பதிவு செய்த நாள்
16
ஜன
2018
12:01
திருத்தணி: மாட்டுப்பொங்கலையொட்டி, மேல் திருத்தணி பகுதியில், உற்சவர் முருகப் பெருமான் வீதிகளில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி முருகன் மலைக்கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழாவை முன்னிட்டு, உற்சவர் முருகப் பெருமான் திருத்தணிநகரில் மூன்று நாட்கள் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார்.
அந்த வகையில், நேற்று முன்தினம், பொங்கல் விழாவையொட்டி, மாலை, 6:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மலைக்கோவில் மற்றும் அங்குள்ள குருக்கள் தெருக்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, மாட்டுப்பொங்கல் விழாவையொட்டி, மாலை, 4:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் மலைக்கோவிலில் இருந்து, படிகள் வழியாக, மேல்திருத்தணி, நல்லாங்குளம் வந்தடைந்தார், தொடர்ந்து, மாட்டு வண்டியில், உற்சவர் முருகப் பெருமான் அமிர்தாபுரம், மேல் திருத்தணி மற்றும் முருகூர் ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, பெண்கள் முருகப் பெருமானுக்கு தேங்காய் உடைந்து பூஜைகள் நடத்தி வழிபட்டனர். இன்று, காணும் பொங்கல் விழாவையொட்டி, உற்சவர் முருகன் பெருமான், திருத்தணி நகர வீதிகளில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.