி யெங்ஙனம் நாடுதும் அன்னைமீர்,
ஓர்ப்பாலிவ் வொண்ணுதல் உற்றநன் னோயிது தேறினோம்,
போர்ப்பாகு தான்செய்தன் றைவரை வெல்வித்த, மாயப்போர்த்
தேர்ப்பாக னார்க்கிவள் சிந்தை துழாய்த்திசைக் கின்றதே.

சங்குசக்கரம் என்றுரைத்தால் தலைவியின் நோய் தீரும்

3287. திசைக்கின்ற தேயிவள் நோயிது மிக்க பெருந்தெய்வம்,
இசைப்பின்றி நீரணங் காடும் இளந்தெய்வம் அன்றிது,
திசைப்பின்றி யேசங்கு சக்கர மென்றிவள் கேட்க,நீர்
இசைக்கிற்றி ராகில்நன் றேயில் பெறுமிது காண்மினே.

கட்டுவிச்சி சொல் கேளாதீர்: கண்ணன் கழல் வாழ்த்துக

3288. இதுகாண்மின் அன்னைமீர். இக்கட்டு விச்சிசொற் கொண்டு,நீர்
எதுவானும் செய்தங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேல்மின்,
மதுவார் துழாய்முடி மாயப் பிரான்கழல் வாழ்த்தினால்,
அதுவே யிவளுற்ற நோய்க்கும் அருமருந்தாகுமே

நாராயணனின் திருநாமங்களைச் சொல்லுக: இவள் பிழைப்பாள்

3289. மருந்தாகும் என்றங்கோர் மாய வலவைசொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களனிழைத் தென்பயன்?
ஒருங்காக வேயுல கேழும் விழுங்கி உமிழ்ந்திட்ட,
பெருந்தெவன் பேர்சொல்ல கிற்கில் இவளைப் பெறுதிரே.

வெறியாடல் வேண்டாம்: ஸ்ரீசூர்ணக் குறியிடுக

3290. இவளைப் பெறும்பரி சிவ்வணங் காடுதல் அன்றந்தோ,
குவளைத் தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும் பயந்தனள்,
கவளக் கடாக்களி றட்டபிரான்திரு நாமத்தால்,
தவளப் பொடிக்கொண்டு நீரிட்டிடுமின் தணியுமே.

பக்தர்களின் பாததூளியே இவள் நோயைத் தீர்க்கும்

3291. தணியும் பொழுதில்லை நீரணங்காடுதிர் அன்னைமீர்,
பிணியும் ஒழிகின்ற தில்லை பெருகு மிதுவல்லால்,
மணியின் அணிநிற மாயன் தமரடி நீறுகொண்டு,
அணிய முயலின்மற் றில்லைகண்டீரிவ் வணங்குக்கே

வெறியாட்டு வேண்டாம்: பக்தர்களை வணங்குங்கள்

3292. அணங்குக் கருமருந் தென்றங் கோர் ஆடும்கள் ளும்பராய்
சுணங்கை யெறிந்துநுந் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்,
உணங்கல் கெடக்கழு தையுதடாட்டம்கண் டென்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான்தமர் வேதம்வல் லாரையே.

வெறியாட்டு கீழ்மையானது; மாலடி பணிக

3293. வேதம்வல் லார்களைக் கொண்டுவிண்ணோர்பெரு மான்திருப்
பாதம் பணிந்து,இவள் நோயிது தீர்த்துக்கொள் ளாதுபோய்
ஏதம் பறைந்தல்ல செய்துகள்ளூடு கலாய்த்தூய்,
கீத முழவிட்டு நீர்அணங் காடுதல் கீழ்மையே.

கண்ணன் கழலிணையே நோய்களுக்கு மருந்து

3294. கீழ்மையினா லங்கோர் கீழ்மகனிட்ட முழவின்கீழ்,
நாழ்மை பலசொல்லி நீரணங்காடும்பொய் காண்கிலேன்,
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமமிந் நோய்க்குமீ தேமருந்து,
ஊழ்மையில் கண்ணபி ரான்கழல் வாழ்த்துமின் உன்னித்தே.

கண்ணனை ஏத்துமின்: தலைவி பிழைப்பாள்

3295. உன்னித்து மற்றொரு தெய்வம்தொழாளவ னையல்லால்,
நும்மிச்சை சொல்லிநும் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்,
மன்னப் படும்மறை வாணனை வண்துவ ராபதி
மன்னனை, ஏத்துமின் ஏத்துதலும்தொழு தாடுமே.

இவற்றைப் பாடுக: உங்கள் துக்கங்கள் நீங்கும்

3296. தொழுதாடி தூமணி வண்ணனுக்காட்செய்து நோய்தீர்ந்த
வழுவாத தொல்புகழ் வண்குருகூர்ச்சட கோபன், சொல்
வழுவாத ஆயிரத் துள்ளிவை பத்து வெறிகளும்,
தொழுதாடிப் பாடவல் லார்துக்க சீலம் இலர்களே.

நேரிசை வெண்பா

ஸஹஸ்ரநாமம் கேட்டு அறிவு பெற்றான் மாறன்

தீர்ப்பா ரிலாதமயல் தீரக் கலந்தமால்
ஓர்ப்பாது மின்றி யுடன்பிரிய- நேர்க்க
அறிவழிந்துற் றாரும் அறக்கலங்க, பேர்கேட்
டறிவுபெற்றான் மாறன்சீ லம் (36)

ஏழாந் திருமொழி

7. சீலம் இல்லா

உலகில் மயக்கமடைந்திருக்கும்போது நோயாளிக்கு நோயின் வலி தெரிவதில்லை. மயக்கம் நீங்கியபிறகு அவன் படாத பாடு படுவதுபோல் ஆயிற்று ஆழ்வாரின் நிலையும். அந்நிலையை ஈண்டு அவர் பாடுகிறார்.

தம்மிடம் வந்தருளுமாறு திருமாலை உருக்கத்துடன் அழைத்தல்

ஆசிரிய விருத்தம்

நாராயணா! நின் கோலமேனி காண வாராய்!

3297. சீலம் இல்லாச் சிறிய னேலும் செய்வினை யோபெரிதால்,
ஞாலம் உண்டாய் ஞானமூர்த்தி நாராய ணா. என்றென்று,
காலந் தோறும் யானிருந்து கைதலை பூசலிட்டால்
கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே.

வாமனா! நான் காணுமாறு வந்தருள்க

3298. கொள்ள மாளா இன்ப வெள்ளம் கொதில தந்திடும்,என்
வள்ள லேயோ வையங் கொண்ட வாமனாவோ என்றென்று,
நள்ளி ராவும் நண்பகலும் நானிருந் தோலமிட்டால்,
கள்ள மாயா உன்னை யென்கண் காணவந் தீயாயே.

எந்தாய்! என் எதிரில் வந்து நின்றாவது திட்டு

3299. ஈவி லாத தீவினைகள் எத்தனை செய்த னன்கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்றென்று
கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றால்,
பாவி நீயென் றொன்று சொல்லாய் பாவியேன் காணவந்தே.

நான் எவ்வளவு அரற்றியும் பயனில்லையே!

3300. காண வந்தென கண்முகப்பே தாமரைக் கண்பிறழ,
ஆணி செம்பொன் மேனியெந்தாய். நின்றருளாய் என்றென்று,
நாண மில்லாச் சிறுதகையேன் நானிங் கலற்றுவதென்,
பேணிவானோர் காணமாட்டாப் பீடுடை யப்பனையே?

அப்பனே! இப்பொழுதே வந்தருள்

3301. அப்பனே அடலாழியானே, ஆழ்கட லைக்கடைந்த
துப்பனே,உன் தோள்கள் நான்கும் கண்டிடக்கூடுங் கொலென்று,
எப்பொழுதும் கண்ண நீர்கொண் டாவி துவர்ந்துவர்ந்து,
இப்போழுதே வந்திடாயென் றேழையேன் நோக்குவனே.

எந்தாய்! என் உடலிலும் உயிரிலும் உள்ளாய்

3302. நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யானென தாவியுள்ளே,
நாக்கு நீள்வன் ஞான மில்லை நாடோறு மென்னுடைய,
ஆக்கை யுள்ளூ மாவி யுள்ளும் அல்லபு றத்தினுள்ளும்,
நீக்க மின்றி யெங்கும் நின்றாய் நின்னை யறிந்தறிந்தே.

ஞான மூர்த்தியே! நின்னைக் கண்டு பேதைமை தீர்ந்தேன்

3303. அறிந்து அறிந்து தேறித் தேறி யானென தாவியுள்ளே,
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மல மாகவைத்து,
பிறந்தும் செத்தும் நின்றிடறும் பேதைமை தீர்ந்தொ ழிந்தேன்
நறுந்து ழாயின் கண்ணி யம்மா. நானுன்னைக் கண்டுகொண்டே.

திருத்துழாயானே! யாங்கள் பாடியாடுதற்கு நீ வருக

3304. கண்டு கொண்டென் கைக ளார நின்திருப் பாதங்கள்மேல்,
எண்டி சையு முள்ள பூக்கொண் டேத்தி யுகந்துகந்து,
தொண்ட ரோங்கள் பாடி யாடச் சூழ்கடல் ஞாலத்துள்ளே,
வண்டு ழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.

சக்ரதாரீ! நின்னைக் காணத் தடவுகின்றேன்

3305. இடகி லேனோன் றட்ட கில்லேன் ஐம்புலன் வெல்லகில்லேன்,
கடவ னாகிக் காலந் தோறும் பூப்பறித் தேத்தகில்லேன்,
மடவன் நெஞ்சம் காதல் கூர வல்வினை யேன்அயர்ப்பாய்,
தடவு கின்றே னெங்குக் காண்பன் சக்கரத் தண்ணலையே?

கண்ணா! நின்னை ஞானக் கண்களால் கண்டு தழுவுவேன்

3306. சக்க ரத்தண் ணலேயென்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்ற லந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்,
மிக்க ஞான மூர்த்தி யாய வேத விளக்கினை,என்
தக்க ஞானக் கண்க ளாலே கண்டு தழுவுவனே.

இவற்றைப் பாடுவோர் வைகுந்தம் அடைவர்

3307. தழுவி நின்ற காதல்தன்னால் தாமரைக் கண்ணன்தன்னை,
குழுவு மாடத் தென்குரு கூர்மா றன்சட கோபன்,சொல்
வழுவி லாத வொண்தமிழ்கள் ஆயிரத்து ளிப்பத்தும்,
தழுவப் பாடி யாட வல்லார் வைகுந்த மேறுவரே.

நேரிசை வெண்பா

கண்ணனை இராப்பகல் வருந்தி அழைத்தான் மாறன்

சீலமிகு கண்ணன் திருநாமத் தாலுணர்ந்து
மேலவன்றன் மேனிகண்டு மேவுதற்குச்-சால
வருந்தியிர வும்பகலும் மாறாமற் கூப்பிட்
டிருந்தனனே தென்குருகூர் ஏறு (37)

எட்டாந் திருமொழி

8. ஏறாளும்

பராங்குச நாயகி இவ்வாறு அழைத்தும் பகவான் எதிரில் வந்து முகம் காட்டவில்லை. அவன் நம்மை வெறுத்துவிட்டான் என்று ஆழ்வார் முடிவு செய்தார். அவனுக்கு வேண்டாத இந்த ஆத்மா தமக்கும் வேண்டாம் என்று அவர் எண்ணுகிறார்; தம்மைத் தலைவியாகக் கருதி ஈண்டுப் பாடுகிறார்.

தலைவி கூற்று

கொச்சகக் கலிப்பா

எம்பெருமான் விரும்பாத இந்த நிறம் எனக்கு வேண்டாம்

3308. ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்,
கூறாளும் தனியுடம்பன் குலங்குலமா அசுரர்களை,
நீறாகும் படியாக நிருமித்துப் படைதொட்ட,
மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே.

மாயன் விரும்பாத இந்த நெஞ்சு வேண்டாம்

3309. மணிமாமை குறைவில்லா மலர்மாதர் உறைமார்வன்,
அணிமானத் தடவரைத்தோள் அடலாழித் தடக்கையன்,
பணிமானம் பிழையாமே யடியேனைப் பணிகொண்ட,
மணிமாயன் கவராத மடநெஞ்சால் குறைவிலமே.

மாயன் கவராத அடக்கம் எனக்கு வேண்டாம்

3310. மடநெஞ்சால் குறைவில்லா மகள்தாய்செய் தொருபேய்ச்சி,
விடநஞ்ச முலைசுவைத்த மிகுஞானச் சிறுகுழவி,
படநாகத் தணைக்கிடந்த பருவரைத்தோள் பரம்புருடன்,
நெடுமாயன் கவராத நிறையினால் குறைவிலமே.

கண்ணன் விரும்பாத தளிர் நிறம் எனக்கு எதற்கு?

3311. நிறையினாற் குறைவில்லா நெடும்பணைத்தோள் மடப்பின்னை,
பொறையினால் முலையணைவான் பொருவிடைஏழ் அடர்த்துகந்த,
கறையினார் துவருடுக்கை கடையாவின் கழிகோல்கை,
சறையினார் கவராத தளிர்நிறத்தால் குறைவிலமே.

ஸ்ரீராமன் விரும்பாத அறிவு எனக்கு வேண்டாம்

3312. தளிர்நிறத்தால் குறைவில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற,
கிளிமொழியாள் காரணமாக் கிளரரக்கன் நகரெரித்த,
களிமலர்த் துழாயலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து,
அளிமிக்கான் கவராத அறிவினால் குறைவிலமே.

திரிவிக்கிரமன் விரும்பாத மினுமினுப்பு எனக்கு வேண்டாம்

3313. அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத் தவரறிய,
நெறியெல்ல மெடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி,
குறியமாண் உருவாகிக் கொடுங்கோளால் நிலங்கொண்ட,
கிறியம்மான் கவராத கிளரொளியால் குறைவிலமே.

நரசிங்கன் விரும்பாத வளையல் எனக்கு வேண்டாம்

3314. கிளரொளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்தெழுந்து,
கிளரொளிய இரணியன தகல்மார்பம் கிழிந்துகந்த,
வளரொளிய கனலாழி வலம்புரியன் மணிநீல,
வளரொளியான் கவராத வரிவளையால் குறைவிலமே.

தேவநாதன் விரும்பாத மேகலை எனக்கு வேண்டாம்

3315. வரிவளையால் குறைவில்லாப் பெருமுழக்கால் அடங்காரை,
எரியழலம் புகவூதி யிருநிலமுன் துயர்தவிர்த்த,
தெரிவரிய சிவன்பிரமன் அமரர் கோன் பணிந்தேத்தும்,
விரிபுகழான் கவராத மேகலையால் குறைவிலமே.

கண்ணன் விரும்பாத இவ்வுடல் எனக்கு வேண்டாம்

3316. மேகலையால் குறைவில்லா மெலிவுற்ற அகலல்குல்,
போகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து,
நாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க,
யோகணைவான் கவராத வுடம்பினால் குறைவிலமே.

எம்பெருமான் விரும்பாத ஆத்மா எனக்கு வேண்டாம்

3317. உடம்பினால் குறைவில்லா உயிர்பிரிந்த மலைத்துண்டம்,
கிடந்தனபோல் துணிபலவா அசுரர் குழாம் துணித்துகந்த,
தடம்புனல சடைமுடியன் தனியொருகூ றமர்ந்துறையும்,
உடம்புடையான் கவராத உயிரினால் குறைவிலமே.

பிறப்பு நீக்கி வைகுந்தம் அடையலாம்

3318. உயிரினால் குறைவில்லா உலகேழ்தன் உள்ளொடுக்கி,
தயிர்வெண்ணெ யுண்டானைத், தடங்குருகூர்ச் சடகோபன்,
செயிரில்சொல் லிசைமாலை யாயிரத்து ளிப்பத்தால்
வயிரம்சேர் பிறப்பறுத்து வைகுந்தம் நண்ணுவரே.

நேரிசை வெண்பா

மனமே! மாறன் திருவடிகளையே நினை

ஏறு திருருவுடைய ஈச னுகப்புக்கு
வேறுபடி லென்னுடைமை மிக்கவுயிர்-தேறுங்கால்
என்றனக்கும் வேண்டா எனுமாறன் தாளைநெஞ்சே
நண்தமக்குப் பேறாக நண்ணு (38)

ஒன்பதாந் திருமொழி

9. நண்ணாதார்

நிறம் வேண்டா நெஞ்சு வேண்டா உடல் வேண்டா உயிர் வேண்டா என்றெல்லாம் கூறி ஆத்மீயங்களைத் தள்ளிவிட நினைத்தார் ஆழ்வார். தள்ளினாலும் அவை சென்றுவிடா வாழ்வதற்கு அவனருளை எதிர்பார்ப்பதுபோல், வாழ்வை முடித்துக்கொள்வதற்கும் அவனருளையே எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று அறிந்த அவர் எம்பிரானே! நீயே என்னை முடித்திடு என்கிறார் இங்கே.

ஆழ்வார் எம்பெருமானை வேண்டுதல்

கொச்சகக் கலிப்பா

கண்ணா! என்னை நின் கழலிணைகளில் சேர்த்துக்கொள்

3319. நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்தேங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவையென்ன உலகியற்கை?,
கண்ணாளா கடல்கடைந்தாய் உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவா தடியேனைப் பணிகண்டாய் சாமாறே.

அம்மானே! என்னை அழைத்துக்கொள்ள விரைந்தருள்

3320. சாமாறும் கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து,
ஏமாறிக் கிடந்தலற்றும் இவையென்ன உலகியற்கை?,
ஆமாறொன் றறியேன்நான் அரவணையாய். அம்மானே,
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.

அடியேனை அழைத்து அடிமை கொள்

3321. கொண்டாட்டும் குலம்புனைவும் தமருற்றார் விழுநிதியும்,
வண்டார்பூங் குழலாளும் மனையொழிய வுயிர்மாய்தல்,
கண்டாற்றேன் உலகியற்கை கடல்வண்ணா அடியேனைப்
பண்டேபோல் கருதாதுன் அடிக்கேகூய்ப் பணிகொள்ளே.

வள்ளலே! உன் அருளாள் என்னைக் கைக்கொள்

3322. கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பாக,
கொள்ளென்று தமம்மூடும் இவையென்ன உலகியற்கை?
வள்ளலே மணிவண்ணா உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல்செய் தடியேனை உனதருளால் வாங்காயே.

மணிவண்ணா! மறுக்காமல் என்னை ஏற்றுக்கொள்

3323. வாங்குநீர் மலருலகில் நிற்பனவுமீ திரிவனவும்,
ஆங்குயிர்கள் பிறப்பிறப்புப் பிணிமூப்பால் தகர்ப்புண்ணும்,
ஈங்கிதன்மேல் வெந்நரகம் இவையென்ன உலகியற்கை?
வாங்கெனைநீ மணிவண்ணா. அடியேனை மறுக்கேலே.

ஆரமுதே! என்னை அழைத்துக்கொள்

3324. மறுக்கிவல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்,
அறப்பொருளை யறிந்தோரார் இவையென்ன உலகியற்கை?
வெறித்துளவ முடியானே வினையேனை யுனக்கடிமை
அறக்கொண்டாய், இனியென்னா ரமுதே.கூய் அருளாயே.

கண்ணா! மீண்டும் இவ்வுலகை எனக்குக் காட்டாதே!

3325. ஆயேயிவ் வுலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயேமற் றொருபொருளும் இன்றிநீ நின்றமையால்,
நோயேமூப் பிறப்பிறப்புப் பிணியேயென் றிவையொழியக்,
கூயேகொள் அடியேனைக் கொடுவுலகம் காட்டேலே.

கண்ணா! நின் திருவடிகளில் என்னைச் சேர்ப்பது என்று?

3326. காட்டிநீ கரந்துமிழும் நிலநீர்தீ விசும்புகால்,
ஈட்டீநீ வைத்தமைத்த இமையோர்வாழ் தனிமுட்டைக்,
கோட்டையினில் கழித்தெனையுன் கொழுஞ்சோதி யுயரத்து,
கூட்டரிய திருவடிக்க ளெஞ்ஞான்று கூட்டுதியே?

கண்ணா! நின் திருவடிகளில் சேர்வது உறுதி

3327. கூட்டுதிநின் குரைகழல்கள் இமையோரும் தொழாவகை செய்து,
ஆட்டுதிநீ யரவணையாய். அடியேனும் அஃதறிவன்,
வேட்கையெல்லாம் விடுத்தெனையுன் திருவடியே சுமந்துழல,
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினைநான் கண்டேனே.

கண்ணா! சிற்றின்பம் தவிர்த்து உன் திருவடி அடைந்தேன்

3328. கண்டுகேட் டுற்றுமோந்துண்டுழலும் ஐங்கருவி
கண்டவின்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்,
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேனுன் திருவடியே.

இவற்றைப் பாடுக: நாரணன் திருவடி சேரலாம்

3329. திருவடியை நாரணனைக்கேசவனைப் பரஞ்சுடரை,
திருவடிசேர் வதுகருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்,
திருவடிமே லுரைத்ததமிழ் ஆயிரத்து ளிப்பத்தும்,
திருவடியே அடைவிக்கும் திருவடிசேர்ந் தொன்றுமினே.

நேரிசை வெண்பா

மாறன் திருவடிகளே உற்ற துணை

நண்ணாது மாலடியை நானிலத்தே வல்வினையால்
எண்ணாராத் துன்பமுறு மிவ்வுயிர்கள்-தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமற் கண்கலங்கு மாறனருள்
உண்டுநமக் குற்றதுணை யொன்று  (39)

பத்தாந் திருமொழி

10. ஒன்றுந்தேவும்

உலகில் மக்கள் பகவானின் மேன்மையை (பரத்வத்தை) அறியாமல், பல தெய்வங்களிடம் பக்தி செலுத்துகிறார்கள் பகவானின் மேன்மையை நன்கு விளக்கிச் சொன்னால், இவர்கள் அறிந்துகொண்டு பிறவித் துன்பத்தை நீக்கிக்கொள்ளக்கூடும் என்று அருள்கொண்டு ஈண்டு உபதேசிக்கிறார் ஆழ்வார்.

தேவர்கட்கெல்லாம் தலைவன் எம்பெருமான் எனல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆதிப்பிரான் இருக்க, பிற தெய்வங்களைத் தேடுகிறீர்களே!

3330. ஒன்றுந் தேவு முலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவ ருலகோ டுயிர்படைத்தான்,
குன்றம் போல்மணி மாடம் நீடு திருக்குரு கூரதனுள்,
நின்ற ஆதிப்பி ரான்நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே.

திருக்குருகூரைப் போற்றி வணங்குங்கள்

3331. நாடி நீர்வ ணங்கும் தெய்வமும் உம்மையு முன்படைத்தான்,
வீடில் சீர்ப்புக ழாதிப்பி ரானவன் மேவி யுறைகோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழ காய திருக்குரு கூரதனைப்,
பாடி யாடிப் பரவிச் செல்மின்கள் பல்லுல கீர்பரந்தே.

திருக்குருகூர்ப் பரனே மாபெருந்தெய்வம்

3332. பரந்த தெய்வமும் பல்லுல கும்படைத் தன்றுட னேவிழுங்கிக்,
கரந்து மிழ்ந்து கடந்தி டந்தது கண்டும் தெளியகில்லீர்,
சிரங்க ளால்அ மரர்வ ணங்கும் திருக்குரு கூரதனுள்,
பரன்திற மன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை பேசுமினே.

எல்லாத் தெய்வங்கட்கும் நாயகன் நாரணனே

3333. பேசநின்றசிவனுக்கும்பிரமன்தனக்கும் பிறர்க்கும்
நாயகனவனே  கபாலநன் மோக்கத்துக்கண்டுகொண்மின்
தேசமாமதிள்சூர்ந்தழகாய திருக்குருகூரதனுள்
ஈசன்பாலோரவம்பறைதல் என்னாவதிலிங்கியர்க்கே?

நாராயணனே எல்லாத் தெய்வங்களுமாக விளங்குகிறான்

3334. இலிங்கத்திட்டபுராணத்தீரும் சமணரும்சாக்கியரும்
வலிந்துவாதுசெய்வீர்களும் மற்றுநுந்தெய்வமுமாகிநின்றான்
மலிந்துசெந்நெல்கவரிவீசும் திருக்குருகூரதனுள்
பொலிந்துநின்றபிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லைபோற்றுமினே.

மாயையில் சிக்காதீர்; பரமனை நாடி ஓடுங்கள்

3335. போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மையின்னே
தேற்றி வைத்ததெல் லீரும் வீடு பெற்றாலுல கில்லையென்றே,
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குரு கூரதனுள்,
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீரது அறிந் தறிந் தோடுமினே.

ஆதிநாதருக்கே அடிமையாக இருங்கள்

3336. ஓடி யோடிப் பல்பிறப்பும் பிறந்துமற் றோர்தெய்வம்,
பாடி யாடிப் பணிந்துபல்படிகால் வழியே றிக்கண்டீர்,
கூடி வானவ ரேத்தனின்ற திருக்குரு கூரதனுள்,
ஆடு புட்கொடி யாதி மூர்த்திக் கடிமை புகுவதுவே.

மற்றைத் தெய்வங்களை விடுத்து ஆதிப்பிரானைப் போற்றுக

3337. புக்கு அடி மையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்கபிரானுமன் றுய்யக்கொண்டது நாராயணனருளே
கொக்கலர் தடந்தாழை வேலித் திருக்குருகூரதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே.

திருக்குருகூரைச் சிந்தியுங்கள்: உய்யலாம்

3338. விளம்பும் ஆறு சமய மும்அ வை யாகியும் மற்றும் தன்பால்,
அளந்து காண்டற் கரிய னாகிய ஆதிப்பி ரானமரும்,
வளங்கொள் தண்பணை சூழ்ந்தழ காய திருக்குரு கூரதனை,
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக்கொண்டு போகுறிலே.

குடக்கூத்தனுக்கு அடிமை செய்வதே ஏற்றது

3339. உறுவ தாவ தெத்தேவும் எவ்வுலக கங்களும் மற்றும்தன்பால்,
மறுவில் மூர்த்தியோ டொத்தித் தனையும் நின்றவண் ணம்நிற்கவே,
செறுவில் செந்நெல் கரும்பொ டோங்கு திருக்குரு கூரதனுள்
குறிய மாணுரு வாகிய நீள்குடக் கூத்தனுக் காட்செய்வதே.

இவற்றைப் பாடுக; வைகுந்தம் எளிதில் கிட்டும்

3340. ஆட்செய்த தாழிப்பி ரானைச் சேர்ந்தவன் வண்குரு கூர்நகரான்
நாட்க மழ்மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்,
வேட்கை யால்சொன்ன பாடல் ஆயிரத் துளிப்பத் தும்வல்லார்,
மீட்சி யின்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே.

நேரிசை வெண்பா

மாறனையே என் கை தொழும்

ஒன்றுமிலைத் தேவிவ் வுலகம் படைத்தமால்
அன்றி என யாரு மறியவே-நன்றாக
மூதலித்துப் பேசியருள் மொய்மகிழோன் தாள் தொழவே
காதலிக்கு மென்னுடைய கை  (40)
**************
ஐந்தாம் பத்து

முதல் திருமொழி

1. கையார்

ஆழ்வார் தாம் செய்த உபதேசத்தினால் உலகம் திருந்துவதைக் கண்டு பொலிக பொலிக என்று மங்களாசாஸனம் பண்ணுகிறார்; எம்பெருமான் இவர்களைப் போலவே நம்மையும் இருக்கச் செய்து, இவர்களுக்கு உபதேசம் பண்ணும்படி வைத்துள்ளதும் அவனது திருவருளே! பகவத் விஷயத்தை வாயால் சொன்னேன். இவ்வாறு சொன்னதையே பற்றாகக் கொண்டு பகவான் என்னை ஆட்கொண்டானே! என்று வியந்து பேசுகிறார்.

எம்பெருமானின் கருணைத் திறத்தை உரைத்தல்

கலி விருத்தம்

கண்ணா! நீ என்னை விட்டுப் போய் விடாதே!

3341. கையார் சக்கரத்தெங்கருமாணிக்கமே என்றென்று,
பொய்யே கைம்மைசொல்லிப்புறமேபுற மேயாடி,
மெய்யே பெற்றொழிந்தேன், விதிவாய்க்கின்று காப்பாரார்,
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப்போனாலே.

எம்பெருமான், என் சொற்படி நடப்பவனாகிவிட்டான்

3342. போனாய் மாமருதின் நடுவேயென்பொல் லாமணியே!
தேனே இன்னமுதே! என்றென்றேசில கூற்றுச் சொல்ல,
தானே லெம்பெருமானவனென்னா கியொழிந்தான்,
வானே மாநிலமேமற்றுமுற்றுமென் னுள்ளனவே.

கண்ணா! உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தேன்

3343. உள்ளன மற்றுளவாப்புறமேசில மாயஞ்சொல்லி,
வள்ளல் மணிவண்ணனே. என்றென்றேயுனை யும்வஞ்சிக்கும்,
கள்ளம னம்தவிர்ந்தேயுனைக்கண்டுகொண் டுய்தொழிந்தேன்,
வெள்ளத் தணைக்கிடந்தாயினியுன்னைவிட் டெங்கொள்வனே!

கண்ணா! என்னைக் கூவி அருளாய்!

3344. என்கொள்வ னுன்னைவிட்டென் னும்வாசகங் கள்சொல்லியும்,
வன்கள்வ னேன்மனத்தை வலித்துக்கண்ண நீர் கரந்து,
நின்கண் நெருங்கவைத்தே என்தாவியை நீக்ககில்லேன்,
என்கண் மலினமறுத் தென்னைக்கூவி யருளாய்கண்ணனே.

கண்ணா! இந்த உடற்சுமை எனக்கு எதற்கு?

3345. கண்ணபி ரானைவிண்ணோர் கருமாணிக்கத் தையமுதை,
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவேயோ ருடம்பிலிட்டு,
திண்ண மழுந்தக்கட்டிப் பலசெய்வினை வன்கயிற்றால்,
புண்ணை மறையவரிந் தெனைப்போரவைத் தாய்புறமே.

கருமேனியம்மானைக் கண்டு அனுபவித்தேன்

3346. புறமறக் கட்டிக்கொண்டிரு வல்வினை யார்குமைக்கும்,
முறைமுறை யாக்கைபுகலொழியக் கண்டு கொண்டொழிந்தேன்,
நிறமுடை நால்தடந்தோள் செய்யவாய்செய்ய தாமரைக்கண்,
அறமுய லாழியங்கைக் கருமேனியம் மான்தன்னையே.

ஆதிமூலமே என்றேன்: அவனருள் கிடைத்தது

3347. அம்மா னாழிப்பிரான் அவனெவ்விடத் தான்யானார்,
எம்மா பாவியர்க்கும்வி திவாய்க்கின்று வாய்க்கும்கண்டீர்,
கைம்மா துன்பொழித்தாய் என்றுகைதலை பூசலிட்டே,
மெய்ம்மா லாயொழிந்தேனெம்பிரானுமென் மேலானே.

என் பெற்றோரும் உறவினரும் திருமாலே

3348. மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும்,
மாலார் வந்தினநாள் அடியேன்மனத்தே மன்னினார்,
சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும்,
மேலாத் தாய்தந்தையும் அவரேயினி யாவாரே.

சங்கு சக்கரதாரி என்னோடு கூடினான்

3349. ஆவா ரார்துணையென்றலைநீர்க்கட லுளழுந்தும்
நாவாய் போல்,பிறவிக் கடலுள்நின்று நான்துளங்க,
தேவார் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும்,
ஆவா வென்றருள் செய்தடியேனொடு மானானே.

தசாவதாரம் எடுத்தவன் என்னுள் கலந்தான்

3350. ஆனான் ஆளுடையா னென்றஃதேகொண் டுகந்துவந்து,
தானே யின்னருள்செய் தென்னைமுற்றவும் தானானான்,
மீனா யாமையுமாய் நரசிங்கமு மாய்க்குறளாய்,
கானா ரெனாமுமாய்க் கற்கியாமின்னம் கார்வண்ணனே.

இவற்றைப் பாடுக: கண்ணன் கழலிணை கிட்டும்

3351. கார்வண்ணன் கண்ணபிரான் கமலத்தடங் கண்ணன்தன்னை,
ஏர்வள வொண்கழனிக்குருகூர்ச்சட கோபன்சொன்ன,
சீர்வண்ண வொண் தமிழ்களிவையாயிரத் துளிப்பத்தும்
ஆர்வண்ணத் தாலுரைப்பார் அடிக்கீழ்புகு வார்பொலிந்தே.

நேரிசை வெண்பா

கண்ணனின் பேரருளைப் போற்றினான் மாறன்

கையாரும் சக்கரத்தோன் காதலின்றிக் கேயிருக்கப்
பொய்யாகப் பேசும் புறனுரைக்கு-மெய்யான
பேற்றை யுபகரித்த பேரருளின் றன்மைதனைப்
போற்றினனே மாறன் பொலிந்து (41)

இரண்டாந் திருமொழி

2. பொலிக

இப்பகுதி ஸ்ரீவைஷ்ணவ பக்தகோடிகளுக்கு மங்களா சாஸனம் செய்கிறது; பல்லாண்டு பாடுகிறது. ஒன்றும் தேவும் முதலான பாடல்களால் ஆழ்வார் உலகுக்கு உபதேசம் செய்து இவ்வுலகையே பரமபதமாக்கிவிட்டார். அங்குள்ளாரும் இங்கு வரலாம் என்று சொல்லும்படி ஸம்ஸாரத்திற்கும் பரமபதத்திற்குமுள்ள வேற்றுமை நீங்கியதாகக் காணப்பட்டது.

பக்த கோடிகளைக் கண்டு வாழ்த்தல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

அடியார் திருக்கூட்டத்தால் மண்ணுலகும் விண்ணுலகாயிற்று

3352. பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங் கியாதொன்று மில்லை,
கலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம்.

தொண்டர்காள்! வாருங்கள்; துழாயானைத் தொழலாம்

3353. கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக் கினியன கண்டோம்,
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுதுநின் றார்த்தும்,
வண்டார் தண்ணந்து ழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்,
பண்டான் பாடிநின் றாடிப் பரந்து திரிகின் றனவே.

கலியுகம் நீங்கிக் கிருதயுகம் வந்துவிட்டதே!

3354. திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து,
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருக,
கரிய முகில்வண்ண னெம்மான் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
இரியப் புகுந்திசை பாடி எங்கும் இடங்கொண் டனவே.

எல்லோரும் பகவத் பஜனை செய்கிறார்களே!

3355. இடங்கொள் சமயத்தை யெல்லாம் எடுத்துக் களைவன போல,
தடங்கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்க ளேயாய்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி,
நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின் றனவே.

வைகுந்தனடியார்கள் எங்கும் நிறைந்துள்ளனர்

3356. செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே ஒக்கின்ற திவ்வுல கத்து,
வைகுந்தன் பூதங்க ளேயாய் மாயத்தி னாலெங்கும் மன்னி,
ஐயமொன் றில்லை யரக்கர் அசுரர் பிறந்தீருள் ளீரேல்,
உய்யும் வகையில்லை தொண்டீர்! ஊழி பெயர்த்திடும் கொன்றே.

தொண்டீர்! அடியார்களைத் தொழுது உய்ம்மின்

3357. கொன்றுயி ருண்ணும் விசாதி பகைபசி தீயன வெல்லாம்,
நின்றிவ் வுலகில் கடிவான் நேமிப்பி ரான்தமர் போந்தார்,
நன்றிசை பாடியும் துள்ளி யாடியும் ஞாலம் பரந்தார்,
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர் சிந்தையைச் செந்நி றுத்தியே.

கண்ணபிரானே மாபெருந்தெய்வம்

3358. நிறுத்திநும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்க ளும்மையுய் யக்கொள்
மறுத்து மவனோடே கண்டீர் மார்க்கண் டேயனும் கரியே
கறுத்த மனமொன்றும் வேண்டா கண்ணனல் லால்தெய்வ மில்லை,
இறுப்பதெல் லாமவன் மூர்த்தி யாயவர்க் கேயி றுமினே.

அடியார் கூட்டத்தைத் தொழுது வாழுங்கள்

3359. இறுக்கு மிறையிறுத்துண்ண எவ்வுல குக்கும்தன் மூர்த்தி,
நிறுத்தினான் தெய்வங்க ளாக அத்தெய்வ நாயகன் றானே
மறுத்திரு மார்வன் அவன்றன் பூதங்கள் கீதங்கள் பாடி,
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுதுய்ம்மி னீரே.

இவ்வுலகம் அச்சுதன் அடியார்களை நிரம்பிக் கொண்டுள்ளது

3360. மேவித் தொழுதுய்ம்மி னீர்கள் வேதப் புனித இருக்கை,
நாவிற்கொண் டச்சுதன் றன்னை ஞான விதிபிழை யாமே,
பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழுமடி யாரும் பகவரும் மிக்க துலகே.

யாவரும் தொழுதால் கலியுகமே இல்லாது போகும்

3361. மிக்க வுலகுகள் தோறும் மேவிக்கண் ணன்திரு மூர்த்தி,
நக்கபி ரானோ டயனும் இந்திர னும்முதலாக,
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்,
ஒக்கத் தொழுகிற்றி ராகில் கலியுக மொன்றுமில் லையே.

இவற்றைப் பாடுக: மன மாசு நீங்கும்

3362. கலியுக மொன்றுமின் றிக்கே தன்னடி யார்க்கருள் செய்யும்,
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பி ரான்கண்ணன் றன்னை,
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமா றன்சட கோபன்,
ஒலிபுக ழாயிரத் திப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.

நேரிசை வெண்பா

மாறன் சொல் நமது மன மாசைப் போக்கும்

பொலிக பொலிகவென்று பூமகள்கோன் றொண்டர்
மலிவுதனைக் கண்டுகந்து வாழ்த்தி-உலகில்
திருந்தாதார் தம்மைத் திருத்திமா றன்சொல்
மருந்தாகப் போகுமன மாசு  (42)

மூன்றாந் திருமொழி

மாசறு சோதி

இத்திருவாய்மொழியில் மடலூர்வேன் என்று கூறி தாம் நினைப்பதை நடத்திக்கொள்ளப் பார்க்கிறார் ஆழ்வார். இப்பகுதி நாயகி நிலையில் அருளிச்செய்யப்பட்டது.

காதல் மிகுதியால் தலைவி மடலூரத் துணிதல்

கலி நிலைத்துறை

தோழீ! ஊரார் பழிச்சொல் என்ன செய்யும்?

3363. மாசறு சோதியென் செய்ய வாய்மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை யாதி மூர்த்தியை நாடியே,
பாசற வெய்தி யறிவிழந் தெனைநா ளையம்?,
ஏசறு மூரவர் கவ்வை தோழீ. என்செய்யுமே?

தோழீ! என் வாயும் கண்ணும் பசலை பூத்தனவே!

3364. என்செய்யு மூரவர் கவ்வை தோழீ இனிநம்மை,
என்செய்ய தாமரைக் கண்ண னென்னை நிறைகொண்டான்,
முன்செய்ய மாமை யிழந்து மேனி மெலிவெய்தி,
என்செய்ய வாயும் கருங்கண் ணும்பயப் பூர்ந்தவே.

கண்ணன் என்னைக் கவர்ந்துவிட்டான்: பழிச்சொல் வந்தால் என்ன?

3365. ஊர்ந்த சகடம் உதைத்தபாதத்தன், பேய்முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறைகொண்டான்,
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடன்றியோர் சொல்லிலேன்,
தீர்ந்தவென் தோழீ என்செய்யு மூரவர் கவ்வையே?

கண்ணனிடம் கொண்ட காதல்முளை தழைத்துவிட்டதே!

3366. ஊரவர் கவ்வை யெருவிட்டன்னைசொல் நீர்மடுத்து,
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்,
பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த,
காரமர் மேனிநங் கண்ணன் தோழீ! கடியனே.

தோழி! மாலிடம் மையல் கொண்டேன்: தாய் என்ன செய்வாளோ?

3367. கடியன் கொடியன் நெடியமாலுல கங்கொண்ட
அடியன், அறிவரு மேனிமாயத்தன், ஆகிலும்
கொடியவென் னெஞ்சம் அவனென்றே கிடக்கு மெல்லே,
துடிகொ ளிடைமடத் தோழீ! அன்னையென் செய்யுமே?

தோழிமீர்! வாசுதேவன் வலையுள் அகப்பட்டேன்

3368. என்னையென் செய்யிலென் ஊரென் சொல்லிலென் தோழிமீர்,
என்னை யினியுமக் காசை யில்லை யகப்பட்டேன்,
முன்னை யமரர் முதல்வன் வண்துவ ராபதி
மன்னன், மணிவண் ணன்வாசு தேவன் வலையுளே.

தோழீ! ஆழிப்பிரானை வணங்கப்பெறுவேமோ!

3369. வலையுள் அகப்பட்டுத் தென்னைநன் நெஞ்சம் கூவிக்கொண்டு,
அலைகடல் பள்ளி யம்மானை ஆழிப் பிரான்தன்னை
கலைகொள் அகலல்குல் தோழீ. நம்கண்க ளால்கண்டு
தலையில் வணங்க மாங்கொலோ தையலார் முன்பே?

தாயர் நாண நான் கண்ணனை என்று கூடுவேன் ?

3370. பேய்முலை யுண்டு சகடம் பாய்ந்து மருதிடைப்
போய்முதல் சாய்த்து, புள்வாய் பிளந்து களிறட்ட,
தூமுறு வல்தொண்டை, வாய்ப்பிரானையெந் நாள்கொலோ,
யாமுறு கின்றது தோழீ! அன்னையர் நாணவே?

தோழீ! கண்ணனைத் தூற்றியவாறே மடலூர்வேன்

3371. நாணும் நிறையும் கவர்ந்தென்னை நன்னெஞ்சம் கூவிக்கொண்டு,
சேணுயர் வானத் திருக்கும் தேவ பிரான்தன்னை,
ஆணையென்? தோழீ! உலகு தோறலர் தூற்றி,ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே.

பெண்கள் அலர் தூற்றட்டும்: துழாய் சூடி மடலூர்வேன்

3372. யாமட லூர்ந்தும் எம்மாழியங்கைப் பிரானுடை,
தூமடல் தண்ணம் துழாய்மலர் கொண்டு சூடுவோம்,
யாமட மின்றித் தெருவு தோறயல் தையலார்,
நாமடங் கப்பழி தூற்றி நாடும் இரைக்கவே.

இவற்றைப் பாடுக: மண்ணுலகிலேயே வைகுந்தம் கிட்டும்

3373. இரைக்கும் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான்தன்னை,
விரைக்கொள் பொழில்குரு கூர்ச்சட கோபன் சொன்ன,
நிரைக்கொளந் தாதி யோரா யிரத்து ளிப்பத்தும்,
உரைக்கவல் லார்க்கு வைகுந்த மாகும்தம் மூரெல்லாம்.

நேரிசை வெண்பா

பழிக்கு அஞ்சாமல் மடலூர முனைந்தான் மாறன்

மாசரு சோதிகண்ணன் வந்துகல வாமையால்
ஆசை மிகுந்துபழிக் கஞ்சாமல்-ஏசறவே
மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்
உண்ணடுங்கத் தான்பிறந்த ஊர் (43)

நான்காந் திருமொழி

4. ஊரெல்லாம்

மடலூர வேண்டுமாயின், தான் விரும்புகின்ற நாயகனை ஒரு படத்தில் எழுதவேண்டும். ஆனால், சூரியன் மறைந்து இருள் வந்து அவரது முயற்சியைத் தடுத்துவிட்டது. இவள் மடலூர்வது தனக்குக் கவுரவக் குறைவு என்று பகவானே ஆழியால் சூரியனை மறைத்து இருள் வரச்செய்துவிட்டானோ என்றும் அவர் நினைத்தார்.

நள்ளிரவு வந்தது எல்லோரும் உறங்கிவிட்டனர் பகவானின் குணங்களையே ஆழ்வார் எண்ணிக்கொண்டிருந்தார். அசோக வனத்தில் சீதாபிராட்டி செய்ய நினைத்தது போல் தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளவும் விரும்புகிறார். இந்த நிலைகளை எல்லாம் இத்திருவாய்மொழி கூறுகிறது.

இரவு நீட்டிப்புக்கு வருந்திய தலைவி கூறல்

கொச்சகக் கலிப்பா

இரவு நீள்கின்றதே! என் ஆவி காப்பார் ஆர்?

3374. ஊரெல்லாம் துஞ்சி யுலகெல்லாம் நள்ளிருளாய்,
நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால்,
பாரெல்லா முண்டநம் பாம்பணையான் வாரானால்,
ஆரெல்லே! வல்வி னையேன் ஆவிகாப் பாரினையே?

நெஞ்சமே! நீயும் என் வசமில்லையே!

3375. ஆவிகாப் பாரினியார்? ஆழ்கடல்மண் விண்மூடி,
மாவிகார மாயோர் வல்லிரவாய் நீண்டதால்,
காவிசேர் வண்ணனென் கண்ணனும் வாரானால்,
பாவியேன் நெஞ்சமே! நீயும்பாங் கல்லையே?

ஆழியான் வந்திலன் :சாகவும் வழி தெரியவில்லை

3376. நீயும்பாங் கல்லைகாண் நெஞ்சமே! நீளிரவும்,
ஓயும் பொழுதின்றி யூழியாய் நீண்டதால்,
காயும் கடுஞ்சிலையென் காகுத்தன் வாரானால்,
மாயும் வகையறியேன் வல்வி னையேன் பெண்பிறந்தே.

கண்ணன் வந்திலன்; என் மனநோய் தீர்ப்பார் யார்?

3377. பெண்பிறந்தார் எய்தும் பெருந்துயர்காண் கிலேனென்று,
ஒண்சுடரோன் வாரா தொளித்தான்,இம்
மண்ணளந்த கண்பெரிய செவ்வாயெங் காரேறு வாரானால்,
எண்பெரிய சிந்தைநோய் தீர்ப்பாரார் என்னையே?

கண்ணன் வரவில்லை; என்னைத் தேற்றுவார் யார்?

3378. ஆரென்னை யாராய்வார்? அன்னையரும் தோழியரும்,
நீரென்னே? என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்,
காரன்ன மேனிநங் கண்ணனும் வாரானால்,
பேரென்னை மாயாதால் வல்வினையேன் பின்நின்றே.

மாயன் வந்திலன்; என் உயிர் காப்பார் யார்?

3379. பின்நின்ற காதல்நோய் நெஞ்சம் பெரிதடுமால்,
முன்நின் றிராவூழி கண்புதைய மூடிற்றால்,
மன்னின்ற சக்கரத்தெம் மாயவனும் வாரானால்,
இந்நின்ற நீளாவி காப்பாரார் இவ்விடத்தே?

தெய்வங்காள்! தீவினையேன் என் செய்கேன்?

3380. காப்பாரார் இவ்விடத்து? கங்கிருளின் நுண்துளியாய்,
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல்வாய்,
தூப்பால வெண்சங்கு சக்கரத்தன் தோன்றானால்,
தீப்பால வல்வி னையேன் தெய்வங்காள். என்செய்கேன்?

கண்ணன் வந்திலனே! தென்றல் என்னை எரிக்கின்றதே?

3381. தெய்வங்காள். என்செய்கேன்?ஓரிர வேழ் ஊழியாய்,
மெய்வந்து நின்றென தாவி மெலிவிக்கும்
கைவந்த சக்கரதென் கண்ணனும் வாரானால்,
தைவந்த தண்தென்றல் வெஞ்சுடரில் தானடுமே.

இரவு நீள்கிறது; என் மனத்துன்பம் துடைப்பார் யார்?

3382. வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண்துளியாய்,
அஞ்சுடர வெய் யோன் அணிநெடுந்தேர் தோன்றாதால்,
செஞ்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்,
நெஞ்சிடர்தீர்ப் பாரினியார்? நின்றுருகு கின்றேனே.

கண்ணன் வாரான் என்றுகூட யாரும் சொல்லவில்லையே!

3383. நின்றுருகு கின்றேனே போல நெடுவானம்,
சென்றுருகி நுண்துளியாய்ச்செல்கின்ற கங்குல்வாய்,
அன்றொருகால் வையம் அளந்தபிரான் வாரானென்று,
ஒன்றொருகால் சொல்லாதுலகோ உறங்குமே.

இவற்றைப் படித்து வைகுந்தம் அடைக

3384. உறங்குவான் போல்யோகு செய்த பெருமானை,
சிறந்தபொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்சொல்,
நிறங்கிளர்ந்த அந்தாதி யாயிரத்து ளிப்பத்தால்,
இறந்துபோய் வைகுந்தம் சேராவா றெங்ஙனேயோ?

நேரிசை வெண்பா

மாறன் மனத்துயரை எப்படி விளக்கமுடியும்?

ஊர நினைந்தமட லூரவுமொண் ணாதபடி
கூரிருள்சேர் கங்குலுடன் கூடிநின்று-பேராமல்
தீதுசெய் மாறன் றிருவுளத்திற் சென்றதுயர்
ஓதுவதிங் கெங்ஙனே யோ?  (44)

ஐந்தாந் திருமொழி

5. எங்ஙனேயோ

இதுவும் நாயகி நிலையில் இருந்துகொண்டு அருளிச் செய்யும் திருவாய்மொழி. தாய் தலைமகளுக்குச் சில அறிவுரைகள் கூறி(அவளை) மீட்கப் பார்க்கிறாள். திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகில் நெஞ்சைப் பறி கொடுத்து நிற்கும் என்னை அடக்க முயல்வது முறையன்று என்று பராங்குச நாயகி கூறுவதாக அமைந்துள்ளது இப்பகுதி.

தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி தாய்மாரை மறுத்துக் கூறல்

கலிநிலைத்துறை

குறுங்குடி நம்பியின்பின் என் மனம் செல்கின்றது

3385. எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்?,
நங்கள்கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,
சங்கினோடும் நேமி யோடும் தாமரைக் கண்களொடும்,
செங்கனிவா யொன்றி னொடும் செல்கின்ற தென்நெஞ்சமே.

நம்பியின் உருவமே என் எதிரில் நிற்கின்றது

3386. என்நெஞ்சி னால்நோக்கிக் காணீர் என்னை முனியாதே,
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்
மின்னும் நூலும் குண்டலமும் மார்வில் திருமறுவும்,
மன்னும் பூணும் நான்குதோளும் வந்தெங்கும் நின்றிடுமே.

நம்பியின் ஐம்படைகள் என் மனத்தைவிட்டகலா

3387. நின்றிடும் திசைக்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர்,
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும்சங்கமும்,
நின்று தோன்றிக் கண்ணுள்நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே.

நம்பியின் பொன் முடியும் வடிவும் என்னருகில் உள்ளன

3388. நீங்கநில்லாக் கண்ண நீர்களென்று அன்னையரும் முனிதிர்,
தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,
பூந்தண் மாலைத் தண்டுழாயும் பொன்முடி யும்வடிவும்,
பாங்கு தோன்றும் பட்டும்நாணும் பாவியேன் பக்கத்தவே.

நம்பியின் உறுப்புகள் என் உயிர்மேல் உள்ளன

3389. பக்கம்நோக்கி நிற்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர்,
தக்ககீர்த்திக் திருக்கு றுங்குடி நம்பியை நான்கண்டபின்
தொக்கசோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்,
தக்கதாமரைக் கண்ணும் பாவியே னாவியின் மேலனவே.

நம்பியின் அவயவங்கள் என் நெஞ்சில் நிறைந்தன

3390. மேலும் வன்பழி நங்குடிக்கிவள் என்றன்னை காணக்கொடாள்
சோலைசூழ் தண்திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,
கோலநீள் கொடிமூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்,
நீலமேனியும் நான்கு தோளுமென் நெஞ்சம் நிறைந்தனவே.

நம்பியின் திருவாழியும் மேனியும் நெஞ்சில் நிலைத்தன

3391. நிறைந்த வன்பழி நங்குடிக்கிவள் என்றன்னை காணக்கொடாள்
சிறந்தகீர்த்தித் திருக்கு றுங்குடி நம்பியை நான்கண்டபின்,
நிறைந்தசோதி வெள்ளஞ் சூழ்ந்த நீண்டபொன் மேனியொடும்
நிறைந்தென் னுள்ளே நின்றொழிந்தான் நேமியங் கையுளதே.

குறுங்குடி நம்பியின் உரு என்முன் நிற்கின்றது

3392. கையுள்நன் முகம்வைக்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர்,
மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,
செய்யதாமரைக் கண்ணு மல்குலும் சிற்றிடை யும்வடிவும்,
மொய்யநீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.

நம்பி என் மனத்தை விடுத்து அகலமாட்டான்

3393. முன்னின் றாயென்று தோழிமார்களும் அன்னைய ரும்முனிதிர்,
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,
சென்னி நீண்முடி யாதியாய உலப்பி லணிகலத்தன்,
கன்னல் பாலமு தாகிவந்தென் நெஞ்சம் கழியானே.

நம்பி என் மனத்தில் நிறைந்ததை யாராலும் அறியமுடியாது

3394. கழீயமிக்கதோர் காதல ளிவளென் றன்னை காணக்கொடாள்,
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,
குழுமித் தேவர் குழாங்கள்தொழச் சோதிவெள் ளத்தினுள்ளே,
எழுவதோ ருருவென் னெஞ்சுள்ளெழும் ஆர்க்கு மறிவரிதே.

இவற்றைப் படித்தோரே வைஷ்ணவர்

3395. அறிவரிய பிரானை யாழியங்கையனை யேயலற்றி,
நறியநன் மலர்நாடி நன்குருகூர்ச்சடகோபன் சொன்ன,
குறிகொளா யிரத்துள் ளிவைபத்தும் திருக்குறுங் குடிய தன்மேல்
அறியக் கற்றுவல்லார் வைட்டணவராழ்கடல் ஞாலத்துள்ளே.

நேரிசை வெண்பா

மாறனைக் கருதினால் இன்பக் கடலில் ஆழலாம்

எங்ஙனே நீர்முனிவ தென்னையினி? நம்பியழகு
இங்ஙனே தோன்றுகின்ற தென்முன் என் அங்ஙன்
உருவெளிப் பாடா வுரைத்ததமிழ் மாறன்
கருதுமவர்க் கின்பக் கடல்  (45)

ஆறாந் திருமொழி

6. கடல்

பராங்குச நாயகி, கடல் ஞாலம் செய்தேனும் யானே கடல் ஞானம் ஆவேனும் யானே என்று பலவாறாகக் கூறி, தன்னை எம்பெருமானாகவே கருதிப் பேசித் தரித்திருக்கப் பார்க்கிறார். தாயோ தன் மகளின் நிலையைக் கண்டு இது என்ன? என்று வியந்து கலக்குகிறாள். உறவினர் சிலர் வந்து இம்மகளின் நிலையைப் பற்றிக் கேட்கிறார்கள். எம்பெருமான் இவளிடம் ஆவேசித்து இருப்பதுபோல் தோன்றுகிறது என்று(தாய்) விடை கூறுவதாக இப்பகுதி அமைந்துள்ளது.

தலைவியின் நிலைகண்ட தாய், ஆவேசம் வந்ததோ என்று எண்ணி நொந்து கூறல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

என் மகளுக்கு ஆவேசம் வந்துவிட்டதோ?

3396. கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்,
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்,
கடல்ஞாலம் முண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலத் தீசன்வந் தேறக் கொலோ?,
கடல்ஞா லத்தீர்க் கிவையென் சொல்லுகேன்
கடல்ஞா லத்தென் மகள்கற் கின்றனவே?

திருமாலின் செயல்களைத் தன் செயல்கள் என்கின்றாரோ!

3397. கற்கும்கல் விக்கெல்லை யிலனே என்னும்
கற்கும்கல்வி யாவேனும் யானே என்னும்,
கற்கும்கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும்கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்,
கற்கும்கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும்கல்வி நாதன்வன் தேறக் கொலோ?,
கற்கும் கல்வியீ ர்க் கிவையென் சொல்லுகேன்
கற்கும் கல்வியென் மகள்காண் கின்றனவே?

கடல் வண்ணன் இவள்மீது ஆவேசித்துவிட்டானோ?

3398. காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்,
காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்,
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல்வண்ண னேறக் கொலோ?
காண்கின்ற வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்
காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றனவே.

கண்ணன் தன்மைகளைத் தன் தன்மைகளாகக் கூறுகின்றாளே!

3399. செய்கின்ற கிதியெல்லாம் யானே என்னும்
செய்வானின் றனகளும் யானே என்னும்,
செய்துமுன் னிறந்தனவும் யானே என்னும்
செய்கைப்பய னுண்பேனும் யானே என்னும்,
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்யகம லக்கண்ண னேறக் கொலோ?
செய்யவுல கத்தீர்க் கிவையென் சொல்லுகேன்
செய்ய கனிவா யிளமான் திறத்தே.

திருமாலின் செயல்களைத் தன் செயல் என்கிறாள்

3400. திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலையெடுத் தேனே என்னும்,
திறம்பாமல் அசுரரைக்கொன் றேனே என்னும்
திறங்காட்டி யன்றைவரைக் காத்தேனே என்னும்,
திறம்பாமல் கடல்கடைந் தேனே என்னும்
திறம்பாத கடல்வண்ண னேறக் கொலோ?
திறம்பாத வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்
திறம்பா தென்திரு மகளெய் தினவே?

தானே கண்ணன் என்கிறாள்

3401. இனவேய்மலை யேந்தினேன் யானே என்னும்
இனவேறுகள் செற்றேனும் யானே என்னும்,
இனவான்கன்று மேய்த்தேனும் யானே என்னும்
இனவாநிரை காத்தேனும் யானே என்னும்,
இனவாயர் தலைவனும் யானே என்னும்
இனத்தேவர் தலைவன்வந் தேறக் கொலோ?,
இனவேற்கண் நல்லீர்க் கிவையென் சொல்லுகேன்
இனவேற் கண்ணி யென்மக ளுற்றனவே?

மாயன் இவள்மீது ஆவேசித்தானோ?

3402. உற்றார்க ளெனக்கில்லை யாரும் என்னும்
உற்றார்க ளெனக்கிங்கெல் லாரும் என்னும்,
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்,
உற்றார்களுக் குற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்தேறக் கொலோ?,
உற்றீர்கட் கென்சொல்லிச் சொல்லு கேன்யான்
உற்றென் னுடைப்பே தையுரைக் கின்றன வே.

எல்லாத் தெய்வங்களும் யானே என்கிறாள்

3403. உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்,
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்,
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில்வண்ண னேறக் கொலோ?,
உரைக்கின்ற உலகத் தீர்க்கென் சொல்லுகேன்
உரைக்கின்ற வென்கோ மளவொண் கொடிக்கே?

வினை தீர்ப்பவன் யானே என்கிறாள்

3404. கொடிய வினையாது மிலனே என்னும்
கொடியவினை யாவேனும் யானே என்னும்,
கொடியவினை செய்வேனும் யானே என்னும்
கொடியவினை தீர்ப்பேனும் யானே என்னும்,
கொடியா னிலங்கைசெற் றேனே என்னும்
கொடியபுள் ளுடையவ னேறக் கொலோ?,
கொடிய வுலகத்தீர்க் கிவையென் சொல்லுகேன்
கொடியேன் கொடியென் மகள்கோ லங்களே?

சுவர்க்கமும் நரகமும் யானே என்கிறாள்

3405. கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோலமில் நரகமும் யானே என்னும்,
கோலம்திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலங்கொ ளுயிர்களும் யானே என்னும்,
கோலங்கொள் தனிமுதல் யானே என்னும்
கோலங்கொள் முகில்வண்ண னேறக் கொலோ?
கோலங்கொ ளுலகத் தீர்க்கென் சொல்லுகேன்
கோலந் திகழ்கோ தையென்கூந் தலுக்கே.

இவற்றைப் படித்தோர் அடியார்க்கடியார் ஆவர்

3406. கூந்தல்மலர் மங்கைக்கும் மண்மடந் தைக்கும்
குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி நாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றே வல்செய்து,
ஆய்ந்த தமிழ்மாலை ஆயி ரத்துள்
இவையுமோர் பத்தும்வல் லார்,உலகில்
ஏந்து பெருஞ்செல்வந் தாராய்த் திருமால்
அடியார் களைப்பூ சிக்கநோற் றார்களே.

நேரிசை வெண்பா

மாறன் பாடல்களைப் படித்தோர் தவஞ்செய்தோர் ஆவர்

கடல்ஞாலத் தீசனைமுன் காணாமல் நொந்தே
உடனா அனுசரிக்க லுற்றுத்-திடமாக
வாய்ந்தவனாய்த் தான்பேசும் மாறன் உரையதனை
ஆய்ந்துரைப்பா ராட்செயநோற் றார்

ஏழாந் திருமொழி

7. நோற்ற நோன்பு

சீரிவர மங்கலநகர் எனப்படும் வானமாமலை திவ்யதேசத்திலுள்ள எம்பெருமானை ஆழ்வார் சரணம் புகுகிறார். வானமாமலையிலுள்ள பெருமாளுக்கும் வானமாமலை என்றே பெயர் இவ்வூர் பாண்டிய நாட்டில் இருக்கிறது.

வானமாமலை எம்பெருமானின் அருளை வேண்டல்

ஆசிரியத்துறை

அரவணையானே! நான் உனக்கு அதிக பாரமா?

3407. நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனாகிலும் இனி யுன்னைவிட்டு,ஒன்றும்
ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே,
சேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர்,
வீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே.

சங்கு சக்கரதாரீ! எனக்கு அருள் செய்

3408. அங்குற்றே னல்லே னிங்குற்றே னல்லேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து,நான்
எங்குற் றேனுமல் லேனிலங்கைசெற்ற அம்மானே,
திங்கள் சேர்மணி மாடம் நீடு சிரீவர மங்கல நகருறை,
சங்கு சக்கரத் தாய்! தமியேனுக் கருளாயே.

கருடவாகனா! நான் உனக்கு என்ன பதிலுதவி செய்வேன்?

3409. கருள புட்கொடி சக்க ரப்படை வான நாட! எங் கார்முகில் வண்ணா,
பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்,
தெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ் சிரீவர மங்கலநகர்க்கு,
அருள்செய்தங்கிருந் தாயறி யேனொரு கைம்மாறே.

கண்ணா! எங்கு வந்து உன்னைக் கூவுவேன்!

3410. மாறு சேர்படை நூற்றுவர் மங்க வோரைவர்க்கு ஆயன்று மாயப்போர் பண்ணி,
நீறு செய்த எந்தாய். நிலங்கீண்ட அம்மானே,
தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர்,
ஏறிவீற் றிருந்தாய். உன்னை எங்கெய்தக் கூவுவனே?

வானமாமலையில் உன்னை யாவரும் தொழுகின்றனரே!

3411. எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வதெய் வத்து ளாயுமாய் நின்று,
கைத வங்கள்செய் யும்கரு மேனியம் மானே,
செய்த வேள்வியர் வையத் தேவரறாச் சிரீவர மங்கலநகர்,
கைத்தொழ இருந்தாய் அதுநானும் கண்டேனே.

வானமாமலையே ! அடியேன் தொழ வந்தருள்க

3412. ஏன மாய்நிலங் கீண்டவென் அப்பனே! கண்ணா! என்று மென்னை யாளுடை,
வானநா யகனே! மணிமா ணிக்கச் சுடரே,
தேன மாம்பொழில் தண்சிரீ வரமங்கலத் தவர்க்கை தொழவுறை
வான மாமலை யே!அடி யேன்தொழ வந்தருளே.

எந்தாய்! என்னை அகற்றிவிடாதே

3413. வந்தருளி யென்னெஞ் சிடங்கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய்தந்தையே! முழுஏழுலகு முண்டாய்,
செந்தொ ழிலவர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர்,
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.

எந்தாய்! என்னைச் சேற்றில் வீழ்த்திவிடாதே

3414. அகற்ற நீவைத்த மாயவல் லைம்புலங்களாம் அவை நன்கறிந்தனன்,
அகற்றி என்னையும் நீஅருஞ் சேற்றில் வீழ்த்தி கண்டாய்,
பகற்கதிர் மணிமாடம் நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்!புள்ளின்வாய் பிளந்தானே!

எந்தாய்! எனக்கு உய்யுமாறு அருளாய்!

3415. புள்ளின்வாய் பிளந்தாய். மருதிடை போயினாய். எருதேழ் அடர்த்த,என்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திருநான் மறைகள் வல்லார் மலிதண் சிரீவர மங்கை,
உள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமா றெனக்கே.

தெய்வநாயகா! என் உயிர் உன்னுடையது

3416. ஆறெ னக்குநின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய், உனக் கோர்கைம்
மாறு நானொன் றிலேனென தாவியு முனதே,
சேரு கொள்கரும் பும்பெருஞ் செந்நெல்லும் மலிதண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய்முடி யாய்! தெய்வ நாயகனே!

இவற்றைப் பாடினோர் தேவர்கட்கு அமுதமாவர்

3417. தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணைமிசை,
கொய்கொள் பூம்பொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்
செய்த ஆயிரத் துள்ளிவை தண்சிரீ வரமங்கை மேய பத்துடன்,
வைகல் பாட வல்லார் வானோர்க் காரா அமுதே.

நேரிசை வெண்பா

மாறன் பாடல்களைப் படித்தோர் தேவர்க்கு அமுதமாவர்

நோற்றநோன் பாதியிலேன் நுன்றனைவிட் டாற்றகில்லேன்
பேற்றுக் குபாயமுன்றன் பேரருளே சாற்றுகின்றேன்
இங்கென்னிலை என்னும் எழில்மாறன் சொல்வல்லார்
அங்கமரர்க் காரா அமுது  (47)

எட்டாந் திருமொழி

8. ஆரா அமுதே

வானமாமலைப் பெருமாளும் ஆழ்வாருக்கு முகம் காட்டவில்லை.  ஒரு வேளை திக்குடந்தையிலே ஸேவை ஸாதிக்கலாம் என்று பகவான் நினைத்திருக்கக்கூடும் என்று எண்ணிய ஆழ்வார் திருக்குடந்தையிலே சென்று புகுந்தார்; கண்ணன் அக்ரூரரோடு உரையாடியதுபோல், பகவானும் நம்மிடம் வருவான் என்று நினைத்தார். வரவில்லை வருந்தினார் எம்பெருமானே! உன்னைக் காண இன்னும் எத்தனை இடங்களில் தேடிவருவேன்? என்று தாய் முகம் காணாக் குழந்தை போல் அழைத்துக் கதறுகிறார்.

ஆற்றாமை கூறி ஆழ்வார் அலமருதல்

அறுசீர்க் ஆசிரிய விருத்தம்

திருக்குடந்தை ஆராவமுதே! நின்னைக் கண்டேன்

3418. ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே,
நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே,
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை,
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே!

திருக்குடந்தைப் பிரானே! நான் என்ன செய்வேன்?

3419. எம்மா னே!என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே,
எம்மா வுருவும் வேண்டு மாற்றால் ஆவாய் எழிலேறே,
செம்மா கமலம்  செழுநீர் மிசைக்கண்மலரும் திருக்குடந்தை,
அம்மா மலர்க்கண் வளர்கின் றானே.என்நான் செய்கேனே.

திருக்குடந்தையானே! இறந்த பின்னும் நின் தாளே என் துணை

3420. என்நான் செய்கேன்? யாரே களைகண்? என்னையென் செய்கின்றாய்?
உன்னால் அல்லால் யாவ ராலும் ஒன்றும் குறைவேண்டேன்,
கன்னார் மதிள்சூழ் குடந்தைக் கிடந்தாய்! அடியேன் அருவாழ்ணாள்,
சென்னா ளெந்நாள் அந்நா ளுன்தாள் பிடித்தே செலக்காணே.

குடந்தையானே! நின்னைக் காண அழுது தொழுகின்றேன்

3421. செலக்காண் கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பி லானே எல்லா வுலகும் உடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான்நான்
அலப்பாய்,ஆகா சத்தை நோக்கி அழுவன் தொழுவனே.

ஆராவமுதே! நான் உன் திருவடி சேரும் வகையை நினை

3422. அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்,
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்,
செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தா மரைக்கண்ணா!
தொழுவன் னேனை யுன்தாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.

அமுதே! நான் எவ்வளவு நாள்தான் காத்திருப்பேன்?

3423. சூழ்கண் டாயென் தொல்லை வினையை அறுத்துன் அடி சேரும்
ஊழ்கண் டிருந்தே, தூராக் குழிதூர்த்து எனைநாள் அகன்றிருப்பன்?
வாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரியேறே!

எந்தாய்! இனிப் பொறுக்கமுடியாது; அடைக்கலம் அருள்

3424. அரியே றே!என் அம்பொற் சுடரே! செங்கட் கருமுகிலே,
எரியேபவளக் குன்றே! நாற்றோள் எந்தாய்! உனதருளே,
பிரியா அடிமை யென்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே,
தரியே னினியுன் சரணந் தந்தென் சன்மம் களையாயே.

மாயா! என் உயிர் பிரியும்பொழுது நின் திருவடித் துணை வேண்டும்

3425. களைவாய் துன்பம் களையா தொழிவாய் களைகண் மற்றிலேன்,
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்த மாமாயா!
தளரா வுடலம் என்ன தாவி சரிந்து போம்போது,
இளையா துனதாள் ஒருங்கப் பிடித்து போத இசைநீயே.

ஆதிமூர்த்தீ! எனக்குத் தரிசனம் தா

3426. இசைவித் தென்னை யுன்தாள் இணைகீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர்! தலைவா ஆதி பெருமூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை,
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய். காண வாராயே.

மாயா! உன்னடிமையாகிய நான் இன்னமும் துன்புறுவேனோ?

3427. வாரா வருவாய் வருமென் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்,
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?

இவற்றைப் படியுங்கள்: ஆசைகள் அகலும்

3428. உழலை யென்பின் பேய்ச்சி முலையூடு அவளை யுயிருண்டான்,
கழல்கள் அவையே சரணாக் கொண்ட குருகூர்ச் சடகோபன்,
குழலில் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.

நேரிசை வெண்பா

அந்தோ! மாறன் தவித்தானே!

ஆரா அமுதாழ்வார் ஆதரித்த பேறுகளைத்
தாராமை யாலே தளர்ந்துமிகத்-தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமந்தான்
மாசறுசீர் மாறனெம் மான்  (48)

ஒன்பதாந் திருமொழி

9. மானேய் நோக்கு

திருக்குடந்தையிலே தளர்ந்த ஆழ்வார், திருவல்ல வாழ் என்ற மலைநாட்டுத் திருப்பதிக்குச் செல்ல நினைத்தார். ஆனால் அவ்வூருக்குப் போகமுடியாமல் சோலைகளும், தென்றலும், வண்டுகளின் இன்னிசையும், வைதிகச் செயல்களின் ஆரவாரமும் அவரைத் தடுத்துயர் விளைவித்தன. அவற்றால் ஏற்பட்ட நோவினை ஆழ்வார் ஈண்டுப் புலப்படுத்துகிறார். தோழியர்க்கு ஒரு தலைவி கூறும் கூற்றாக இப்பகுதி அமைந்துள்ளது.

தன்னைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்

கலி விருத்தம்

திருவல்லவாழ்க் கோமானை நான் கூடுவது என்று?

3429. மானேய் நோக்குநல்லீர்! வைகலும்வினை யேன்மெலிய,
வானார் வண்கமுகும் மதுமல்லிகை யுங்கமழும்,
தேனார் சோலைகள்சூழ் திருவல்ல வாழுறையும்ரை,
கோனாரை அடியேண் அடிகூடுவ தென்றுகொலோ?

பிரானின் அடிப்பொடியை நான் சூடுவது என்று?

3430. என்றுகொல் தோழிமீர்காளெம்மைநீர்நலிந் தென்செய்தீரோ?
பொன்திகழ் புன்னைமகிழ் புதுமாதவி மீதணவி,
தென்றல் மணங்கமழும் திருவல்ல வாழ்நகருள்
நின்றபி ரான்,அடிநீ றடியோங்கொண்டு சூடுவதே?

எம்பிரானின் கழலிணையைக் காண்பேனா?

3431. சூடும் மலர்க்குழலீர்! துயராட்டியே னைமெலிய,
பாடுநல் வேதவொலி பரவைத்திரை போல்முழங்க,
மாடுயர்ந் தோமப்புகை கமழும்தண் திருவல்லவாழ்
நீடுறை கின்றபிரான் கழல்கண்டுங்கொல் நிச்சலுமே?

நம்பிரானின் நன்னலம் எனக்குக் கிட்டுமா?

3432. நிச்சலும் தோழிமீர்காள்! எம்மைநீர்நலிந் தென்செய்தீரோ?
பச்சிலை நீள்கமுகும் பலவும்தெங்கும் வாழைகளும்,
மச்சணி மாடங்கள்மீ தணவும்தண் திருவல்லவாழ்
நச்சர வினணைமேல் நம்பிரானது நன்னலமே.

எம்பிரானை என் கண்கள் காணுதல் எந்நாள்?

3433. நன்னலத் தோழிமீர்காள். நல்லவந்தணர் வேள்விப்புகை,
மைந்நலங் கொண்டுயர்விண் மறைக்கும்தண் திருவல்லவாழ்,
கன்னலங் கட்டிதன்னைக் கனியையின் னமுதந்தன்னை,
என்னலங் கொள்சுடரை என்றுகொல்கண்கள் காண்பதுவே?

எம்பிரானின் திருவடிகளைக் காணுதல் எந்நாள்?

3434. காண்பதெஞ் ஞான்றுகொலொ வினையேன்கனி வாய்மடவீர்,
பாண்குரல் வண்டினோடு பசுந்தென்றலு மாகியெங்கும்,
சேண்சினை யோங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ்,
மாண்குறள் கோலப்பிரான் மலர்த்தாமரைப் பாதங்களே?

நம்பிரானை நாள்தோறும் நான் தொழுவேனோ?

3435. பாதங்கள் மேலணிபூத் தொழக்கூடுங்கொல் பாவைநல்லீர்,
ஓதநெ டுந்தடத்துள் உயர்தாமரை செங்கழுநீர்,
மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ்,
நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான்தன்னை நாடோறுமே?

தோழிமீர்! பிரானின் திருவடிகளை நான் தொழமுடியுமோ?

3436. நாள்தோறும் வீடின்றியே தொழக்கூடுங்கொல் நன்னுதலீர்,
ஆடுறு தீங்கரும்பும் விளைசெந்நெலு மாகியெங்கும்,
மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ்தண் திருவல்லவாழ்,
நீடுறை கின்றபிரான் நிலந்தாவிய நீள்கழலே?

சக்கரப் பெருமான் அருள் பெற்றுத் தொழுவேனோ?

3437. கழல்வளை பூரிப்பயாம் கண்டுகைதொழக் கூடுங்கொலோ,
குழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி,
மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்,
சுழலின் மலிசக்கரப் பெருமானது பு தால்லருளே?

நாராயணன் நாமங்களை யான் சொல்வேனோ?

3438. தொல்லருள் நல்வினையால் சொல்லக்கூடுங்கொல் தோழிமீர்காள்,
தொல்லருள் மண்ணும்விண்ணும் தொழநின்ற திருநகரம்,
நல்லரு ளாயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்,
நல்லருள் நம்பெருமான் நாராயணன் நாமங்களே?

இவற்றைப் படித்தோர் பெருஞ்சிறப்புப் பெறுவர்

3439. நாமங்க ளாயிர முடையநம்பெரு மானடிமேல்,
சேமங்கொள் தென்குருகூர்ச்சடகோபன் தெரிந்துரைத்த,
நாமங்க ளாயிரத்துள் இவைபத்தும் திருவல்லவாழ்,
சேமங்கொள் தென்னகர்மேல் செப்புவார்சிறந் தார்பிறந்தே.

நேரிசை வெண்பா

மாறன் பாடல்களைப் படித்தால் பிறவித் துன்பம் இல்லை

மாநலத்தால் மாறன் றிருவல்ல வாழ்புகப்போய்த்
தானிளைத்து வீழ்ந்தவ்வூர் தன்னருகில்- மேனிலங்கித்
துன்பமுற்றுச் சொன்ன சொலவுகற்பார் தங்களுக்குப்
பின்பிறக்க வேண்டா பிற  (49)

பத்தாந் திருமொழி

10. பிறந்தவாறும்

எம்பெருமானே! உன்னை விட்டுப் பிரிந்து நான் வருந்தினாலும் உன் குணங்களையே நான் கூறும்படி அருளவேண்டும் என்று அவன் திருவடிகளில் ஆழ்வார் சரணம் புகுகிறார்.

எம்பெருமானை ஆழ்வார் வேண்டுதல்

ஆசிரியத் துறை

சுடரே! உன்னை நான் என்று சேர்வேன்?

3440. பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கைசெய்து, ஐவர்க்குத்
திறங்கள் சாட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்,
நிறந்த னூடுபுக் கெனதாவியை நின்றுநின்று உருக்கி யுண்கின்ற,இச்
சிறந்த வான்சுட ரே! உன்னை யென்றுகொல் சேர்வதுவே.

முதல்வா! உன்னை என்று நெருங்குவேன்?

3441. வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய்பி ளந்ததும்
மதுவைவார் குழலார் குரவை பிணைந்த குழகும், அதுவிது
உதுவென்ன லாவன வல்ல என்னையுன் செய்கை நைவிக்கும்,
முதுவைய முதல்வா! உன்னை யென்று தலைப் பெய்வனே?

கண்ணா! உன் செயல்கள் என் நெஞ்சை உருக்குகின்றன

3442. பெய்யும் பூங்குழல் பேய்முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தோர் சாடிறச்
செய்ய பாதமொன் றால்செய்த நின்சிறுச் சேவகமும்,
நெய்யுண் வார்த்தையுள், அன்னை கோல்கொள்ள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்க,
பையவே நிலையும் வந்தென் னெஞ்சை யுருக்குங்களே.

எம்பிரானே! நின் தம்மை என் உயிரை உருக்கியுண்ணும்

3443. கள்ள வேடத்தைக் கொண்டுபோய்ப் புறம்புக்க வாறும்,
கலந்தசுரரை உள்ளம் பேதம்செய் திட்டுயி ருண்ட உபாயங்களும்,
வெள்ள நீர்ச்சடை யானும் நின்னிடை வேறலாமை
விளங்க நின்றதும், உள்ளமுள் குடைந்தென் உயிரை யுருக்கி யுண்ணுமே.

கண்ணா! உன் லீலைகள் நினைத்தால் என் மனம் உருகுகிறது

3444. உள்ளம் வானவர் கோனுக் காயர் ஒருப்ப டுத்த அடிசி லுண்டதும்,
வண்ணமால் வரையை யெடுத்து மழைகாத்ததும்,
மண்ணை முன்படைத் துண்டு மிழ்ந்துக டந்தி டந்து மணந்த மாயங்கள்,
எண்ணுந் தோறுமென் னெஞ்செரி வாய்மெழு கொக்குநின்றே.

சுடரே! நின்னை நினைக்கின்றேன்; நன்கு ஒரு சொல் உரை

3445. நின்றவாறு மிருந்த வாறும் கிடந்த வாறும் நினைப்பரியன
ஒன்றலா வுருவாய் அருவாயநின் மாயங்கள்,
நின்று நின்று நினைக்கின் றேனுன்னை எங்ங னம்நினை கிற்பன்,பாவியேற்கு
ஒன்றுநன் குரையாய் உலக முண்ட ஒண்சுடரே.

கருமாணிக்கமே! எனக்கு ஒரு நாள் காட்சி தா

3446. ஒண்சுடரோ டிருளுமாய் நின்ற வாறும் உண்மையோ டின்மையாய் வந்து,என்
கண்கொ ளாவகை நீகரந் தென்னைச் செய்கின்றன,
எண்கொள் சிந்தையுள் நைகின்றேனென் கரிய மாணிக்க மே.என் கண்கட்குத்
திண்கொள்ள வொருநாள் அருளாயுன் திருவுருவே.

திருமாலே ! நின்னை என்று நான் கூடுவேன்?

3447. திருவுருவு கிடந்த வாறும் கொப்பூழ்ச் செந்தா மரைமேல்,திசைமுகன்
கருவுள்வீற் றிருந்து படைத்திட்ட கருமங்களும்,
பொருவி லுந் தனி நாயகமவை கேட்குந் தோறுமென் னெஞ்சம் நின்று நெக்கு,
அருவி சோரும் கண்ணீ ரென்செய்கேன் அடியேனே.

நாகணையாய்! நின்னை நான் நாடும் வண்ணம் சொல்

3448. அடியை மூன்றை யிரந்த வாறும் அங்கேநின்றாழ் கடலும் மண்ணும் விண்ணும்
முடிய, ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்,
நொடியு மாறவை கேட்குந் தோறுமென் நெஞ்சம் நின்தனக் கேக ரைந்துகும்,
கொடியவல் வினையேன் உன்னை யென்றுகொல் கூடுவதே?

இவற்றைப் படித்தோர் வைகுந்தத்தில் மகிழ்வர்

3449. கூடிநீரை கடைந்த வாறும் அமுதம் தேவர் உண்ண, அசுரரை
வீடும் வண்ணங்க ளேசெய்து போன வித்தகமும்,
ஊடு புக்கென தாவியை யுருக்கி யுண்டிடு கின்ற, நின்தன்னை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சுநா கணையானே.

நேரிசை வெண்பா

மனமே! மாறன் திருவடியில் தங்கு

பிறந்துலகங் காத்தளிக்கும் பேரருட்கண் ணா!உன்
சிறந்தகுணத் தாலுருகுஞ் சீலத்-திறந்தவிர்ந்து
சேர்ந்தனுப விக்குநிலை செய் என்று சீர்மாறன்
வாய்ந்தபதத் தேமனமே! வைகு  (50)

3450. நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று, நாடொறும்
ஏக சிந்தைய னாய்க்குரு கூர்ச்சட கோபன் மாறன்,
ஆக நூற்ற அந்தாதி யாயிரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார்,
மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே.

ஆறாம் பத்து

முதல் திருமொழி

1. வைகல் பூங்கழி

ஆழ்வார் தம் நிலையைக் கூறுமாறு, திருவண்வண்டூர் என்னும் திவ்யதேசத்து எம்பெருமானிடம் குருகு, நாரை, கொக்கு, குயில், கிளி முதலியவற்றைத் தூது விடுதல் ஆழ்வாராகிய தலைவி எம்பிரானாகிய தலைவனிடம் தூது விடுதல்போல் இப்பகுதி அமைந்துள்ளது.

தலைவி பறவைகளைத் தூதுவிடுதல்

கலி நிலைத்துறை

குருகுகளே! என் காதலை எம்பிரானிடம் சொல்லுங்கள்

3451. வைகல்பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்,
செய்கொள் செந்நெ லுயர்திருவண்வண் டூருறையும்,
கைகொள் சக்கரத் தென்கனி வாய்பெரு மானைக்கண்டு,
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.

கருநாராய்! என்னைப்பற்றி எம்பிரானிடம் கூறுக

3452. காதல் மென்பெடை யோடுடன் மேயும் கருநாராய்!
வேத வேள்வி யொலிமுழங்கும் தண் டிருவண்வண்டூர்,
நாதன் ஞாலமெல் லாமுண்ட நம்பெரு மானைக்கண்டு,
பாதம் கைதொழுது பணியீ ரடியேன் திறமே.

புள்ளினங்காள்! என் துன்பத்தைச் சொல்லுங்கள்

3453. திறங்க ளாகியெங் கும்செய்களூடுழல் புள்ளினங்காள்,
சிறந்த செல்வம் மல்கு திருவண்வண் டூருறையும்,
கறங்கு சக்கரக் கைக்கனி வாய்ப்பெரு மானைக்கண்டு,
இறங்கி நீர்தொழுது பணியீரடியே னிடரே.

அன்னங்காள்! உருகுகின்றாள் ஒருத்தி என்று கூறுங்கள்

3454. இடரில் போகம் மூழ்கி யிணைந்தாடும் மடவன்னங்காள்,
விடலில் வேத வொலிமுழங்கும்தண் திருவண்வண்டூர்,
கடலில் மேனிப் பிரான்கண் ணணைநெடு மாலைக்கண்டு,
உடலம் நைந்தொருத் தியுரு கும் என் றுணர்த்துமினே.

அன்னங்காள்! அடியேனுக்கும் பரிந்துரையுங்கள்

3455. உணர்த்த லூட லுணர்ந்துடன் மேயும் மடவன்னங்காள்,
திணர்த்த வண்டல்கள் மேல்சங்கு சேரும் திருவண்வண்டூர்,
புணர்த்த பூந்தண் டுழாய்முடி நம்பெரு மானைக்கண்டு,
புணர்த்த கையினரா யடியேனுக்கும் போற்றுமினே.

குயில்காள்! என் மையில் தீர ஒரு வார்த்தை சொல்லுங்கள்

3456. போற்றியான் இரந் தேன்புன்னை மேலுறை பூங்குயில் காள்,
சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண் டூருறையும்,
ஆற்ற லாழியங் கையம ரர்பெரு மானைக்கண்டு,
மாற்றங் கொண்டரு ளீர்மையல் தீர்வ தொருவண்ணமே.

கிளியே! எம்பெருமானிடம் எனக்காக ஒன்று உரை

3457. ஒருவண்ணம்சென்று புக்கெனக்கு ஒன்றுரை யொண்கிளியே,
செருவொண் பூம்பொழில் சூழ்செக்கர் வேலை திருவண்வண்டூர்,
கருவண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்,
செருவொண் சக்கரம் சங்கடை யாளம் திருந்தக் கண்டே.

நாகணவாய்ப் பறவையே! பிரானிடம் என்பொருட்டு உரை

3458. திருந்தக் கண்டெனக் கொன்றுரை யாயொண் சிறுபூவாய்
செருந்தி ஞாழல் மகிழ்புன்னை சூழ்தண் டிருவண்வண்டூர்,
பெருந்தண் தாமரைக் கண்பெரு நீண்முடி நாள்தடந்தோள்,
கருந்திண் மாமுகில் போல்திரு மேனி யடிகளையே.

அன்னங்காள்! கண்ணனிடம் என்னைப்பற்றிக் கூறுமின்

3459. அடிகள் கைதொழு தலர்மேல் அசையும் அன்னங்காள்,
விடிவை சங்கொலிக் கும்திரு வண்வண் டூருறையும்,
கடிய மாயன்தன் னைக்கண்ணனை நெடு மாலைக்கண்டு,
கொடிய வல்வினை யேன்திறம் கூறுமின் வேறுகொண்டே.

வண்டினங்காள்! யான் இருத்தலைப் பிரானிடம் கூறுமின்

3460. வேறு கொண்டும்மை யானிரந் தேன்வெறி வண்டினங்காள்,
தேறு நீர்ப்பம் பைவட பாலைத் திருவண்வண்டூர்,
மாறில் போரரக் கன்மதிள் நீறெழச் செற்றுகந்த,
ஏறுசேவக னார்க்கென்னை யுமுளள் என்மின்களே.

இவற்றைப் பாடுக: மன்மதம்போல் விளங்கலாம்

3461. மின்கொள் சேர்புரி நூல்குற ளாயகல் ஞாலம்கொண்ட,
வன்கள் வனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொன்ன,
பண்கொள் ஆயிரத் துள்ளிவை பத்தும் திருவண்வண்டூர்க்கு,
இன்கொள் பாடல் வல்லார் மதனர்மின் னி டையவர்க்கே.

நேரிசை வெண்பா

வைகல்திரு வண்வண்டூர் வைகும் இராமனுக்கு என்
செய்கைதனைப் புள்ளினங்காள்! செப்பும் எனக் கைகழிந்த
காதலுடன் தூதுவிடுங் காரிமா றன்கழலே
மேதினியீர்! நீர்வணங்கு மின்  (51)

இரண்டாந் திருமொழி

2. மின்னிடை மடவார்

எம்பெருமானின் பிரிவாற்றமாட்டாமல் ஆழ்வார் புள்ளினங்களைத் தூது விட்டார். ஆழ்வாரின் துன்பத்தை அறிந்த எம்பெருமான், முதலை வாய்ப்பட்ட யானைக்கு அருள வந்தாற்போல் ஓடிவந்து காட்சி தர எண்ணினான். அப்போது ஆழ்வார், பெருமானே! இங்கு உமக்குச் செய்யவேண்டுவது ஒன்றுமில்லை; காரியம் உள்ள இடத்திற்குச் செல்லலாம் என்று ஊடலில் பேசுவதாக அமைந்துள்ளது. தம்மைக் கோபியர் நிலையில் இருத்திப் பாடுகிறார் ஆழ்வார்.

தலைவன் தாமதித்து வரக் கண்ட தலைவி ஊடி உரைத்தல்

ஆசிரியத்துறை

நம்பீ! என் பந்தும் கழற்சிக்காயும் தந்துவிட்டுப் போ

3462. மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்புநா னதஞ்சுவன்,
மன்னுடை இலங்கை யரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் னினியது கொண்டு செய்வதென்,
என்னுடைய பந்தும் சுழலும் தந்து போகு நம்பீ!

கண்ணா! பிற பெண்களிடம் சென்று குழல் ஊது

3463. போகுநம் பீ! உன்தாமரை புரைகண் ணிணையும் செவ்வாய் முறுவலும்,
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோ மேயாம்?,
தோகைமா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவியோசை வைத்தெழ,
ஆகள் போகவிட்டுப் குழலூது போயிருந்தே.

பெருமானே! உன் பொய்யுரையைப் பிறரிடம் சொல்

3464. போயி ருந்தும்நின் புள்ளுவம் அறியாத வர்க்குரை நம்பி! நின்செய்ய
வாயிருங் கனியுங் கண்களும் விபரீத மிந்நாள்,
வேயி ருந்தடந் தோளினா ரித்திரு வருள்பெறு வார்யவர் கொல்
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?

கண்ணா! கடுஞ்சொல் சொல்லாதே!

3465. ஆலி னீளிலை யேழுலக முண்டன்று நீகிடந் தாய்,உன் மாயங்கள்
மேலை வானவரு மறியா ரினியெம் பரமே?
வேலி னேர்த்தடங் கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்கவல் லாய்! எம்மைநீ கழறேலே.

கண்ணா! எம்பூவையோடும் கிளியோடும் விளையாடாதே

3466. கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கறியும், திண்சக்கர
நீழறு தொல்படை யாய்.உனக் கொன்றுணர்த் துவன் நான்,
மழறு தேன்மொழி யார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க,எம்
குழறு பூவையோடும் கிளியோடும் குழகேலே.

நம்பீ! அழகிகள் பலர் உளர்: எனவே இங்கு வராதே

3467. குழகி யெங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மமொன் றில்லை,
பழகி யாமிருப் போம்பர மேயித் திருவருள்கள்?,
அழகி யாரிவ் வுலகுமூன் றுக்கும் தேவிதமை தகுவார் பலருளர்,
கழக மேறேல் நம்பீ! உனக்கும் இளைதே கன்மமே.

நெடியாய்! எங்கள் பொம்மைகளைப் பறிக்காதே

3468. கன்மமன் றெங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞால முண்டிட்ட,
நின்மலா நெடியாய். உனக்கேலும் பிழைபிழையே,
வன்மமே சொல்லி யெம்மைநீ விளையாடுதி அதுகேட்கில்
என்னைமார், தன்ம பாவமென் னாரொரு நான்று தடிபிணக்கே.

மூர்த்தியே! என்னை நீ வளைத்தால் பிறர் ஏசுவர்

3469. பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதி யாதது,ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தியினாய்,
இணக்கி யெம்மையெந் தோழிமார் விளையாடப் போதுமின் என போந்தோமை,
உணக்கி நீவளைத் தாலென்சொல் லாருக வாதவரே?

கண்ணா! எங்களைப் பார்த்துப் புன்னகை பூக்கவில்லையே!

3470. உகவையால் நெஞ்சம் உள்ளுருகி உன்தாமரைத் தடங்கண் விழிகளின்,
அகவலைப் படுப்பான் அழித்தாயுன் திருவடியால்,
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறுங் கண்டு,நின்
முகவொளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.

கண்ணா! உன்னால் எங்களுக்கு எப்பொழுதும் துன்பம்தான்

3471. நின்றிலங்கு முடியினாய். இருபத்தோர் கால்அரசு களை கட்ட,
வென்றி நீண்மழுவா வியன்ஞாலம் முன்படைத்தாய்,
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கருமா ணிக்கச்சுடர்,
நின்றன்னால் நலிவே படுவோ மென்றும் ஆய்ச்சி யோமே.

இவற்றைப் படித்தால் வறுமையே வராது

3472. ஆய்ச்சி யாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள்,
சீற்ற முண்டழு கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்,
ஏத்திய தமிழ்மாலை யாயிரத்துள் இவையு மோர்பத் திசையோடும்,
நாத்தன்னால் நவில வுரைப்பார்க் கில்லை நல்குரவே.

நேரிசை வெண்பா

மனமே! நாள்தோறும் மாறன் அடிகளைத் தொழு

மின்னிடையார் சேர்கண்ணன் மெத்தெனவந் தானென்று
தன்னிலைபோய்ப் பெண்ணிலையாய்த் தான்றள்ளி-உன்னுடனே
கூடேன் என் றூடுங் குருகையர்கோன் தாள்தொழவே
நாடோறும் நெஞ்சமே! நல்கு (52)

மூன்றாந் திருமொழி

3. நல்குரவும்

கூடேன் என்று இருந்த தம்மையும் எம்பிரான் வலிந்து கூட்டிக்கொண்டான் என்பதை அறிந்த ஆழ்வார் வியக்கிறார். இவருக்கு எம்பெருமான் தனக்கே உரிய அரியன செய்யும் செயல் திறனை அறிவித்துக்கொண்டு, திருவிண்ணகரில் இருக்கும் இருப்பைக் காட்டினான். இந்நிலையைப் பேசி இன்பம் அடைகிறார் ஆழ்வார். (திருவிண்ணகர்-ஒப்பிலியப்பன்கோயில்)

தம்மைக் கவர்ந்தவன் எம்பெருமான் எனல்

கலி விருத்தம்

எல்லாமானவனை ஒப்பிலியப்பன் கோயிலில் கண்டேன்

3473. நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்,
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்,
பல்வகையும் பரந்தபெரு மானென்னை யாள்வானை,
செல்வம்மல்கு குடித்திரு விண்ணகர்க் கண்டேனே.

கண்டு கொள்வதற்கு அரிய பெருமான் ஒப்பிலியப்பன்

3474. கண்டவின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்ற முமாய்,
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்,
கண்டுகோ டற்கரிய பெருமானென்னை யாள்வானூர்,
தெண்டிரைப் புனல்சூழ் திருவிண்ணகர் நன்னகரே.

ஒப்பிலியப்பன் புகழ் பேசுவதே புண்ணியம்

3475. நகரமும் நாடுகளுமு ஞானமும் மூடமும் ஆய்,
நிகர் இல் சூழ், சுடர் ஆய், இருள் ஆய், நிலன் ஆய், விசும்பு ஆய்,
சிகர மாடங்கள் சூழ் திருவண்ணகர் சேர்ந்த பிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால், இல்லை- யாவர்க்கும் புண்ணியமே

கண்ணனின் அருளைக் கண்டுகொள்ளுங்கள்

3476. புண்ணியம் பாவம், புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்,
எண்ண ஆய் மறப்பு ஆய் உண்மை ஆய் இன்மை ஆய், அல்லன் ஆய்,
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்.
கண்ணன் இன் அருளே கண்டு கொள்மின்கள் – கைதவமே?

திருவிண்ணகரானே மூவுலகுக்கும் ஆதி

3477. கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்,
மெய்பொய் யிளமை முதுமைபுதுமை பழமையுமாய்,
செய்யதிண் மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
பெய்தகாவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.

தேவர் தொழும் பிரான் என் மனத்தில் உறைகின்றான்

3478. மூவுலகங் களுமாய் அல்லனாயுகப் பாய்முனிவாய்,
பூவில்வாழ் மகளாய்த் தவ்வையாய்ப்பு ழாய்பழியாய்,
தேவர்மே வித்தெழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
பாவியேன் மனத்தே யுறைகின்ற பரஞ்சுடரே.

திருவிண்ணகரன் பாதமல்லால் சரணில்லை

3479. பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குபதித்த வுடம்பாய்,
கரந்தும்தோன் றியும்நின்றும் கைதவங்கள் செய்யும்,விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
வரங்கொள்பாத மல்லாலில்லை யாவர்க்கும் வன்சரணே.

கண்ணனே என்னையாளுடையப்பன்

3480. வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்குவெங் கூற்றமுமாய்,
தன்சரண் நிழற்கீ ழுலகம்வைத்தும் வையாதும்,
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
என்சரணென் கண்ணன் என்னையாளுடை என்னப்பனே..

ஒப்பிலியப்பன் எனக்கு அடைக்கலம் அளித்தான்

3481. என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய்,
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய்,
மின்னப்பொன் மதிள்சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,
தன்னொப்பா ரில்லப்பன் தந்தனன்தன தாள்நிழலே.

திருவிண்ணகரான் திருவடிகளே எனக்குப் புகலிடம்

3482. நிழல்வெயில் சிறுமைபெருமை குறுமை நெடுமையுமாய்,
சுழல்வனநிற் பனமற்று மாயவை அல்லனுமாய்,
மழலைவாழ் வண்டுவாழ் திருவிண்ணகர் மன்னுபிரான்,
கழல்களன்றி மற்றோர் களைகணிலம் காண்மின்களே.

இவற்றைப் படித்தோர் தேவர்க்குப் பெரியோராவர்

3483. காண்மின்க ளுலகீர் என்று கண்முகப் பேநிமிர்ந்த,
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன,
ஆணையா யிரத்துத்திரு விண்ணகர்ப்பத் தும்வல்லர்,
கோணையின்றி விண்ணோர்க் கொன்றுமாவர்குரவர்களே.

நேரிசை வெண்பா

மாறன் கவிகளால் தேவர் தலைமை கிடைக்கும்

நல்லவலத் தால்நம்மைச் சேர்த்தோன்முன் ணண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியனென்று-எல்லையறத்
தானிருந்து வாழ்த்துந் தமிழ்மாறன் சொல்வல்லார்
வானவர்க்கு வாய்த்தகுர வர்  (53)

நான்காந் திருமொழி

4. குரவையாய்ச்சியர்

எம்பெருமானின் அற்புதச் செயல்களில் ஈடுபட்ட ஆழ்வார், அவற்றை அனுபவிக்கமுடியவில்லையே என்று பிறந்தவாறும் என்ற திருவாய்மொழியில் மனம் தளர்ந்து பேசினார் எம்பெருமானின் செயல்களை அனுபவித்து அதனால் தமக்குண்டான பெருமிதத்தை ஈண்டு வெளியிடுகிறார்.

கிருஷ்ணனின் லீலைகளைப் பேசக் கிடைத்தமைக்கு மகிழ்தல் 

அறுசீர் ஆசிரிய விருத்தம்

கண்ணனின் லீலைகளைப் பேசி நிறைவு பெற்றேன்

3484. குரவை யாய்ச்சிய ரோடு கோத்ததும் குன்றமொன் றேந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் உட்பட மற்றும்பல,
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளை யேயலற்றி,
இரவும் நன்பக லும்த விர்கிலம் என்ன குறைவெனக்கே?

கிருஷ்ணலீலை பேசும் எனக்கு எதுவும் நிகர் இல்லை

3485. கேயத் தீங்குழ லூதிற்றும் நிரைமேய்த்த தும்,கெண்டை யொண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும்பல,
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம்குழைந்து,
நேயத் தோடு கழிந்த போதெனக் கெவ்வுல கம்நிகரே?

கண்ணனின் லீலைகளை நினக்கும் எனக்குத் துன்பமேயில்லை

3486. நிகரில்மல்ல ரைச்செற்ற தும்நிரை மேய்த்ததும் நீணெடுங்கைச்,
சிகரமாகளி றட்டதும் இவை போல்வனவும் பிறவும்,
புகர்கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி, என்றும்
நுகர் வைகல் வைகப்பெற் றேன் எனக்கு என்இனி நோவதுவே.

கண்ணன் புகழ் பேசும் எனக்கு எதுவும் வேண்டாம்

3487. நோவ ஆய்ச்சி யுரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்,
சாவப் பாலுண் டதும்ஊர் சகடம் இறச்சா டியதும்,
தேவக் கோல பிரான்தன் செய்கை நினைந்து மனம்குழைந்து,
மேவக் காலங்கள் கூடி னேன்எ னக்கு என்இனி வேண்டுவதே?

கண்ணனைப் புகழும் என் வலிமைதான் என்னே!

3488. வேண்டி தேவ ரிரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்,
பூண்டன் றன்னை புலம்பப் போயங்கோர் ஆய்க்குலம் புக்கதும்,
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்சவஞ் சம்செய்ததும்,
ஈண்டு நான்அலற் றப்பெற் றென்எ னக்கு என்ன இகலுளதே?

கண்ணன் மாயங்களைத் துதித்தேன்: துக்கமே இல்லை

3489. இகல்கொள் புள்ளை பிளந்த தும்இ மில் ஏறுகள் செற்றதுவும்,
உயர்கொள் சோலைக் குருந்தொ சித்ததும் உட்பட மற்றும்பல,
அகல்கொள் வையம் அளந்த மாயனென் அப்பன்றன் மாயங்களே,
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்ப ரிப்பே?

கண்ணனின் மாயங்களை நினைக்கும் எனக்கு நிகர் யார்?

3490. மனப்பரி போட ழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து,
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்றன சீற்றத்தினை முடிக்கும்,
புனத்து ழாய்முடி மாலை மார்பனென் அப்பன்தன் மாயங்களே,
நினைக்கும் நெஞ்சுடை யேனெ னக்கினி யார்நிகர் நீணிலத்தே?

கண்ணனின் லீலைகளைப் பேசும் எனக்குக் கலக்கமேயில்லை!

3491. நீணிலத் தொடுவான் வியப்ப நிறைபெரும் போர்கள் செய்து,
வாண னாயிரம் தோள்து ணித்ததும் உட்பட மற்றும்பல,
மாணி யாய்நிலம் கொண்ட மாயனென் அப்பன்றன் மாயங்களே,
காணும் நெஞ்சுடை யேனெனக் கினியென கலக்க முண்டே?

கண்ணனைப் புகழும் எனக்குப் பகையேயில்லை

3492. கலக்க வேழ்கட லேழ்மலை யுலகே ழும்கழி யக்கடாய்,
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல,
வலக்கை யாழி யிடக்கை சங்கம் இவையுடை மால்வண்ணனை,
மலக்குநா வுடையேற்கு மாறுள தோவிம் மண்ணின் மிசையே?

கண்ணனே எனக்கு நாயகர்

3493. மண்மிசைப் பெரும்பாரம் நீங்கவோர்பாரத மாபெ ரும்போர்,
பண்ணி, மாயங்கள் செய்து, சேனையைப் பாழ்பட நூற்றிட்டுப்போய்,
விண்மி சைத்தன தாம மேபுக மேவிய சோதிதன்தாள்,
நண்ணி நான்வணங் கப்பெற் றென்எனக் கார்பிறர் நாயகரே?

இவற்றைப் பாடுக: பக்தர் ஆகலாம்

3494. நாய கன்முழு வேழுல குக்குமாய் முழுவே ழுலகும்,தன்
வாய கம்புக வைத்துமிழ்ந் தவையாய் அவையல் லனுமாம்,
கேசவன் அடியி ணைமிசைக்குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தூய வாயிரத் திப்பத் தால் பத்தராவர் துவளின்றியே.

நேரிசை வெண்பா

மனமே! மாறனின் பாடல்களில் மயக்கு

குரவைமுத லாங்கண்ணன் கோலச் செயல்கள்
இரவுபக லென்னாம் லென்றும்,  பரவுமனம்
பெற்றேன்! என் றேகளித்துப் பேசும் பராங்குசன்றன்
சொற்றேனில் நெஞ்சமே! துவள்   (54)

ஐந்தாந் திருமொழி

5. துவளில்

தொலைவில்லிமங்கலம் என்பது ஒரு திவ்ய தேசம். இதனை இரட்டைத் திருப்பதி என்று கூறுவார்கள். இது ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த நவ (ஒன்பது) திருப்பதிகளுள் ஒன்று. இப்பெருமான்மீது ஆழ்வாராகி நாயகி கொண்டிருந்த காதன்மையைத் தோழி தாயர்க்கு உரைத்தல்போல் ஈண்டுப் பாடல்கள் அமைந்துள்ளன.

தோழி தாயார்க்கு கூறுதல்

ஏழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அன்னைமீர்! தலைவியை அவள் போக்கில் விட்டுவிடுங்கள்

3495. துவளில் மாமணி மாட மோங்கு தொலைவில் லிமங்க லம்தொழும்
இவளை, நீரினி யன்னை மீர்! உமக் காசை யில்லை விடுமினோ,
தவள வொண்சங்கு சக்க ரமென்றும் தாம ரைத்தடங் கணென்றும்,
குவளை யொண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.

தேவபிரான் பெயரைச் சொல்லி இவள் கரைக்கின்றாள்

3496. குமிறு மோசை விழவொ லித்தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
அமுத மென்மொழி யாளை நீருமக் காசை யின்றி அகற்றினீர்,
திமிர்க்கொண் டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபி ரானென்றே,
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொ சிந்து கரையுமே.

கண்ணன் செயல் கூறி இவள் கண்ணீர் சிந்துகிறாள்

3497. கரைகொள் பைம்பொழில் தண்ப ணைத்தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
உரைகொ ளின்மொழி யாளை நீருமக் காசை யின்றி அகற்றினீர்,
திரைகொள் பௌவத்து சேர்ந்த தும்திசை ஞாலம் தாவி யளந்ததும்,
நிரைகள் மேய்த்தது மேபி தற்றி நெடுங்கண் ணீர்மல்க நிற்குமே.

கண்ணன் பெயர் கூறி இவள் மகிழ்கிறாள்

3498. நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலங் கண்டபின்,
அற்க மொன்றும் அறிவு றாள்மலிந் தாள்கண் டீரிவள் அன்னைமீர்,
கற்கும் கல்வியெல் லாம்க ருங்கடல் வண்ணன் கண்ணபி ரானென்றே,
ஒற்க மொன்றுமி லள்உகந்துகந்து உள்மகிழ்ந்து குழையுமே.

தொலைவில்லிமங்கலம் நோக்கி இவள் தொழுகிறாள்

3499. குழையும் வாள்முகத் தேழை யைத்தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
இழைகொள் சோதிச்செந் தாம ரைக்கட் பிரானி ருந்தமை காட்டினீர்,
மழைபெய் தாலொக்கும் கண்ண நீரினொடு அன்று தொட்டும்மை யாந்து,இவள்
நுழையும் சிந்தையள் அன்னை மீர்.தொழும் அத்தி சையுற்று நோக்கியே.

இவள் மணிவண்ணன் பெயர்களையே சொல்கிறாள்

3500. நோக்கும் பக்கமெல் லாம்க ரும்பொடு செந்நெ லோங்குசெந் தாமரை,
வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை வந்தொ லைவில்லி மங்கலம்,
நோக்கு மேல்அத் திசையல் லால்மறு நோக்கி லள்வைகல் நாள்டொறும்,
வாய்க்கொள் வாசக மும்ம ணிவண்ணன் நாம மேயிவள் அன்னைமீர்.

தொலைவில்லிமங்கலம் பற்றியே கேட்க விரும்புகிறாள் இவள்

3501. அன்னைமீர்!அணிமாமயில் சிறுமானி வள்நம்மைக் கைவலிந்து,
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலைவில்லி மங்கலம் என்றல்லால்,
முன்னம் நோற்ற விதிகொ லோமுகில் வண்ணன் மாயங்கொ லோ,அவன்
சின்னமும்திருநாம முமிவள் வாயனகள் திருந்தவே.

அரவிந்தலோசனா என்று கூறி இவள் இரங்குகிறாள்

3502. திருந்து வேதமும் வேள்வி யும்திரு மாம களிரும் தாம்,மலிந்,
திருந்து வாழ்பொரு நல்வ டகரை வண்தொ லைவில்லி மங்கலம்,
கருந்த டங்கண்ணி கைதொ ழுதஅந்நாள்தொ டங்கியிந் நாள்தொறும்,
இருந்தி ருந்துதரவிந்த லோசன! என்றேன் றேநைந்தி ரங்குமே.

மணிவண்ணா என்று இவன் கூவுகிறாள்

3503. இரங்கிநாள்தொறும் வாய்வெ ரீஇ யிவள் கண்ணநீர்கள் அலமர,
மரங்க ளுமிரங் குவகை மணிவண்ணவோ. என்று கூவுமால்,
துரங்கம் வாய்பிளந் தானு றைதொலை வில்லி மங்கல மென்று ,தன்
கரங்கள் கூப்பித் தொழுமவ் வூர்த்திரு நாமங் கற்றதற் பின்னையே.

தொலைவில்லிமங்கலத்தைத் தலையால் வணங்குகிறாள் இவள்

3504. பின்னைகொல் நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்,
என்ன மாயங்கொ லோ?இ வள்நெடு மாலென் றேநின்று கூவுமால்,
முன்னி வந்தவன் நின்றி ருந்துறை யும்தொ லைவில்லி மங்கலம்
சென்னி யால்வணங் கும்அவ்வூர்த்திரு நாமம் கேட்பது சிந்தையே.

இவற்றைப் படித்தோர் திருமாலின் அடிமையாவர்

3505. சிந்தை யாலும்சொல் லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே,
தந்தை தாயென் றடைந்த வண்குரு கூர வர்சட கோபன்சொல்,
முந்தை யாயிரத் துள்ளி வைதொலை வில்லி மங்கலத் தைச்சொன்ன,
செந்தமிழ்பத்தும் வல்லாரடிமை செய் வார்திரு மாலுக்கே.

நேரிசை வெண்பா

திருமாலின் சீலமெல்லாம் சொன்னவன் மாறன்

துவளறுசீர் மால்திறத்துத் தொன்னலத்தால், நாளும்
துவளறுதன் சீலமெல்லாஞ் சொன்னான்-துவளறவே
முன்னம் அனுபவத்தில் மூழ்கிநின்ற மாறனதில்
மன்னுமுவப் பால்வந்த மால்   (55)

ஆறாந் திருமொழி

6. மாலுக்கு

பராங்குசநாயகிக்குப் பகவானிடம் அன்பு மிகுதியாகிறது. இவர் நினைத்தவாறு பகவானோடு சேர்க்கை கிடைக்கவில்லை அவன் அவதாரங்களையும் அவற்றில் செய்த செயல்களையும் அவன் குணங்களையும் நினைக்கிறார். உடல் மெலிந்து. ஆவி உருகுகின்றது. பராங்குசநாயகியின் மெலிவை நினைந்து தாய் இரங்குதல்போல் இப்பகுதி அமைந்துள்ளது.

தலைவியைக் குறித்துத் தாய் இரங்கல்

கலி விருத்தம்

உடல் மெலிவால் தலைவியின் கைவளை கழன்றது

3506. மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு,
நீலக் கருநிற மேக நியாயற்கு,
கோலச்செந் தாமரைக் கண்ணற்கு,என் கொங்கலர்
ஏலக் குழலி யிழந்தது சங்கே.

மெலிவால் தலைவியின் பொன்னிறம் மாறியது

3507. சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு,
செங்கனி வாய்ச்செய்ய தாமரை கண்ணற்கு,
கொங்கலர் தண்ணந் துழாய்முடி யானுக்கு,என்
மங்கை யிழந்தது மாமை நிறமே.

என் மகள் பெருமையை இழந்தாள்

3508. நிறங்கரி யானுக்கு நீடுல குண்ட,
திறம்கிளர் வாய்ச்சிறு கள்ள னவற்கு,
கறங்கிய சக்கரக் கையவ னுக்கு,என்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.

மெலிவால் தலைவி தன் பண்பை இழந்தாள்

3509. பீடுடை நான்முக னைப்படைத்தானுக்கு,
மாடுடை வையம் அளந்த மணாளற்கு,
நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு,என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே.

பிரானது நினைவால் என் மகள் நிறையிழந்தாள்

3510. பண்புடை வேதம் பயந்த பரனுக்கு,
மண்புரை வையம் இடந்த வராகற்கு,
தெண்புனல் பள்ளியெந் தேவப் பிரானுக்கு,என்
கண்புனை கோதை இழந்தது கற்பே.

பிரானால் என் மகள் உடல் மெலிந்தாள்

3511. கற்பகக் காவன நற்பல தோளற்கு,
பொற்சுடர்க் குன்றன்ன பூந்தண் முடியற்கு,
நற்பல தாமரை நாண்மலர்க் கையற்கு,என்
விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே.

கண்ணபிரானால் என் மகள் தன் ஒளியை இழந்தாள்

3512. மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு,
பையர வினணைப் பள்ளியி னானுக்கு,
கையொடு கால்செய்ய கண்ண பிரானுக்கு,என்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.

கண்ணன் பொருட்டால் என் மகள் தன் மாண்பை இழந்தாள்

3513. சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு,
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு,
பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்கு,என்
வாசக் குழலி இழந்தது மாண்பே.

நம்பியின் நினைவால் தலைவி தன் அழகையிழந்தாள்

3514. மாண்பமை கோலத்தெம் மாயக் குறளற்கு,
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு,
காண்பெருந் தோற்றத்தெங் காகுத்த நம்பிக்கு,என்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.

கண்ணனால் என் மகள் கவலை இழந்தாள்

3515. பொற்பமை நீண்முடிப் பூந்தண் டுழாயற்கு,
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு,
நிற்பன பல்லுரு வாய்நிற்கு மாயற்கு,என்
கற்புடை யாட்டி யிழந்தது கட்டே.

இவற்றைப் படித்தோர் தேவ போகம் அடைவர்

3516. கட்டெழில் சோலைநல் வேங்கட வாணனை,
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்,
கட்டெழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,
கட்டெழில் வானவர் போகமுண் பாரே.

நேரிசை வெண்பா

மனமே! மாறன் பெருமையையே நினை

மாலுடனே தான்கலந்து வாழப் பெறாமையால்
சாலநைந்து தன்னுடைமை தானடையக் கோலியே
தானிகழ வேண்டாமற் றன்னைவிடல் சொல்மாறன்
ஊனமறு சீர்நெஞ்சே! உண்  (56)

ஏழாந் திருமொழி

7. உண்ணுஞ்சோறு

இதுவும் தாய் சொல்லும் பகுதியே. பராங்குச நாயகியாகிய தம் மகளோடு தாய் படுத்திருக்கிறாள்; உறங்கிவிடுகிறாள்; சிறிது நேரத்தில் கண் திறந்து பார்க்கும்போது படுக்கையில் பெண் காணவில்லை. தேடுகிறாள்; கிடைக்கவில்லை. எவரேனும் கவர்ந்து சென்றனரோ என்று சிந்திக்கிறாள்; பிறகு இவளுக்குத் திருக்கோளூர் எம்பெருமான்மீது ஆசை மிகுதி! அங்குதான் சென்றிருப்பாள் என்று அறுதியிட்டுக் கூறுகிறாள்.

திருக்கோளூர் மதுரகவிகள் அவதரித்த இடமாகும்

தலைவனது ஊர் நோக்கிச் சென்ற மகளைப் பற்றித் தாய் இரங்குதல்

கலி விருத்தம்

என் மகள் திருக்கோளூர்தான் சென்றிருப்பாள்

3517. உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்
கண்ணன், எம்பெருமான் னென்றென் றேகண்கள் நீர்மல்கி,
மண்ணினுள் அவன்சீர் வளம்மிக் கவனூர் வினவி,
திண்ண மென்னிள மான்புகு மூர்திருக் கோளூரே.

தலைவி திருக்கோளூர்க்குப் போயிருப்பாளோ!

3518. ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்ற, கற்பு வான் இடறி,
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக்கோளூர்க்கே
போரும்கொல், உரையீர், கொடியேன்கொடி-பூவைகளே?

திருக்கோளூரில் என் மகள் என்ன செய்வாள்?

3519. பூவைபைங்கிளிகள் பந்துதூதைபூம்பட்டில்கள்
யாவையும்திருமால் திருநாமங்களே கூவியெழும்  என்
பாவைபோயினித் தண்பழனத்திருக்கோளூர்க்கே
கோவைவாய்துடிப்ப மழைக்கண்ணொடென் செய்யுங்கொலோ?

திருக்கோளூர்க்கா என் மகள் செல்ல விரும்பினாள்?

3520. கொல்லை யென்பர்கொ லோகுணம் மிக்கனள் என்பர்கொலோ,
சில்லை வாய்ப்பெண் டுகளயற் சேரியுள் ளாருமெல்லே,
செல்வம் மல்கி யவன் கிடந்த திருக்கோ ளூர்க்கே,
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.

திருக்கோளூரை என் மகள் எப்படி ரசிக்கின்றாளோ?

3521. மேவி நைந்து நைந்துவிளை யாடலுறா ளென்சிறுத்
தேவிபோய், இனித்தன் திருமால் திருக்கோ ளூரில்,
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோ யிலுங்கண்டு,
ஆவியுள் குளிர எங்ஙனே யுகக்குங்கொல் இன்றே?

என் மகள் திருக்கோளூரானைக் கண்டு நைவாள்

3522. இன்றெனக் குதவா தகன்ற இளமான் இனிப்போய்,
தென்திசைத் திலத மனைய திருக்கோ ளூர்க்கே சென்று,
தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு,
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.

திருக்கோளூர்க்கு என் மகள் எப்படி நடந்திருப்பாள்?

3523. மல்குநீர் கண்ணோடு மையலுற்ற மனத்தனளாய்,
அல்லுநன் பகலும் நெடுமாலென்றழைத் தினிப்போய்,
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோ ளூர்க்கே,
ஒல்கி யொல்கி நடந்தெங்ஙனே புகுங்கொ லோசிந்தே?

என் மகள் கண்ணீர் துளும்பச் செல்வாளோ?

3524. ஒசிந்த நுண்ணிடை மேல்கையை வைத்து நொந்துநொந்து,
கசிந்த நெஞ்சின ளாய்க்கண்ண நீர்த்துளும்பச் செல்லுங்கொல்,
ஒசிந்த வொண்மல ராள்கொழுநன் திருக்கோ ளூர்க்கே,
கசிந்த நெஞ்சின ளாயெம்மை நீத்தஎ ம் காரிகையே?

என் மகள் எம்மை நினையாமல் சென்றுவிட்டாளே!

3525. காரியம் நல்லன களவை காணிலென் கண்ணனுக்கென்று,
ஈரியா யிருப்பாளி தெல்லாம் கிடக்க இனிப்போய்,
சேரி பல்பழி தூயிரைப்பத் திருக்கோ ளூர்க்கே,
நேரிழை நடந்தா ளெம்மை யொன்றும் நினைத்திலளே.

பழி வருதலை நினையாமல் என் மகள் போய்விட்டாளே!

3526. நினைக்கிலேன் தெய்வங்காள் நெடுங்கண் இளமான் இனிப்போய்,
அனைத்து லகுமு டைய அரவிந்த லோசனனை,
தினைத்தனை யும்விடா ளவன்சேர் திருக்கோ ளூர்க்கே,
மனைக்கு வான்பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.

இவற்றைப் படித்தோர் பொன்னுலகையாள்வர்

3527. வைத்த மாநிதி யாம்மது சூதனை யேயலற்றி,
கொத்த லர்பொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்சொன்ன,
பத்து நூறு ளிப்பத் தவன்சேர் திருக்கோளூர்க்கே,
சித்தம் வைத்து ரைப்பார் திகழ்பொன் னுலகாள்வாரே.

நேரிசை வெண்பா

மாறன் திருவடி நமக்குப் பொன்னாகும்

உண்ணுஞ்சோ றாதி யொருமூன்றும் எம்பெருமான்
கண்ணன் என்றே நீர்மல்கிக் கண்ணிணைகள்-மண்ணுலகில்
மன்னுதிருக் கோளூரில் மாயன்பாற் போமாறன்
பொன்னடியே நந்தமக்குப் பொன்  (57)

எட்டாந் திருமொழி

8. பொன்னுலகு

இது தூது விடும் பகுதி ஆழ்வார் புள்ளினங்களை இதில் தூது விடுகிறார். பகவானைப் பார்த்து, இச்செயல் உன் தகுதிக்கு ஏற்றதுதானா எனக் கேளுங்கள் என்று கூறிப் பராங்குசநாயகி பறவைகளைத் தூது விடுதல்போல் ஈண்டுப் பாடல்கள் அமைந்துள்ளன.

தலைவி பறவைகளைத் தலைவனிடம் தூது விடுதல்

கலி விருத்தம்

புள்ளினமே! கண்ணனிடம் எனது நிலையை உரையுங்கள்

3528. பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?,
நன்னலப் புள்ளினங்காள். வினையாட்டியேன்நானிரந்தேன்,
முன்னுல கங்களெல்லாம் படைத்தமுகில்வண்ணன்கண்ணன்,
என்னலங் கொண்டபிரான் தனக்கென் நிலைமையுரைத்தே?

கிளிகாள்! கண்ணனிடம் என் காதலைச் சொல்வீர்!

3529. மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார்முன்பென் கையிருந்து,
நெய்யம ரின்னடிசில் நிச்சல்பாலோடு மேவீரோ,
கையமர் சக்கரத்தென் கனிவாய்ப்பெரு மானைக்கண்டு
மெய்யமர் காதல்சொல்லிக் கிளிகாள்!விரைந் தோடிவந்தே?

வண்டினமே! கண்ணனது துளப மதுவை என்மேல் ஊதுங்கள்

3530. ஓடிவந் தென்குழல்மேல் ஒளிமாமல ரூதீரோ,
கூடிய வண்டினங்காள்! குருநாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறெழ செற்றபிரான்,
சூடிய தண்டுளவ முண்டதூமது வாய்கள்கொண்டே?

தும்பிகாள்! இது தக்கதுதானா என்று கேளுங்கள்

3531. தூமது வாய்கள்கொண்டு வந்தென்முல்லைகள் மேல்தும்பி காள்,
பூமது வுண்ணச்செல்லில் வினையேனைப் பொய்செய்தகன்ற,
மாமது வார்தண்டுழாய் முடிவானவர் கோனைக்கண்டு,
யாமிது வோதக்கவா றென்னவேண்டும்கண் டீர்நுங்கட்கே.

கிளிகள்! இச்செயல் தக்கதா என்று வினவுங்கள்

3532. நுங்கட்கி யானுரைக்கேன் வம்மின்யான்வளர்த் தகிளிகாள்,
வெங்கட்புள் ளூர்ந்துவந்து வினையேனைநெஞ் சம்கவர்ந்த,
செங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச்செழுங் கற்பகத்தை,
எங்குச்சென் றாகிலும்கண் டிதுவோதக்க வாறென்மினே.

பூவைகளே! நான் கற்பித்தவற்றைக் கண்ணனிடம் கூறுங்கள்

3533. என்மின்னு நூல்மார்வ னென்கரும்பெரு மானென்கண்ணன்,
தன்மன்னு நீள்கழல்மேல் தண்டுழாய்நமக் கன்றிநல்கான்,
கன்மின்க ளென்றும்மையான் கற்பியாவைத்த மாற்றம்சொல்லி,
சென்மின்கள் தீவினையேன் வளர்த்தசிறு பூவைகளே.

பதுமைகளே! என் நிறக்கேட்டைத் தீர்த்து வையுங்கள்

3534. பூவைகள் போல்நிறத்தன் புண்டரீகங்கள் போலும்கண்ணன்,
யாவையும் யாவருமாய் நின்றமாயனென் ஆழிபிரான்,
மாவைவல் வாய்பிளந்த மதுசூதற்கென் மாற்றம்சொல்லி,
பாவைகள் தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.

குருகே! வேறு கதி இல்லாதவள் யான் என்று கண்ணனிடம் கூறு

3535. பாசற வெய்தியின்னே வினையேனெனை யூழிநைவேன்?,
ஆசறு தூவிவெள்ளைக் குருகே! அருள் செய்யொருநாள்,
மாசறு நீலச்சுடர் முடிவானவர் கோனைக்கண்டு,
ஏசறும் நும்மையல்லால் மறுநோக்கிலள் பேர்த்துமற்றே.

பெருநாரைகாள்! எனது துன்பத்தைக் கூறுங்கள்

3536. பேர்த்துமற் றோர்களைகண் வினையாட்டியேன் நானொன்றிலேன்,
நீர்த்திரை மேலுலவி யிரைதேரும்பு தாவினங்காள்,
கார்த்திரள் மாமுகில்போல் கண்ணன்விண்ணவர் கோனைக்கண்டு,
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர்வைகல் வந்திருந்தே.

அன்னங்காள்! எனது நிலையைக் கண்ணனுக்கு உரையுங்கள்

3537. வந்திருந் தும்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்,
அந்தர மொன்றுமின்றி யலர்மேலசை யுமன்னங்காள்,
என்திரு மார்வற்கென்னை யின்னாவாறிவள் காண்மினென்று,
மந்திரத் தொன்றுணர்த்தி யுரையீர்வைகல் மறுமாற்றங்களே.

இவற்றைப் படித்தோர் நீராய் உருகுவர்

3538. மாற்றங்க ளாய்ந்துகொண்டு மதுசூதபி ரானடிமேல்,
நாற்றங்கொள் பூம்பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன,
தோற்றங்க ளாயிரத்துள் இவையுமொரு பத்தும்வல்லார்,
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே.

நேரிசை வெண்பா

உலகத்தோரே! மாறனையே வணங்குங்கள்

பொன்னுலகு பூமியெல்லாம் புள்ளினங்கட் கேவழங்கி
என்னிடரை மாலுக் கியம்பும் என-மன்னுதிரு
நாடு முதற்றூது நல்கிவிடு மாறனையே
நீடுலகீர்! போய்வணங்கும் நீர்  (58)

ஒன்பதாந் திருமொழி

9. நீராய் நிலனாய்

தூது விட்டனுப்பியும் எம்பெருமான் வரவில்லை வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே! என்று ஆழ்வார் கூவியழைக்கிறார்.

ஆழ்வார் எம்மானை உருக்கத்துடன் அழைத்தல்

கலி விருத்தம்

பெருமானே! ஒரு நாள் தரிசனம் தா

3539. நீராய் நிலனாய் தீயாய்க் காலாய் நெடுவானாய்,
சீரார் சுடர்க்க ளிரண்டாய்ச் சிவனாய் அயனாய்,
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய், ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.

அம்மானே! ஒரு நாள் என் எதிரில் நட

3540. மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி,
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே,
நண்ணி யுனைநான் கண்டு கந்து கூத்தாட,
நண்ணி யொருநாள் ஞாலத் தூடே நடவாயே.

உலகநாயகா! எவ்வளவு நாள் நான் தளர்வேன்?

3541. ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்,
சாலப் பலநாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே,
கோலத் திருமா மகளோ டுன்னைக் கூடாதே,
சாலப் பலநாள் அடியேன் இன்னம் தளர்வேனோ?

பெருமானே! தேவர் புடைசூழத் தரிசனம் தா

3542. தளர்ந்தும் முறிந்தும் சகட வசுரர் உடல்வேறா,
பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே,
கிளர்ந்து பிரமன் சிவனிந் திரன்விண் ணவர்சூழ,
விளங்க வொருநாள் காண வாராய் விண்மீதே.

எங்கும் நிறைந்தவனே! எனக்கு உருக்காட்டு

3543. விண்மீதிருப்பாய் மலைமேல் நிற்பாய். கடல்சேர்ப்பாய்!
மண்மீதுழல்வாய் இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்!
எண்மீதியன்ற புறவண்டத்தாய் எனதாவி,
உண்மீதாடி உருக்காட்டாதே யொளிப்பாயோ?

மாயோய்! உருகி எத்தனை நாள் திரிவேன்?

3544. பாயோர் அடிவைத் ததன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாய்,ஓர் அடியாய் எல்லா வுலகும் தடவந்த
மாயோன், உன்னைக் காண்பான் வருந்தி யெனைநாளும்,
தீயோடுடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?

உலகுக்கு உயிரே! அறிவிலேனுக்கு அருளாய்!

3545. உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்,
உலகுக்கேகேயோ ருயிரு மானாய்! புறவண்டத்து,
அலகில் பெலிந்த திசைபத் தாய அருவேயோ!
அலகில் பொலிந்த அறிவி லேனுக் கருளாயே.

சோதி மூர்த்தி! என்னை இனியும் கெடுப்பாயோ?

3546. அறிவி லேனுக் கருளாய் அறிவா ருயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய் தென்னைப் புறதிட் டின்னம் கெடுப்பாயோ,
பிறிதொன் றறியாவடியே னாவி திகைக்கவே?

நெடியோய்! நின் திருவடியை என்று சேர்வேன்?

3547. ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்,
பாவி யேனைப் பலநீ காட்டிப் படுப்பாயோ,
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே,
கூவிக் கொள்ளும் கால மின்னம் குறுகாதோ?

மாயோய்! உனக்கு அடிமையாவது என்று?

3548. குறுகா நீளா இறுதி கூடா எனையூழி,
சிறுகா பெருகா அளவிலின்பம் சேர்ந்தாலும்,
மறுகா லின்றி மாயோ னுனக்கே யாளாகும்,
சிறுகா லத்தை யுறுமோ அந்தோ தெரியிலே?

இவற்றைப் படியுங்கள்: தொண்டர் ஆகலாம்

3549. தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு,
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்,
தெரியச் சொன்ன ஓரா யிரத்து ளிப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.

நேரிசை வெண்பா

மாறன் பாடல்கள் உலகை உய்விக்கும்

நீராகிக் கேட்டவர்க் ணெஞ்சழிய மாலுக்கும்
ஏரார் விசும்பி லிருப்பரிதா-ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரிமா றன்சொல்லை
ஓதிடவே யுய்யும் உலகு  (59)

பத்தாந் திருமொழி

10. உலகம் உண்ட

எம்பெருமான், தன்னை எல்லோரும் வந்தடைந்து ஸேவித்துப் பயன் பெறவேண்டும் என்பதற்காகவே வைகுந்தத்திலிருந்து வந்து திருவேங்கடமலையில் நிற்கிறான் என்பதை நினைத்து பிராட்டியை முன்னிட்டுக்கொண்டு ஆழ்வார் திருவேங்கடமுடையானைச் சரணடைகிறார்

திருவேங்கடவன் திருவடிகளில் சரண் புகல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நெடியோய்! உன் பாதம் கூடுமாறு கூறாய்!

3550.உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி யம்மானே!
நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி. நெடியாய் அடியே னாருயிரே!
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!
குலதொல் லடியேன் உன்பாதம் கூடு மாறு கூறாயே.

வேங்கடவா! யான் நின் திருவடி சேர அருள்!

3551. கூறாய் நீறாய் நிலனாகிக் கொடுவல் லசுரர் குலமெல்லாம்
சீறா எறியும் திருநேமி வலவா. தெய்வக் கோமானே!
சேறார் சுனைத்தா மரைசெந்தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடி யேனுன் அடிசேர் வண்ணம் அருளாயே.

அண்ணலே! நின் திருவடி அடைய உதவு

3552. வண்ண மருள்கொள் அணிமேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணிபொன்முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ண லே!உன் அடிசேர அடியேற் காவா வென்னாயே.

திருமாலே! நான் நின் திருவடி சேருமாறு செய்

3553. ஆவா வென்னா துலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள்மேல்,
தீவாய் வாளி மழைபொழிந்த சிலையா திருமா மகள்கேள்வா,
தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்து மாறு புணராயே.

முதல்வா! அடியேன் உன்பாதம் சேர்வது என்று?

3554. புணரா நின்ற மரமேழன் றெய்த வொருவில் வலவாவோ,
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ,
திணரார் மேகம் எனக்களிறு சேரும் திருவேங் கடத்தானே,
திணரார் சார்ங்கத் துன்பாதம் சேர்வ தடியே னெந்நாளே?

திருவேங்கடவனே! உன் அடிமேவுவது எந்நாளோ!

3555. எந்நா ளேநாம் மண்ணளந்த இணைத்தா மரைகள் காண்பதற்கெ ன்று,
எந்நா ளும்நின் றிமையோர்கள் ஏத்தி யிறைஞ்சி யினமினமாய்,
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங் கடத்தானே,
மெய்ந்நா னெய்தி யெந்நாளுன் அடிக்கண் அடியேன் மேவுவதே?

அமுதே! இனி நொடிப்பொழுதும் ஆற்றேன்

3556. அடியேன் மேவி யம ர்கின்ற அமுதே. இமையோர் அதிபதியே,
கொடியா அடுபுள் ளுடையானே. கோலக் கனிவாய்ப் பெருமானே,
செடியார் வினைகள் தீர்மருந்தே. திருவேங் கடத்தெம் பெருமானே,
நொடியார் பொழுதும் உன்பாதம் காண நோலா தாற்றேனே.

வேங்கடத்தானே! அடியேன்பால் வாராய்!

3557. நோலா தாற்றேன் நுன்பாதம் காண வென்று நுண்ணுணர்வில்,
நீலார் கண்டத் தம்மானும் நிறைநான் முகனு மிந்திரனும்,
சேலேய் கண்ணார் பலர்சூழ விரும்பும் திருவேங் கடத்தானே,
மாலாய் மயக்கி யடியேன்பால் வந்தாய் போல வாராயே.

அமுதே! நின் திருவடியை விட்டு அகலமாட்டேன்

3558. வந்தாய் போலே வாராதாய். வாரா தாய்போல் வருவானே,
செந்தா மரைக்கண் செங்கனிவாய் நால்தோ ளமுதே. எனதுயிரே,
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்பு சய் திருவேங் கடத்தானே,
அந்தோ அடியேன் உன்பாதம் அகல கில்லேன் இறையுமே.

பெருமானே! நின் திருவடி சேர்ந்துவிட்டேன்

3559. அகல கில்லேன் இறையும் என் றலர்மேல் மங் கை யுறைமார்பா,
நிகரில் புகழாய். உலகமூன் றுடையாய். என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே.

இவற்றைப் பாடுக: வானுலகில் தங்கலாம்

3560. அடிக்கீ ழமர்ந்து புகுந்தடியீர். வாழ்மின் என்றென் றருள்கொடுக்கும்
படிக்கே ழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்,
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவைபத்தும்,
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.

நேரிசை வெண்பா

மனமே! மாறன் அடியினையைச் சரணடைய நினை

உலகுயமால் நின்ற யுயர்வேங் கடத்தே
அலர்மகளை முன்னிட் டவன்றன்-மலரடியே
வன்சரணாய்ச் சேர்ந்த மகிழ்மாறன் றாளிணையே
உன்சரணாய் நெஞ்சமே! உள்  (60)
**************
ஏழாம் பத்து

முதல் திருமொழி

1. உண்ணிலாவிய

இவ்வுலகில் இருந்தால் இன்னும் என்னென்ன துன்பம் விளையுமோ என்று அஞ்சி நடுங்கி ஓலமிடுகிறார் ஆழ்வார்.

ஐம்புலன்களால் எவ்வளவு நாட்கள் துன்புறுவேன் என்று வருந்துதல்

ஆசிரியத் துறை

அப்பனே! என்னை இன்னும் நலிய எண்ணுகிறாயே!

3561. உண்ணி லாவிய ஐவ ரால்குமை தீற்றி யென்னையுன் பாத பங்கயம்,
நண்ணிலா வகையே நலிவா னின்ன மெண்ணு கின்றாய்,
எண்ணி லாப்பெரு மாயனே இமையோர்கள் ஏத்து முலக மூன்றுடை,
அண்ண லேஅமு தேஅப்ப னேஎன்னை யாள்வானே!

கண்ணா! நான் உன்னை அணுகாவகை செய்கிறாயே!

3562. என்னை யாளும் வங்கோ வோரைந் திவைபெய் திராப்பகல் மோது வித்திட்டு,
உன்னை நானணு காவகை செய்து போதி கண்டாய்,
கன்ன லேஅமு தேகார் முகில்வண்ண னேகடல் ஞாலம் காக்கின்ற,
மின்னு நேமியி னாய் வினை யேனுடை வேதியனே!

மதுசூதனா! என்னைத் தடுப்பதால் உனக்கு என்ன பயன்?

3563. வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோது வித்து,
உன் திருவடிச் சாதி யாவகை நீதடுத் தென்பெறு தியந்தோ,
ஆதி யாகி யகலி டம்படைத் துண்டு மிழந்து கடந்திடந் திட்ட,
சோதி நீண்முடி யாய் தொண்ட னேன்மது சூதனனே.

வினை தீர்ப்பவனே! நீ என்னை விட்டு அகல்கிறாயா?

3564. சூது நானறி யாவகை சுழற்றியோர் ஐவரைக் காட்டி,உன்அடிப்
போது நானணு காவகை செய்து போதி கண்டாய்,
யாதும் யாவரு மின்றிநின் னகம்பால் ஒடுக்கியோ ராலி னீளிலை,
மீது சேர்குழவி! வினையேன் வினைதீர் மருந்தே!

பெருமானே! இனி எனக்கு மருந்தாவார் யார்?

3565. தீர்மருந் தின்றி யைந்து நோயடும் செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை,
நேர்ம ருங்குடைத் தாவடைத்து நெகிழிப்பான் ஒக்கின்றாய்,
ஆர்ம ருந்தினி யாகுவர்? அடலாழி யேந்தி யசுரர் வன்குலம்,
வேர்ம ருங்கறுத் தாய்.விண்ணு ளார்பெரு மானேயோ.

பரமனே! எனக்கு ஒரு வழி சொல்

3566. விண்ணு ளார்பெரு மாற்க டிமைசெய் வாரை யும்செறும் ஐம்பு லனிவை,
மண்ணு ளென்னைப் பெற்றா லெஞ்செய் யாமற்று நீயும்விட்டால்?
பண்ணு ளாய்கவி தன்னுளாய் பத்தியினுள் ளாய்பர மீசனே! வந்தென்
கண்ணுளாய் நெஞ்சுளாய்! சொல்லுளாய் ஒன்று சொல்லாயே.

அமுதே! ஐம்புலனை நான் என்று வெல்வேன்?

3567. ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஒரைவர் வன்கயவரை,
என்று யான்வெல் கிற்பனுன் திருவருளில் லையேல்?,
அன்று தேவர் அசுரர் வாங்க அலைகட லரவம் அளாவி,ஓர்
குன்றம் வைத்த எந்தாய் கொடியேன் பருகின்னமுதே!

கண்ணா! நின்னைக் கை தொழ எனக்கருள்

3568. இன்ன முதெனத் தோன்றி யோரைவர் யாவரையும் மயக்க, நீவைத்த
முன்ன மாயமெல் லால்முழு வேரரிந்து, என்னையுன்
சின்ன மும்திரு மூர்த்தியும் சிந்தித் தேத்திக் கைதொழ வேயரு ளெனக்கு,
என்னம் மா! என் கண்ணா! இமையோர்தம் குலமுதலே!

கண்ணா! ஐம்புலனை அடக்கும் வரம் தருக

3569. குலமுத லிடும்தீ வினைக்கொடு வன்குழியினில் வீழ்க்கும் ஐவரை
வலமுதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்,
நிலமுத லினீவ் வுலகுக்கும் நிற்பன செல்வன என,பொருள்
பலமுதல் படைத்தாய்! என் கண்ணா! என் பரஞ்சுடரே!

மூர்த்தியே! உடல் பாரத்தைத் தந்துவிட்டாயே!

3570. என்பரஞ் சுடரே! என்றுன்னை அலற்றியுன் இணைத்தா மரைகட்கு,
அன்புருகி நிற்கும் அதுநிற் கச் சுமடு தந்தாய்,
வன்பரங்க ளெடுத்துஐவர் திசைதிசை வலித்தெற்று கின்றனர்
முன்பரவை கடைந்தமுதங் கொண்ட மூர்த்தியோ!

இவற்றைப் பாடுக: வினை போகும்

3571. கொண்ட மூர்த்தியோர் மூவராய்க் குணங்கள் படைத்தளித் துக்கெடுக் கும்,அப்
புண்ட ரீகப்கொப் பூழ்ப்புனற் பள்ளி யப்பனுக்கே,
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துளிப்பத்தும்,
கண்டு பாடவல் லார்வினை போம்கங்கு லும்பகலே.

நேரிசை வெண்பா

மாறனைத் துதி: பிறவித் துன்பம் நீங்கும்

உண்ணிலா வைவ ருடனிருத்தி யிவ்வுலகில்
எண்ணிலா மாய னெனைநலிய-எண்ணுகின்றான்
என்றுநினைந் தோலமிட்ட இன்புகழ்சேர் மாறனெனக்
குன்றிவிடு மேபவக்கங் குல்   (61)

இரண்டாந் திருமொழி

2. கங்குலும் பகலும்

நம்மாழ்வார் ஸ்ரீ ரங்கநாதனிடம் கொண்டிருக்கும் ஈடுபாட்டின் மிகுதியை இப்பகுதி கூறுகிறது. ஆழ்வாராகிய தலைவியின் நிலையைக் கண்ணுற்ற தாய் அரங்கராகிய தலைவரைப் பார்த்து வினவுதல்போல் ஈண்டுப் பாடல்கள் அமைந்துள்ளன

தலைவியின் தளர்ச்சி கண்ட தாய் தலைவனை வினாதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருவரங்கா! என் மகள் திறந்து என்ன செய்யபோகிறாய்?

3572. கங்குலும் பகலும் கண் துயி லறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்,
சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும் தாமரைக் கண் என்று தளரும்,
எங்ஙனே தரிக்கே னுன்னைவிட்டு என்னும் இருநிலம் கைதுழா விருக்கும்,
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய். இவள்திறத் தெஞ்செய்கின் றாயே?

முகில் வண்ணா! இத்தலைவியின் முடிவுதான் என்ன?

3573. எஞ்செய்கின் றாயென் தாமரைக் கண்ணா என்னும்கண் ணீர்மல்க இருக்கும்,
எஞ்செய்கே னெறிநீர்த் திருவரங் கத்தாய்? என்னும்வெவ் வுயிர்த்துயிர்த் துருகும்
முன்செய்த வினையே. முகப்படாய் என்னும் முகில்வண்ணா. தகுவதோ? என்னும்,
முஞ்செய்திவ் வுலகம் உண்டுமிழந் தளந்தாய் எங்கொலோ முடிகின்ற திவட்கே?

மணி வண்ணா! இவளை நீ என்னதான் செய்துவிட்டாய்?

3574. வட்கிலள் இறையும் மணிவண்ணா! என்னும் வானமே நோக்கும்மை யாக்கும்,
உட்குடை யசுரர் உயிரெல்லா முண்ட ஒருவனே என்னுமுள் ளுருகும்,
கட்கிலீ உன்னைக் காணுமா றருளாய் காகுத்தா! கண்ணனே! என்னும்,
திட்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்! இவள்திறத் தென்செய்திட் டாயே?

அரங்கா! நீ என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்?

3575. இட்டகால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்துலாய் மயங்கும்கை கூப்பும்,
கட்டமே காதல் என்றுமூர்ச் சிக்கும் கடல்வண்ணா. கடியைகாண் என்னும்,
வட்டவாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்றென்றே மயங்கும்,
சிட்டனே செழுநீர்த் திருவரங் கத்தாய் இவள்திறத் தெஞ்சிந்தித் தாயே

அரங்கா! என் மகளை மயக்கிவிட்டாயே!

3576. சிந்திக்கும் திசைக்கும் தேறும்கை கூப்பும் திருவரங் கத்துள்ளாய் என்னும்
வந்திக்கும், ஆங்கே மழைக்கண்ணீர் மல்க வந்திடாய் என்றென்றே மயங்கும்,
அந்திப்போ தவுணன் உடலிடந் தானே அலைகடல் கடைந்தவா ரமுதே,
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல்செய் தானே.

பாம்பணையாய்! நான் என்னதான் செய்வேன்?

3577. மையல்செய் தென்னை மனம்கவர்ந்தானே என்னும் மா மாயனே! என்னும்,
செய்யவாய் மணியே என்னும் தண் புனல்சூழ் திருவரங் கத்துள்ளாய்! என்னும்,
வெய்யவாள் தண்டு சங்குசக் கரம்வில் ஏந்தும்விண் ணோர்முதல் என்னும்,
பைகொள்பாம் பணையாய்! இவள்திறத் தருளாய் பாவியேன் செய்யற்பா லதுவே.

கடல்வண்ணா! என் மகள் கண்ணீர் சிந்துகிறாளே!

3578. பாலதுன் பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்றநின் றானே,
காலசக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா கண்ணணே! என்னும்,
சேல்கொள்தண் புனல்சூழ் திருவரங் கத்தாய். என்னும் என் தீர்த்தனே! என்னும்,
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே!

என் மகள் புலம்புகிறாளே! நான் என் செய்வேன்?

3579. கொழுந்துவா னவர்கட்கு என்னும் குன்றேந்திக் கோநிரை காத்தவன்! என்னும்,
அழுந்தொழும் ஆவி அனலவெவ் வுயிர்க்கும் அஞ்சன வண்ணனே! என்னும்,
எழுந்துமேல் நோக்கி யிமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன்? என்னும்,
செழுந்தடம் புனல்சூழ் திருவரங் கத்தாய். என்செய்கேன் என்திரு மகட்கே?

கண்ணா! என் மகளின் முடிவு தெரியவில்லையே!

3580. என்திரு மகள்சேர் மார்வனே! என்னும் என்னுடை யாவியே. என்னும்,
நின்திரு எயிற்றால் இடந்துநீ கொண்ட நிலமகள் கேள்வ னே! என்னும்,
அன்றுரு வேழும் தழுவிநீ கொண்ட ஆய்மகள் அன்ப னே! என்னும்,
தென்திரு வரங்கம் கோயில்கொண் டானே! தெளிகிலேன் முடிவிவள் தனக்கே!

அரங்கா! என் மகள் நின் திருவடியில் சரணடைந்தாள்

3581. முடிவிவள் தனக்கொன் றறிகிலேன் என்னும் மூவுல காளியே. என்னும்,
கடிகமழ் கொன்றைச் சடையனே. என்னும் நான்முகக் கடவுளே! என்னும்,
வடிவுடை வானோர் தலைவ னே!என்னும் வண்திரு வரங்கனே! என்னும்,
அடியடை யாதாள் போலிவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே!

இவற்றைப் படித்தோர் பேரின்பத்தில் மூழ்குவர்

3582. முகில்வண்ணன் அடியை அடைந்தருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்,
துகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்வண்பொழில்சூழ் வண்குரு கூர்ச்சட கோபன்,
முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொன்மாலை ஆயிரத் திப்பத்தும் வல்லார்,
முகில்வண்ண வானத் திமையவர் சூழ இருப்பர்பே ரின்பவெள் ளத்தே.

நேரிசை வெண்பா

மாறன் பாடல்களால் மனம் தூய்மை அடையும்

கங்குல் பகலரதி கைவிஞ்சி மோகமுற
அங்கதனைக் கண்டோ ரரங்கரைப்பார்த்து-இங்கிவள்பால்
என்செயநீ ரெண்ணுகின்ற தென்னுநிலை சேர்மாறன்
அஞ்சொலுற நெஞ்சுவெள்ளை யாம்  (62)

மூன்றாந் திருமொழி

3. வெள்ளைச் சுரிசங்கு

தாய், முன்பு அரங்கனின் பண்புகளையாம், வடிவழகையும் கூறினாள். பராங்குசநாயகி தாயின் வார்த்தைகளைக் கேட்டுத் தரித்திருந்தபின் அவனை (எம்பெருமானை) அடைந்தே தீர்வேன் என்று கூறிகிறாள். தென்திருப்பேரெயில் என்பது ஒரு திவ்யதேசம். அங்கு இருக்கும் பெருமாள் மகர நெடுங்குழைக்காதர். மகள்(பராங்குசநாயகி) அவரிடம் செல்லப் புறப்படுகிறாள் தாயும் தோழியரும் தடுத்து, இதனால் பழி உண்டாகும் என்கின்றனர். அப்படியானால் நீங்களே அவனிடம் என்னைக் கொண்டு சேருங்கள் என்று மகள் கூறித் துணிவை உரைப்பதாக ஈண்டுப் பாடல்கள் அமைந்துள்ளன.

யாவரும் தடுத்தும் தலைவி தலைவனைச் சேரத் துணிதல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நான் திருப்பேரைச் சேர்வேன்

3583. வெள்ளைச் சுரிசங்கொ டாழி யேந்தித் தாமரைக் கண்ணனென் னெஞ்சி னூடே,
புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் எஞ்சொல்லிச் சொல்லுகேன் அன்னை மீர்காள்,
வெள்ளச் சுகமவன் வீற்றி ருந்த வேத வொலியும் விழா வொலியும்,
பிள்ளைக் குழாவிளை யாட்டொலி யும் அறாத் திருப்பே ரையில் சேர்வன் நானே.

என் மனம் கண்ணன் செங்கனிவாயின் திறத்தது

3584. நானக் கருங்குழல் தோழி மீர்காள்! அன்னை யர்காள்! அயல் சேரியீர்காள்,
நானித் தனிநெஞ்சம் காக்க மாட்டேன் என்வசம் அன்றிதி ராப்ப கல்போய்,
தேன்மொய்த்த பூம்பொழில் தண்ப ணைசூழ் தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த,
வானப்பி ரான்மணி வண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்த துவே.

தோழீ! என் மனம் நாணும் நிறையும் இழந்தது

3585. செங்கனி வாயின் திறத்த தாயும் செஞ்சுடர் நீண்முடித் தாழ்ந்த தாயும்,
சங்கொடு சக்கரம் கண்டு கந்தும் தாமரைக் கண்களுக் கற்றுத் தீர்ந்தும்,
திங்களும் நாளும் விழாவ றாத தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த,
நங்கள் பிரானுக்கென் னெஞ்சம் தோழீ! நாணும் நிரையு மிழந்த துவே!

அன்னைமீர்! என்மீது சினம் எதற்கு?

3586. இழந்தவெம் மாமை திறத்துப் போன என்னெஞ்சி னாருமங் கே ஒழிந்தார்,
உழந்தினி யாரைக்கொண் டெனு சாகோ? ஓதக் கடலொலி போல எங்கும்,
எழுந்தநல் வேதத் தொலிநின் றோங்கு தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த,
முழங்குசங் கக்கையன் மாயத் தாழ்ந்தேன் அன்னையர் காள்!என்னை யென்மு னிந்தே?

அன்னைமீர்! திருப்பேர் நகரை எனக்குக் காட்டுங்கள்

3587. முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய்முலை யுண்டு மருதி டைப்போய்,
கனிந்த விளவுக்குக் கன்றெ றிந்த கண்ண பிரானுக்கென் பெண்மை தோற்றேன்,
முனிந்தினி யென்செய்தீர் அன்னை மீர்காள். முன்னி யவன்வந்து வீற்றி ருந்த,
கனிந்த பொழில்திருப் பேரை யிற்கே காலம் பெறவென்னைக் காட்டு மினே.

திருப்பேர் நகர்க்கு என்னை உடனே அழைத்துச் செல்லுங்கள்

3588. காலம் பெறவென்னைக் காட்டு மின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்,
நீல முகில்வண் ணத்தெம் பெருமான் நிற்குமுன் னேவந்தென் கைக்கும் எய்தான்,
ஞாலத் தவன்வந்து வீற்றி ருந்த நான்மறை யாளரும் வேள்வி யோவா,
கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல்திருப் பேரை யிற்கே.

தோழீ! என் நெஞ்சம் கண்டதுவே கண்டேன்

3589. பேரெயில் சூழ்கடல் தென்னி லங்கை செற்ற பிரான்வந்து வீற்றி ருந்த,
பேரையிற் கேபுக்கென் னெஞ்சம் நாடிப் பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன்,
ஆரை யினிங் குடையம் தோழி. என்னெஞ்சம் கூவ வல்லாரு மில்லை,
ஆரை யினிக்கொண்டென் சாதிக் கின்றது? என்னெஞ்சம் கண்டது வேகண் டேனே.

தோழீ! திருப்பேரெயில் சென்று சேர்வேன்

3590. கண்டது வேகொண்டெல் லாருங் கூடிக் கார்க்கடல் வண்ணனோ டெந்தி றத்துக்
கொண்டு,அலர் தூற்றிற் றதுமுத லாக் கொண்டவென் காத லுரைக்கில் தோழீ,
மண்டிணி ஞால முமேழ் கடலும் நீள்வி சும்பும் கழியப் பெரிதால்,
தெண்திரை சூழ்ந்தவன் வீற்றி ருந்த தெந்திருப் பேரையில் சேர்வன் சென்றே.

என்னைத் தேற்றாதீர்கள்; திருப்பேரைதான் சேர்வேன்

3591. சேர்வஞ்சென் றென்னுடைத் தோழி மீர்காள்! அன்னையர் காள்! என்னைத் தேற்ற வேண்டா,
நீர்கள் உரைக்கின்ற தென்னி தற்கு? நெஞ்சும் நிறைவும் எனக்கிங் கில்லை,
கார்வண்ணன் கார்க்கடல் ஞால முண்ட கண்ண பிரான்வந்து வீற்றி ருந்த,
ஏர்வள வொண்கழ னிப்பழ னத்துத் தென்திருப் பேரை யின்மா நகரே.

திருப்பேரையான் என் மனத்தைக் கவர்ந்து விட்டான்

3592. நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாணெனக் கில்லையென் தோழி மீர்காள்!
சிகரம் அணிநெடு மாடம் நீடு தென்திருப் பேரையில் வீற்றி ருந்த,
மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்றுவ ரையன்று மங்க நூற்ற,
நிகரில் முகில்வண்ணன் நேமி யானென் னெஞ்சம் கவர்ந்தெனை யூழி யானே?

இவற்றைப் படித்தால் திருமாலின் அடிமையாகலாம்

3593. ஊழிதோ றூழி யுருவம் பேரும் செய்கையும் வேறவன் வையங் காக்கும்,
ஆழிநீர் வண்ணனை யச்சு தன்னை அணிகுரு கூர்ச்சட கோபன் சொன்ன,
கேழிலந் தாதியோ ராயி ரத்துள் இவைதிருப் பேரையில் மேய பத்தும்,
ஆழியங் கையனை யேத்த வல்லார் அவரடி மைத்திறத் தாழி யாரே.

நேரிசை வெண்பா

மாறன் பாடல்களைப் படித்தால் பக்தராகலாம்

வெள்ளியநா மங்கேட்டு விட்டகன்ற பின்மோகம்
தெள்ளியமால் தென்றிருப்பேர் சென்றுபுக-உள்ளமங்கே
பற்றிநின்ற தன்மை பகருஞ் சடகோபற்கு
அற்றவர்கள் தாமாழி யார்   (63)

நான்காந் திருமொழி

4. ஆழியெழ

பராங்குசநாயகி திருப்பேர்நகருக்குச் செல்லமுடியாமல் வலிமையற்றிருந்தார். பகவான் தன் செயல்களை எல்லாம் காட்டி வெற்றிகளைக் கூறி அவருக்கு வலிமையுண்டாக்க எண்ணினான். பக்தா! என் வெற்றிச் செயல்களைச் சொல்லிக் கொண்டு தரித்து இரு என்றான். எம்பெருமான் செய்த செயல்களை ஆழ்வார் ஒவ்வொன்றாக ஈண்டுக் கூறுகிறார்.

எம்பெருமானின் வெற்றிகளைக் கூறல்

கலி விருத்தம்

அப்பன் உலகளந்த பான்மை என்னே!

3594. ஆழி யெழச்சங்கும் வில்லு மெழ,திசை
வாழி யெழத்தண்டும் வாளு மெழ,அண்டம்
மோழை யெழமுடி பாத மெழ,அப்பன்
ஊழி யெழவுல கங்கொண்ட வாறே.

அப்பன் கடல் கடைந்த செயல் என்னே!

3595. ஆறு மலைக்கெதிர்ந் தோடு மொலி,அர
வூறு சுலாய்மலை தேய்க்கு மொலி,கடல்
மாறு சுழன்றழைக் கின்ற வொலி, அப்பன்
சாறு படவமு தங்கொண்ட நான்றே.

அப்பன் வராகமாய் நிலத்தைப் பெயர்த்தெடுத்த பான்மை

3596. நான்றில வேழ்மண்ணும் தானத்த, வே,பின்னும்
நான்றில வேழ்மலை தானத்த வே,பின்னும்
நான்றில வேழ்கடல் தானத்த வே,அப்பன்
ஊன்றி யிடந்தெயிற் றில்கொண்ட நாளே.

அப்பன் உலகுண்ட பான்மை பிரமாதம்

3597. நாளு மெழநில நீரு மெழவிண்ணும்
கோளு மெழேரி காலு மெழ,மலை
தாளு மெழச்சுடர் தானு மெழ,அப்பன்
ஊளி யெழவுல கமுண்ட வூணே.

கண்ணன் பாரதப் போர் நடத்திய செயல் போற்றத்தக்கது

3598. ஊணுடை மல்லர் ததர்ந்த வொலி,மன்னர்
ஆணுடை சேனை நடுங்கு மொலி,விண்ணுள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட வொலி,அப்பன்
காணுடைப் பாரதம் கையரைப் போழ்தே.

சிங்கப்பிரானின் செயல் வியக்கத்தக்கது

3599. போழ்து மெலிந்தபுன் செக்கரில்,வான்திசை
சூழு மெழுந்துதி ரப்புன லா,மலை
கீழ்து பிளந்தசிங் கமொத்த தால்,அப்பன்
ஆழ்துய ர் செய்தசு ரரைக்கொல்லு மாறே.

இராமனாய் இலங்கை செற்ற செயல் இணையற்றது

3600. மாறு நிரைத்திரைக் கும்சரங் கள்,இன
நூறு பிணம்மலை போல்புர ள,கடல்
ஆறு மடுத்துதி ரப்புன லா,அப்பன்
நீறு படவிலங் கைசெற்ற நேரே.

கண்ணன் வாணனைக் கொன்றமை அற்புதம்

3601. நேர்சரிந் தாங்கொடிக் கோழிகொண் டான்,பின்னும்
நேர்சரிந் தானெரி யுமன லோன்,பின்னும்
நேர்சரிந் தான்முக்கண் மூர்த்திகண் டீர்,அப்பன்
நேர்சரி வாணந்திண் டோள்கொண்ட அன்றே.

அப்பன் உலகைப் படைத்த செயல் ஆச்சரியமானது

3602. அன்று மண்நீரெரி கால்விண் மலைமுதல்,
அன்று சுடரிரண் டும்பிற வும்,பின்னும்
அன்று மழையுயிர் தேவும்மற் றும்,அப்பன்
அன்று முதலுல கம்செய் ததுமே.

கண்ணன் மலையைக் குடையாகப் பிடித்தானே!

3603. மேய்நிரை கீழ்புக மாபுர ள,சுனை
வாய்நிறை நீர்பிளி றிச்சொரி ய,இன
ஆநிரை பாடியங் கேயொடுங் க,அப்பன்
தீமழை காத்துக் குன்ற மெடுத் தானே.

இவற்றைப் படித்தோர்க்கு வெற்றிகள் கிடைக்கும்

3604. குன்ற மெடுத்த பிரானடி யாரொடும்,
ஒன்றிநின் றசட கோப னுரைசெயல்,
நன்றி புனைந்த ஓராயிரத் துள்ளிவை
வென்றி தரும்பத்தும் மேவிக்கற் பார்க்கே.

நேரிசை வெண்பா

மாறன் பாடல்களே நல்ல பாடல்கள்

ஆழிவண்ணன் றன்விசய மானவைமுற் றுங்காட்டி
வாழிதனால்! என்று மகிழ்ந்துநிற்க-ஊழிலவை
தன்னையின்று போற்கண்டு தானுரைத்த மாறன்சொல்
பன்னுவரே நல்லதுகற் பார்  (64)

ஐந்தாந் திருமொழி

5. கற்பார்

பகவானின் வெற்றிச் செயல்களையும், மற்றும் சில சரித்திரங்களையும் பேசி அனுபவித்த ஆழ்வார், பகவானின் கல்யாண குணங்களை அனுபவியாமல் மக்கள் வேறு செயல்களில் மனத்தைச் செலுத்தி வீண்பொழுது போக்குகிறார்களே! இப்படியும் இருக்கலாமா? என்று வியந்து மனம் நொந்துப் பேசுகிறார் இப்பகுதியில்

எம்பிரானுக்கு அடிமையாகாதோரைப் பார்த்து இரங்குதல்

கலி நிலைத்துறை

இராமபிரான் கதையையே கற்க

3605. கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.

நாரணனுக்கே அடிமையாகுங்கள்

3606. நாட்டில் பிறந்தவர் நாரணற் காளன்றி யாவரோ,
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா,
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு,
நாட்டை யளித்துய்யச் செய்து நடந்தமை கேட்டுமே?

கேசவன் புகழையே கேட்கவேண்டும்

3607. கேட்பார்கள் கேசவன் கீர்த்தியல் லால்மற்றூம் கேட்பரோ,
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுக ளேவையும்,
சேட்பால் பழம்பகைவன் சிசு பாலன், திருவடி
தாட்பால் அடைந்த தன்மை யறிவாரை யறிந்துமே?

எம்பெருமானுக்கு அன்றி மற்றவர்க்கு ஆளாவரோ!

3608. தன்மை யறிபவர் தாமவற் காளன்றி யாவரோ,
பன்மைப் படர்பொருள் ஆதுமில் பாழ்நெடுங் காலத்து,
நன்மைப் புனல்பண்ணி நான்முகனைப்பண்ணி, தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே?

மாயன் திருவடிகளையே கருதுங்கள்

3609. சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழலன்றிச் சூழ்வரோ,
ஆழப் பெரும்புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை,
தாழப் படாமல்தன் பாலொரு கோட்டிடைத் தான்கொண்ட,
கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே?

வாமனனுக்கே ஆளாகுங்கள்

3610. கேட்டும் உணர்ந்தவர் கேசவற் காளன்றி யாவரோ,
வாட்டமி லாவண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு ,
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க்கிடர் நீக்கிய,
கோட்டங்கை வாமன னாயச்செய்த கூத்துகள் கண்டுமே?

கண்ணனுக்கே அடிமையாகுக

3611. கண்டும் தெளிந்தும்கற் றார்க்கண்ணற் காளன்றி யாவரோ,
வண்டுன் மலர்த்தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்
இண்டைச் சடைமுடி யீசனுடன்கொண்டு சாச்சொல்ல,
கொண்டங்குத் தன்னொடும் கொண்டுடன்சென்றதுணர்ந்துமே?

பகவானின் திருக்குணங்களையே சொல்லவேண்டும்

3612. செல்ல வுணர்ந்தவர் செல்வன்றன் சீரன்றிக் கற்பரோ,
எல்லை யிலாத பெருந்தவத் தால்பல செய்மிறை,
அல்லல் அமரரைச் செய்யும் இரணிய னாகத்தை,
மல்லல் அரியுரு வாய்ச்செய்த மாயம் அறிந்துமே?

கண்ணபிரானுக்கே யாவரும் அடிமையாகவேண்டும்

3613. மாயம் அறிபவர் மாயவற் காளன்றி யாவரோ,
தாயம் செறுமொரு நூற்றுவர் மங்கவோ ரைவர்க்காய்,
தேச மறியவோர் சாரதி யாய்ச்சென்று சேனையை
நாசம்செய் திட்டு, நடந்தநல் வார்த்தை யறிந்துமே?

மாயவற்கு ஆளாதலே தெளிந்தோர் செயல்

3614. வார்த்தை யறிபவர் மாயவற் காளன்றி யாவரோ,
போர்த்த பிறப்பொடு நோயோடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்து, பெருந்துன்பம் வேரற நீக்கித்தன் தாளிங்கீழ்ச்
சேர்த்து,அவன் செய்யும் சேமத்தையெண்ணித் தெளிவுற்றே?

இவற்றைப் படித்தால் சிந்தை தெளிவுறும்

3615. தெளிவுற்று வீவன்றி நின்றவர்க் கின்பக் கதிசெய்யும்,
தெளிவுற்ற கண்ணனை தென்குரு கூர்ச்சட கோபன்சொல்,
தெளிவுற்ற ஆயிரத் துள்ளிவை பத்தும்வல் லாரவர்,
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.

நேரிசை வெண்பா

மாறன் பாடல்களே இனியவை

கற்றோர் கருதும் விசயங்க ளுக்கெல்லாம்
பற்றாம் விபவகுணப் பண்புகளை -உற்றுணர்ந்து
மண்ணிலுள்ளோர் தம்மிழவை வாய்ந்துரைத்த மாறன் சொல்
பண்ணிலினி தானதமிழ்ப் பா  (65)

ஆறாந் திருமொழி

6. பாமருமூவுலகும்

தம்முடைய ஆற்றாமை எல்லாம் வெளிப்படுத்திக்கொண்டு ஆழ்வார் பரமபாதநாதனின் செவியில் படும்படி குரலை உயர்த்திக் கூவி அழைக்கிறார்.

பெருமானைக் காண உருக்கத்துடன் அழைத்தல்

கலி நிலைத்துறை

பற்பநாபா! உன்னை என்றைக்குச் சேர்வேன்?

3616. பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ,
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ,
தாமரைக் கண்ணாவோ. தனியேன் தனியா ளாவோ,
தாமரைக் கையாவோ. உன்னை யென்றுகொல் சார்வதுவே?

எந்தாய்! யான் நின் திருவடி சேர்வது என்று?

3617. என்றுகொல் சேர்வதந் தோஅரன் நான்முக னேத்தும்,
செய்ய நின்திருப் பாதத்தை யான்நிலம் நீரெரி கால்,
விண்ணுயிர் என்றிவை தாம்முத லாமுற்று மாய்நின்ற எந்தாயோ,
குன்றெடுத் தாநிரை மேய்த்தவை காத்தவெங் கூத்தாவோ

துழாய்முடியாய்! உன்னை எங்கே காண்பேன்?

3618. காத்தவெங் கூத்தாவோ! மலையேந்திக் கன்மாரி தன்னை,
பூத்தண் டுழாய்முடி யாய்! புனைகொன்றையஞ் செஞ்சடையாய்,
வாய்த்தவென் நான்முகனே! வந்தென் னாருயிர் நீயானால்,
ஏத்தருங் கீர்த்தியினாய்! உன்னை யெங்குத் தலைப்பெய்வனே?

கோவலனே! நான் எப்படி உன்னைக் காண்பேன்?

3619. எங்குத் தலைப்பெய்வன் நான்?எழில் மூவுல கும்நீயே,
அங்குயர் முக்கட் பிரான் பிரமன்பெரு மானவன்நீ,
வெங்கதிர் வச்சிரக் கையிந் திரன்முத லாத்தெய்வம்நீ,
கொங்கலர் தண்ணந் துழாய்முடி யென்னுடைக் கோவலனே.

கருமாணிக்கமே! என் உயிர் நின்னை எப்படி எய்தும்?

3620. என்னுடைக் கோவலனே! என் பொல்லாக்கரு மாணிக்கமே,
உன்னுடை யுந்தி மலருலகம் அவைமூன் றும்பரந்து,
உன்னுடைச் சோதிவெள் ளத்தகம் பாலுன்னைக் கண்டுகொண்டிட்டு,
என்னுடை யாருயிரார் எங்ஙனே கொல்வந் தெய்துவரே?

திருமார்பனே! நின்னை எய்தும் வகை தெரியவில்லையே!

3621. வந்தெய்து மாறறி யேன்மல்கு நீலச் சுடர்தழைப்ப,
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்தொரு மாணிக்கம் சேர்வதுபோல்,
அந்தர மேல்செம்பட் டோடடி உந்திகை மார்வுகண்வாய்,
செஞ்சுடர்ச் சோதி விடவுறை என்திரு மார்பனையே.

பகவானை நான் காணமாட்டேனா?

3622. என்திரு மார்பன் தன்னையென் மலைமகள் கூறன்தன்னை,
என்றுமென் நாமக ளையகம் பால்கொண்ட நான்முகனை,
நின்ற சசிபதி யைநிலங் கீண்டெயில் மூன்றெரித்த,
வென்று புலம்துரந் தவிசும் பாளியைக் காணேனோ.

இராமபிரானை நான் காணமுடியுமோ?

3623. ஆளியைக் காண்பரி யாயரி காண்நரி யாய்,அரக்கர்
ஊளையிட் டன்றிலங்கைகடந் துபிலம் புக்கொளிப்ப,
மீளியம் புள்ளைக் கடாய்விறல் மாலியைக் கொன்று,பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்தடர்த் தானையும் காண்டுங்கொலோ?

மனமே! இராமபிரானைக் காண்போமோ?

3624. காண்டுங்கொ லோநெஞ்சமே! கடியவினை யேமுயலும்,
ஆண்டிறல் மீளிமொய்ம் பிலரக் கன்குலத் தைத்தடிந்து,
மீண்டுமவன் தம்பிக்கே விரிநீரி லங்கையருளி,
ஆண்டுதன் சோதிபுக் கவம ரர்அரி யேற்றினையே?

கண்ணனே நமக்கு வைகுந்தம் தருவான்

3625. ஏற்றரும் வைகுந்தத் தையருளும் நமக்கு, ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளையொன் றாய்ப்புக்கு மாயங்க ளேயியற்றி,
கூற்றியல் கஞ்சனைக் கொன்றுஐவர்க் காயக்கொடுஞ் சேனைதடிந்து,
ஆற்றல்மிக் கான்பெரி யபரஞ் சோதிபுக் கஅரியே.

இவற்றைப் படித்தால் யாவரும் பல்லாண்டு பாடுவர்

3626. புக்க அரியுரு வாயவுணனுடல் கீண்டுகந்த,
சக்கரச் செல்வன்தன்னைக் குருகூர்ச்சட கோபஞ்சொன்ன,
மிக்கவோ ராயிரத் துளிவைபத்தும்வல் லாரவரை,
தொக்குப்பல் லாண்டிசைத் துக்கவரி செய்வ ரேழையரே.

நேரிசை வெண்பா

அறிவு மிக்கோர் மாறனையே நெருங்குவர்

பாமருவு வேதம் பகர்மால் குணங்களுடன்
ஆமழகு வேண்டற்பா டாமவற்றைத் தூமனத்தால்
நண்ணியவ னைக்காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலைநண் ணார்ஏழை யர்  (66)

ஏழாந் திருமொழி

7. ஏழையர் ஆவி

ஆழ்வாரின் அழைப்புப் பரமபதநாதனின் செவியில் விழுந்தது. அப்பெருமான் இவரைத் தேற்றுவிக்க, இவர் கண்முன் தோன்றாமல் மனத்தால் ஸேவித்து மகிழும்படி தன் உருவெளிப்பாட்டினைத் தோன்றச் செய்தான் ஆழ்வார் பிராட்டி நிலையில் இருந்துகொண்டு சொல்லும் பகுதி இது. பகவானின் வடிவழகு என்னை நலியும்படி செய்கிறதே! என் செய்வேன்? என்று தாயையும் தோழியரையும் பார்த்துத் தலைவி கூறுதல்போல் பாடல்கள் ஈண்டு அமைந்துள்ளன.

தலைவன் அழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி ஏங்கியுரைத்தல்

கலி நிலைத்துறை

கண்ணபிரான் திருக்கண்கள் என்னை நலிகின்றனவே!

3627. ஏழையர் ஆவியுண் ணுமிணைக் கூற்றங்கொ லோவறியேன்,
ஆழியுங் கண்ண பிராந்திருக் கண்கள்கொ லோவறியேன்,
சூழவும் தாமரை நாண்மலர் போல்வந்து தோன்றும்கண்டீர்,
தோழியர் காள்! அன்னை மீர்! என்செய் கேந்துய ராட்டியேனே?

கண்ணனின் திருமூக்கு என் கண்முன் நிற்கிறது.

3628. ஆட்டியும் தூற்றியும் நின்றன்னை மீரென்னை நீர்நலிந்தென்?
மாட்டுயர் கற்பகத் தின்வல்லி யோகொழுந் தோ?அறியேன்,
ஈட்டிய வெண்ணெயுண் டாந்திரு மூக்கென தாவியுள்ளே,
மாட்டிய வல்விளக்கின் சுடராய்நிற்கும் வாலியதே.

கண்ணனின் பவளவாய் என்னை வருத்துகிறது

3629. வாலிய தோர்கனி கொல்வினை யாட்டியேன் வல்வி னைகொல்,
கோலம் திரள்பவ ளக்கொழுந் துண்டங்கொ லோவறியேன்,
நீல நெடுமுகில் போல்திரு மேனியம் மான்தொண்டைவாய்,
ஏலும் திசையுளெல் லாம்வந்து தோன்றுமென் னின்னுயிர்க்கே.

கண்ணனின் திருப்புருவ அழகு என்னைக் கொல்கிறது

3630. இன்னுயிர்க் கேழையர் மேல்வளையும் இணை நீலவிற்கொல்,
மன்னிய சீர்மத னங்கருப்புச் சிலை கொல்,மதனன்
தன்னுயிர்த் தாதைகண் ணபெருமான் புரு வமவையே,
என்னுயிர் மேலன வாய் அடுகின்றன என்று நின்றே.

கண்ணனின் புன்முறுவல் என்னை வாட்டுகிறது

3631. என்று நின்றேதிக ழும்செய்ய வீன்சுடர் வெண்மின்னுக்கொல்,
அன்றியென் னாவி யடுமணி முத்தங்கொ லோவறியேன்,
குன்றம் எடுத்தபி ரான் முறுவலெனதாவியடும்,
ஒன்றும் அறிகின்றி லேனன்னை மீர்! எனக் குய்விடமே!

கண்ணனின் திருச்செவிகள் என்னை அடுகின்றன

3632. உய்விடம் ஏழையர்க் கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம்? என்றிலங் கிமகரம் தழைக் கும்தளிர்கொல்,
பைவிடப் பாம்பணை யான் திருக்குண்டலக் காதுகளே?
கைவிட லொன்றுமின் றிய் அடுகின்றன காண்மின்களே.

பகவானிடம் திருநுதல் என் உயிரைத் துன்புறுத்துகின்றன

3633. காண்மின்கள் அன்னையர் காள்! என்று காட்டும் வகையறியேன்,
நாண்மன்னு வெண்திங்கள் கொல்! நயந்தார்கட்கு நச்சிலைகொல்,
சேண்மன்னு நால்தடந் தோள் பெருமான்தன் திருநுதலே?,
கோள்மன்னி யாவி யடும்கொடியேன் உயிர் கோளிழைத்தே

கண்ணனின் திருமுகம் என் உயிரைக் கவர்கிறது

3634. கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் ,
கோளிழைத்தண் முத்தமும் தளிரும் குளிர்வான் பிறையும்,
கோளிழையாவுடைய கொழுஞ் சோதி வட்டங்கொல், கண்ணன்,
கோளிழைவாள் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே?

கண்ணனின் திருக்குழல் கற்றை என்னைக் கொள்ளை கொண்டது

3635. கொள்கின்ற கோளிரு ளைச்சுகிர்ந் திட்ட கொழுஞ்சுருளின்,
உள்கொண்ட நீலநன் னூல்தழை கொல்?அன்று மாயங்குழல்,
விள்கின்ற பூந்தண் டுழாய்விரை நாறவந் தென்னுயிரை,
கள்கின்ற வாறறி யீரன்னை மீர்! கழறாநிற்றிரே.

கண்ணனின் திருமுடியில் என் மனம் ஈடுபட்டது

3636. நிற்றிமுற் றத்துள் என் றுநெரித் தகைய ராயென்னைநீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர்சுடர்ச் சோதி மணிநிறமாய்,
முற்றவிம் மூவுல கும்விரி கின்ற சுடர்முடிக்கே,
ஒற்றுமைக் கொண்டதுள் ளமன்னை மீர்! நசை யென்நுங்கட்கே?

இவற்றைப் படித்தோர் தேவருடன் வாழ்வர்

3637. கட்கரி யபிர மஞ்சிவன் இந்திரன் என்றிவர்க்கும்,
கட்கரி யகண்ண னைக்குரு கூர்ச்சடகோபன் சொன்ன,
உட்குடை யாயிரத் தூளிவை யுமொரு பத்தும்வல்லார்,
உட்குடை வானவ ரோடுட னாயென்றும் மாயாரே.

நேரிசை வெண்பா

மாறனைச் சேர்ந்தால் தீவினை மாயும்

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு
சூழவந்து தோன்றித் துயர்விளைக்க-ஆழுமனம்
தன்னுடனே அவ்வழகைத் தானுரைத்த மாறன்பால்
மன்னுமவர் தீவினைபோம் மாய்ந்து   (67)

எட்டாந் திருமொழி

8. மாயா! வாமனனே!

ஆழ்வாரின் வருத்தத்தைத் தீர்க்க எண்ணிய பகவான். அதற்கொரு நேரத்தை எதிர்பார்த்திருந்தான். இது ஆழ்வாருக்குத் தெரியுமாயினும், உயிர் போகவேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டிருந்தும் போகவொட்டாமல் வைத்திருக்கிறானே என்று நினைத்து வியந்தார். ஆழ்வாரை மேலும் வியக்கச் செய்யத்தன் விசித்திர விபூதித்துவத்தைப் பகவான் காட்டுகிறான்.
அது கண்ட ஆழ்வார் வியப்புறுகிறார் இத்திருவாய்மொழியில்.

எம்பெருமானின் விசித்திர விபூதி கண்டு வியத்தல்

கலி நிலைத்துறை

மாயா! என்னே நின் தோற்றம்

3638. மாயா! வாமன னே! மது சூதா! நீயருளாய்,
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்,
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்,
நீயாய் நீநின்ற வரீவை யென்ன நியாயங்களே.

அச்சுதனே! எனக்கு அருள் செய்

3639. அங்கண் மலர்த்தண் டுழாய்முடி அச்சுதனே! அருளாய்,
திங்களும் ஞாயிறு மாய்ச்செழும் பல்சுட ராயிருளாய்,
பொங்கு பொழிமழை யாய்ப்புக ழாய்பழி யாய்ப்பின்னும்நீ,
வெங்கண்வெங் கூற்றமு மாவிவை யென்ன விசித்திரமே.

சக்கரபாணீ ! உன் செயல்கள் புரியவில்லையே!

3640. சித்திரத் தேர்வலவா! திருச் சக்கரத் தாய்!அருளாய்,
எத்தனை யோருக முமவை யாயவற் றுள்ளியுலும்,
ஒத்தவொண் பல்பொருள் களுலப் பில்லன வாய்வியவாய்,
வித்தகத் தாய்நிற்றி நீயவை யென்ன விடமங்களே.

கண்ணனே! என்னே உன் உபாயங்கள்

3641. கள்ளவிழ் தாமரைக்கண்கண்ண னே!எனக் கொன்றருளாய்,
உள்ளது மில்லது மாயுலப் பில்லன வாய்வியவாய்,
வெள்ளத் தடங்கட லுள்விட நாகணை மேல்மருவி,
உள்ளப்பல் யோகுசெய் தியிவை யென்ன உபாயங்களே.

மாயவனே! இவையென்ன மயக்குகள்!

3642. பாசங்கள் நீக்கியென் னையுனக் கேயுறக் கொண்டிட்டு,
நீ வாச மலர்த்தண் டுழாய்முடி மாயவ னே! அருளாய்,
காயமும் சீவனு மாய்க்கழி வாய்ப்பிறப் பாய்ப்பின்னும்நீ,
மாயங்கள்பு சய்துவைத் தியிவை யென்ன மயக்குகளே.

வாமனா! என்னே நின் லீலா வினோதம்!

3643. மயக்கா வாமன னே! மதி யாம்வண்ணம் ஒன்றருளாய்,
அயர்ப்பாய்த் தேற்றமு மாயழ லாய்க்குளி ராய்வியவாய்,
வியப்பாய் வென்றிகளாய்வினை யாய்ப்பய னாய்ப்பின்னும்நீ,
துயக்காய் நீநின்ற வரீவை யென்ன துயரங்களே.

கண்ணா! இவை என்ன விளையாட்டுகள்!

3644. துயரங்கள் செய்யுங்கண்ணா! சுடர் நீண்முடி யாயருளாய்,
துயரம்செய் மானங்க ளாய்மத னாகி உகவைகளாய்,
துயரம்செய் காமங்க ளாய்த்துலையாய்நிலை யாய்நடையாய்,
துயரங்கள் செய்துவைத் தியிவை யென்னசுண் டாயங்களே.

கண்ணா! என்னே நின் இயல்புகள்!

3645. என்னச்சுண்டாயங்களால் நின்றிட்டாயென்னையாளும்கண்ணா,
இன்னதோர் தன்மையை என்றுன்னையாவர்க்கும் தேற்றரியை,
முன்னிய மூவுல குமவை யாயவற் றைப்படைத்து,
பின்னுமுள் ளாய்! புறத் தாய்!இவை யென்ன இயற்கைகளே.

கண்ணா! நின்னை முற்ற முடிய அறியமுடியாது

3646. என்ன இயற்கைகளால் எங்ஙனேநின்றிட் டாயென்கண்ணா,
துன்னு கரசர ணம்முத லாகவெல் லாவுறுப்பும்
உன்னு சுவையொளி யூறொலி நாற்றம் முற்றும்நீயே,
உன்னை யுணர வுறிலுலப் பில்லை நுணுக்கங்களே.

அச்சுதா! அருவும் உருவும் நீயே

3647. இல்லை நுணுக்கங்க ளேயித னில்பிறி தென்னும்வண்ணம்
தொல்லைநன் னூலில் சொன்ன வுருவும் அருவும்நியே
அல்லித் துழாயலங் கலணி மார்ப!என் அச்சுதனே,
வல்லதோர் வண்ணம் சொன்னாலதுவேயுனக் காம்வண்ணமே.

இவற்றைப் படித்தோர் நிறைவு பெறுவர்

3648. ஆம்வண்ண மின்னதொன் றென்றறி வதரி யஅரியை,
ஆம்வண்ணத் தால்குரு கூர்ச்சட கோபன் அறிந்துரைத்த
ஆம்வண்ண வொண்டமிழ்களிவை யாயிரத் துளிப்பத்தும்,
ஆம்வண்ணத் தாலுரைப்பாரமைந் தார்தமக்கென்றைக்குமே.

நேரிசை வெண்பா

மாறனைப் புகழ்ந்து வாழ்வோம்

மாயாமல் தன்னைவைத்த வைசித் திரியாலே
தீயா விசித்திரமாச் சேர்பொருளோ-டோயாமல்
வாய்ந்துநிற்கும் மாயன் வளமுரைத்த மாறனைநாம்
ஏய்ந்துரைத்து வாழும்நாள் என்று?  (68)

ஒன்பதாந் திருமொழி

9. என்றைக்கும்

ஆழ்வார் ஒன்று கேட்டால் எம்பெருமான் ஒன்று சொல்லி அவரது எண்ணத்தை மறக்கச் செய்து வந்தான். ஒரு நாள் ஆழ்வார் பகவானை வலியப் பிடித்துக்கொண்டார். எம்பெருமானே! என்னிடம் என்ன குறை கண்டாய்! என்னை ஏன் இப்படித் துன்புறுத்துகிறாய்! இந்தப் பூமியிலேயே என்னை வைத்திருப்பது உன் பெருமைக்குத் தகுமா? என்று கேட்டார். ஆழ்வார்! என் எண்ணம் உமக்குத் தெரியாதா என்ன? செவிக்கினிய செஞ்சொற்கவிகளை எனக்குப் பாடித் தருவதற்காகவே உம்மை இங்கு வைத்திருக்கிறேன் என்றான் பகவான். இச்செயலை நினைந்து நன்றி பாராட்டிக் கூறுகிறார் ஆழ்வார்.

தனக்குக் கவி பாடும் பேறு தந்தமைக்குப் பதிலுதவி இல்லை எனல்

கலி விருத்தம்

இன்றமிழ் பாடச் செய்த ஈசனை எப்படிப் பாராட்டுவேன்?

3649. என்றைக்கும் என்னையுய் யக்கொண்டு போகிய,
அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
இன்றமிழ் பாடிய ஈசனை யாதியாய்
நின்றவென் சோதியை, எஞ்சொல்லி நிற்பனோ?

தானே தன்னைப் பாடிக்கொண்டவன் மாயன்

3650. என்சொல்லி நிற்பனென் இன்னுயி ரின்றொன்றாய்,
என்சொல்லால் யான்சொன்ன இன்கவி யென்பித்து,
தன்சொல்லால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன்,
என்முன்சொல்லும் மூவுரு வாம் முதல்வனே.

அப்பனை நான் மறக்கவேமாட்டேன்

3651. ஆம்முதல் வனிவ னென்றுதற் றேற்றி,என்
நாமுதல் வந்து புகுந்துநல் லின்கவி,
தூமுதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்ன,என்
வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ?

என் அப்பனை மறப்பேனோ!

3652. அப்பனை யென்று மறப்பனென் னாகியே,
தப்புத லின்றித் தனைக் கவி தான்சொல்லி,
ஒப்பிலாத் தீவினை யேனையுய் யக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே?

இன்கவி பாடச் செய்தவர் பரமரே

3653. சீர்கண்டு கொண்டு திருந்து நல் லின்கவி,
நேற்பட யான்சொல்லும் நீர்மை யிலாமையில்,
ஏர்விலா என்னைத்தன் னாக்கிஎன் னால்தன்னை,
பார்பரவு இன்கவி பாடும் பரமரே.

வைகுந்தநாதனே என்னைக் கவி பாடச் செய்தவன்

3654. இன்கவி பாடும் பரம கவிகளால்,
தன்கவி தான்தன்னைப் பாடுவி யாது,இன்று
நன்குவந் தென்னுட னாக்கியென் னால்தன்னை,
வன்கவி பாடுமென் வைகுந்த நாதனே.

என்னைக் கவி பாடுவித்த வைகுந்தனையே நினைவேன்

3655. வைகுந்த நாதனென் வல்வினை மாய்ந்தறச்,
செய்குந்தன் றன்னையென் னாக்கியென் னால்தன்னை,
வைகுந்த னாகப் புகழ்வண் தீங்கவி,
செய்குந்தன் தன்னையெந் நாள்சிந்தித் தார்வனோ.

தகுதியற்ற என்னைத் தன்போலாக்கியவன் எம்பிரான்

3656. ஆர்வனோ ஆழியங் கையெம்பி ரான்புகழ்,
பார்விண்நீர் முற்றும் கலந்து பருகிலும்,
ஏர்விலா என்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
சீர்பெற இன்கவி சொன்ன திறத்துக்கே?

திருமால் செய்த உதவிக்குப் பதிலுதவி இல்லை

3657. திறத்துக்கே துப்புர வாம்திரு மாலின்சீர்,
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ,
மறப்பிலா வென் னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
உறப்பல இன்கவி சொன்ன வுதவிக்கே?

அப்பனுக்கு நான என்ன கைம்மாறு செய்யமுடியும்?

3658. உதவிக்கைம் மாறென் னுயிரென்ன வுற்றெண்ணில்,
அதுவும்மற் றாங்கவன் றன்னதென் னால்தன்னை,
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு,
எதுவுமொன் றுமில்லை செய்வதிங் குமங்கே.

இவற்றைப் பாடினால் இன்பம் கிடைக்கும்

3659. இங்குமங் கும்திரு மாலன்றி இன்மைகண்டு,
அங்ஙனே வண்குரு கூர்ச்சட கோபன் சொல்,
இங்ஙனே சொன்னவோ ராயிரத் திப்பத்தும்,
எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே.

நேரிசை வெண்பா

மாறன் பாடல்களால் இன்பம் உண்டாகும்

என்றனைநீ யிங்குவைத்த தேதுக் கென, மாலும்
என்றனக்கு மென்றமர்க்கு மின்பமதா-நன்றுகவி
பாட எனக் கைம்மா றிலாமை, பகர்மாறன்
பாடணைவார்க் குண்டாமின் பம்  (69)

பத்தாந் திருமொழி

10. இன்பம் பயக்க

ஆழ்வீர்! என் அருளைக் கொண்டு நீர் தடுமாற்றம் அடையவேண்டாம். திருவாறன்விளை என்ற திவ்யதேசத்தில் நான் (உபய) நாச்சிமார்களோடு இருந்துகொண்டு, உமது வாயினால் பாடும் திருவாய்மொழியைக் கேட்க விரும்புகிறேன். அங்கு வந்து திருவாய்மொழி பாடி ஒருவாறு சமாதானம் அடையும் என்றான் பகவான் அவ்வாறே ஆழ்வார் செய்யப்பாரிக்கிறார் இத்திருவாய்மொழியில்.

திருவாறன்விளையில் அடிமை செய்ய நினைத்தல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

திருவாறன்விளையைக் கைதொழும் நாளும் வருமா?

3660. இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானுமிவ் வேழுலகை,
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந் தாள்கின்ற எங்கள்பிரான்,
அன்புற் றமர்ந்துறை கின்றா ணிபொழில் சூழ்திரு வாறன்விளை,
அன்புற் றமர்ந்து வலம்செய்து கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ.

திருவாறன்விளையை வலம் வருவேனோ?

3661. ஆகுங்கொல் ஐயமொன் றின்றி அகலிடம் முற்றவும், ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்துறையும்,
மாகம் திகழ்கொடி மாடங்கள் நீடும் மதிள்திரு வாறன்விளை,
மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழுங் கூடுங்கொலோ.

நாள்தோறும் திருவாறன்விளையைத் தொழவேண்டும்

3662. கூடுங்கொல் வைகலும் கோவிந்த னைமது சூதனைக் கோளரியை,
ஆடும் பறவை மிசைக்கண்டு கைதொழு தன்றி யவனுறையும்,
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வியைந் தாறங்கம் பன்னினர்வாழ்,
நீடு பொழில்திரு வாறன் விளைதொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே.

திருவாறன்விளைக் கண்ணனையே நினைப்பேனோ?

3663. வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழு தும்மனத்து ஈங்கு நினைக்கப்பெற
வாய்க்கும் கரும்பும் பெருஞ்செந் நெலும்வயல் சூழ்திரு வாறன்விளை,
வாய்க்கும் பெரும்புகழ் மூவுல கீசன் வடமது ரைப்பிறந்த,
வாய்க்கும் மணிநிறக் கண்ணபி ரான்றன் மலரடிப் போதுகளே.

திருவாறன்விளையைப் பாடினால் தீவினை கெடும்

3664. மலரடிப் போதுகள் என்னெஞ்சத் தெப்ப்பொழு துமிருத் திவணங்க,
பலரடி யார்முன் பருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்,
மலரில் மணிநெடு மாடங்கள் நீடு மதில்திரு வாறன்விளை,
உலகம் மலிபுகழ் பாடநம் மேல்வினை ஒன்றும்நில் லாகெடுமே.

தொண்டர்காள்! திருவாறன்விளையைத் தொழுமின்

3665. ஒன்றும்நில் லாகெடும் முற்றவும் தீவினை யுள்ளித் தொழுமிந்தொண்டீர்,
அன்றங் கமர்வென் றுருப்பி ணிநங்கை யணிநெடுந் தோள்புணர்ந்தான்,
என்றுமெப் போதுமென் னெஞ்சம் துதிப்ப வுள்ளேயிருக் கின்றபிரான்,
நின்ற அணிதிரு வாறன் விளை யென்னும் நீணக ரமதுவே.

திருவாறன்விளைக் கண்ணனே எனக்குச் சரண்

3666. நீணக ரமது வேமலர்ச் சோலைகள் சூழ்திரு வாறன்விளை,
நீணக ரத்துறை கின்றபி ரான்நெடு மால்கண்ணன் விண்ணவர்கோன்
வாண புரம்புக்கு முக் கட்பி ரானைத் தொலையவெம் போர்கள்செய்து,
வாணனை யாயிரந் தோள்துணித் தாஞ்சரண் அன்றிமற் றொன்றிலமே.

திருவாறன்விளையை வலம் வருக: தீவினை தீரும்

3667. அன்றிமற் றொன்றிலம் நின்சர ணே!என் றகலிரும் பொய்கை யின்வாய்,
நின்றுதன் நீள்கழ லேத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்,
சென்றங் கினிதுறை கின்ற செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை,
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ? தீவினை யுள்ளத்தின் சார்வல்லவே.

திருவாறன்விளையை வலம் வரவே சிந்திக்கிறேன்

3668. தீவினை யுள்ளத்தின் சார்வல்ல வாகித் தெளிவிசும் பேறலுற்றால்,
நாவினுள் ளுமுள்ளத் துள்ளும் அமைந்த தொழிலினுள் ளும்நவின்று ,
யாவரும் வந்து வணங்கும் பொழில்திரு வாறன் விளையதனை,
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல் என்னுமென் சிந்தனையே.

திருவாறன்விளையை நினைத்தால் வேறு நினைவே வராது

3669. சிந்தைமற் றொன்றின் திறத்ததல் லாத்தன்மை தேவபி ரானறியும்,
சிந்தையி னால்செய்வ தானறி யாதன மாயங்கள் ஒன்றுமில்லை,
சிந்தையி னால்சொல்லி னால்செய்கை யால்நிலத் தேவர் குழுவணங்கும்,
சிந்தை மகிழ்திரு வாறன் விளையுறை தீர்த்தனுக் கற்றபின்னே.

இவற்றைப் படித்தால் தேவர்களும் போற்றுவர்

3670. தீர்த்தனுக் கற்றபின் மற்றோர் சரணில்லை யென்றெண்ணி,
தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தன னாகிச் செழுங்குரு கூர்ச்சட கோபன்சொன்ன,
தீர்த்தங்க ளாயிரத் துள்ளிவை பத்தும்வல் லார்களை, தேவர்வைகல்
தீர்த்தங்க ளேயென்று பூசித்து நல்கி யுரைப்பார்தம் தேவியர்க்கே.

நேரிசை வெண்பா

மாறன் திருவடிகளே யாவர்க்கும் தெய்வம்

இன்பக் கவிபாடு வித்தோனை யிந்திரையோடு
அன்புற்று வாழ்திருவா றன்விளையில்-துன்பமறக்
கண்டடிமை செய்யக் கருதியமா றன்கழலே
திண்டிறலோர் யாவர்க்குந் தேவு  (70)
*******************
எட்டாம் பத்து

முதல் திருமொழி

1. தேவிமாராவார்

பகவான் பிராட்டியரோடு இருந்துகொண்டு திருவாறன் விளையில் திருவாய்மொழி கேட்க விரும்புகிறான். அங்குச் சென்று திருவாய்மொழி பாடுவதோடு மற்றும் பல கைங்கர்யங்களையும் செய்யவேண்டும் என்று ஆழ்வார் பாரித்தார் ஆனால், அது நடைபெறவில்லை.

பெருமானே! நீ அடியார்களுக்கு வசப்பட்டவன்! ஸர்வசக்தன்! எல்லாப் பொருள்களும் நீ இட்ட வழக்கு. அப்படி இருந்தும் நீ கட்டளை இட்டும் இது ஏன் நடைபெறவில்லை? என்று ஆழ்வார் சந்தேகம் கொண்டு சிந்திக்கிறார்.

ஆழ்வீர்! உமக்கு எவ்வளவோ செய்திருக்கிறேன்; தக்க நேரத்தில் இன்னும் பல நன்மைகளைச் செய்வேன் என்று பகவான் ஆழ்வாரைத் தேற்றினான். ஆழ்வாரும் ஒருவாறு தேறிப் பாடுகிறார் இங்கு.

ஆழ்வார் தம் சந்தேகம் தெளிதல்

எழுசீர் ஆசிரிய விருத்தம்

அப்பனே! நின்னுருவம் காணுமாறு அருள்வாய்!

3671. தேவிமா ராவார் திருமகள் பூமி யேவமற் றமரராட் செய்வார்,
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டுவேண் டுருவம்நின் னுருவம்,
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணதோர் பவளவாய் மணியே,
ஆவியே! அமுதே! அலைகடல் கடைந்த அப்பனே! காணுமா றருளாய்.

கண்ணா! நின் பெயரையே நான் பிதற்ற அருள்

3672. காணுமா றருளாய் என்றென்றே கலங்கிக் கண்ணநீர் அலமர வினையேன்
பேணுமா றெல்லாம் பேணிநின் பெயரே பிதற்றுமா றருளெனக் கந்தோ,
காணுமா றருளாய் காகுத்தா. கண்ணா! தொண்டனேன் கற்பகக் கனியே,
பேணுவார் அமுதே. பெரியதண் புனல்சூழ் பெருநிலம் எடுத்தபே ராளா!

நரசிம்மா! எங்களுக்குக் காட்சி தா

3673. எடுத்தபே ராளன் நந்தகோ பன்றன் இன்னுயிர்ச் சிறுவனே, அசோதைக்
கடுத்தபே ரின்பக் குலவிளங் களிறே! அடியனேன் பெரியவம் மானே,
கடுத்தபோர் அவுணன் உடலிரு பிளவாக் கையுகி ராண்டவெங் கடலே,
அடுத்ததோர் உருவாய் இன்றுநீ வாராய் எங்ஙனம் தேறுவர் உமரே?

அமுதே! நின் மாயை எனக்குப் புரியவில்லையே!

3674. உமருகந் துகந்த வுருவம்நின் னுருவம்ஆகி உன் தனக்கன்ப ரானார் அவர்,உகந்
தமர்ந்த செய்கையுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வி னையேன்,
அமரது பண்ணி அகலிடம் புடைசூழ் அடுபடை அவித்தாம் மானே,
அமரர்தம் அமுதே! அசுரர்கள் நஞ்சே! என்னுடை ஆருயி ரேயோ.

தேவதேவா! எங்கு வந்து உன்னைப் பெறுவேன்!

3675. ஆருயி ரேயோ! அகலிடம் முழுதும் படைத்திடந் துண்டுமிழ்ந் தளந்த,
பேருயி ரேயோ. பெரியநீர் படைத்தங் குறைந்தது கடைந்தடைத் துடைத்த,
சீரிய ரேயோ.மனிசர்க்குத் தேவர் போலத்தே வர்க்கும்தே வாவோ,
ஓருயி ரேயோ. உலகங்கட் கெல்லாம் உன்னைநான் எங்குவந் துறுகோ?

எல்லாமான பரமனை எப்படி அடைவேன்?

3676. எங்குவந் துறுகோ என்னையாள் வானே! ஏழுல கங்களும் நீயே,
அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே,
பொங்கிய புறம்பால் பொருளுள வேலும் அவையுமோ நீயின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான்புலம் இறந்ததும் நீயே.

அப்பனே! என் சந்தேகம் தெளியவில்லையே!

3677. இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீயின்னே யானால்,
சிறந்தநின் தன்மை யதுவிது வுதுவென் றறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்,
கறந்தபால் நெய்யே! நெய்யின் சுவையே. கடலினுள் அமுதமே, அமுதில்
பிறந்தவின் சுவையே! சுவையது பயனே! பின்னைதோள் மணந்தபே ராயா!

பள்ளிகொண்டானே! நின்னை வணங்குமாறு அறியேன்

3678. மணந்தபே ராயா! மாயத்தால் முழுதும் வல்வி னை யேனையீர் கின்ற,
குணங்களை யுடையாய். அசுரர்வன் கையர் கூற்றமே. கொடியபுள் ளுயர்த்தாய்,
பணங்களா யிரமும் உடையபைந் நாகப் பள்ளியாய்! பாற்கடல் சேர்ப்பா,
வணங்குமா றாறியேன். மனமும்வா சகமும் செய்கையும் யானும்நீ தானே.

அப்பனே! நின் தாள்களை எனக்கருள்

3679. யானும்நீ தானே யாவதோ மெய்யே அருநர கவையும் நீயானால்,
வானுய ரின்பம் எய்திலென் மற்றை நரகமே யெய்திலென்? எனிலும்,
யானும்நீ தானாய்த் தெளிதொறும் நன்றும் அஞ்சுவன் நரகம்நா னடைதல்,
வானுய ரின்பம் மன்னிவீற் றிருந்தாய் அருளுநின் தாள்களை யெனக்கே!

நின் அருளுக்குப் பதிலுதவியாக என் உயிரைத் தருவன்

3680. தாள்களை யெனக்கே தலைத்தலை சிறப்பத் தந்தபே ருதவிக்கைம் மாறா,
தோள்களை யாரத் தழுவிதென் னுயிரை அறவிலை செய்தனன் சோதீ,
தோள்களா யிரத்தாய். முடிகளா யிரத்தாய்! துணைமலர்க் கண்களா யிரத்தாய்,
தாள்களா யிரத்தாய்! பேர்களா யிரத்தாய்! தமியனேன் பெரிய அப்பனே.

இவற்றைப் படியுங்கள்: உய்யலாம்

3681. பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை, முனிவர்க்
குரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கோர் தனியப்பன் தன்னை,
பெரியவண் குருகூர் வண்சட கோபன் பேணின ஆயிரத் துள்ளும்,
உரியசொல் மாலை இவையும்பத் திவற்றால் உய்யலாம் தொண்டீர் நங்கட்கே.

நேரிசை வெண்பா

உலகீர்! மாறனையே நாம் நினைப்போம்

தேவ னுறைபதியிற் சேரப் பெறாமையால்
மேவுமடி யார்வசனாம் மெய்ந்நிலையும்-யாவையுந்தான்
ஆம்நிலையுஞ் சங்கித் தவைதெளிந்த மாறன்பால்
மாநிலத்தீர்! நங்கள் மனம்  (71)

இரண்டாந் திருமொழி

2. நங்கள் வரிவளை

என்னையும் அறியாமல் என் உள்ளத்தில் உலகப் பற்று சிறிதளவேனும் இருக்கிறதோ! இல்லாவிடில் பகவான் இவ்வாறு உபதேக்ஷிப்பானா? என்று ஐயமுற்ற ஆழ்வார், தமக்கு ஆத்மா, ஆத்மீயங்களில் சிறிதும் விருப்பம் இல்லாததைப் பகவானுக்கு அறிவிக்கிறார்.

தலைவனோடு கலந்து பிரிந்தாள் ஒரு தலைவி. மீண்டும் அவன் வரவில்லை. அவனிருக்கும் இடத்திற்குச் செல்ல முற்படுகிறாள் அத்தலைவி. உனக்கு இது தகாது என்று தோழியர் தடுக்கின்றார். அவர்கள் பேச்சுக்கு இணங்க இயலாது என்று தலைவி கூறுவதாக அமைந்துள்ளது இப்பகுதி.

தலைவனிடம் செல்லக் கருதிய தலைவி கூற்று

எண்சீர் ஆசிரிய விருத்தம்

வேங்கடவனைத் தேடுகின்றேன்

3682. நங்கள் வரிவளை யாயங் காளோ! நம்முடை ஏதலர் முன்பு நாணி,
நுங்கட் கியானொன்று ரைக்கும் மாற்றம் நோக்குகின் றேனெங்கும் காண மாட்டேன்,
சங்கம் சரிந்தன சாயி ழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன்,
வெங்கண் பறவையின் பாக னெங்கோன் வேங்கட வாணணை வேண்டிச் சென்றே.

திருவேங்கடவனின் ஏக்கத்தால் இளைக்கின்றேன்

3683. வேண்டிச்சென் றொன்று பெறுகிற் பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட் கேலும்,
ஈண்டிது ரைக்கும் படியை யந்தோ! காண்கின்றி லேனிட ராட்டி யேன்நான்,
காண்தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன்நங்கள் கோனைக் கண்டால்,
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வன் எத்தனை காலம் இளைக்கின் றேனே.

இனி நாணிப் பயனில்லை

3684. காலம் இளைக்கில் லால்வி னையேன் நானிளைக் கின்றிலன் கண்டு கொண்மின்,
ஞாலம் அறியப் பழிசு மந்தேன் நன்னுத லீர்.இனி நாணித் தானென்,
நீல மலர்நெடுஞ் சோதி சூழ்ந்த நீண்ட முகில்வண்ணன் கண்ணன் கொண்ட,
கோல வளையொடு மாமை கொள்வான் எத்தனை காலம்கூ டச்சென்றே?

ஆழிவலவனைக் கூடுவதற்குச் செல்கின்றேன்

3685. கூடச்சென் றேனினி என்கொ டுக்கேன்? கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்,
பாடற் றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிச ழிந்தேன்,
மாடக் கொடிமதிள் தென்கு ளந்தை வண்குட பால்நின்ற மாயக் கூத்தன்,
ஆடல் பறவை உயர்த்த வெல்போர் ஆழி வலவி னை யாதரித்தே.

பரமனிடம் யான் கொண்ட பற்றைச் சொல்லுதல் அரிது

3686. ஆழி வலவினை ஆதரிப்பும் ஆங்கவன்நம்மில் வரவும் எல்லாம்,
தோழியர் காள் நம்முடைய மேதான்? சொல்லுவ தோவிங் கரியது தான்,
ஊழிதோ றூழி ஒருவ னாக நன்குணர் வார்க்கும் உணர லாகா,
சூழ லுடைய சுடர்கொ ளாதித் தொல்லையஞ் சோதி நினைக்குங் காலே.

என் அழகு நிறத்தைத் திருமால் கவர்ந்துவிட்டான்

3687. தொல்லையஞ் சோதி நினைக்குங் காலென் சொல்லள வன்றிமை யோர்த மக்கும்,
எல்லையி லாதன கூழ்ப்புச் செய்யும் அத்திறம் நிற்கவெம் மாமை கொண்டான்,
அல்லி மலர்த்தண் டுழாயும் தாரான் ஆர்க்கிடு கோவினிப் பூசல் சொல்லீர்,
வல்லி வளவயல் சூழ்கு டந்தை மாமலர்க் கண்வளர் கின்ற மாலே.

நான் எப்படியாவது கேசவனைக் கண்டுவிடுவேன்

3688. மாலரி கேசவன் நார ணஞ்சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றென்று,
ஒல மிடவென்னைப் பண்ணி விட்டிட் டொன்று முருவும் சுவடும் காட்டான்,
ஏல மலர்குழல் அன்னை மீர்காள். என்னுடைத் தோழியர் காள்! என்செய்கேன்?
காலம் பலசென்றும் காண்ப தாணை உங்களோ டெங்க ளிடையில் லையே.

பாசம் விட்டாலன்றோ பரமனைக் காணமுடியும்?

3689. இடையில் லையான் வளர்த்த கிளிகாள். பூவைகள் காள்.குயில் காள்!ம யில்காள்,
உடையநம் மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழியவொட் டாது கொண்டான்,
அடையும் வைகுந்த மும்பாற் கடலும் அஞ்சன வெற்பும் அவை நணிய,
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை அன்றி யவனவை காண்கொ டானே.

தேவபிரானுக்கு நான் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேனே!

3690. காண்கொடுப் பானல்ல னார்க்கும் தன்னைக் கைசெயப் பாலதோர் மாயந் தன்னால்,
மாண்குறல் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த,
சேண்சுடர்த் தோள்கள் பலத ழைத்த தேவ பிராற்கென் நிரைவினோடு, நாண்கொடுத்
தேனினி யென்கொடுக்கேன் என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்.

என் மனம் கண்ணனின் மலர்ப்பாதம் அடைந்துவிட்டது

3691. என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்! யானினச் செய்வதென்? என்நெஞ் சென்னை,
நின்னிடை யேனல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இருகைக் கொண்டு,
பன்னெடுஞ் சூழ்சுடர் ஞாயிற் றோடு பான்மதி ஏந்தியொர் கோல நீல,
நன்னெடுங் குன்றம் வருவ தொப்பான் நாண்ம லர்ப்பா தமடைந் ததுவே.

இவற்றைப் படித்தோர் தீமை நீங்கியிருப்பர்

3692. பாதம் அடைவதன் பாசத் தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு,
கோதில் புகழ்க்கண் ணன்தன் னடிமேல் வண்குரு கூர்ச்சட கோபன் பு சொன்ன,
தீதிலந்தாதியோ ராயி ரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்,
ஆதுமோர் தீதில ராகி யிங்கும் அங்குமெல் லாமமை வார்கள் தாமே.

நேரிசை வெண்பா

தமது உயிரின்மீது பற்றில்லாதவன் மாறன்

நங்கருத்தை நன்றாக நாடிநிற்கும் மாலறிய
இங்கிவற்றி லாசை யெமக்குளதென்? சங்கையினால்
தன்னுயிரின் மற்றினசை தானொழிந்த மாறன்றான்
அந்நிலையை யாய்ந்துரைத்தான் அங்கு  (72)

மூன்றாந் திருமொழி

3. ஆங்குமிங்கும்

ஆழ்வார், பகவானின் எழில்மிகு சுகுமாரமான வடிவழகை நினைத்து எம்பெருமான் அனுகூலர்களாக இல்லாதவர்கள் வாழும் இந்நிலத்தில் தன் வடிவழகைக் காட்டிக் கொண்டு உலாவுகிறானே! இவனுக்கு என்ன தீங்கு நேருமோ? என்று அஞ்சினார். பகவான் ஆழ்வீர், நீர் அஞ்ச வேண்டாம் என்மீது பரிவு காட்ட முக்தர், நித்யர், முமுக்ஷúக்கள் அனைவரும் இருக்கின்றனர் என்று கூறினான் அதனால் ஆழ்வார் அச்சம் தீர்ந்தமை ஈண்டுக் கூறப்பட்டுள்ளது.

உலகில் பக்தர்கள் இருத்தலால் அச்சம் தீர்தல்

கலி நிலைத்துறை

யாவரும் கண்ணனையே சரணடைவர்

3693. அங்கு மிங்கும் வானவர் தானவர் யாவரும்,
எங்கும் இனையையென் றுன்னை அறியகிலா தலற்றி,
அங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள்,
சங்கு சக்கரக் கையவ னென்பர் சரணமே.

ஆழிப்படை ஏந்திய ஈசற்கு ஆளாகுக

3694. சரண மாகிய நான்மறை நூல்களும் சாராதே,
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பென் றிவைமாய்த்தோம்,
கரணப் பல்படை பற்றற வோடும் கனலாழி,
அரணத் திண்படை யேந்திய ஈசற் காளாயே.

எம்பெருமானுக்கு இவ்வுலகில் காவல் யார்?

3695. ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார்தாம்,
வாளும் வில்லுங் கொண்டுபின் செல்வார் மாற்றில்லை,
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக்காணேன்,
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே.

இருள்மிக்க உலகில் கார்வண்ணனை எப்படிக் காண்பேன்?

3696. ஞாலம் போனகம் பற்றியோர் முற்றா வுருவாகி,
ஆலம் பேரிலை யன்னவ சஞ்செய்யும் அம்மானே,
காலம் பேர்வதோர் காரிரு ளுழியொத் துளதால்,உன்
கோலங் காரேழில் காணலுற் றாழும் கொடியேற்கே.

திரிவிக்கிரமா! களைப்பால் உறங்குகிறாயோ?

3697. கொடியார் மாடக் கோளு ரகத்தும் புளிங்குடியும் ,
மடியா தின்னே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான்,
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல்,
இப்படிதான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே.

திருமால் என் மனத்தில் சுற்றி வருகிறார்

3698. பணியா அமரர் பணிவும் பண்பும் தாமேயாம்,
அணியார் ஆழியும் சங்கமு மேந்தும் அவர்காண்மின்,
தணியா வெந்நோ யுலகில் தவிர்ப்பான், திருநீல
மணியார் மேனியோ டென்மனம் சூழ வருவாரே.

அடியேன் திறனைப் பகவானிடம் யாரும் சொல்லவில்லையே!

3699. வருவார் செல்வார் வண்பரி சாரத் திருந்த,என்
திருவாழ் மார்வற் கென்திறம் சொல்லார் செய்வதென்,
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங் கும்மோடு,
ஒருபா டுழல்வானோரடி யானு முளனென்றே.

திருமாலே! நீ என்று எனக்கருள நினைப்பாய்?

3700. என்றே யென்னையுன் ஏரார் கோலத் திருந்தடிக்கீழ்,
நின்றே யாட்செய்ய நீகொண் டருள நினைப்பதுதான்,
குன்றெழ் பாரேழ் சூழ்கடல் ஞாலம் முழுவேழும்,
நின்றே தாவிய நீள்கழல் ஆழித் திருமாலே.

திருமாலுக்கே நான் அடிமை என்பேன்

3701. திருமால்! நான்முகன் செஞ்சடை யானென் றிவர்கள்,எம்
பெருமான் தன்மையை யாரறி கிற்பார் பேசியென்,
ஒருமா முதல்வா! ஊழிப் பிரானென் னையாளுடை,
கருமா மேனியன் என்பனென் காதல் கலக்கவே.

கடல் கடைந்தானை நான் முற்றமுடியப் புகழ இயலாது

3702. கலக்க மில்லா நல்தவ முனிவர் கரைகண்டோர்,
துளக்க  மில்லா வானவ ரெல்லாம் தொழுவார்கள்,
மலக்க மெய்த மாகடல் தன்னைக் கடைந்தானை,
உலக்க நாம்புகழ் கிற்பதென் செய்வ துரையீரே.

இவற்றைப் படித்தால் பிறவித் துன்பம் அகலும்

3703. உரையா வெந்நோய் தவிர அருள்நீண் முடியானை,
வரையார் மாடம் மன்னு குருகூர்ச் சடகோபன்,
உரையேய் சொல்தொடை ஓரா யிரத்து ளிப்பத்தும்,
நிரையே வல்லார் நீடுல கத்துப் பிறவாரே.

நேரிசை வெண்பா

மாறன் திருவடிகளைச் சேர்ந்தவர் வாழ்வர்

அங்கமரர் பேண அவர்நடுவே வாழ்திருமாற்கு
இங்கோர் பரிவரிலை யென்றஞ்ச எங்கும்
பரிவருள ரென்னப் பயந்தீர்ந்த மாறன்
வரிகழற்றாள் சேர்ந்தவர்வாழ் வார்  (73)

நான்காந் திருமொழி

4. வார்கடா அருவி

ஆழ்வீர்! திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாற்றிலே மிகவும் வல்லமை பொருந்திய மூவாயிரம் வேதியர்கள் பரிந்து நோக்குவதையும் அவர்களோடு நான் சேர்ந்திருப்பதையும் பாரீர்! எனக்கே உரிய வீர்ய பராக்ரமம் முதலானவற்றையும் பாரீர் என்று பகவான் அவற்றைக் காட்ட ஆழ்வார் அச்சம் நீங்கி அவனது வடிவழகை அனுபவித்து உகக்கிறார்.

திருச்செங்குன்றூரில் கண்ணனைத் தரிசித்து மகிழ்தல்

எழுசீர் ஆசிரிய விருத்தம்

நாங்கள் சேருமிடம் திருச்செங்குன்றூரே

3704. வார்கடா அருவி யானைமா மலையின் மருப்பி ணைக் குவடிறுத் துருட்டி,
ஊர்கொள்திண் பாகன் உயிர்செகுத் தரங்கின் மல்லரைக் கொன்றுசூழ் பரண்மேல்,
போர்கடா வரசர் புறக்கிட மாட மீமசைக் கஞ்சனைத் தகர்த்த,
சீர்கொள்சிற் றாயன் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றெங்கள்செல் சார்வே.

திருச்செங்குன்றூரானே எனக்குத் துணை

3705. எங்கள்செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பனென் அப்பன்,
பொங்குமூ வுலகும் படைத்தளித் தழிக்கும் பொருந்துமூ வுருவனெம் அருவன்,
செங்கயல் உகளும் தேம்பணை புடைசூழ் திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு
அங்கமர் கின்ற, ஆதியான் அல்லால் யாவர்மற் றெனமர் துணையே?

திருச்செங்குன்றூரான் திருவடிகளே எனக்குச் சரண்

3706. என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்தவெம் பெருமான்,
முன்னைவல் வினைகள் முழுதுடன் மாள என்னையாள் கின்றேம் பெருமான்,
தென்திசைக் கணிகொள் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றங்கரை மீபால்
நின்றவெம் பெருமான், அடியல்லால் சரணம் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே.

திருச்செங்குன்றூரான் திருவடிகளே எனக்குக் காவல்

3707. பிறிதில்லை யெனக்குப் பெரியமூ வுலகும் நிறையப்பே ருருவமாய் நிமிர்ந்த,
குறிய மாண் எம்மான் குரைகடல் கடைந்த கோலமா ணிக்கமென் எம்மான்,
செறிகுலை வாழை கமுகுதெங் கணிசூழ் திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு
அறிய,மெய்ம் மையே நின்றவெம் பெருமான் அடியிணை யல்லதோர் அரணே.

என் ஆவி கண்ணனையல்லது விரும்பாது

3708. அல்லதோர் அரணும் அவனில்வே றில்லை அதுபொரு ளாகிலும், அவனை
அல்லதென் ஆவி அமர்ந்தணை கில்லா தாதலால் அவனு றை கின்ற,
நல்லநான் மறையோர் வேள்வியுள் மடுத்த நறும்புகை விசும்பொளி மறைக்கும்,
நல்லநீள் மாடத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றெனக்குநல் லரணே.

பள்ளிகொண்டானைத் திருச்செங்குன்றூரில் கண்டேன்

3709. எனக்குநல் லரணை எனதா ருயிரை இமையவர் தந்தைதாய் தன்னை,
தனக்குன்தன் தன்மை அறிவரி யானைத் தடங்கடல் பள்ளியம் மானை,
மனக்கொள்சீர் மூவா யிரவர்வண் சிவனும் அயனும் தானுமொப் பார்வாழ்,
கனக்கொள்திண் மாடத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள்கண் டேனே.

திருச்செங்குன்றூரான் என் சிந்தையில் உள்ளான்

3710. திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள் கண்டவத் திருவடி யென்றும்,
திருச்செய்ய கமலக் கண்ணூம்செவ் வாயும் செவ்வடி யும்செய்ய கையும்,
திருச்செய்ய கமல வுந்தியும் செய்ய கமலமார் பும்செய்ய வுடையும்,
திருச்செய்ய முடியும் ஆரமும் படையும் திகழவென் சிந்தையு ளானே.

திருச்செங்குன்றூரானைப் புகழும் விதம் அறியேன்

3711. திகழவென் சிந்தை யுள்ளிருந் தானைச் செழுநிலத் தேவர்நான் மறையோர்,
திசைகைகூப்பி யேத்தும் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றங்கரை யானை,
புகர்கொள்வா னவர்கள் புகலிடந் தன்னை அசுரர்வன் கையர்வெங் கூற்றை,
புகழுமா றறியேன் பொருந்துமூ வுலகும் படைப்பொடு கெடுப்புக்காப் பவனே.

திருச்செங்குன்றூரானே எல்லாத் தெய்வங்களும்

3712. படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவபெருமான் அவனே,
இடைப்புக்கோ ருருவும் ஒழிவில்லை யவனே புகழ்வில்லை யாவையும் தானே,
கொடைப்பெரும் புகழார் இனையர்தன் னானார் கூறிய விச்சையோ டொழுக்கம்,
நடைப்பலி யியற்கைத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றமர்ந்த நாதனே.

திருச்செங்குன்றூர்ப் பெருமானையே விரும்பினேன்

3713. அமர்ந்த நாதனை யவரவ ராகி அவர்க்கருள் அருளுமம் மானை
அமர்ந்ததண் பழனத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றாற் றங்கரை யானை,
அமர்ந்தசீர் மூவா யிரவர்வே தியர்கள் தம்பதி யவனிதே வர்வாழ்வு,
அமர்ந்தமா யோனை முக்கணம் மானை நான்முக னையமர்ந் தேனே.

இப்பாடல்கள் பிறவித் துன்பத்தை முடிக்கும்

3714. தேனைநன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துல குண்டவம் மானை,
வானநான் முகனை மலர்ந்தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்தமா யோனை,
கோனைவண் குருகூர்ச் வண்சட கோபன் சொன்னவா யிரத்துளிப் பத்தும்,
வானின்மீ தேற்றி யருள்செய்து முடிக்கும் பிறவிமா மாயக்கூத் தினையே.

நேரிசை வெண்பா

மனமே! மாறன் திருவடிகளையே சேர்

வாராமல் அச்சமினி மால்தன் வலியினையும்
சீரார் பரிவருடன் சேர்த்தியையும்-பாருமெனத்
தானுகந்த மாறன்றாள் சார்நெஞ்சே! சாராயேல்
மானிடவ ரைச்சார்ந்து மாய்  (74)

ஐந்தாந் திருமொழி

5. மாயக்கூத்தா!

பகவானின் வடிவழகினை நெஞ்சினால் அனுபவிக்கும் ஆழ்வார் வடிவழகைக் கண்ணால் கண்டு அவனை அணைந்து வாழ வேண்டும் என்ற பெருவிடாய் கொள்கிறார். என் விடாய் எல்லாம் தீரும்படி காண வாராயே என்றழைக்கிறார். ஆனால் பகவான் வரவில்லை இப்படியே துன்புற்று முடிந்து போகப் போகிறோம் என்று நினைத்து அரற்றுகிறார் ஆழ்வார்.

ஆர்வம் மிகுதியால் ஆழ்வார் அழுது புலம்பல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

கண்ணா! ஒரு நாளாவது நான் காண வா

3715. மாயக் கூத்தா! வாமனா! வினையேன் கண்ணா! கண்கைகால்
தூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாய் முகிழதா,
சாயல் சாமத் திருமேனி தண்பா சடையா, தாமரைநீள்
வாசத் தடம்போல் வருவானே! ஒருநாள் காண வாராயே!

என்மீது இரங்கி ஒரு நாளாவது தரிசனம் தா

3716. காண வாராய் என்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து,அடியேன்
நாணி நன்னாட் டலமந்தால் இரங்கி யொருநாள் நீயந்தோ,
காண வாராய் கருநாயி றுதிக்கும் கருமா மாணிக்க,
நாணல் மலைபோல் சுடர்ச்சோதி முடிசேர் சென்னி யம்மானே.

கண்ணா! அழுகிறேனே! ஒரு முறையாவது காட்சி தா

3717. முடிசேர் சென்னி யம்மா!நின் மொய்பூந் தாமத் தண்டுழாய்,
கடிசேர் கண்ணிப் பெருமானே! என்றென் றேங்கி யழுதக்கால்,
படிசேர் மகரக் குழைகளும் பவள வாயும் நால்தோளும்,
துடிசே ரிடையும் அமைந்ததோர் தூநீர் முகில்போல் தோன்றாயே.

எந்தாய்! நின் திருக்கோலம் என் மனத்தில் நிறைந்தது

3718. தூநீர் முகில்போல் தோன்றும்நின் சுடர்க்கொள் வடிவும் கனிவாயும்,
தேநீர்க் கமலக் கண்களும் வந்தென் சிந்தை நிறைந்தவா,
மாநீர் வெள்ளீ மலைதன்மேல் வண்கார் நீல முகில்போல,
தூநீர்க் கடலுள் துயில்வானே! எந்தாய்! சொல்ல மாட்டேனே!

கண்ணா! நின் பேரொளிதான் என்னே!

3719. சொல்ல மாட்டேன் அடியேனுன் துளங்கு சோதித் திருப்பாதம்,
எல்லை யில்சீ ரிளஞாயி றிரண்டு போலென் னுள்ளவா!,
அல்லல் என்னும் இருள்சேர்தற் குபாயம் என்னே?, ஆழிசூழ்
மல்லல் ஞால முழுதுண்ட மாநீர்க் கொண்டல் வண்ணனே!

கண்ணா! உன் திருவடி காண ஒரு நாளாவது வா

3720. கொண்டல் வண்ணா! குடக்கூத்தா! வினையேன் கண்ணா. கண்ணா,என்
அண்ட வாணா! என்றென்னை ஆளக் கூப்பிட் டழைத்தக்கால்,
விண்டன் மேல்தான் மண்மேல்தான் விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான்,
தொண்ட னேனுள் கழல் காண ஒருநாள் வந்து தோன்றாயே.

அம்மானே! அடியேனைக் கூவிப் பணிகொள்

3721. வந்து தோன்றா யன்றேலுன் வையம் தாய மலரடிக்கீழ்,
முந்தி வந்து யான்நிற்ப முகப்பே கூவிப் பணிகொள்ளாய்,
செந்தண் கமலக் கண்கைகால் சிவந்த வாயோர் கருநாயிறு,
அந்த மில்லாக் கதிர்பரப்பி அலர்ந்த தொக்கும் அம்மானே.

கண்ணா! நீ எனக்குக் காட்சி தருவதுதான் தக்கது

3722. ஒக்கும் அம்மா னுருவமென் றுள்ளம் குழைந்து நாணாளும்,
தொக்க மேகப் பல்குழாங்கள் காணுந் தோறும் தொலைவன்நான்,
தக்க ஐவர் தமக்காயன்று றீரைம் பதின்மர் தாள்சாய,
புக்க நல்தேர்த் தனிப்பாகா. வாராய் இதுவோ பொருத்தமே?

கண்ணா! உன் எண்ணம்தான் என்ன?

3723. இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய் ஏறும் இருஞ்சிசிறைப்புள்,
அதுவே கொடியா வுயர்த்தானே! என்றென் றேங்கி யழுதக்கால்,
எதுவே யாகக் கருதுங்கொல் இம்மா ஞாலம் பொறைதீர்ப்பான்,
மதுவார் சோலை யுத்தர மதுரைப் பிறந்த மாயனே?

எங்கும் நிறைந்தவனே! உன்னை எங்கே காண்பேன்?

3724. பிறந்த மாயா! பாரதம் பொருத மாயா! நீயின்னே,
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவு மாய பெருமானே,
கறந்த பாலுள் நெய்யேபோல் இவற்று ளெங்கும் கண்டுகொள்,
இறந்து நின்ற பெருமாயா! உன்னை எங்கே காண்கேனே?

இவற்றைப் பாடுக: பெருமகிழ்ச்சி அடையலாம்

3725. எங்கே காண்கேன் ஈன்துழய் அம்மான் றன்னை யான்? என்றென்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்,
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,
இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே.

நேரிசை வெண்பா

சடகோபனுடன் இரண்டறக் கலந்துவிடுக

ஆறாந் திருமொழி

6. எல்லியும்

உண்மையில் ஆழ்வாரைப் பெறவேண்டும் என்ற பெருவிடாய் பகவானுக்கே இருந்தது. ஆழ்வாருக்கு உதவவில்லையே என்ற வருத்தம் அவனுக்கு இருந்தது. திடீரென்று எதிரில் வந்தால் ,பெருமகிழ்வு கொண்டிருக்கும் ஆழ்வாருக்கு ஏதேனும் தீங்கு நேரிடும் என்று அவன் நினைத்தான்; ஆழ்வாரது மகிழ்ச்சி வெள்ளத்தின் வேகத்தைச் சிறிது சிறிதாகக் கட்டுப்படுத்தி. அவரோடு பரிமாறவேண்டும் என்றும் முடிவு செய்தான்; அதனால் திருக்கடித்தானத்தில் (மலைநாட்டுத் திருப்பதிகளில் ஒன்று) வந்து எழுந்தருளி இருந்தான். பகவானின் ஆசையை நினைத்து ஆழ்வார் இனியராய் அதைச் சொல்லியனுபவிக்கிறார்.

தமக்கு அருள் செய்தற்காக எம்பெருமான் திருக்கடித்தானத்தில் இருந்த பான்மையைக் கூறல்

கலி விருத்தம்

நமக்கு அருளும் அப்பன் ஊர் திருக்கடித்தானம்

3726. எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ,
நல்ல அருள்கள் நமக்கேதந் தருள்செய்வான்,
அல்லியந் தண்ணந் துழாய்முடி யப்பனூர்,
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே.

என் மனதில் உறைபவன் திருக்கடித்தானத்தான்

3727. திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும்,
ஒருக்கடுத் துள்ளே உறையும் பிரான்கண்டீர்,
செருக்கடுத் தன்று திகைத்த அரக்கரை,
உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே.

நினைக்குந்தோறும் தித்திப்பவன் திருக்கடித்தானத்தான்

3728. ஒருவ ரிருவரோர் மூவ ரெனநின்று,
உருவு கரந்துள் ளுந்தோறும் தித்திப்பான்,
திருவமர் மார்வன் திருக்கடித் தானத்தை,
மருவி யுரைகின்ற மாயப் பிரானே.

என்னெஞ்சத்தில் தங்குபவன் மாயனே

3729. மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற,
நேயத்தி னால்நெஞ்சம் நாடு குடிகொண்டான்,
தேசத் தமரர் திருக்கடித் தானத்தை,
வாசப் பொழில்மன்னு கோயில்கொண் டானே.

குடக்கூத்தன் கோயில் திருக்கடித்தானம்

3730. கோயில்கொண் டான்தன் திருக்கடித் தானத்தை,
கோயில்கொண் டானத னேடுமென் னெஞ்சகம்,
கோயில்கொள் தெய்வமெல் லாம்தொழ, வைகுந்தம்
கோயில்கொண் டகுடக் கூத்தவம் மானே.

திருக்கடித்தானம் நினைந்தால் துன்பம் நீங்கும்

3731. கூத்தவம் மான்கொடி யேனிடர் முற்றவும்,
மாய்த்தவம் மான்மது சூதவம் மானுறை,
பூத்த பொழில்தண் திருக்கடித் தானத்தை,
ஏத்தநில் லாகுறிக் கொண்டமின் இடரே.

தேவர்கள் நணுகும் இடம் திருக்கடித்தானம்

3732. கொண்டமின் இடர்கெட வுள்ளத்துக் கோவிந்தன்,
மண்விண் முழுதும் அளந்தவொண் டாமரை,
மண்ணவர் தாம்தொழ வானவர் தாம்வந்து,
நண்ணு திருக்கடித் தான நகரே.

என் நெஞ்சும் திருக்கடித்தானமும் அவன் பதி

3733. தான நகர்கள் தலைசிறந் தெங்கெங்கும்,
வானிந் நிலம்கடல் முற்றுமெம் மாயற்கே,
ஆன விடத்துமென் நெஞ்சும் திருக்கடித்
தான நகரும், தனதாயப் பதியே.

திருக்கடித்தானத்தான் அற்புதன்

3734. தாயப் பதிகள்தலைசிறந் தெங்கெங்கும்,
மாயத்தி னால்மன்னி வீற்றிருந் தானுறை,
தேயத் தமரர் திருக்கடித் தானத்துள்,
ஆயர்க் கதிபதி அற்புதன் தானே.

கற்பகச் சோலையே திருக்கடித்தானம்

3735. அற்புதன் நாரா யணனரி வாமனன்,
நிற்பது மேவி யிருப்பதென் னெஞ்சகம்,
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்,
கற்பகச் சோலைத் திருக்கடித் தானமே.

இப்பாடல்கள் நம்மை வைகுந்தத்தில் இருத்தும்

3736. சோலை திருக்கடித் தானத் துறைதிரு மாலை,
மதிள்குரு கூர்ச்சடகோபன்சொல்,
பாலோ டமுதன்ன ஆயிரத் திப்பத்தும்,
மேலைவை குந்தத் திருத்தும் வியந்தே.

நேரிசை வெண்பா

மாலைக் கண்டு பாடியவன் மாறன்

எல்லி பகல்நடந்த இந்தவிடாய் தீருகைக்கு
மெல்லவந்து தான்கலக்க வேணும் என நல்லவர்கள்
மன்னுகடித் தானத்தே மாலிருக்க மாறன்கண்டு
இந்நிலையைச் சொன்னான் இருந்து (76)

ஏழாந் திருமொழி

7. இருத்தும் வியந்து

ஆழ்வார் பேறு பெற்றுக் களிக்கும் திருவாய்மொழி இது

தமது நெஞ்சத்தில் விமலன் வீற்றிருக்கும் பான்மையை ஆழ்வார் மகிழ்ந்து கூறல்

கலி விருத்தம்

என் கருத்தறிந்து அமர்ந்தான் வாமனன்

3737. இருந்தும், வியந்து என்னைத்தன் டிபான் அழக்கீழ், என்று
அருத்தித்து, எனைத்து ஓர் பல நாள் அர்த்தேற்கு,
பொருத்தம் உடை வாமன்ன் தான் புகுந்து, என் – தன்
கருத்தை உற, வீற்றிருந்தாள் – கண்டுகொண்டே.

கஜேந்திரனுக்கு அருள் செய்தவன் இனியவன்

3738. இருந்தான் கண்டுகொண் டெனதேழை நெஞ்சாளும்,
திருந்தாத வோரைவ ரைத்தேய்ந் தறமன்னி,
பெருந்தாள் களிற்றுக் கருள்செய்த பெருமான்,
தருந்தான் அருள்தான் இனியான் அறியேனே.

என் மன இருளைப் போக்கியவன் பரமன்

3739. அருள்தா னினியான் அறியேன் அவனென்னுள்,
இருள்தான் அறவீற் றிருந்தான் இதுவல்லால்,
பொருள்தா னெனில்மூ வுலகும் பொருளல்ல,
மருள்தானீதோ? மாய மயக்கு மயக்கே.

சோதியை என்னுள் வைத்தான் எம்பெருமான்

3740. மாய மயக்குமயக் கானென்னை வஞ்சித்து,
ஆயன் அமரர்க் கரியே றெனதம்மான்,
தூய சுடர்ச்சோதி தனதென்னுள் வைத்தான்,
தேயம் திகழும்தன் திருவருள் செய்தே.

மாயன் மனத்தில் நின்றான். வேறு புகழே வேண்டாம்

3741. திகழுந்தன் திருவருள் செய்துல கத்தார்,
புகழும் புகழ்தா னதுகாட்டித் தந்து,என்னுள்
திகழும் மணிக்குன்ற மொன்றே யொத்துநின்றான்,
புகழும் புகழ்மற் றெனக்குமோர் பொருளே?

கண்ணன் தன்னை எனக்குத்தான் தருவான்

3742. பொருள்மற் றெனக்குமோர் பொருள்தன்னில் சீர்க்கத்
தருமேல்,பின் யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்?,
கருமா ணிக்கக் குன்றத்துத் தாமரைபோல்,
திருமார்பு கால்கண்கை செவ்வாய் உந்தியானே.

கண்ணன் திருவருளையே யான் அறிவேன்

3743. செவ்வாயுந்தி வெண்பல் சுடர்க்குழை, தன்னோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில்முன் வளாய்க்கொள்ள,
செவ்வாய் முறுவலோ டெனதுள்ளத் திருந்த,
அவ்வா யன்றியான் அறியேன்மற் றருளே.

பிரானார் வெறிதே அருள் செய்வர்

3744. அறியேன்மற் றருளென்னை யாளும் பிரானார்,
வெறிதே யருள்செய்வர் செய்வார்கட் குகந்து,
சிறியே னுடைச்சிந்தை யுள்மூ வுலகும்,தம்
நெறியா வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரே.

திருமாலை விழுங்கி வயிற்றில் இருத்தினேன்

3745. வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரும் யவரும்,
வயிற்றிற்கொண்டு நின்றொரு மூவுல கும்,தம்
வயிற்றிற்கொண்டு நின்றவண் ணம்நின்ற மாலை,
வயிற்றிற்கொண்டு மன்ன வைத் தேன்மதி யாலே.

பரமனைக் கருத்தில் இருத்தித் தளர்ச்சி நீங்கினேன்

3746. வைத்தேன் மதியா லெனதுள்ளத் தகத்தே,
எய்த்தே யொழிவேனல் லேனென்றும் எப்போதும்,
மொய்த்தேய் திரைமோது தண்பாற் கடலுளால்,
பைத்தேய் சுடர்ப்பாம் பணைநம் பரனையே.

இப்பாடல்கள் பிறவிப் பிணி நீக்கும்

3747. சுடர்ப்பாம் பணைநம் பரனைத் திருமாலை,
அடிச்சேர் வகைவண் குருகூர்ச் சடகோபன்,
முடிப்பான் சொன்னவா யிரத்திப்பத் தும்சன்மம்
விட,தேய்ந் தறநோக்கும் தன்கண்கள் சிவந்தே.

நேரிசை வெண்பா

தான் கண்ணனைக் கலந்தமை கூறினான் மாறன்

இருந்தவன்றான் வந்திங் கிவரெண்ண மெல்லாம்
திருந்தஇவர் தந்திறத்தே செய்து-பொருந்தக்
கலந்தினிய னாய்நிற்கக் கண்டசட கோபன்
கலந்தநெறி கட்டுரைத்தான் கண்டு   (77)

எட்டாந் திருமொழி

8. கண்கள் சிவந்து

பகவான் ஆழ்வரோடு கலந்தான். ஆழ்வார் தம்மைச் சிறியேன் என்று கூறிக்கொண்டு தம்முடைய தாழ்மையைக் கூறிக் கொள்ளத் தொடங்கிவிட்டார். இதை முற்றவிடாமல் இப்போதே களைந்திடவேண்டும் என்று எண்ணினான். தம்தாழ்மைக்கு எதைக் காரணமாக ஆழ்வார் நினைக்கிறாரோ அந்த ஆத்மாவின் பெருமையை உணர்த்தி அருளுகிறான் அந்நிலையை உரைக்கிறார் ஆழ்வார்.

ஆத்மாவின் உயர்வை அறிந்த ஆழ்வாரின் உரை

அறுசீர் ஆசிரிய விருத்தம்

சாரங்கன் அடியேன் மனத்தில் உள்ளான்

3748. கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து,உள்ளே
வெண்பல் இலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்,
கொண்டல் வண்ணன் சுடர்முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன்,
ஒண்சங் கதைவா ளாழியான் ஒருவன் அடியே னுள்ளானே.

ஆத்மாவில் இருக்கும் பரன் உடலிலும் உள்ளான்

3749. அடியே னுள்ளான் உடலுள்ளான் அண்டத் தகத்தான் புறத்துள்ளான்,
படியே யிதுவென் றுரைக்கலாம், படியன் அல்லன் பரம்பரன்,
கடிசேர் நாற்றத் துள்ளாலை இன்பத் துன்பக் கழிநேர்மை,
ஒடியா இன்பப் பெருமையோன் உணர்வி லும்ப ரொருவனே.

கண்ணனை என் உணர்வில் இருத்தினேன்

3750. உணர்வி லும்ப ரொருவனை அவன தருளா லுறல்பொருட்டு,என்
உணர்வி னுள்ளே யிருத்தினேன் அதுவும் அவன தின்னருளே,
உணர்வும் உயிரும் உடம்பும்மற் றுலப்பி லனவும் பழுதேயாம்,
உணர்வைப் பெறவூர்ந் திறவேறி யானும் தானா யொழிந்தானே.

கண்ணன் என்னுள் கலந்துவிட்டமை உணர்ந்தேன்

3751. யானும் தானா யொழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனை,
தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணைத்த தனிமுதலை,
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகித் தித்தித்து,என்
ஊனி லுயிரி லுணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே.

கண்ணனின் உண்மைத் தன்மையை அறிதல் அரிது

3752. நின்ற ஒன்றை யுணர்ந்தேனுக் கதனுள் நேர்மை அதுவிதுவென்று,
ஒன்றும் ஒருவர்க் குணரலாகா துணர்ந்தும் மேலும் காண்பரிது
சென்று சென்று பரம்பரமாய் யாது மின்றித் தேய்ந்தற்று,
நன்று தீதென் றறிவரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே.

பாசமும் பற்றும் அகன்றால் மோட்சம் கிட்டும்

3753. நன்றாய் ஞானம் கடந்துபோய் நல்லிந் திரிய மெல்லாமீர்த்து,
ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பி லதனை யுணர்ந்துணர்ந்து,
சென்றாங் கின்ப துன்பங்கள் செற்றுக் களைந்து பசையற்றால்,
அன்றே யப்போ தேவீடு அதுவே வீடு வீடாமே.

பற்றினை விடுதலே வீடு பேற்றின்பம்

3754. அதுவே வீடு வீடு பேற்றின்பந் தானும் அதுதேறி,
எதுவே தானும் பற்றின்றி யாது மிலிக ளாகிற்கில்,
அதுவே வீடு வீடு பேற்றின்பந் தானும் அதுதேறாது,
எதுவே வீடே தின்பம்? என்றெய்த்தா ரெய்த்தா ரெய்த்தாரே.

உயிர் பிரியும் பொழுதுகூடக் கண்ணனையே எண்ணுக

3755. எய்த்தா ரெய்த்தா ரெய்த்தாரென் றில்லாத் தாரும் புறத்தாரும்
மொய்த்து,ஆங் கலறி முயங்கத்தாம் போகும் போது,உன் மத்தர்போல்
பித்தே யேறி யனுராகம் பொழியும் போதெம் பெம்மானோடு
ஒத்தே சென்று,அங்குளம்கூடக் கூடிற் றாகில் நல்லுறைப்பே.

யாவும் கண்ணனின் ஸ்வரூபமே

3756. கூடிற் றாகில் நல்லுறைப்புக் கூடாமையைக் கூடினால்,
ஆடல் பறவை யுயர்கொடியெம் ஆயனாவ ததுவதுவே,
வீடைப் பண்ணி யொருபரிசே எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்,
ஓடித் திரியும் யோகிகளும் உளரு மில்லை யல்லரே.

கண்ணனைக் கலந்தமையால் தெருளும் மருளும் மாய்த்தோம்

3757. உளரு மில்லை யல்லராய் உளரா யில்லை யாகியே,
உளரெம் மொருவர் அவர்வந்தென் உள்ளத் துள்ளே யுறைகின்றார்
வளரும் பிறையும் தேய்பிறையும் போல் அசைவும் ஆக்கமும்,
வளரும் சுடரும் இருளும்போல் தெருளும் மருளும் மாய்த்தோமே.

இப்பாடல்களால் கண்ணன் கழலிணை கிட்டும்

3758. தெருளும் மருளும் மாய்த்துத்தன் திருந்து செம்பொற் கழலடிக்கீழ்
அருளி யிருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம்,திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓரா யிரத்து ளிப்பத்தால்,
அருளி யடிக்கீ ழிருத்தும்நம் அண்ணல் கருமா ணிக்கமே.

நேரிசை வெண்பா

ஆரயிரின் ஏற்றம் உரைத்தவன் மாறன்

கண்ணிறைய வந்து கலந்தமால் இக்கலவி
திண்ணிலையா வேணுமெனச் சிந்தித்துத்-தண்ணிதெனும்
ஆருயிரி னேற்றம் அதுகாட்ட ஆய்ந்துரைத்தான்
காரிமா றன்றன் கருத்து  (78)

ஒன்பதாந் திருமொழி

9. கருமாணிக்கமலை

தோழி சொல்லும் பாசுரங்களாக அமைந்துள்ளது இப்பகுதி தலைவிக்குத் திருமணம் வயது வந்தது. தந்தையர் சுயம்வரத்திற்காக மணமுரசு அறைவித்தனர். இதனைத் தோழி அறிந்தாள். குட்டநாட்டுத் திருப்புலியூர்ப் பெருமானோடு இவளுக்கு (தலைவிக்கு) ஏற்பட்டிருக்கும் தொடர்பையும் அவள் அறிந்திருந்தாள்; தந்தையரின் முயற்சி கண்டு தலைவி மனக்கவலை அடைவாளே என்று எண்ணினாள் எனவே அம்முயற்சியை மாற்ற ஒரு தந்திரம் செய்தாள் அம்மனைமீர் இவளைக் காணும்போது இவளுக்குத்(உங்கள் மகளுக்குத்) திருப்புலியூர்ப் பெருமானோடு கலப்பு ஏற்பட்டதுபோல் தோன்றுகிறதே! உங்கள் முயற்சிக்கே இடமில்லை என்று கூறி அயல் மணம் விலக்குகிறாள். பராங்குசநாயகியே ஈண்டுத் தலைவி.

தலைவியின் உண்மையான காதலை உரைத்துத் தோழி அயல் மணம் விலக்குதல்

கலி நிலைத்துறை

மாயன் பேச்சையே இவள் பேசுகிறாள்

3759. கருமா ணிக்க மலைமேல்மணித் தடந்தாமரைக் காடுகள்போல்,
திருமார்வு வாய்கண்கை யுந்திகாலுடை யாடைகள் செய்யபிரான்
திருமா லெம்மான் செழுநீர்வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர்,
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீரிதற் கென்செய்கேனா.

திருப்புலியூரையே இவள் புகழ்கிறாள்

3760. அன்னைமீ ரிதற்கென் செய்கேன்? அணிமேருவின் மீதுலவும்,
துன்னு சூழ்சுடர் ஞாயிறும் அன்றியும்பல் சுடர்களும்போல்,
மின்னு நீண்முடி யாரம்பல்கலன் றானுடை யெம்பெருமான்,
புன்னை யம்பொழில் சூழ்திருப் புலியூர் புகழுமிவளே.

திருப்புலியூர் வளத்தையே எப்போதும் இவள் சொல்கிறாள்

3761. புகழு மிவள்நின் றிராப்பகல் பொருநீர்க்கடல் தீப்பட்டு,எங்கும்
திகழு மெரியோடு செல்வதொப்பச் செழுங்கதி ராழிமுதல்
புகழும் பொருபடை யேந்திப்போர் புக்கசுரரைப் பொன்றுவித்தான்
திகழு மணிநெடு மாடம்நீடு திருப்பூலி யுர்வளமே.

தேவபிரானின் திருநாமங்களையே இவள் சொல்கிறாள்

3762. ஊர்வ ளம்கிளர் சோலையும் கரும்பும்பெருஞ் செந்நெலும்சூழ்ந்து
ஏர்வ ளம்கிளர் தண்பணைக் குட்டநாட்டுத் திருப்பூலியூர்,
சீர்வ ளம்கிளர் மூவுல குண்டுமிழ் தேவபிரான்,
பேர்வ ளம்கிளர்ந் தன்றிப் பேச்சிலளின்றிப் புனையிழையே.

அப்பன் திருவருவில் மூழ்கினாள் இவள்

3763. புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புதுக்க ணிப்பும்,
நினையும் நீர்மைய தன்றிவட்கிது நின்று நினைக்கப்புக்கால்,
சுனுயி னுள்தடந் தாமரை மலரும்தண் திருப்புலியுர்,
முனைவன் மூவுல காளியப்பன் திருவருள் மூழ் கினளே.

இவள் கண்ணனைச் சேர்ந்தமைக்கு அடையாளங்கள் உள

3764. திருவருள் மூழ்கி வைகளும் செழுநீர்நிறக் கண்ணபிரான்,
திருவருள் களும்சேர்ந் தமைக்கடை யாளம் திருந்தவுள,
அருளால் திருவருள் அவன் சென்று சேர்தண் திருப்பூலியுர்,
திருவருள் கமுகொண் பழுத்தது மெல்லியல் செவ்விதழே.

இவள் கண்ணன் தாள் அடைந்தாள்

3765. மெல்லிலைச் செல்வண் கொடிபுல்க வீங்கிளந் தாள்கமுகின்,
மல்லிலை மடல்வாழை யீங்கனி சூழ்ந்து மணம்கமழ்ந்து,
புல்லிலைத் தெங்கி னூடுகால் உலவும்தண் திருப்பூலியுர்,
மல்லலம் செல்வக் கண்ணந்தாள் அடைந்தாள் இம் மடவரலே.

இவள் பாம்பணையான் திருநாமங்களையே சொல்கிறாள்

3766. மடவரல் அன்னைமீர்கட் கெஞ்சொல்லிச் சொல்லுகேன்? மல்லைச்செல்வ
வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய்யழல் வான்புகைபோய்
திடவிசும் பிலமரர் நாட்டை மறைக்கும்தண் திருப்பூலியுர்,
படவர வணையான் றன்நாமம் அல்லால் பரவா ளிவளே.

திருப்புலியூர்ப் புகழன்றி வேறோன்று சொல்லாள் இவள்

3767. பரவா ளிவள்நின் றிராப்பகல் பனிநீர்நிறக் கண்ணபிரான்,
விரவா ரிசைமறை வேதியரொலி வேலையின் நின்றொலிப்ப,
கரவார் தடந்தொறும் தாமரைக் கயந்தீவிகை நின்றலரும்,
புரவார் கழனிகள் சூழ்திருப் புலியூர்ப்புக ழன்றிமற்றே.

திருப்புலியூர் மாயப் பிரான் திருவருள்

3768. அன்றிமற் றோருபாய மென்னிவ ளந்தண்டு ழாய்கமழ்தல்,
குன்ற மாமணி மாடமாளிகைக் கோலக்கு ழாங்கள்மல்கி,
தென்தி சைத்தில தம்புரைக் குட்டநாட்டுத் திருப்பூலியுர்,
நின்ற மாயப்பி ராந்திரு வருளாமிவள் நேர்ப்பட்டதே.

இப்பாடல்களால் திருமாலுக்கு அடிமை செய்யலாம்

3769. நேர்ப்பட்ட நிறைமூ வுலகுக்கும் நாயகன் றன்னடிமை,
நேர்ப்பட்ட தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன்,சொல்
நேர்ப்பட்ட தமிழ்மாலை யாயிரத்துள் இவையு மோர்பத்தும்
நேர்ப்பட் டாரவர், நேர்ப்பட்டார் நெடுமாற்கடி மைசெய்யவே.

நேரிசை வெண்பா

கருமால் திறத்திலொரு கன்னிகையாம் மாறன்
ஒருமா கலவி யுரைப்பால்-திரமாக
அந்நியருக் காகா தவன்றனக்கே யாகுமுயிர்
இந்நிலையை யோர்நெடி தா  (79)

பத்தாந் திருமொழி

10. நெடுமாற்கடிமை

இத்திருவாய்மொழி பாகவத சேஷத்வத்தைக் கூறுகிறது. பாகவத கைங்கர்யமே புருஷார்த்தம் என்பதையும் உணர்த்துகிறது. பகவானிடம் பக்தி கொள்வதுடன் அவனடியார்களிடமும்(பாகவதர்களிடமும்) பக்தி கொள்ளவேண்டும். பகவத் பக்தியின் எல்லை நிலம் பாகவத பக்தி. பகவத் பக்தியின் உறுதியை பாகவத பக்தியே வெளிப்படுத்தும்.

பாகவத கைங்கர்யம்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

திருமால் அடியார்களின் திருவடிகளே சரணம்

3770. நெடுமாற் கடிமை செய்வேன்போல் அவனை கருத வஞ்சித்து,
தடுமாற் றற்ற தீக்கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர்நி னைந்தால்,
கொடுமா வினையேன் அவனடியார் அடியே கூடும் இதுவல்லால்,
விடுமா றென்ப தென்னந்தோ! வியன்மூ வுலகு பெறினுமே?

பக்தர்களின் திருவடி வணங்கி இன்பம் பெற்றேன்

3771. வியன்மூ வுலகு பெறினும்போய்த் தானே தானே யானாலும்,
புயல்மே கம்போல் திருமேனி அம்மான் புனைபூங் கழலடிக்கீழ்,
சயமே யடிமை தலைநின்றார் திருத்தாள் வணங்கி, இம்மையே
பயனே யின்பம் யான்பெற்ற துறுமோ பாவி யேனுக்கே?

பக்தர்களையன்றி மற்றோரை வணங்கமாட்டேன்

3772. உறுமோ பாவி யேனுக்கிவ் வுலகம் மூன்றும் உடன்நிறைய,
சிறுமா மேனி நிமிர்த்தவென் செந்தா மரைக்கண் திருக்குறளன்
நறுமா விரைநாண் மலரடிக்கீழ்ப் புகுதல் அன்றி அவனடியார்,
சிறுமா மனிச ராயென்னை ஆண்டா ரிங்கே திரியவே.

பக்தி நெறி ஒன்றே எனக்குப் போதும்

3773. இங்கே திரிந்தேற் கிழக்குற்றென். இருமா நிலமுன் னுண்டுமிழ்ந்த,
செங்கோ லத்த பவளவாய்ச் செந்தா மரைக்க ணென்னம்மான்
பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப் புலன்கொள் வடிவென் மனத்தாய்
அங்கேய் மலர்கள் கையவாய் வழிபட் டோட அருளிலே?

கவி பாடித் துதிக்கவே யான் விரும்புகிறேன்

3774. வழிபட் டோட அருள்பெற்று மாயன் கோல மலரடிக்கீழ்,
சுழிபட் டோடும் சுடர்ச்சோதி வெள்ளத் தின்புற் றிருந்தாலும்,
இழிபட் டோடும் உடலினிற் பிறந்து தன்சீர் யான்கற்று,
மொழிபட் டோடும் கவியமுத நுகர்ச்சி யுறுமோ முழுதுமே?

பரமன் புகழை நுகர்தலே என் விருப்பம்

3775. நுகர்ச்சி யுறுமோ மூவுலகின் வீடு பேறு தன்கேழில், புகர்ச்செம்
முகத்த களிறட்ட பொன்னா ழிக்கை யென்னம்மான்,
நிகர்ச்செம் பங்கி யெரிவிழிகள் நீண்ட அசுர ருயிரெல்லாம்,
தகர்த்துண் டுழலும் புட்பாகன் பெரிய தனிமாப் புகழே?

அடியார்களைச் சேர்ந்து அடையும் இன்பமே வேண்டும்

3776. தனிமாப் புகழே யெஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான்தோன்றி,
முனிமாப் பிரம முதல்வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த,
தனிமாத் தெய்வத் தளிரடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவனடியார்,
நனிமாக் கலவி யின்பமே நாளும் வாய்க்க நங்கட்கே.

அடியார்கள் சேர்க்கை எந்நாளும் வாய்த்திடுக

3777. நாளும் வாய்க்க நங்கட்கு நளிர்நீர்க் கடலைப் படைத்து,தன்
தாளும் தோளும் முடிகளும் சமனி லாத பலபரப்பி,
நீளும் படர்பூங் கற்பகக் காவும் நிறைபன் னாயிற்றின்,
கோளு முடைய மணிமலைபோல் கிடந்தான் தமர்கள் கூட்டமே.

அடியார்களின் அடியார்க்கடியார் உறவு வேண்டும்

3778. தமர்கள் கூட்ட வல்வி னையை நாசஞ் செய்யும் சதிர்மூர்த்தி,
அமர்கொள் ஆழி சங்குவாள் வில்தண் டாதி பல்படையன்,
குமரன் கோல ஐங்கணைவேள் தாதை கோதில் அடியார்தம்!
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே!

அடியார்க்கடியார்க்கு அடியாரின் அடியாரே எம் தலைவர்

3779. வாய்க்க தமியேற் கூழிதோ றூழி யூழி மாகாயாம்
பூக்கொள் மேனி நான்குதோள் பொன்னா ழிக்கை யென்னம்மான்,
நீக்க மில்லா அடியார்தம் அடியார் அடியார் அடியாரெங்
கோக்கள், அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே!

இவற்றைப் படித்தால் இல்லறம் இனிக்கும்

3780. நல்ல கோட்பாட் டுலகங்கள் மூன்றி னுள்ளும் தான்நிறைந்த,
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்,
சொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,
நல்ல பதத்தால் மனைவாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே.

நேரிசை வெண்பா

நெடுமா லழகுதனில் நீள்குணத்தில் ஈடு
படுமா நிலையுடையு பத்தர்-அடிமைதனில்
எல்லைநிலத் தானாக எண்ணினான் மாறன், அது
கொல்லைநில மானநிலை கொண்டு    (80)

**************
ஒன்பதாம் பத்து

முதல் திருமொழி

1. கொண்ட பெண்டிர்

உலகில் உறவினர்களே நம்மைக் காப்பவர்கள் என்று நம்பி இருப்பவர்களின் மருள் நீங்குமாறு அருளிச் செய்தது இத்திருவாய்மொழி. எந்த நிலையிலும் எம்பெருமான் ஒருவனே ரக்ஷகன். உறவினர்களாக நினைக்கப்படுகிறவர்கள் உண்மையான ரக்ஷகர்களல்லர் என்று ஈண்டு ஆழ்வார் உணர்த்துகிறார்.

திருமாலையே சேருங்கள் எனல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

திருமாலுக்குத் தொண்டு செய்தலே உய்யும் வழி

3781. கொண்டபெண்டிர்மக்களுற்றார் சுற்றத்தவர்பிறரும்
கண்டதோடுபட்டதல்லால் காதல்மற்றியதுமில்லை
எண்டிசையுங்கீழும்மேலும் முற்றவமுண்டபிரான்
தொண்டரோமாயுய்யலல்லால் இல்லைகண்டீர்துணையே.

இராமபிரானின் துணையே சிறந்த பொருள்

3782. துணையுஞ்சார்வுமாகுவார்போல் சுற்றத்தவர்பிறரும்
அணையவந்தவாக்கமுண்டேல் அட்டைகள்போல்சுவைப்பர்
கணையொன்றுலேயேழ்மரமுமெய்த எங்கார்முகிலே
புணையென்றுய்யப்பபோகிலல்லால் இல்லைகண்டீர்பொருளே

வடமதுரைப் பிறந்தவனே நமக்குக் காவல்

3783. பொருள்கையுண்டாய்ச்செல்லக்காணில் போற்றினெற்றேழுவர்
இருள்கொள்துன்பத்திமைகாணில் என்னேயென்பாருமில்லை
மருள் கொள்செய்கையசுரர்மங்க வடமதுரைப்பிறந்தாற்கு
அருள் கொளாளாயுய்யவல்லால் இல்லைகண்டீரரணே.

கண்ணன் புகழ் பேசிச் சரணடைதலே பெருமை

3784. அரணமாவரற்றகாலைக்கு என்றென்றமைக்கப்பட்டார்
இரணங்கொண்ட தெப்பராவர் இன்றியிட்டலுநஃதே
வருணித்தென்னே வடமதுரைப்பிறந்த வன்வண்புகழே
சரணென்றுய்யப்பபோகிலல்லால் இல்லைகண்டீர்சதிரே.

எம்பெருமானுக்கு ஆட்பட்டு உய்வதே இன்பம்

3785. சதிரமென்று நம்மைத்தாமே சம்மதித்தின்மொழியார்
மதுரபோகம்துற்றவரே வைகிமற்றொன்றுறுவர்
அதிகொள்செய்கையசுரர்மங்க வடமதுரைப்பிறந்தாற்கு
எதிர்கொள்ளாயுய்யலல்லால் இல்லைகண்டீரின்பமே.

கண்ணனின் புகழைக் கூறுவதே உய்யும் வழி

3786. இல்லைகண் டீரின்பமந்தோ உள்துநினையாதே
தொல்லையார்களெத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார்
மல்லைமூதூர் வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே
சொல்லியுய்யப் போகிலல்லால் மற்றொன்றில்லை சுருக்கே.

கண்ணன் சீர் கற்றலே குணம்

3787. மற்றொன்றில்லை சுருங்கச்சொன்னோம் மாநிலத் தெவ்வுயிருக்கும்
சிற்றவேண்டா சிந்திப்பேயமையும் கண்டீர் களந்தோ
குற்றமன் றெங்கள் பெற்றத்தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றிமில் சீர்கற்றுவைதல் வாழ்தல் கண்டீர்குணயே.

மாயன் அடிபரவிப் பொழுது போக்குக

3788. வாழ்தல்கண்டீர் குணமிதந்தோ மாயவண்டிபரலி
போழ்துபோகவுள்ளநிற்கும் புன்மையிலாதவர்க்கு
வாழ்துணையா வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே
வீழ்துணையாப்போமிதனில் யாதுமில்லைமிக்கதே.

கண்ணனல்லால் வேறு சரண் இல்லை

3789. யாதுமில்லை மிக்கதனில் என்றென்றது கருதி
காதுசெய்வான் கூதைசெய்து கடைமுறை வாழ்க்கை யும்போம்
மாதுகிலின் கொடிக் கொள்மாட வடமதுரைப் பிறந்த
தாதுசேர்தோள் கண்ணனல்லால் இல்லை கண்டீர்சரணே.

கண்ணன் கழலிணை சேர்ந்து உய்க

3790. கண்ணனல்லாலில்லை கண்டீர்சரண் அதுநிற்கவந்து
மண்ணின்பாரம் நீக்குதற்கே வடமதுரைப்பிறந்தான்
திண்ணமாநும்முடைமையுண்டேல் அவனடிசேர்த்துய்மினோ
எண்ணவேண்டாநும்மதாதும் அவனன்றிமற்றில்லையே.

இவற்றைப் படித்தோரே உபகாரகர்

3791. ஆதுமில்லைமற்றவனில் என்றதுவே துணிந்து
தாதுசேர்தோள்கண்ணனைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன
தீதிலாதவொண்டமிழ்கள் இவையாயிரத்துளிப்பத்தும்
ஓதவல்லபிராக்கள் நம்மையாளுடையார்கள்பண்டே.

நேரிசை வெண்பா

நம்மைத் திருமாலினிடம் ஆற்றுப்படுத்தியவன் மாறன்

கொண்டபெண்டிர் தாம்முதலாக் கூறுமுற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே அவரைவிட்டுத்-தொண்டருடன்
சேர்க்குந் திருமாலைச் சேரும் என்றாள் ஆர்க்கும்இடம்
பார்க்கும் புகழ்மாறன் பண்டு  (81)

இரண்டாந் திருமொழி

2. பண்டைநாளாலே

எல்லா உறவு முறைகளையும் கொண்ட சிறந்த உறவினராக இருக்கும் எம்பெருமான் நமக்கு நன்மை செய்வதற்காகவே திருப்புளிங்குடி என்ற திவ்யதேசத்தில் திருக்கண் வளர்கிறான். நாம் அங்கு சென்று அவனை அணுகினால் நமக்கு உறவினர்கள் செய்யும் செயல்களை எல்லாம் செய்வார்கள் என்று கூறி ஆழ்வார் அங்கு சென்று அவனை அடைகிறார்.

தமக்கு அருள் செய்யுமாறு ஆழ்வார் பரமனை வேண்டல்

எழுசீர் ஆசிரிய விருத்தம்

திருப்புளிங்குடியானே! என்னை நோக்குக

3792. பண்டைநாளாலேநின்திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின்கோயில்சீய்த்துப்பல்டிகால் குடிகுடி வழிவந்த நாட்செய்யும்
தொண்டரொர்க்கருளிச்சோ திவாய்திறந்து உன் தாமரைக் கண்களால்நோக்காய்
தொண்டிரைப்பொருநல் தண்பணை சூழ்ந்த திருப்புளிங்குடிக்கிடா தானே.

புளிங்குடியானே! நின் திருவடிகளை என் தலையில் வை

3793. குடிக்கிடந்தாக்கஞ்செய்து நின்தீர்த்தபடிமைக்குற்றேவல் செய்து உன் பொன்
னடிக்சுடவாதே வழிவருகின்ற அடியரோர்க்கருளி நீயொருநாள்
படிக்களவாகநிமிர்த்த நின்பாதபங்கயமேதலைக்கணியாய்
கொடிக்கொள்பொன்மதிள் சூழ்குளிர்வயற்சோலைத் திருப்புளிங்குடிக்கிடந்தானே.

பள்ளிகொண்டானே! எழுந்து அமர்க

3794. கிடந்தநாள் கிடந்தாயேத்தனை காலங்கிடத்தி உன்திருவு டம்பசைய
தொடர்ந்து குற்றவேல் செய்து தொல்லடிமை வழி வருந்தொண்ட ரோர்கருளி
தடங்கொள் தாமரைக் கண்விழித்து நீயேழுந்துன் தாமரை மங்கையும் நீயும்
இடங்கொள் மூவுலகுந் தொழவிருந் தருளாய் திருப்புளிங்குடிக் கிடந்தானே.

என்னை ஆள்பவளே! நாங்கள் காண நீ வா

3795. புளிங்குடிக்கிடந்து வாகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று
தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாயெனக்கருளி
நளிர்ந்தசீருலக மூன்றுடன்வியப்ப நாங்கள் கூத்தாடிநின்றார்ப்ப
புளிங்குநீர்முகிலின்பவளம் போற்கனிவாய்சிவப்ப ரிகாணவாராயே.

கருடவாகனா! எங்களுக்கு காட்சி தா

3796. பவளம்போல்கனிவாய் சிவப்பநீ காணவந்து நின்பன்னிலாமுத்தம்
தவழ்கதிர்முறுவல்செய்து நின்திருக்கண்தாமரை தயங்கறின்றருளாய்
பவளநன்படர்க்கீழ்ச்சங்குறைபொருநல் தண் திருப்புளிங்குடிக்கிடந்தாய்
கவளமாகளிற்றினிடர்கெடத்தடத்துக் காய்சினப்பறையூர்ந்தானே.

புளியங்குடியாய்! எம் இடங்களை அகற்று

3797. காய்சினப்பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசைக்காரர் முகில் போல்
மாசினமாலிமாலிமானென்று அங்கவர்படக் கனன்று முன்னின்ற
காய்சினவேந்தே கதிர்முடியாநே கலிவயல்திருப்புளிங்குடியாய்
காய்சின வாழிசங்குவாள் வில் தண்டேந்தியெம்மிடர்கடிவானே.

பெருமானே! எம் கண்முன் ஒரு நாள் இருந்திடு

3798. எம்மிடர் கடிந்திங்கென்னையாள்வேனே இமையவர் தமக்குமாங்களையாய்
செம்மடல்மருந்தாமரைப்பழனத் தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்
நம்முடையவடியர்கவ்வைகண்டுகேந்து நாங்களித்துளஉலங்கூர
இம்மடவுலகர்காண நீயொருநாள் இருந்திடாயெங்கள் கண்முகப்பே.

வைகுந்தா! பூமியில் எங்களுக்கும் காட்சி தந்திடு

3799. எங்கள் கண் முகப்பேயுலர்களெல்லாம் இணையடிதொழு தேழுநிறைஞ்சி
தங்களன்பாரத்தமது சொல்வலத்தால் தலைத்தலைச் சிறந்தபூசிப்ப
திங்கள் சேர்மாடத்திருப்புளிங்குடியாய் திருவைருந் தத்துள்ளாய்தேவா
இங்கண்மா ஞாலத்திதனுளுமொருநாள் இருந்திடாய் வீற்றிடங்கொண்டே.

புளியங்குடியானே! எங்கள் கண் குளிரத் தரிசனம் தா

3800. வீற்றிடங்கொண்டுவியன் கொள்மாஞாலத்து இதனுளுமிருந்திடாய் அடியோம்
போற்றியோவாதே கண்ணிணைகுளிரப் பூதுமலராகத்தைப்பருக
சேற்றிளவாளைசெந்நூடுகளும் செழும்பணைத்திருப்புளிங்குடியாய்
கூற்றமாயசுரர் குலமுதலரிந்த கொடுவினைப்படைகள் வல்லனே.

அமுதே! நின் திருவடியை நான் பிடிக்க ஒரு நாளாவது வா

3801. கொடுவினைப்படைகள்வல்லையாய் அமரக்கிடர்கெட அசுரர்கட்கிடர்செய்
கடுவினைநஞ்சேயென்னுடையமுதே கலிவயல்திருப்ஙபளிங்குடியார்
வடிவிணையில்லாமலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடுவினையேணும்பிடிக்கந்யொருநாள் கூவுதல் வருதல்செய்யாயே.

இவற்றைப் படித்தோர் சிறந்த பக்தர்களாவர்

3802. கூவுதல் வருதல் செய்திடாயென்று குரைகடல் கடைந்தவன்தன்னை
மேலிநன்கமர்ந்த வியன்புனற்பொருநல் வழுதிநாடன் சடகோபன்
நாவியல்பாடலாயிரத்துள்ளும் இவையுமோர்பத்தும் வல்லார்கள்
ஓவுதலின்றியுலகம் மூன்றளந்தான் அடியிணையுள்ளத் தோர்வாரே.

நேரிசை வெண்பா

மனமே! மாறன் திருவடிகளே நம் துணை

பண்டையுற வான பரனைப் புளியங்குடிக்கே
கண்டு, எனக்கெல் லாவுறவின் காரியமும்-தண்டறநீ
செய்தருள் என் றேயிரந்த சீர்மாறன் றாளிணையை
உய்துணையென் றுள்ளமே! ஓர்   (82)

மூன்றாந் திருமொழி

3. ஓராயிரமாய்

எம்பெருமானிடம் ஒன்று வேண்டுவதற்கும் நமக்கு என்ன தகுதி இருக்கிறது? உலகிலுள்ள எல்லாப் பொருள்களினுடைய யோக÷க்ஷமங்களும் அவனுடையதாகவன்றோ இருக்கின்றன! என்று நன்கு உணர்ந்த ஆழ்வார். நாராயணன் என்று சொல்லுக்கு எல்லையான அவனுடைய சீல குணத்தை ஈண்டுப் பாடுகிறார்.

பகவானின் சீலத்தில் ஆழ்வார் ஈடுபட்டுரைத்தல்

கலி விருத்தம்

நம்முடைய பிரானே நாராணன்

3803. ஓராயிரமாய் உலகேழளிக்கும்
பேராயிரங்கொண்டதோர் பீடுடையன்
காராயின காளநன்மேனியினன்
நாராயணன் நங்கள் பிரானவேன.

எல்லாம் நாராயணனே என்று அறிந்தோம்

3804. அவனே அகல்ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டுமிழ்ந்தானளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்றெல்லாமுமறிந்தனமே.

நோய்களைத் தீர்க்கும் மருந்து நாராயணனே

3805. அறிந்தவவேத வரும்பொருள்நூல்கள்
அறிந்தனகொள்க அரும்பொருளாதல்
அறிந்தனரெல்லாம் அரியைவணங்கி
அறிந்தனர் நோய்களறுக்கும்மருந்தே.

மனமே! கண்ணனை மறந்துவிடாதே

3806. மருந்தே நங்கள்போகமகிழ்ச்சிக் கென்று
பெருந்தேவர்குழாங்கள் பிதற்றும்பிரான்
கருந்தேவனெம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனைச் சோரேல்கண்டாய்மனமே.

மனமே! கண்ணனைத்தான் அடையவேண்டும். மறவாதே

3807. மனமேயன்னை வல்வினையேனிரந்து
கனமேசொல்லினேன் இதுசோரேல்கண்டாய்
புனமேலிய பூந்தண்டுழாயலங்கல்
இனமேதுமிலானை அடைவதுமே.

நாராயணனைச் சிந்தித்தே என் மனம் உடைகிறது

3808. அடைவதுமணியார் மலர்மங்கைதோள்
மிடைவதுமசுரர்க்கு வெம்டோர்களே
கடைவதும் கடலுளமுதம் என்மன
முடைவதும் அவற்கேயொருங்காகவே.

வைகுந்தம் காண்பதற்கே என் மனம் எண்ணுகின்றது

3809. ஆகம்சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம்வள்ளுகிரால் பிளந்தானுறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என்மனம்
ஏகமெண்ணு மிராப்பகவின்றியே.

தேவர்களே வேங்கடத்தையே தொழுவர்

3810. இன்றிப்போக இருவினையுங்கெடுத்து
ஒன்றியாக்கைபுகாமை உய்யக்கொள்வான்
நின்றவேங்கடம் நீணிலத்துள்ளது
சென்றுதேவர்கள் கைதொழுவார்களே

பாம்பணையானே! உன் தாள்களைத் தழுவும் விதம் அறியேனே!

3811. தொழுதுமாமலர் நீர்சுடர்தூபம் கொண்டு
எழுதுமென்னாமிது மிகையாதலில்
பழுதில்தோல்புகழ்ப் பாம்பணைப்பள்ளியாய்
தழுவுமாற்றியேன் உனதாள்களே.

நாராயணா! உன் சீலத்தை எப்படிப் புகழ்வேன்?

3812. தாளாதாமரையான் உனதுந்மதியான்
வால் கொள்நீள்மழுவாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாகும் அமரர்கள்
நாளுமேன்புகழ்கோ உனசீலமே.

இவற்றைப் படித்தால் வைகுந்தப் பதவி கிடைக்கும்

3813. சீல மெல்லையிலானடிமேல் அணி
கோலநீள் குருகூர்ச்சடகோபன் சொல்
மாலையாயிரந்துள் இவைபத்தினின்
பாலர் வைகுந்தமேறுதல் பான்மையே.

நேரிசை வெண்பா

மாறன் அருளே மன இருளை நீக்கும்

ஓராநீர் வேண்டினவை யுள்ளதெல்லாஞ் செய்கின்றேன்
நாரா யணன்றோ நான்? என்று- பேருறவைக்
காட்டவவன் சீலத்திற் கால்தாழ்ந்த மாறனருள்
மாட்டிவிடும் நம்மனத்து மை  (83)

நான்காந் திருமொழி

4. மையார்

எம்பெருமான் நம் விஷயத்தில் இப்படி உபேøக்ஷயாக இருக்கிறானே முதலை வாய்பட்ட யானையையும், பிரகலாதனையும் காத்துபோல் நமக்கு எதிரில் தோன்றி அருள் செய்யவில்லையே என்று ஆழ்வார் எண்ணி ஏங்கினார்.

பகவான் ஆழ்வாருடைய விடாயை அறிந்து எதிரில் வந்து தோன்றினான். ஆழ்வார் தம்முடைய மகிழ்ச்சியை ஈண்டுப் புலப்டுத்துகிறார்.

ஆழ்வார் பகவானைத் தரிசித்து மகிழ்தல்

கலி விருத்தம்

திருமாலே! என் கண் உன்னைக் காணக் கருதும்

3814.மையார்கருங்கண்ணி கமலமலர்மேல்
செய்யாள் திருமார்லினில்சேர் திருமாலே
செய்யார்சுடராழி சுரிசங்கமேந்தும்
கையா உன்னைக்காணக் கருதுமென்கண்ணே.

பகவானே! உன்னை நான் கண்டே தீர்வேன்

3815. கண்ணேயுன்னைக் காணக்கருதி என்னெஞ்சம்
எண்ணேகொண்ட சிந்தையநாய்நின்றியம்பும்
விண்ணோர் முனிவர்க்கென்றும் காண்பரியாயை
நண்ணாதொழியேனென்று நானழைப்பனே.

கோவர்த்தனா! நாய்போல் குழைகின்றேனே!

3816. அழைக்கின்றவடிநாயேன் நாய்கூழைவாலால்
குழைக்கின்றதுபோல என்னுள்ளம்குழையும்
மழைக்கன்று குன்றமெடுத்து ஆநிரைகாத்தாய்
பிழைக்கின்றதருளென்று பேதுறுவனே.

அம்மானே! என் மனம் மறுகுகிறது

3817. உறுவதிதுவென்று உனக்காட்பட்டு நின்கண்
பெறுவதெதுகொலென்று பெதையேன்நெஞ்சம்
மறுநல்செய்யும் வானவர்தானவர்க்கென்றும்
அறிவதரிய அரியாயவம்மானே.

கண்ணன் கழலிணை காண்பதுதான் என் கருத்து

3818. அரியாயவம்மானை அமரர்பிரானை
பெரியனைப் பிரமனை முன்படைத்தானை
வரிவாளரவினணைப் பள்ளிகொள்கின்ற
கரியானகழல்காணக் கருதும்கருத்தே.

ஆதிமூலமே! என் நெஞ்சம் உன்னையே நினைக்கிறது

3819. கருத்தே உன்னைக்காணக்கருதி என்னெஞ்சத்
திருத்தாகவிருத்தினேன் தேவர்கட்கெல்லாம்
விருத்தா விளங்குஞ்சுடர்சோதி உயரத்
தொருத்தா உன்னையுள்ளு மென்னுள்ளமுகந்தே.

நரசிங்க உருவை என்னுள்ளம் எண்ணுகிறது

3820. உகந்தேயுன்னை உள்ளுமென்னுள்ளத்து
அகம்பாலகந்தானமர்ந்தே இடங்கொண்டவமலா
மிகுந்தானவன்மார்வகலம் இருகூறா
நகந்தாய் நரசிங்கமதாயவுருவே.

கண்ணனைக் கண்டு கொண்டேன்

3821. உருவாகிய ஆறுசமயங்கட்கெல்லாம்
பொருவாகி நின்றானவன் எல்லாப்பொருட்கும்
அருவாகியவாதியைத் தேவர்கட்கெல்லாம்
கருவாகியகண்ணனைக் கண்டுகொண்டேனே.

கண்ணனைக் கண்டு களித்தேன்; பாசுரங்கள் பாடினேன்

3822. கண்டுகொண்டு என் கண்ணிணையாரக்களித்து
பண்டைவினையாயின பற்றோடறுத்து
தொண்டர்க்கமுதுண்ணச்சொல்மாலைகள் சொன்னேன்
அண்டத்தமரர்பெருமான் அடியேனே.

கருட வாகனனை அடைந்து உய்ந்தேன்

3823. அடியானிவனென்று எனக்காரருள்செய்யும்
நெடியானை நிரைபுகழஞ் சிறைப்புள்ளின்
கொடியானை குன்றாமல் உலகமளந்த
அடியானை அடைந்தடியேனாய்ந்தவாறே.

இவற்றைப் படித்தால் தேவர்களும் உய்வர்

3824. ஆறாமதயானை அடர்த்தவன்தன்னை
சேறார்வயல் தென்குருகூர்ச்சடகோபன்
நூறேசொன்ன ஓராயிரத்துளிப்பத்தும்
ஏறேதரும் வானவர்தமின்னுயிர்க்கே.

நேரிசை வெண்பா

மாறன் பேரை ஓதினால் உய்யலாம்

மையார்கண் மாமார்பின் மன்னுந் திருமாலைக்
கையாழி சங்குடனே காணவெண்ணி-மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டுகந்த மாறன்பேர்
ஓதவுய்யு மேயின் னுயிர்  (84)
 
ஐந்தாந் திருமொழி

5. இன்னுயிர்ச்சேவல்

பகவானோடு கலந்து பிரிந்த ஒரு பிராட்டி தன் ஆற்றாமையைத் தரித்துக்கொள்ள ஒரு பூஞ்சோலைக்குப் புறப்பட்டாள். அங்கிருந்த குயில், மயில் பகவானின் பேச்சையும், வடிவையும் நினைவூட்டின. எம்பெருமானால் ஏவப்பட்டே இவை தம்மைத் துன்புறுத்துகின்றன என்று எண்ணிய அப்பிராட்டி, நீங்கள் இவ்வளவு முயற்சி செய்யவேண்டுமோ? என் உயிரை நானே போக்கிக்கொள்கிறேன் என்று கூறும் வாயிலாக பகவானின் குணங்களை நினைத்துத் தளர்கிறாள். ஆழ்வாராகிய தலைவி பகவானாகிய தலைவனை நினைவுகூர்ந்து தளர்தலை இப்பகுதி கூறுகிறது.

தலைவனை நினைவூட்டும் பொருள்களால் தலைவி தளர்தல்

கலி நிலைத்துறை

குயில்களே! கண்ணன் வரக் கூவமாட்டீர்களா?

3825. இன்னுயிர்ச்சேவலும் நீருங்கூவிக்கொண்டிங்கெத்தனை
என்னுயிர்நோவமிழற்றேன்மின் குயிற்பேடைகாள்
என்னுயிர்க்கண்ணபிரானை நீர்வரக்கூவகிலீர்
என்னுயிர்கூலிக்கொடுப்பார்க்கும் இத்தனைவேண்டுமோ.

அன்றில்களே! கோவிந்தனை அழையுங்கள்

3826. இத்தனைவேண்டுவதன்றந்தொ அன்றிற்பேடைகாள்
எத்தனைநீரும்நுஞ்சேவலும் கரைந்தேங்குதிர்
வித்தகண்கோவிந்தன் மெய்யனல்லனொருவர்க்கும்
அத்தனையாமினி யென்னுயிரவன்கையநே.

அன்றில்காள்! என் உயிர் கோவிந்தன் கையில் உள்ளது

3827. அவன்கையதேயெனதாருயிர் அன்றிற்பேடைகாள்
எவஞ்சொல்லிநீர் குடைந்தாடுதிர் புடைசுழவே
தவஞ்செய்தில்லா வினையாட்டியேனுயிர் இங்குண்டோ?
எவஞ்சொல்லிநிற்றும் நும்மேங்குகூக்குரல் கேட்டுமே.

கோழிகாள்! என் உடலும் உயிரும் தத்தளிக்கின்றன

3828. கூக்குரல்கேட்டும் நங்கண்ணன்மாயன் வெளிப்படான்
மெற்கிளைகொள்ளேன்மின் நீருஞ்சேவலுங்கோழிகாள்!
வாக்கும்மனமுங் கருமமும்நமக்காங்கநே
ஆக்கையுமாலியும் அந்தரம்நின்றுழலுமே

நாகணவாய்ப் பறவைகளே! குழறாதீர்கள்

3829. அந்தரநின்றுழல்கின்ற யானுடைப்பூவைகாள்!
நுந்திறத்தேதுமிடையில்லை குழறேன்மினோ
இந்திரஞாலங்கள்காட்டி யிவ்வேழுலகுங்கொண்ட
நந்திருமார்பன் நம்மாவியுண்ணநன்கெண்ணினான்.

கிளிகளே! காகுத்தன் என்னைக் கூடிப் பிரிந்தானே!

3830. நன்கெண்ணிநான்வளர்த்த சிறுகிளிப்பைதலே!
இன்குரல்நீமிழற்றேல் என்னாருயிர்க்காகுத்தன்
நின்செய்யவாயொக்கும்வாயன் கண்ணன்கைகாவினன்
நின்பசுஞ்சாமநிற்ததன் கூட்டுண்டுநீங்கினான்.

மேகங்காள்! உங்கள் வடிவம் என் உயிருக்கு இயமன்

3831. கூட்டுண்டுநீங்கிய கோலத்தாமரைக்கட்செவ்வாய்
வாட்டமிலென்கருமாணிக்கம் கண்ணன்மாயன்போல்
கோட்டியவில்லோடு மின்னுமேகக்குழாங்கள்காள்
காட்டேன்மின்நும்முரு என்னுயிர்க்கதுகாலனே.

குயில்களே! கண்ணன் நாமம் குழறிக்கொல்கிறீர்களே!

3832. உயிர்க்கதுகாலனென்று உம்மையானிரந்தேற்கு நீர்
குயில்பைதல்காள் கண்ணன்நாமமேகுழறிக் கொன்றீர்
தயிர்ப்பழஞ்சோற்றோடு பாலடிசிலும் தந்து சொல்
பயிற்றியநல்வளமூட்டினீர் பண்புடையீரே.

வண்டுகளே! தும்பிகளே! உங்கள் ரீங்காரம் துன்புறுத்துகின்றன

3833. பண்புடைவண்டொடுதும்பிகாள் பண்மிழற்றேல்மின்
புண்புரைவேல்கொடு குத்தாவொக்கும்நும்மின்குரல்
தண்பெருநீர்த்தடந்தாமரை மலர்ந்தலொக்குங்
கண்பெருகண்ணன் நம்மாவியுண்டெழுநண்ணினான்.

நாரைகாள்! நான் கண்ணனைக் கூடிவிட்டேன்

3834. எழ நண்ணிநாமும் நம்வானநாடனோடொன்றினோம்
பழனநன்னாரைக் குழாங்கள்காள் பயின்றென்னினி
இழைநல்லவாக்கையும் பையவேபுயக்கற்றது
தழைநல்லவின் பம்தலைப்பெய்து எங்குந்தழைக்கலே.

இவற்றைப் படித்தோர் உருகுவர்

3835. இன்பந்தலைப்பெய்தெங்கும்தழைத்த பல்லுழிக்கு
தன்புகழேத்தத் தனக்கருள்செய்தமாயனை
தென்குருகூர்ச்சடகோபன் சொல்லாயிரத்துள்ளிவை
ஒன்பதோடொன்றுக்கும், மூவுலகுமுருகுமே.

நேரிசை வெண்பா

மாறன் அருளை நினைத்தால் உள்ளம் உருகும்

இன்னுயிர்மால் தோற்றினதிங் கென்னெஞ்சில் என்று கண்ணால்
அன்றவனைக் காணவெண்ணி ஆண்பெண்ணாய்ப் பின்னையவன்
தன்னைநினை விப்பவற்றால் தான்தளர்ந்த மாறனருள்
உன்னுமவர்க் குள்ளமுரு கும்   (85)

ஆறாந் திருமொழி

6. உருகுமால்

மலைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று திருக்காட்கரை. ஒரு நாள் ஆழ்வாரோடு கலந்த கலவியை நினைவூட்டி ஒருவாறு தரித்து நிற்கச் செய்தவன் திருக்காட்கரை எம்பெருமான். ஆழ்வார் அவனைப் பற்றிக் கூறுகிறார் இத்திருவாய் மொழியில்.

பகவானின் சிறப்பை ஆழ்வார் ஏக்கத்துடன் கூறல்

கலி விருத்தம்

திருக்காட்கரையானை நினைத்தால் வேட்கை பெருகும்

3836. உருகுமால்நெஞ்சம் உயிர்ன்பரமன்றி
பெருகுமால்வேட்கையும் என்செய்கேன்தொண்டனேன்
தெருவெல்லாங்காலிகழ் திருக்காட்கரை
மருவியமாயன்றன் மாயம்நினைதொறே.

திருக்காட்கரையானே! எப்படி அடிமை செய்வேன்?

3837. நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும்
வினைகொள்சீர்பாடிலும் வேமெனதாருயிர்
கனைகொள்பூஞ்சோலைத் தென்காட்கரையென்னப்பா
நினைகிலேன் நானுனக்காட்செய்யும்நீர்மையே.

திருக்காட்கரையானின் மாயம் தெரியவில்லையே!

3838. நீர்மையால்நெஞ்சம் வஞ்சித்துப்புகுந்து என்னை
ஈர்மைசெய்து என்னாயிராயென்னுயிருண்டான்
சீர்மல்குசோலைத் தென்காட்கரையென்னப்பன்
கார்முகில்வண்ணன்றன் கள்வமறிகிலேன்.

என்னப்பன் என் உயிரை உண்டுவிட்டான்!

3839. அறிகிலேன்தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால்தானும் அவற்றுள் நிற்கும்பிரான்
வெறிகமழ்சோலைத் தென்காட்கரையென்னப்பன்
சிறியவென்னாயிருண்ட திருவருனே.

என் கண்ணன் கள்வங்கள் இருந்தவாறு என்னே!

3840. திருவருள்செய்பவன் போல என்னுள்புகுந்து
உருவமுமாருயிரும் உடனேயுண்டான்
திருவளர்சோலைத் தென்காட்கரையென்னப்பன்
கருவளர்மேனி என்கண்ணன்கள்வங்களே

என் உயிர் திருக்காட்கரையானையே ஏத்தும்

3841. என்கண்ணன்கள்வம் எனக்குச் செம்மாய்நிற்கும்
அங்கண்ணனுண்ட என்னாருயிர்க்கோதிது
புன்கண்மையெதிப் புலம்பியிராப்பகல்
என்கண்ணனென்று அவன்காட்கரையேத்துமே.

என் உயிர் என்னப்பனை நினைந்து கரையும்

3842. காட்கரையேத்தும் அதனுள்கண்ணாவென்னும்
வேட்கைநோய்கூர நினைந்துகரைந்துகும்
ஆட்கொள்வானொத்து என்னுயிருண்டமாயனால்
கோட்குறைபட்டது என்னாருயிர்கோளுண்டே.

என்னப்பனுக்கு என்னுயிர் அடிமையாகிவிட்டது

3843. கோளுண்டானன்றிவந்து என்னுயிர்தானுண்டான்
நாளுநாள் வந்து என்னை முற்றவுந்தானுண்டான்
காளநீர்மேகத் தென்காட்கரையென்னப்பற்கு
ஆளன்றேபட்டது என்னாருயிர்பட்டதே.

என் உயிர் பட்ட பாடு யாருயிர் பட்டது?

3844. ஆருயிர்பட்டது எனதுயிர்பட்டது
பேரிதழ்த்தாமரைக்கண் கனிவாயதோர்
காரெழில்மேகத் கேன்காட்கரைகோயில்கொள்
சீரெழில்நால்தடந்தோள் தெய்வவாரிக்கே.

திருக்காட்கரையப்பன் என்னை விழுங்கிவிட்டான்

3845. வாரிக் கொண்டு உன்னைவிழுங்குவன் காணிலென்று
ஆர்வற்றவென்னையொழிய என்னில்முன்னம்
பாரித்து தானென்னை முற்றப்பருகினான்
காரொக்கும் காட்கரையப்பன்கடியனே.

இவற்றைப் படித்தால் சன்மம் முடிவெய்திவிடும்

3846. கடியனாய்க் கஞ்சனைக் சொன்றபிரான்றன்னை
கொடிமதிள்தென்குருகூர்ச் சடகோபன்சொல்
வடிவமையாயிரத்து இப்பத்தினால்சன்மம்
முடிவெய்தி நாசங்கண்டீர்களெங்கானலே.

நேரிசை வெண்பா

மாறன் சொல்லையே நான் சொல்வேன்

உருகுமால் என்னெஞ்சம் உன்செயல்க ளெண்ணிப்
பெருகுமால் வேட்கை எனப் பேசி-மருவுகின்ற
இன்னாப் புடனவன்சீர் ஏய்ந்துரைத்த மாறன்சொல்
என்னாச்சொல் லாதிருப்ப தெங்கு   (86)

ஏழாந் திருமொழி

7. எங்கானல்

பகவானின் குணங்களை நினைக்க நினைக்க அவனை நேரில் காணவேண்டும் என்ற விருப்பம் ஆழ்வாருக்கு ஏற்படுகிறது உம்முடைய வடிவழகில் ஈடுபட்ட பராங்குசநாயகி உம்மைப் பிரிந்து தரித்திருக்கத் தக்கவளல்லள் என்று சொல்லுங்கள் எனக் கூறி, திருமூழிக்களத்து எம்பெருமானிடம் நாரை, குருகு முதலியவற்றைத் தூது விடுகிறார் ஆழ்வாராகிய தலைவி.

தலைவி பறவை முதலியவற்றை தூது விடுதல்

நாலடித் தாழிசை

நாரையே! திருமூழிக்காளத்தானிடம் தூது செல்

3847. எங்கானலகங்கழிவாய் இரைதேர்ந்திங்கினிதமரும்
செங்காலமடநாராய் திருமுழிக்களத்துறையும்
கொங்கார்பூந்துழர்முடி யெங்குடக் கூத்தர்க்கென்தூதாய்
முங்கால்களென்தலைமேல் கெழுமிரோநுமரோடே.

குருகினங்காள்! எனது நிலையைக் கேட்கமாட்டீர்களா?

3848. நுமரோடும்பிரியாதே நீரும்நும்சேவலுமாய்
அமர்காதல் குருகினங்காள் அணிமுழிக்களத்துறையும்
எமலாரும் பழிப்புண்டு இங்கென்? தம்மாலிழிப்புண்டு
தமரோடங்குறைவார்க்குத் தக்கிலமேகேளீரே.

அடிகளுக்குத் தக்கவர் ஆகோமோ?

3849. தக்கிலமேகேளீர்கள் தடம்புனல்வாயிரைதேரும்
கொக்கினங்காள் குருனிங்காள் குளிர்மூழிக்களத்துறையும்
செக்கமலர்த்தவர்போலும் கண்கைகால்செங்கனிவாய்
அக்கமலத்திலைபோலும் திருமேனியடிகளுக்கே.

மேகங்காள்! எனக்குத் தூது சென்றால் என்ன குறை வரும்?

3850. திருமேனியடிகளுக்குத் தீவினையேன்விடுதூதாய்
திருமூழிக்களமென்னும் செமுநகர்வாயணிமுகில்காள்
திருமேனியவட்கருளீர் என்றக்கால் உம்மைத்தம்
திருமேனியோளியகற்றித் தெளிவிசும்புகடியுமே.

முகில்காள்! என் தூதுரையைச் சொல்லுங்கள்

3851. தெளிவிசும்புகடிதோடித் தீவளைத்துமின்னிலகும்
ஒளிமுகில்காள திருமுழிக்களத்துளையுமொண்சுடர்க்கு
தெளி விசும்புதிருநாடாத் தீவினையேன்மனத்துறையும்
துளிவார்கட்குழலார்க்கு என்தூதுரைத்தல் செப்புமினே

வண்டுகாள்! பிரானிடம் என் சொற்களைச் சொல்லுங்கள்

3852. தூதுரைத்தல்செப்புமின்கள் தூமொழிவாய்வண்டினங்காள்
போ திரைத்துமதுநுகரும் பொழில்முழிக்களத்துறையும்
மாதரைத்தம்மார்வகத்தே வைத்தார்ககென்வாய்மாற்றம்
தூதுரைத்தல்செப்புதிரேல் சுடர்வளையும் கலையுமே.

குருகுகளே! எம்பெருமானிடம் என் வாய்மொழி கூறுங்கள்

3853. சுடர்வளையுங்கலையுங்கொண்ட அருவினையேன்தோற்துறந்த
படர்புகாழான் திருமூழிக்களத்துறையும்பங்கயக்கண்
சுடர்பவளவாயனைக்கண்டு ஒருநாளோர்தூய்மாற்றம்
படர்பொழில்வாய்க்குருகினங்காள் எனக்கொன்றுபணியீரே.

வண்டுக் கூட்டமே! திருமூழிக்காளத்தானிடம் தூது செல்க

3854. எனக்கொன்றுபணியீர்கள் இரும்பொழிவாயிரைதேர்ந்து
மனக்கின்பம்படமேவும் வண்டினங்காள்தும்பிகாள்
கனக்கொள்திண்மதீர்படைசூழ் திருமூழிக்களத்துறையும்
புனக்கொள்காயாமேனிப் பூந்தழாய்முடியார்க்கே.

குருகே! பிரான் செயல் தக்கதன்று என்று உரை

3855. பூந்துழாய்முடியார்க்குப் பொன்னாழிக்கையாருக்கு
ஏந்துநீரிளங்குருகே திருமுழிக்களத்தாருக்கு
ஏந்துபூண்முலைபயந்து என்னிணைமலர்ககண்ணீர்ததும்ப
தாந்தம்மைக்கொண்டகல்தல் தகவன்றேன்றுரையீரே.

அன்னங்காள்! பிரானிடம் எனது நிலை கூறியருள்க

3856. தகவன்றென்றுரையீர்கள் தடம்புனல்வாயிரைதேர்ந்து
மிகலின்பம்படமேவும் மென்னடையவன்னங்காள்
மிகமேனிமெலிவெய்தி மேகலையுமிடழிந்து என்
அகமேனியொழியாமே திருமுழிக்களத்தார்க்கே

இப்பாடல்கள் பிறவி நோயை அறுக்கும்

3857. ஒழிலின்றித்திருமூழிக்களத்துரையு மொண்சுடரை
ஒழிவில்லாவணிமழலைக் கிளிமொழியாலைவற்றியசொல்
வழுவில்லாவண்குகூர்ச் சடகோபன்வாய்ந்துரைத்த
அழிவில்லாவாயிரத்து இப்பந்தும கோயனுக்குமே

நேரிசை வெண்பா

மாறன் தாள்களை நினைத்தால் தீங்குகள் நீங்கும்

எங்காத லுக்கடிமால் ஏய்ந்த வடிவழகென்று
அங்காது பற்றாசா ஆங்கவன்பால்-எங்குமுள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போகவிடும் மாறன்றாள்
உள்ளினர்க்குத் தீங்கையறுக் கும்  (87)

எட்டாந் திருமொழி

8. அறுக்கும் வினை

தூது சென்றவர்கள் மீண்டும் வந்து செய்திகளைச் சொல்லும்வரை ஆழ்வாரால் பொறுத்திருக்கமுடியவில்லை. திருநாவாய் சென்று பகவானை அடைவோம். அவனைக் கண்ணாரக் காண்போம்; அடிமை செய்வோம் என்று எண்ணுகிறார். அங்கும் செல்ல இயலவில்லை. இருந்த இடத்திலிருந்தே இவ்வாறு மனோரதத்தைச் செலுத்துகிறார் ஆழ்வார்.

தலைவனது திருநாவாய் செல்லத் தலைவி நினைத்தல்

கலி விருத்தம்

திருநாவாய் அடையும் வகையுண்டோ?

3858. அறுக்கும்வினையாயின ஆகந்தவனை
நிறுத்தும்மனத் தொன்றிய சிந்தையினார்க்கு
வெறித்தண்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்
குறுக்கும்வகையுண்டுகோலோ கொடியேற்கே.

திருநாவாய் அணுகப்பெறும் நாள் என்றோ?

3859. கொடியேரிடைக் கோகனத்தவள்கேள்வன்
வடிவேல்தடங்கண் மடப்பின்னைமணாளன்
நெடியானுறைசோலைகள் சூழ் திருநாவாய்
அடியேனணுகப்பெறுநாள் எவைகொவோ.

திருநாவாய்ச் சபையில் புகும் நாள் எந்நாளோ?

3860. எவைகோலணுகப்பெறுநா ளென்றப்போதும்
கலைபில்மனமின்றிக் கண்ணீர்கள்கலுழ்வன்
நவையில் திநாரணன்சேர் திருநாவாய்
அவையுள்புகலாவதோர் நாளறியேனே.

கண்ணா! எவ்வளவு நாட்கள் காத்திருப்பேன்?

3861. நாளேலறியேன் எனக்குள்ளநானும்
மீளாவடிமைப் பணிசெய்யப்புகுந்தேன்
நீளார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்
வாளேய்தடங்கண் மடப்பின்னைமணாளா.

திருநாவாயைக் கண்ணாரக் கண்டு களிப்பது என்றோ?

3862. மணாளன்மலர்மங்கைக்கும் மண்மடந்தைக்கும்
கண்ணாளனுலகத்துயில் தேவர்கட்கெல்லாம்
வண்ணாளன்விரும்பிறையும் திருநாவாய்
கண்ணாரக்களிக்கின்றது இங்கென்றுகொல்கண்டே.

கண்ணா! உனக்கே தொண்டனாகிவிட்டேன்

3863. கண்டேகளிக்கின்றது இங்கென்றுகொல்கண்கள்
தொண்டேபுனக்காயொழிந்தேன் துரிசின்றி
வண்டார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்
கொண்டே யுறைகின்ற எங்கோவலர்கோவே.

நம்பீ! அடியான் என்று எனக்கு அருள்

3864. கோவாகிய மாவலியைநிலங்கொண்டாய்
தேவாசுரம்செற்றவனே திருமாலே
நாவாயுறைகின்ற என்னாரணநம்பி
ஆவாலவடியானி னென்றருளாயே.

தேவா! உன்னை என் நெஞ்சத்திருத்தும் அறிவைத் தருக

3865. அருளாதொழிவாயருள்செய்து அடியேனைப்
பொருளாக்கி உன்பொன்னடிக்கீழ்புகவைப்பாய்
மருளேயின்றி உன்னையென்னெஞ்சத்திருத்தும்
தேருளேதரு தென்திருநாவாயென்தேவே.

அந்தோ! திருநாவாய் அணுகமுடியுமா?

3866. தேவர் முனிவர்க்கென்றும் காண்டற்கரியன்
மூவர்முதல்வன் ஒருமூவுலகாளி
தேவன்விரும்பி யுறையும் திருநாவாய்
யாவரணுகப்பெறுவார் இனியந்தோ.

மணிவண்ணா! உன்னையே நான் அழைக்கின்றேன்

3867. அந்தோவணுகப்பெறுநாள் என்றெப்போதும்
சிந்தைகலங்கித் திருமாவென்றழைப்பன்
கொந்தார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்
வந்தேயுறைகின்ற எம்மாமணிவண்ணா.

இவற்றைப் படித்தோர் அரசாண்டு மணத்துடன் வாழ்வர்

3868. வண்ணம்மணிமாட நன்னாவாயுள்ளானை
திண்ணம்மதிள் தென்குருகூர்ச்சடகோபன்
பண்ணார்தமிழ் ஆயிரத்திப்பத்தும்வல்லார்
மண்ணாண்டு மணங்கமழ்வர்மல்லிகையே.

நேரிசை வெண்பா

திருநாவாய் செல்ல எண்ணிணான் மாறன்

அறுக்குமிடர் என்றவன்பால் ஆங்குவிட்ட தூதர்
மறித்துவரப் பற்றா மனத்தால்-அறப்பதறிச்
செய்யதிரு நாவாயிற் செல்லநினைந் தான், மாறன்
மையலினாற் செய்வறியா மல்  (88)

ஒன்பதாந் திருமொழி

9. மல்லிகை கமழ்

இத்திருவாய்மொழியை மாலைப் பூசல் என்று கூறுவர். கண்ணபிரான் ஆநிரை மேய்ந்து மாலையில் வீடு திரும்பும் போது சில நாட்கள் கண்ணன் குழலூதிக்கொண்டு முன்னே வருவான். பின்னால் பசுக் கூட்டங்கள் வரும். சில நாட்கள் பசுக்கள் முன்னே வரும். கண்ணன் அவற்றின் பின்னால் வருவான். இவ்வாறு வரும் நாளில் பசுக் கூட்டங்களின்முன் கண்ணனைக் காணாமல் ஆயர் பாடிக் பெண்கள் பட்ட பாட்டை ஆழ்வார் (தாமும் ஆயர் பெண்ணின் நிலையில் இருந்து கொண்டு) பேசுகிறார் இத்திருவாய்மொழியில்.

மாலை நேரம் கண்டு தலைவி இரங்கல்

எண்சீர் ஆசிரிய விருத்தம்

கண்ணன் இல்லாமல் தனித்துவிட்டேனே!

3869. மல்லிகை கமழ்தென்ற லீருமாலோ வண்குறிஞ்சி யிசைத வருமாலோ
செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ செக்கர்நன் மேகங்கள் சிதைக்கு மாலோ
அல்லி யந்தாமரைக் கண்ண னெம்மான் ஆயர்க ளேரியே றெம்மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிட மறிகிலம் தமியமாலோ.

கண்ணனைக் காணோம்; என் உயிர் காக்குமாறு என்?

3870. புகலிடமறிகிலம்தமியமாலோ புலம்புறுமணிதென்றலாம்பலாலோ
பகலடுமாலைவண்சாந்தமாலோ பஞ்சமம் முல்லை தண்வாடையாலோ
அகலிடம்படைத்திடந்துண்டுமிழ்ந்தளர்ந்து எங்குமளிக்கின்றவாயன்மாயோன்
இகலிடத்தசுரர்கள்கூற்றம் வாரான் இனியிருந்தென்னுயிர் காக்குமாறென்.

கண்ணனின் நினைவு வாட்டுகிறதே!

3871. இனியிருதென்னுயிர்காக்குமாறென் இணைமுலைநமுக நுண்ணிடைநுடங்க
துனியிருங்கலவிசெய்தாகந்தோய்ந்து துறந்தெம்மையிட்டகல் கண்ணன்கள்வன்
தனியிளஞ்சிங்கமெம்மாயன்வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனியிருங்குழல்களும்நான்குதோளும் பாலியேன் மனத்தேநின்றீருமாலோ.

மாலைப்பொழுது வந்துவிட்டதே! எனக்குத் துணை இல்லையே!

3872. பாவியேன் மனத்தேநின்றீருமாலோ வாடைதண்வாடை வெவ்வாடையாலோ
மேவுதண்மதியம் வெம்மதியமாலோ மென்மலர்பபள்ளி வெம்பள்ளியாலோ
தூவியம் புள்ளுடைத்தெய்வண்டுதுதைந்த எம்பெண்மையம் பூவி தாலோ
ஆவியின் பரமல்லவகைகளாலோ யாமுடைநெஞ்சமும் துணையன்றாலோ.

ஆயன் மனம் கல்லாகிவிட்டதோ? எப்படி உயிரைக் காப்பேன்

3873. யாமுடை நெஞ்சமும்துணையன்றாலோ ஆபுகுமாலையுமா கின்றாலோ
யாமுடை ஆயன்றன்மனம் கல்லாலோ அவனுடைத்தீங் குழலீருமாலோ.
யாமுடைத்துணையென்னும் தோழிமாருமெம்மில் முன்னவனுக்கு மாய்வராலோ
யாமுடையாருயிர்காக்குமாறென் அவனுடையருள் பெறும்போதரிதே.

அன்னைமீர்! நான் என்னவென்று சொல்லுவேன்?

3874. அவனுடையருள் பெறும்போதரிதால் அவ்வருளல்லனவருளுமல்ல
அவனருள் பெறுமளவாவிநில்லாது அடுபகல் மாலையும் நெஞ்சுங்காணேன்
சிவனொடுபிரமன் வண்டிருமடந்தை சேர்திருவாகமெம்மாவியிரும்
எவமினிப்புகுமிடமெவம் செய்கேனோ ஆருக்கென் சொல்லுகேனன்னைமீர்காள்.

எனது நெஞ்சம் கண்ணன் பக்கமே சேர்ந்தது

3875. ஆருக்கென் சொல்லுகேனன்னைமீர்காள் ஆருயிரளவன்றிக் கூர்தண்வாடை
காரோக்குமேனி நங்கண்ணன் கள்வம் கவர்ந்தவத்தனி நெஞ்சமவன்கணஃதே
சீருற்றவகில்புகையாழ்நரம்பு பஞ்சமம் தண்பசும்சாந்தணைந்து
போருற்றவாடைதண் மல்லிகைப்பூப் புதுமணமுகந்து கொண்டேறியுமாலோ.

கண்ணனிற் கொடியது கண்ணன் கள்வம்

3876. புதுமணமுகந்துகொண்டெறியுமாலோ பொங்கிளவாடை புன்செக்கராலோ
அதுமணந்தகன்ற நங்கண்ணன்கள்வம் கண்ணனிற்கொடி தினியதனிலும்பர்
மதுமணமல்லிகைமந்தக்கோவை வண்பசும்சாந்தினில் பஞ்சமம்வைத்து
அதுமணந்தின்னருளாய்ச்சியர்க்கே யூதுமத்தீங் குழற்கேயுய்யேன் நான்.

மாலையும் வந்தது; மாயன் வரவில்லையே!

3877. ஊதுமத்தீங்குழற்கேயுய்யேன் நானது மொழிந்திடையிடைத் தன் செய்கோலத்
தூதுசெய்கண்கள் கொண்டொன்று பேசித் தூமெழியிசைகள் கொண்டொன்றுநோக்கி
பேதுறுமுகம்செய்துநொந்துநொந்து பேதைநெஞ்சற வறப்பாடும்பாட்டை
யாதுமொன்றறிகிலமம்மவம்ம மாலையும் வந்து மாயன்வாரான்.

மாலை வந்துவிட்டது; நான் எப்படி உய்வேன்?

3878. மாலையும் வந்தது மாயன் வாரான் மாமணிபுலம்பவல்லேறணைந்த
கோலநன்னாகுகளுகளுமாலோ கொடியன குழல்களும்குழறுமாலோ
வமலொளிவளர்முல்லை கருமுகைகள் மல்லிகை யலம்பிவண்டாலுமாலோ
வேலையும் விசும்பில்விண்டலறுமாலோ என் சொல்லியுய்வனிங்கவனைலிட்டே.

தொண்டர்காள்! இவற்றைப் படித்து உய்வு பெறுக

3879. அவனைவிட்டகன்றுயிராற்றகில்லா அணியிழையாச்சியர் மாலைப்பூசல்
அவனை விட்ட கல்வதற்கேயிரங்கி யணி குருகூர்ச்சடகோபன்மாறன்
அவனியுண்டுமிழ்ந்தவன் மேலுரைத்த ஆயிரந்துள்ளிவைபத்தும் கொண்டு
அவனியுளலற்றிநின்றுய்மின் தொண்டீரச்சொன்ன மாலைநண்ணித்தொழுதே.

நேரிசை வெண்பா

மாறன் அருளால் மயக்கம் தீரும்

மல்லடிமை செய்யும்நாள் மால்தன்னைக் கேட்க, அவன்
சொல்லுமள வும்பற்றாத் தொன்னலத்தால்- செல்கின்ற
ஆற்றாமை பேசி அலமந்த மாறனருள்
மாற்றாகப் போகுமென்றன் மால்  (89)

பத்தாந் திருமொழி

10. மாலை நண்ணி

பகவானைப் பெறவேண்டும் என்கிற மனோரதம் ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் இருப்பதைப் பகவான் அறிந்தான். ஆழ்வீர்! என்னை அடையவில்லையே என்று நீர் ஏன் கவலையுறுகிறீர்! உம்மையடையாமல் குறைபடுகிறவன் நானே! உமக்காகவே பரமபதத்தை விட்டுத் திருக்கண்ணபுரத்திற்கு வந்து இருக்கிறேன். இந்த சரீரத்தின் முடிவில் உம்முடைய விருப்பத்தை நிறைவேற்றுவோம் என்று கூறி ஆறுதலளித்தான். ஆழ்வாரும் ஆறுதலடைந்து அதைச் சொல்லி மகிழ்கிறார்.

திருக்கண்ணபுரத்தை அடையுமாறு உபதேசித்தல்

கலி விருத்தம்

திருக்கண்ணபுரத்தானைத் தொழுதெழுமின்

3880. மாலைநண்ணித் தொழுதெழுமினோவினைகெட
காலைமலை கமலமலரிட்டுநீர்
வேலைமோதும்மதிள்சூழ் திருக்கண்ணபுரத்து
ஆலின்மேலாலமர்ந்தான் அடியிணைகளே.

தொண்டர்களே! திருகண்ணபுரத்தானை மலரிட்டு இறைஞ்சுமின்

3881. கள்ளவிழும்மலரிட்டு நீரிறைஞ்சுமின்
நள்ளிசேரும்வயலசூழ் கிடங்கின்புடை
வெள்ளியேய்ந்தமதிள்சூழ் திருக்கண்ணபுர
முள்ளி நாளுந்தொழுதேழுமினோதொண்டரே.

கண்ணனை இறைஞ்சினால் துயர் நீங்கும்

3882. தொண்டர்நுந்தம் துயர்போகநீரேகமாய்
விண்டுவாடாமலரிட்டு நீரிறைஞ்சுமின்
வண்டுபாடும்பொழில் சூழ் திருக்கண்ணபுரத்
தண்டவாணன் அமரர்பெருமானையே.

கண்ணனை இறைஞ்சிச் சரண் புகுக

3883. மானை நோக்கி மடப்பின்னைதன்கேள்வனை
தேனைவாடாமலரிட்டு நீரிறைஞ்சுமின்
வானையுந்துமதிள்சூழ் திருக்கண்ணபுரம்
தானயந்தபெருமான் சரணாகுமே.

கண்ணனைச் சரணடைந்தால் வைகுந்தம் கிடைக்கும்

3884. சாணாமாகும் தனதாளா டைந்தார்க் கெல்லாம்
மரணமானால் வைகுந்தம்கொடுக்கும்பிரான்
அரணமைந்த மதிள்சூழ் திருக்கண்ணபுரத்
தரணியாளன் தனதண்டர்க்சன்பாகுமே.

மெய்யார்க்கு மெய்யன் திருக்கண்ணபுரத்தான்

3885. அன்பனாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம்
செம்போனாகத்து அவணனுடல்கீண்டவன்
நன்போனேய்ந்தமதிள்சூழ் திருக்கண்ணபுரத்
தன்பன் நாளும் தனமெய்யர்க்கு மெய்யனே.

கண்ணபுரத்து ஐயன் பக்தர்கட்கு அருகிருப்பான்

3886. மெய்யனாகும் விரும்பித்தொழுவார்க்கெல்லாம்
பொய்யனாகும் புறமேதொழுவார்க்கெல்லாம்
செய்யில்வாளையுகளும் திருக்கண்ணபுரத்
தையன் ஆகத்தணைப்பார்கட்கணியனே.

கண்ணபுரத்தானைப் பணிக; பிணியும் பிறவியும் கெடும்

3887. அணியனாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம்
பிணியும் சாரா பிறவிகெடுந்தாளும்
மணிபொனேய்ந்தமதிள்சூழ் திருக்கண்ணபுரம்
பணிமின் நாளும்பரமேட்டிதன்பாதமே.

திருக்கண்ணபுரத்தானை அடைந்தால் துன்பம் இல்லை

3888. பாதநாளும்பணியத் தணியும்பிணி
ஏதாம் எனக்கேலினியென்குறை
வேதநாவர்விரும்பம் திருக்கண்ணபுரத்
தாதியானை அடைந்தார்க் கல்லலில்லையே.

திருக்கணபுரம் என்றால் துயர் இல்லை

3889. இல்லையல்லல் எனக்கேலினியென்குறை
அல்லிமாதரமரும் திருமார்பினன்
கல்லிலேய்ந்த மதிள்சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல நாளும்துயர் பாடுசாராவே.

இவற்றைப் பாடிப் பணிக; பற்று நீங்கும்

3890. பாடுசாராவினை பற்றறவேண்டுவீர்
மாடநீடு குருகூர்ச்சடகோபன் சொல்
பாடலானதமிழ் ஆயிரத்துளிப்பத்தும்
பாடியாடி பணிமினவன் தாள்களே.

நேரிசை வெண்பா

மாறன் திருவடிகளையே சேர்வேன்

மாலுமது வாஞ்சைமுற்றும் மன்னுமுடம் பின்முடிவில்
சாலநண்ணிச் செய்வன் எனத் தானுகந்து-மேலவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனுஞ் சீர்மாறன்
தாரானோ நந்தமக்குத் தாள்?  (90)
*************
பத்தாம் பத்து

முதல் திருமொழி

1. தாள தாமரை

தம் வாழ்நாளின் முடிவு நெருங்கிவிட்டது என்று தாமே முடிவு செய்துகொண்ட ஆழ்வார், திருநாட்டுப் பயணத்திற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று தீர்மானித்து, முந்துற முன்னம் திருமோகூர்க் காளமேகப் பெருமாளை வழித்துணையாகப் பற்றுகிறார்.

பரமபதம் அடையக் கருதிய ஆழ்வார் திருமோகூர் பெருமானைச் சரணடைதல்

கலி நிலைத்துறை

காளமேகமே கதி

3891. தாள தாமரைத் தடமணி வயல் திருமோகூர்
நாளும் மேவிநன் கமர்ந்துநின் றசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்
காள மேகத்தை யன் றிமற் றொன்றிலம் கதியே.

காளமேகத்தின் திருவடிகளே துணை

3892. இலங்கதி மற்றொன் றெம்மைக்கும் ஈன்தண் துழாயின்
அலங்கலங் கண்ணி ஆயிரம் பேருடை அம்மான்
நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்திரு மோகூர்
நலங்க ழலவன் அடிநிழல் தடமன்றி யாமே.

துன்பம் நீங்க மோகூர் அடைவோம்

3893. அன்றி யாமொரு புகலிடம் இலம் என்றென் றலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றிம் மூவுல களித்துழல் வான்திரு மோகூர்
நன்று நாமினி நணுகுதும் நமதிடர் கெடவே.

தொண்டர்காள்! மோகூரான் திருவடி துதிப்போம்

3894. இடர்கெட எம்மைப் போந்தளி யாய் என்றென் றேத்தி
சுடர்கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர்கொள் பாம்பணைப் பள்ளிகொள் வான்திரு மோகூர்
இடர்கெ டவடி பரவுதும் தொண்டீர்! வம்மினே.

மோகூர்க் கோயிலை வலம் செய்து கூத்தாடுவோம்

3895. தொண்டீர்! வம்மின் நம்சுடரொளி யொருதனி முதல்வன்
அண்ட மூவுல களந்தவன் அணிதிரு மோகூர்
எண்டி சையுமீன் கரும்பொடு பொருஞ்செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலஞ்செய்திங் காடுதும் கூத்தே.

திருமோகூரானின் திருவடிகளே காவல்

3896. கூத்தன் கோவலன் குதற்றுவல் லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண்பணை வளவயல் சூழ்திரு மோகூர்
ஆத்தன் தாமரை யடியன்றி மற்றிலம் அரணே.

திருமோகூரை வலம் செய்: துயர் கெடும்

3897. மற்றி லமரண் வான்பெரும் பாழ்தனி முதலா
சுற்று நீர்படைத் ததன்வழித் தொன்முனி முதலா
முற்றும் தேவரோ டுலகுசெய் வான்திரு மோகூர்
சுற்றி நாம்வலஞ் செய்யநம் துயர்கெடும் கடிதெ.

மோகூர்ப் பெருமானைத் தொழுமின்

3898. துயர்கெ டும்கடி தடைந்துவன் தடியவர் தொழுமின்
உயர்கொள் சோலையொண் தடமணி யொளிதிரு மோகூர்
பெயர்கள் ஆயிர முடையவல் லரக்கர்புக் கழுந்த
தயரதன் பெற்ற மரதக மணித்தடத் தினையே.

மோகூரை நெருங்கிவிட்டோம்: பாதுகாவல் கிடைத்துவிட்டது

3899. மணித்த டத்தடி மலர்க்கண்கள் பவளச் செவ்வாய்
அணிககொள் நால்தடந் தோள்தெய்வம் அசுரரை யென்றும்
துணிக்கும் வல்லரட் டனுறை பொழில்திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாமடைந் தனமே.

பக்தர்களே! மோகூரானையே துதியுங்கள்

3900. நாம டைந்தநல் லரண்தமக் கென்றுநல் லமரர்
தீமை செய்யும்வல் லசுரரை யஞ்சிச்சென் றடைந்தால்
காம ரூபம்கொண் டெழுந்தளிப் பான்திரு மோகூர்
நாம மேநவின் றெண்ணுமின் ஏத்துமின் நமர்காள்.

இவற்றைப் பாடுக: துன்பம் நீங்கும்

3901. ஏத்து மின்நமர் காள் என்று தான்குட மாடு
கூத்தனை குரு கூர்ச்சட கோபன்குற் றேவல்
வாய்த்த ஆயிரத் துள்ளிவை வண்திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை யேத்தவல் லார்க்கிடர் கெடுமே.

நேரிசை வெண்பா

மாறன் திருநாமம் கூறினால் துன்பம் ஒழியும்

தாளடைந்தோர் தங்கட்குத் தானே வழித்துணையாம்
காளமே கத்தைக் கதியாக்கி-மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகி லேகவெண்ணும் மாறனென
கெதமுள்ள தெல்லாம் கெடும்   (91)

இரண்டாந் திருமொழி

கெடுமிடர்

ஆழ்வார் திருவனந்தபுரத்தைப் பரமபதம்போல எண்ணி அவ்விடத்தில் ஈடுபட்டுப் பாடுகிறார் இத்திருவாய்மொழி திருவனந்தபுரத்தைப் பற்றியது.

திருவனந்தபுரத்தில் தொண்டு செய்யலாம் எனல்

கலி விருத்தம்

தொண்டு செய்யாத திருவனந்தபுரம் புகுவோம்

3902. கெடுமிட ராயவெல்லாம் கேசவா வெள்ள நாளும்
கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்தபுரநகரிப் புகுதுமின்றே.

திருவனந்தபுரத்தானை நினைத்தால் மோட்சம் உண்டு

3903. இன்றுபோய்ப் புகுதிராகி லெழு மையும் ஏதம்சார
குன்றுனேர் மாடமாடே குருந்துசேர் செருந்திபுன்னை
மன்றலர் போழில் அனந்தபுரநகர் மாயன்நாமம்
ஒன்றுமோ ராயிரமாம் உள்ளுவார்க் கும்பரூரே.

திருவனந்தபுரம் சேர்ந்தால் வினை தீரும்

3904. ஊரும்புட் கொடியுமஃதே யுலகொல்லாமுண்டுமிழ்ந்தான்
சேரும்தண் ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணநாம் அறியச்சொன்னோம்
பேரும் ஓராயிரத்துள் ஒன்றுநீர் பேசுமினே.

அனந்த பத்மநாபனுக்கு அடிமை செய்பவர் பாக்கியசாலி

3905. பேசுமின் கூசமின்றிப் பெரியநீர் வேலைசூழ்ந்து
வாசமே கமழுஞ்சோலை வயலணி யனந்தபுரம்
நேசம்செய் துறைகின்றானை நெறிமையால் மலர்கள்தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே.

பத்மநாபன் திருவடி தேவராகலாம்

3906. புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள்தூவி
எண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால்
திண்ணம்நாம் அறியச்சொன்னோம் செறிபொழில்
அனந்தபுரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார்.

கோவிந்தனை நணுகுவோம்

3907. அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேர அனந்தபுரத்து
அமரர்கோன் அர்ச்சிக்கின்றங் ககப்பணி செய்வர்விண்ணோர்
நமர்களோ! சொல்லக்கேண்மின் நாமும்போய் நணுகவேண்டும்
குமரனார் தாதைதுன்பம் துடைத்தகோ விந்தனாரே.

கடுவினை களைய அனந்தபுரம் அடைக

3908. துடைத்தகோ விந்தனாரே யுலகுயிர் தேவும்மற்றும்
படைத்தவெம் பரமமூர்த்தி பாம்பணைப் பள்ளிகொண்டான்
மடைத்தலை வாளைபாயும் வயல ணியனந்தபுரம்
கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே.

நம்மவர்களே! பத்மநாபன் திருவடி காண நடமின்

3909. கடுவினை களையலாகும் காமனைப் பயந்தகாளை
இடவகை கொண்டதென்பர் எழிலணி யனந்தபுரம்
படமுடை யரவில்பள்ளி பயின்றவன் பாதம்காண
நடமினோ நமர்களுள்ளீர்! நாமுமக் கறியச்சொன்னோம்.

வாமனன் திருவடி ஏத்துக: வினைகள் அறும்

3910. நாமுமக் கறியச்சொன்ன நாள்களும் நணியவான
சேமம் நங்குடைத்துக்கண்டீர் செறிபொழிலனந்தபுரம்
தூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்துகொண்டு
வாமனன் அடிக்கென்றெத்த மாய்ந்தறும் வினைகள்தாமே.

திருவனந்தபுரத்து மாதவனை ஏத்துக: புகழடையலாம்

3911. மாய்ந்தறும் வினைகள்தாமே மாதவா என்ன நாளும்
ஏய்ந்தபொன் மதிளனந்தபுர நகரெந்தைக்கென்று
சாந்தொடு விளக்கம்தூபம் தாமரை மலர்கள்நல்ல
ஆய்ந்துகொண் டேத்தவல்லார் அந்தமில் புகழினாரே.

இவற்றைப் பாடினால் தேவருலக இன்பம் கிட்டும்

3912. அந்தமில் புகழனந்தபுர நகர் ஆதிதன்னை
கொந்தலர் பொழில்குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோ டைந்தும்வல்லார் அணைவர்போய் அமருலகில்
பைந்தொடி மடந்தையர்தம் வேய்மரு தோளிணையே.

நேரிசை வெண்பா

மாலுக்கு அடிமை செய்ய விரும்பினான் மாறன்

கெடுமிடர் வைகுந்தத் தைக்கிட்டி னாற்போல்
தடமுடைய னந்தபுரந் தன்னில் படவரவில்
கண்டுயில்மாற் காட்செய்யக் காதலித்தான் மாறன், உயர்
விண்டனிலுள் ளோர்வியப்ப வே  (92)

மூன்றாந் திருமொழி

3. வேய் மருதோள்

இத்திருவாய்மொழி காலைப்பூசல்

ஆழ்வார் திருவனந்தபுரம் சென்று எம்பெருமானுக்கு அடிமை செய்யப் பாரித்தார். ஆனால் அப்போதே அவ்விடம் சென்று அடிமை செய்யமுடியாமையால் கலங்கினார்; எம்பெருமான், தம்மை இங்கேயே இருக்கச் செய்துவிடுவானோ என்று ஐயுற்றார்.

இடைப் பெண்களுக்குக் கண்ணபிரான்மீது ஓர் ஐயமுண்டாகி அவர்கள் கதறியதை வெளியிடும் வாயிலாகத் தம் ஐயத்தை வெளியிடுகிறார் ஆழ்வார்.

ஆநிரை மேய்க்கச் செல்லுதலைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டல்

எண்சீர் ஆசிரிய விருத்தம்

கண்ணா! பிரிவாற்றோம்: நீ ஆநிரை மேய்க்கச் செல்லாதே

3913. வேய்மரு தோளிணை மெலியு மாலோ! மெலிவுமென் தனிமையும் யாதும் நோக்கா
காமரு குயில்களும் கூவு மாலோ! கணமயில் அவைகலந்தாலு மாலோ
ஆமரு வினநிரை மேய்க்க நீபோக்கு ஒருபக லாயிர மூழி யாலோ தாமரைக்
கண்கள்கொண் டீர்தி யாலோ! தகவிலை தகவிலையே நீ கண்ணா.

கண்ணா! எம்மைப் பிரிதல் தக்கதன்று

3914. தகவிலை தகவிலை யேநீ கண்ணா! தடமுலை புணர் தொறும் புணற்ச்சிக் காரா
சுகவெள்ளம் விசும்பிறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்தது கனவென நீங்கி யாங்கே
அகவுயிர் அகமதந்தோறும் உள்புக் காவியின் பரமல்ல வேட்கை யந்தோ
மிகமிக இனியுன்னைப் பிரிவை யாமால் வீவநின் பசுநிரை மேய்க்கப் போக்கே.

கண்ணா! எம்மைத் தவிக்கச் செய்து பிரிந்துவிடாதே

3915. வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு வெவ்வுயிர் கொண்டென தாவி வேமால்
யாவரும் துணையில்லை யானி ருந்துன் அஞ்சன மேனியை யாட்டம் காணேன்
போவதன் றொருபகல் நீய கன்றால் பொருகயற் கண்ணிணை நீரும் நில்லா
சாவதிவ் வாய்க்குலத் காய்ச்சி யோமாய்ப் பிறந்தவித் தொழுத்தையோம் தனிமை தானே.

கண்ணா! நீ பிரிந்தால் எம் ஆவி வெந்துவிடும்

3916. தொழுத்தையோம் தனிமையும் துணைபிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந் தாநின்
தொழுத்தனில் பசுக்களை யேவி ரும்பித் துறந்தெம்மையிட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்தநல் லமுதினின் சாற்று வெள்ளம் பாவியேன் மனமகந் தோறு முள்புக்
கழுத்த நின் செங்கனி வாயின் கள்வப் பணிமொழி நினைதொறும் ஆவிவேமால்.

கண்ணா! எம் கூந்தலைத் தடவிக்கொண்டே இரு

3917. பணிமொழி நினைதொறும் ஆவி வேமால் பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா!
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப் பெருமத மாலையும் வந்தின் றாலோ
மணிமிகு மார்வினில் முல்லைப் போதென் வனமுலை கமழ்வித்துன் வாயமு தம்தந்து
அணிமிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சி யோம்தலை மிசைநீ யணியாய்!

கண்ணா நீ பிரிந்தால் எம் உயிர் உருகும்

3918. அடிச்சி யோம்தலை மிசைநீ யணியாய் ஆழியங் கண்ணா! உன் கோலப் பாதம்
பிடித்தது நடுவுனக் கரிவை மாரும் பலரது நிற்கவெம் பெண்மை யாற்றோம்
வடித்தடங் கண்ணிணை நீரும் நில்லா மனமும்நில் லாவெமக் கதுதன் னாலே
வெடிப்புநின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் ளுக்கே

கண்ணா! நீ உன் கால் நோவ ஏன் செல்கின்றாய்?

3919. வேமெம துயிரழல் மெழுகில் ளுக்கு வெள்வளை மேகலை கழன்று வீழ
தூமலர்க் கண்ணிணை முத்தம் சோரத் தூணைமுலை பயந்து என தோள்கள் வாட
மாமணி வண்ணா உன்செங்கமல வண்ணமென் மலரடி நோவ நீபோய்
ஆமகிழ்ந் துகந்தவை மேய்க்கின் றுன்னோடு அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே?

கண்ணா! ஆய்ச்சியர்களின் பக்கத்திலேயே நீ இரு

3920. அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொ லாங்கென்று ஆழுமென் னாருயிர் ஆன்பின் போகேல்
கசிகையும் வேட்கையும் உள்க லந்து கலவியும் நலியுமென் கைகழி யேல்
வசிசெயுன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி
ஒசிசெய்நுண் ணிடையிள ஆய்ச்சி யர்நீ உகக்குநல் லவரொடும் உழித ராயே.

கண்ணா! நீ அசுரர்களுடன் போரிட நேரலாம்: போகாதே

3921. உகக்குநல்லவரொடுமுழிதந்து உன்தன் திருவுள்ளமிடர்கெடுந்தொறும் நாங்கள்
வியக்கவின்புறுதும்எம்பெண்மையாற்றோரும் எம்பெருமான் பசுமேய்க்கப்போகேல்
மிகப்பலவகரர்கள் வேண்டுருவங்கொண்டு நின்றுழிதருவர்கஞ்சனேவ
அகப்படிலவரொடும் நின்னொடாங்கே அவத்தங்கள் விளையுமென்சொற்கொளந்தொ!

கண்ணா! அசுரர் திரிகின்றனர்: தனியே செல்லாதே

3922. அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ அசுரர்கள் வங்கையர் கஞ்ச னேவத்
தவத்தவர் மறுக நின்றுழி தருவர் தனிமையும் பெரிதுனக்கு இராமனையும்
உவர்த்தலை உடந்திரி கிலையு மென்றென்று ஊடுற வென்எ டை யாவிவேமால்
திவத்திலும் பசுநிரை மேய்ப்பு வத்தி செங்கனி வாயெங்கள் ஆயர் தேவே.

இவற்றையும் பாடுக: உய்வு பெறலாம்

3923. செங்கனி வாயெங்கள் ஆயர் தேவு அத்திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர் வண்சட கோபன்சொல் லாயி ரத்துள்
மங்கைய ராய்ச்சிய ராய்ந்த மாலை அவனொடும் பிரிவதற் கிரங்கி தையல்
அங்கவன் பசுநிரை மேய்ப்பொ ழிப்பான் உரைத்தன இவையும்பத் தவற்றின் சார்வே.

நேரிசை வெண்பா

மாறனே எனக்குக் கதி

வேய்மருதோள் இந்திரைகோன் மேவுகின்ற தேசத்தைத்
தான்மருவாத் தன்மையினால் தன்னையின்னம்-பூமியிலே
வைக்குமெனச் சங்கித்து மால்தெளிவிக் கத்தெளிந்த
தக்கபுகழ் மாறனெங்கள் சார்வு  (93)

நான்காந் திருமொழி

4. சார்வே தவநெறி

கண்ணா! நீ பசு நிரை மேய்க்கப் போகேல் என்றார்கள் இடைப் பெண்கள் அப்படியாகில் இனி இத்தொழிலை விட்டேன் என்றானாம் எம்பெருமான். அப்படிப்பட்ட குணத்தில் ஈடுபட்ட ஆழ்வார் கனிவுடன் பாடியுள்ளார்.

தமது பக்தி பலித்தமையை ஆழ்வார் அருளிச் செய்தல்

கலி விருத்தம்

தாமோதரன் தாள்களே தவநெறிக்குத் துணை

3924. சார்வேதவ நெறிக்குத் தாமோதரன் தாள்தள்,
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்,
நீர்வானம் மண்ணெர்கா லாய்நின்ற நேமியான்,
பேர்வா னவர்கள் பிதற்றும் பெரு மையனே.

செங்கண்மாலே என்னை ஆள்கின்றான்

3925. பெருமையனே வானத் திமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணையாதார்க்கு என்றும்
திருமெய் யுறைகின்ற செங்கண்மால் நாளும்
இருமை வினைகடிந்திங்கு என்னையாள் கின்றானே.

கண்ணன் கழலிணைக் கண்டு தலைமேல் சூடினேன்

3926. ஆள்கின்றா னாழியான் ஆரால் குறைவுடையம்?
மீள்கின்ற தில்லைப் பிறவித் துய ர்கடிந்தோம்,
வாள்கெண்டையொண்கண் மடப்பின்னை தன்கேள்வன்,
தாள்கண்டு கொண்டு என் தலைமேல் புனைந்தேனே.

என் மனத்துள் இருந்தான் எம்பெருமான்

3927. தலைமேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல்தான் நின்றென் மனத்து ளிருந்தானை
நிலைபேர்க்க லாகாமை நிச்சித் திருந்தேனே.

என்னால் விரும்பப்படுபவன் சக்கரபாணி

3928. நிச்சித் திருந்தேனென் நெஞ்சம் கழியாமை
கைச்சக் கரத்தண்ணல் கள்வம் பெரிதுடையன்
மெச்சப் படான்பிறர்க்கு மெய்போலும் பொய்வல்லன்
நச்சப் படும்நமக்கு நாகத் தணையானே.

ஞானத்தால் சேர்வார்க்கு அருள் செய்பவன் பாம்பணையான்

3929. நாகத் தணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத் தணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை
மாகத் திள மதியம் சேரும் சடையானை
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே.

மனமே! ஆழியானைப் பணிந்திடு

3930. பணிநெஞ்சே! நாளும் பரம பரம்பரனை
பிணியொன்றும் சாரா பிறவி கெடுத்தாளும்
மணிநின்ற சோதி மதுசூதன் என்னம்மான்
அணிநின்ற செம்பொன் அடலாழி யானே.

நெஞ்சே! கண்ணன் கழலிணை மறவாதே

3931. ஆழியா னாழி யமரர்க்கும் அப்பாலான் ஊழியா
னூழி படைத்தான் நிரைமேய்த்தான்
பாழியந் தோளால் வரையெடுத்தான் பாதங்கள்
வாழியென் நெஞ்சே! மறவாது வாழ்கண்டாய்.

தொண்டு செய்யப் பணித்தவன் மாறன்

3932. கண்டேன் கமல மலர்ப் பாதம், காண்டதுமே,
விண்டே ஒழிந்த வினையாயின் எல்லாம்,
தொண்டே செய்து, என்று
தொழுது வழியொழுக,
பண்டே பரமன் பணித்த பணிவகையே.

மாதவன் திருவடிகளே நமக்குப் பற்று

3933. வகையால் மனமொன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புதுமலரால் நீரால்
திகைதோ றமரர்கள் சென்றிறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கடகோர் பற்றே.

இவற்றைப் படித்தால் கண்ணன் கழலிணை சேரலாம்

3934. பற்றென்று பற்றிப் பரம பரமபரனை
மற்றிண்டோள் மாலை வழுதி வளநாடன்
சொற்றொடையந் தாதியோ ராயிரத்து ளிப்பத்தும்
கற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே.

நேரிசை வெண்பா

மாறன் திருவடிகளைக் கண்டு என் கண் களிக்கும்

சார்வாக வேயடியிற் றானுரைத்த பத்திதான்
சீரார் பலத்துடனே சேர்ந்ததனைச்-சோராமல்
கண்டுரைத்த மாறன் கழலிணையே நாடோறும்
கண்டுகக்கு மென்னுடைய கண்  (94)

ஐந்தாந் திருமொழி

5. கண்ணன் கழலிணை

பெரியோர்கள் திருநாட்டுக்கு எழுந்தருளும் கடைசி நாட்களில், தமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் அன்பர்களுக்கு அருமையான உபதேசங்கள் சிலவற்றைச் செய்வதுண்டு. ஆழ்வாரும் கடைசி உபதேசங்களைச் செய்கிறார் இப்பகுதியில்.

பக்தி செலுத்தும் விதங்கள்

வஞ்சித்துறை

நாராயணன் திருநாமம் எண்ணுக

3935. கண்ணன் கழல் இணை நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம் நாரணம் ஏ திண்ணம்.

நாரணனே ஆதிமூலம்

3936. நாரணன் எம்மான் பாரணங்காளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே.

உலககெல்லாம் ஆள்பவன் நாராயணனே

3937. தானே உலகெலாம் தானே படைத்திடந்து
தானே உண்டுமிழ்ந்து தானே யாள்வானே.

நாரணன் திருவடிகளில் மலர் தூவி வழிபடுக

3938. ஆள்வான் ஆழிநீர் கோள்வாய அரவணையான்
தாள்வாய் மலரிட்டு நாள்வய் நாடீரே.

நாரணன் நாமம் பாடுக: வைகுந்தம் கிட்டும்

3939. நாடீர் நாள்தோறும் வாடா மலர்கொண்டு
பாடீர் அவன்நாமம் வீடே பெறலாமே.

மாதவன் வேங்கடத்தே உள்ளான்

3940. மேயான் வேங்கடம் காயா மலர்வண்ணன்
பேயார் முலையுண்ட வாயான் மாதவனே.

மாதவனென்று ஓது: தீது வராது

3941. மாதவன் என்றென்று ஓத வல்லீரேல்
தீதொன்று மடையா ஏதம் சாராவே.

கண்ணன் பேர் ஓதினால் துன்பங்கள் சேரா

3942. சாரா ஏதங்கள் நீரார் முகில்வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே.

கண்ணனைத் தொழுக: வினைகள் சேரா

3943. அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே.

நெடியானை நினைமின்: வினையிருள் ஓடும்

3944. வினைவல் இருளென்னும் முனைகள் வெருவிப்போம்
சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே.

இவற்றைப் பாடு: கண்ணன் அருள் கிட்டும்

3945. நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்திப்பத்து அடியார்க்கு அருள் பேறே.

நேரிசை வெண்பா

மாறன் உபதேசங்களை அருளினான்

கண்ணன் அடியிணையிற் காதலுறு வார்செயலைத்
திண்ணமுற வேசுருங்கச் செப்பியே-மண்ணவர்க்குத்
தானுபதே சிக்கை தலைக்கட்டி னான்மாறன்
ஆனபுகழ் சேர்தன் அருள்  (95)

ஆறாந் திருமொழி

6. அருள் பெறுவார்

ஆழ்வாரைப் பெறவேண்டுமென்று எம்பெருமான் பெருவிடாய் கொண்டிருந்தும், ஆழ்வாரைக் கொண்டு அமுதன்ன சொல்மலைகள் பாடுவிக்க விரும்பியதால், தன்விடாயை அடக்கிக்கொண்டு, நேரத்தை எதிர்பார்த்திருக்க வேண்டியதாயிற்று. அந்தச் செயலும் ஒருவாறு முடிந்ததால், எம்பெருமான் மேலும் பொறுத்திருக்கமுடியாமல், திருவாட்டற்றிலே ஆழ்வாருக்குப் பேறளிக்க விரும்புகிறார்.

நெஞ்சே! மேன்மையுடைய எம்பெருமான் இப்போது நம்மிடம் தாழ நிற்கும் நிலையைக் கண்டாயா? நாம் பெற்ற பாக்கியம் தான் என்னே? என்று அகங்குழைந்து பேசுகிறார் ஆழ்வார்.

பரமன் அருளைப் பாராட்டி நெஞ்சோடு கூறல்

கொச்சகக் கலிப்பா

மனமே! திருவாட்டாற்றான் திருவடி வணங்கு

3946. அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான் அதுநமது விதிவகையே
இருள்தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான்வேண்டேன்
மருளொழிநீ மடநெஞ்சே! வாட்டாற்றான் அடிவணங்கே.

நெஞ்சே! நாரணனை நண்ணினம்

3947. வாட்டாற்றா னடிவணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான்
கேட்டாயே மடநெஞ்சே! கேசவனெம் பெருமானை
பாட்டாய பலபாடிப் பழவினைகள் பற்றறுத்து
நாட்டாரோ டியல்வொழிந்து நாரணனை நண்ணினமே.

நாரணன் விண்ணுலகு தர விரைகின்றான்

3948. நண்ணினம் நாரணனை நாமங்கள் பலசொல்லி
மண்ணுலகில் வளம்மிக் க வாட்டாற்றான் வந்தின்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே
எண்ணினவா றாகாவிக் கருமங்க ளென்னெஞ்சே

பாண்டவர் துணைவன் நமக்கு அருள் செய்வான்

3949. என்னெஞ்சத் துள்ளிருந்திங் கிருந்தமிழ்நூலிவைமொழிந்து
வன்னெஞ்சத் திரணியனை மார்விடந்த வாட்டாற்றான்
மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான்
நன்னெஞ்சே! நம்பெருமான் நமக்கருள்தான் செய்வானே.

கருடவாகனன் திருவடிகள் என் தலைமேல் உள்ளன

3950. வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே
நானேறப் பெறு கின்றென் நரகத்தை நகுநெஞ்சே
தேனேறு மலர்த்துளவம் திகழ்பாதன் செழும்பறவை
தானேறித் திரிவான தாளிணையென் தலைமேலே.

வாட்டாற்றான் திருவடிகளை நெருங்கிவிட்டோம்

3951. தலைமேல தாளிணைகள் தாமரைக்கண் என்னம்மான்
நிலைபேரான் என்நெஞ்சத் தெப்பொழுதும் எம்பெருமான்
மலைமாடத் தரவணைமேல் வாட்டாற்றான் மதமிக்க
கொலையானை மருப்பொசித் தான் குரைகழல்தள் குறுகினமே.

வாட்டாற்றான் திருவடிகளில் திருத்துழாய் மணம் வீசும்

3952. குரைகழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான்
திரைகுழுவு கடல்புடைசூழ் தென்னாட்டுத் திலதமன்ன
வரைகுழுவும் மணிமாட வாட்டாற்றான் மலரடிமேல்
விரைகுழுவும் நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே.

வாட்டாற்றானுக்கு நான் எந்நன்றி செய்தேன்!

3953. மெய்ந்நின்று கமழ்துளவ விரையேறு திருமுடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருதுபுனல்
மைந்நின்ற வரைபோலும் திருவுருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழவதுவே?

வாட்டாற்றான் என்னெஞ்சை விடுத்துப் பிரியான்

3954. திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூ ர்தி போரரக்கர் குலம்கெடுத்தான்
இகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே.

ஆ! நான் பெரும் பயன் பெறப்போகிறேன்!

3955. பிரியாதாட் செய்யென்று பிறப்பறுத்தாள் அறக்கொண்டான்
அரியாகி இரணியனை ஆகங்கீண் டானன்று
பெரியார்க்காட் பட்டக்கால் பெறாதபயன் பெறுமாறு
வரிவாள்வாய் அரவணைமேல் வாட்டாற்றான் காட்டினனே.

இப்பாடல்கள் தேவர்கட்கும் தெவிட்டாமல் இனிக்கும்

3956. காட்டித்தன் கனைகழல்கள் கடுநரகம் புகலொழித்த
வாட்டாற்றெம் பெருமானை வளங்குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ்மாலை யாயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே.

நேரிசை வெண்பா

மாறனுக்கு வீடளிக்க மாயவன் காத்திருந்தான்

அருளா லடியி லெடுத்தமா லன்பால்
இருளார்ந்த தம்முடம்பை யிச்சித்து-இருவிசும்பில்
இத்துடன்கொண் டேகவிவ ரிசைவுபார்த் தேயிருந்த
சுத்திசொல்லும் மாறன்செஞ் சொல்   (96)

ஏழாந் திருமொழி

7. செஞ்சொற்கவிகாள்!

மணத்தின் வாசியறிந்து வேர் சூடுவார் மண்ணையும் சேர்த்துச் சூடுவர். அதுபோல் ஞானியரின் ஞான பரிமளம் வீசும் தேகத்தை எம்பெருமான் விடுவதில்லை. பக்தி சபலனான எம்பெருமான் ஆழ்வாரை இத்திருமேனியோடு பரமபதத்திற்கு அழைத்துச் செல்ல ஆசை கொண்டான்.

அந்த எம்பெருமானே திருமாலிருஞ்சோலை எம்பெருமான் என்று இப்பகுதி அறிவிக்கின்றது.

எம்பெருமான் தம்மிடத்தில் வைத்திருந்த பெரும்பற்றை ஆழ்வார் பாரட்டுதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மாமாயன் என் மனத்தில் நிறைந்தான்

3957. செங்சொற் கவிகாள். உயிர்காத்தாட் செய்மின் திருமா லிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சு முயிரு முள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சு முயிரும் அவைடுண்டு தானே யாகி நிறைந்தானே

திருமாலிருஞ்சோலையான் என் உயிரை உண்டுவிட்டான்

3958. தானே யாகி நிறைந்தெல்லா உலகும் உயிரும் தானேயாய்
தானே யானென் பானாகித் தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலை
கோனே யாகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிருண்டே

ஆ! அம்மான் திருவருள் இருந்தவாறு என்னே!

3959. என்னை முற்றும் உயிருண்டென் மாய ஆக்கை யிதனுள்புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமா லிருஞ்சோலைத் திசைகை கூப்பிச் தேர்ந்தயான்
இன்னம் போவே னேகொலோ. எங்கொல் அம்மான் திருவருளே?

எம்பெருமான் என்னைக் கைவிடமாட்டான்

3960. என்கொல் அம்மான் திருவருள்கள்? உலகும் உயிரும் தானேயாய்
நன்கென் னுடலம் கைவிடான் ஞாலத் தூடே நடந்துழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை
நங்கள் குன்றம் கைவிடான் நண்ணா அசுரர் நலியவே

என்னைப் பாடச் செய்வித்தவன் என்னம்மான்

3961. நண்ணா அசுரர் நலிவெய்த நல்ல அமரர் பொலிவெய்த
எண்ணா தனகள் எண்ணும்நன் முனிவ ரின்பம் தலைசிறப்ப
பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடி
தென்னா வென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே

திருமால் என்னை ஆள்கின்றான்

3962. திருமாலிருஞ்சோலையானே ஆகிச் செழுமூ வுலகும் தன்
ஒருமா வயிற்றி னுள்ளேவைத்து ஊழி யூழி தலையளிக்கும்
திருமாலென்னை யாளுமால் சிவனும் பிரமனும்காணாது
அருமா லெய்தி யடிபரவ அருளை யீந்த அம்மானே

எல்லா மூர்த்திகளின் மயக்கங்களையும் போக்குபவன் திருமால்

3963. அருளை ஈயென் அம்மானே. என்னும் முக்கண் அம்மானும்
தெருள் காள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணிமலை திருமாலிருஞ்சோலைமலையே

என்னை ஒரு நொடியும் பிரியாதவன் திருமால்

3964. திருமாலிருஞ்சோலைமலையே திருப்பாற் கடலே என்தலையே
திருமால்வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
அருமா மாயத் தெனதுயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே.

மனமே! திருமாலை விடாமல் பிடி

3965. ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகெல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என்னம்மான் அந்தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே கைவிடேல் உடலும் உயிரும் மங்கவொட்டே

நானேயாகி என்னை அளித்தவன் திருமால்

3966. மங்க வொட்டுன் மாமாயை திருமாலிருஞ்சோலைமேய
நங்கள் கோனே. யானேநீ யாகி யென்னை யளித்தானே
பொங்கைம் புலனும் பொறியைந்தும் கருமேந்திரியும் ஐம்பூதம்
இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே

இப்பாடல்கள் திருமாலிருஞ்சோலைமலைக்கே அர்ப்பணம்

3967. மானாங்கார மனம்கெட ஐவர் வன்கை யர்மங்க
தானாங்கார மாய்ப்புக்குத் தானே தானே யானானை
தேனாங் காரப் பொழில்குருகூர்ச் சடகோபன்சொல்லாயிரத்துள்
மானாங்காரத்திவைபத்தும் திருமாலிருங்சோலைமலைக்கே

நேரிசை வெண்பா

மாறனே நம் செல்வம்

செஞ்சொற் பரன்றனது சீராரு மேனிதனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சைதனில்-விஞ்சுதலைக்
கண்டவனைக் காற்கட்டிக் கைவிடுவித் துக்கொண்ட
திண்டிறல்மா றன்நம் திரு  (97)

எட்டாந் திருமொழி

8. திருமாலிருஞ்சோலை மலை

ஆழ்வாரின் திருமேனியின்மீது எம்பெருமானுக்கு அளவு கடந்த ஆசை. இந்தத் திருமேனியோடு பரமபதத்திற்கு இவரை அழைத்துச் செல்ல விரும்பினான். ஆழ்வார் தம் உடலின் தன்மையைக் கூறி இவ்விருப்பத்தைத் தடுத்தார். எம்பெருமானின் விரைவும் சிறிது தடைபட்டது.

ஆழ்வார், பகவானை நோக்கி என்னை அழைத்துச் செல்லத் துடிக்கும் நீர், இவ்வளவு நாட்களாக என்னை இவ்விருள் தரும் ஞாலத்தில் தள்ளிவிட்டு எப்படி இருந்தீர்? இப்பொழுது என்னை ஆதரிப்பதற்கும், இவ்வளவு காலம் என்னை ஆதரிக்காமல் இருந்ததற்கும், என்ன காரணம்? என்று கேட்கிறார். என்னுடைய சுதந்திரச் செயலுக்குக் காரணம் ஒன்றுண்டா? இதனை ஆழ்வாரே அறிந்துகெள்ளட்டும் என்று பகவான் பதில் சொல்லாமல் இருக்கிறான். எக்காரணமும் இல்லாமல் எம்பெருமான் தானாகவே தன்னை அங்கீகரித்ததை ஆழ்வார் மகிழ்ந்து கூறுகிறார்.

திருமாலிருஞ்சோலை மலை என்று சொல்

கலி விருத்தம்

திருமாலின் திருவருளைப் பாராட்டுதல்

3968. திருமாலிருஞ்சோலை மலைமென்றேன் என்ன
திருமால்வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குருமா மணியுந்து புனல்பொன்னித் தென்பால்
திருமால்சென்று சேர்விடம் தென் திருப்பேரே

உலகுண்டானை முழுவதும் பிடித்துவிட்டேன்

3969. பேரே யுறைகின்ற பிர நூன் இன்று வந்து
பேரேனென் றென்னெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையே ழுலகுண்டும்
ஆராவ யிற்றானை யடங்கப் பிடித்தேனே

திருப்பேரானடி சேர்வது எனக்கு எளியது

3970. பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணிசாரேன்
மடித்தேன் மனைவாழ்க்கை யுள்நிற்பதோர் மாயையை
கொடிக்கோ புரமாடங்கள் சூழ்திருப் பேரான்
அடிச்சேர்வதெனெனக்கெளி தாயின வாறே

திருப்பேரான் எனக்கு வைகுந்தம் தருவான்

3971. எளிதா யினவாறென் றெங்கண்கள் களிப்ப
களிதா கியசிந் தையனாய்க் களிக்கின்றேன்
கிளிதா வியசோழைகள் சூழ்திருப் பேரான்
தெளிதா கியசேண் விசும்புதரு வானே

தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் திருமால்

3972. வானே தருவா னெனக்காயென் னோடொட்டி
ஊனேய் குரம்பை யிதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே பொழில்தென் திருப்பேர் நகரானே

திருமால் என் மனத்தில் புகுந்தான்: அமுதாக இனித்தது

3973. திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப்
பொருப்பே யுறைகின் றபிர நூனின்றுவந்து
இருப்பேன் என் றென்னேஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்றமு த முண்டு களித்தேனே

திருமால் என் கண்ணை விடுத்து அகலமாட்டான்

3974. உண்டு களித்அதற்கு  கும்பரென் குறை மேலைத்
தொண்டு களித்தந்தி தொழும்சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில்சூழ் திருப்பேரான்
கண்டு களிப்பக் கண்ணுள்நின் றகலானே

ஏழிசையின் சுவையே திருமால்

3975. கண்ணுள்நின் றகலான் கருத்தின்கண் பெரியன்
எண்ணில்நுண் பொருளே ழிசையின் சுவைதானே
வண்ணநன் மணிமாடங்கள் சூழ்திருப் பேரான்
திண்ணமென் மனத்துப் புகுந்தான் செறிந்தின்றெ

திருமாலின் திருவருள் உணர்த்தப் பெற்றேன்

3976. இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென் னுள்வைத் தான்
அன்றென்னைப் புறம்பொகப் புணர்த்ததென் செய்வான்?
குன்றென்னத் திகழ்மாடங்கள் சூழ்திருப் பேரான்
ஒன்றெனக் கருள்செய்ய வுணர்த்தலுற் றேனே

திருமாலின் அடியார்க்கடியார்க்குத் துன்பமே இல்லை

3977. உற்றே னுகந்து பணிசெய் துனபாதம்
பெற்றேன் ஈதேயின் னம்வேண் டுவதெந்தாய்
கற்றார் மறைவாணர் கள்வாழ் திருப்பேராற்கு
அற்றார் அடியார் தமக்கல்லல் நில்லாவே

இவற்றைப் படித்தோரின் அடியார்கள் விண்ணுலகையாள்வார்

3978. நில்லா அல்லல் நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்
நல்லார் பலர்வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழா யிரத்துள் இவைபத்தும்
வல்லார் தொண்டராள் வதுசூழ்பொன் விசும்பே

நேரிசை வெண்பா

மாறனைச் சூழ்ந்து நின்றான் திருமால்

திருமால்தன் பால்விருப்பஞ் செய்கின்ற நேர்கண்டு
அருமாய்த் தன்றகல்விப் பானென்?-பெருமால்நீ
இன்றென்பாற் செய்வானென்? என்னவிடர் உற்றுநின்றான்
துன்றுபுகழ் மாறனைத்தான் சூழ்ந்து  (98)


ஒன்பதாந் திருமொழி

9. சூழ்விசும்பு

அரசகுமரர் செல்லும்போது மங்கள வாத்தியங்கள் முழங்குவது வழக்கம், அதுபோல் ஆழ்வார் பரமபதத்திற்கு எழுந்தருளும்போது மேகங்கள் முழங்கின. கடலலைகள் அசைந்தாடின. பாடுவதில் வல்லவர்களான கின்னரர் கெருடர்கள் கீதங்கள் பாடினார்கள். காளங்களும் வலம் புரியும் இசைந்தன. தேவமடந்தையர் வாழ்த்தினர். இச்செய்தியைக் கூறுகிறது இத்திருவாய்மொழி.

பரமபதத்தில் தமக்குக் கிடைத்த நல் வரவேற்பை ஆழ்வார் அனுபவித்துப் பாடுதல்

கலி விருத்தம்

பரமபதத்தில் ஆழ்வார்க்குக் கிடைத்த நல் வரவேற்பு

3979. சூழ்விசும் பணிமுகில் தூரியம் முழக் கின
ஆழ்கடல் அலைதிரை கையெடுத் தாடின
ஏழ்பொழி லும்வளம் ஏந்திய என்னப்பன்
வாழ்புகழ் னாரணன் தமரைக்ககண் டுகந்தே

ஆழ்வார் பரமபதம் செல்லுங்கால் உலகோர் தொழுதனர்

3980. நாரணன் தமரைக்கண் டுகந்துநன் னீர்முகில்
பூரண பொற்குடம் பூரித் த துயர்விண்ணில்
நீரணி கடல்கள்நின் றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்தெங்கும் தொழுதனர் உலகரே

தேவலோகத்தவர் ஆழ்வாரை எதிர்கொண்டனர்

3981. தொழுதனர் உலகர்கள் தூபநல் மலர்மழை
பொழிவனர் பூழியன் றளந்தவன் தமர்முன்னே
எழுமின் என் றிமருங்கிசைத்தனர் முனிவர்கள்
வழியிது வைகுந்தற் கென்றுவந் தெதிரே

வைகுந்தத்தில் ஆழ்வாரை யாவரும் தொழுதனர்

3982. எதிரெதிரி இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவரவர் கைந்நிரை காட்டினர்
அதிரிகுரல் முரசங்கள் அலைகடல் முழக்கொத்த
மதுவிரி துழாய்முடி மாதவன் தமர்க்கே

வைகுந்தத்தில் தேவர்கள் ஆழ்வாரை வரவேற்றனர்

3983. மாதவன் தமரென்று வாசலில் வானவர்
போதுமின் எமதிடம் புகுதுக வென்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேதநல்வாயவர் வேள்ளியுள் மடுத்தே.

வைகுந்தத்தில் தேவமாதர் ஆழ்வாரை வாழ்த்தினர்

3984. வேள்வியுள் மடுத்தலும் விரைகமழ் நறும்புகை
காளங்கள் வலம்புரி கலந்பு தங்கும் இசைத்தனர்
ஆளுமிங்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாளொண்கண் மடந்தையர் வாழ்த் தினர் மகிழ்ந்தே

மருதரும் வசுக்களும் ஆழ்வாரைத் துதித்தனர்

3985. மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர் தொடுகடல்
கிடந்தவென் கேசவன் கிளரொளி மணிமுடி
குடந்தையென் கோவலன் குடியடி யார்க்கே

ஆழ்வார் வைகுந்தம் புகுதல்

3986. குடியடி யாரிவர் கோவிந்தன் தனக்கென்று
முடியுடை வானவர் முறைமுறை எதிரிகொள்ள
கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே

திருமாலடியார் வைகுந்தம் சேர்தல் விதி

3987. வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுகென்று
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந் தனர்
வகுந்தம் புகுவது மண்ணவர் விதியே

வைகுந்தத்தில் ஆழ்வாருக்கு எதிரில் தேவமாதர் பூரண கும்பம் ஏந்தினர்

3988. விதிவகை புகுந்தனர் என்றுநல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியுநற் சுண்ணமும் நிறைகுட விளக்கமும்
மதிமுக மடந்தயர் ஏந்தினர் வந்தே

இவற்றைப் படித்தோர் முனிவராகிவிடுவர்

3989. வந்தவர் எதிரிகொள்ள மாமணி மண்டபத்து
அந்தமில் பேரின்பத் தடியரோ டிருந்தமை
கொந்தலர் பொழில்குரு கூர்ச்சட கோபஞ்சொல்
சந்தங்கள் ஆயிரத் திவைவல்லார் முனிவரே

நேரிசை வெண்பா

தமது பரமபத அனுபவத்தை மாறன் உரைத்தான்

சூழ்ந்துநின்ற மால்விசும்பில் தொல்லை வழிகாட்ட
ஆழ்ந்ததனை முற்றும் அனுபவித்து-வாழ்ந்தங்
கடியருட னேயிருந்த வாற்றையுரை செய்தான்
முடிமகிழ்சேர் ஞான முனி  (99)

பத்தாந் திருமொழி

10. முனியே

எம்பெருமான் வந்து தோன்றி ஆழ்வாரின் ப்ரக்ருதி ஸம்பந்தத்தை நீக்கி அடியார்களின் கூட்டத்தில் கொண்டு சேர்த்தான். தாம் செய்யவேண்டியதைச் செய்துமுடித்தவராய் அவா அற்றுப் பெருவீடு பெற்றபடியே ஆழ்வார் இத்திருவாய்மொழியில் கூறுகிறார்.

திருமாலை தாம் அடைந்த பான்மையை ஆழ்வார் உரைத்தருளுதல்

கலி நிலைத்துறை

திருமாலே! நின்னைச் சிக்கெனப் பிடித்தேன்

3990. முனியே. நான்முக னே.முக்கண் ணப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே. என்கள்வா
தனியேன் ஆருயிரே. என் தலை மிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட் டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே

திருமாலே! மாயம் செய்யாதே: ஆணையிட்டேன்

3991. மாயம்செய் யேலென்னை உன்திரு மார்வத்து மாலைநங்கை
வாசம்செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய்
நேசம்செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம்செய் யாதுகொண் டாயென்னைக் கூவிச்கொள் ளாய்வந்தந்தோ

திருமாலே! நீயின்றி எனக்கு வேறு பற்றுக்கோடு இல்லை

3992. கூவிக்கொள் ளாய்வந்தந் தோ.என் பொல்லாக்கரு மாணிக்கமே
ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றி லேன்யான்
மேவித் தொழும்பிரமன் சிவன் இந்திர னாதிக்கெல்லாம்
நாவிக் கமல முதற்கிழங்கே. ளும்பர் அந்ததுவே

திருமாலே! என்னைக் கைவிடாதே

3993. ளும்ப ரந்தண் பாழேயோ. அதனுள்மிசை நீயேயோ
அம்பர நற்சோதி. அதனுள் பிரமன் அரன் நீ
ளும்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன்நீ
எம்பரம் சாதிக்க லுற்றென்னைப் போரவிட் டிட்டாயே

எனக்கு வேறு கதியே இல்லை: தெவிட்டாத அமுது நீ

3994. போரவிட் டிட்டென்னை நீபுறம் போக்கலுற்றால் பின்னையான்
ஆரைக்கொண் டெத்தையந்தோ. எனதென்பதென் யானென்பதென்
தீர இரும்புண்ட நீரது போலவென் ஆருயிரை
ஆரப் பரு க,எனக்கு ஆராவமுதானாயே

என் அன்பே! என்னை முழுவதும் விழுங்கிவிடு

3995. எனக்கா ராவமு தாயென தாவியை இன்னுயி ரை
மனக்கா ராமைமன்னி யுண்டிட்டா யினியுண் டொழியாய்
புனக்கா யாநிறத்த புண்டரீ கக்கட்ஞூ செங்கனிவாய்
உனக்கேற்கும் கோல மலரிப்பாவைக் கன்பா..என் அன்பேயோ

வராகனே! இனி உன்னை நான் விடுவேனோ?

3996. கோல மலரிப்பாவைக் கன்பா கியவென் அன்பேயோ
நீல வரையிரண்டு பி றைகவ்வி நிமிர்ந்த தொப்ப
கோல வராகமொன் றாய்நிலங் கோட்டிடைக் கொண்டேந்தாய்
நீலக் கடல்கடைந் தாயுன்னைப் பெற்றினிப் போக்குவனோ?

முதல் தனி வித்தே! உன்னை அடைந்தேன் : இனி விடேன்

3997. பெற்றினிப் போக்குவனோ உன்னை என் தனிப்
பேருயிரை உற்ற இருவினையாய் உயிராய்ப் பயனாய் அவையாய்
முற்றவிம் மூவுலகும் பெருந் தூறாய்த் தூற்றில்புக்கு
முற்றக் கரந்தொளித் தாய்.என் முதல்தனி னித்தேயோ

முடிவில்லாதவனே! உன்னை நான் எப்போழுது கூடுவேன்?

3998. முதல்தனி வித்தேயோ. முழுமூ வுலகாதிக் கெல்லாம்
முதல்தனி யுன்னையுன்னை எனைநாள் வந்து கூடுவன்நான்
முதல்தனி அங்குமிங்கும் முழுமுற் றுறுவாழ் பாழாய்
முதல்தனி சூழ்ந் தகன் றாழ்ந்துயர்ந்த முடிவி லீயோ

ஞான இன்பமே! என் ஆசை ஒழியுமாறு என்னைச் சூழ்ந்தாயே!

3999. சூழ்ந்தகன் றழ்ந்துயர்ந்த முடிவில் பெரும்பா ழேயோ
சூழ்ந்தத னில்பெரிய பரநன் மலர்ச்சோ தீயோ
சூழ்ந்தத னில்பெரிய சுடர்ஞான வின்ப மேயோ
சூழ்ந்தத னில்பெரிய என்னவா அறச்சூழ்ந் தாயே

இவற்றைப் படித்தோர் உயர் பிறப்பாளர்

4000. அவாவறச் சூழரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவிலந் தாதிகளால் இவையா யிரமும் முடிந்த
அவாவிலந் தாதியிப் பத்தறிந் தார்பிறந் தாருயர்ந்தே

நேரிசை வெண்பா

பக்தி செலுத்தியே திருமாலைக் கலந்துயர்ந்தான் மாறன்

முனிமாறன் முன்புரைசெய் முற்றின்பம் நீங்கித்
தனியாகி நின்று தளர்ந்து-நனியாம்
பரமபத்தி யால்நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமையுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து 

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஸம்பூர்ணம்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar