பதிவு செய்த நாள்
16
ஜன
2018
02:01
சிவகாசி: சிவகாசி அருகே காசிக்கு நிகரான சிவன் கோயில் மூலஸ்தான கோபுரம் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகிறது. இதை சீமைக்க அறநிலையத்துறை கண்டுகொள்ளாமல் உள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் தடம் பதித்தவர்கள் இந்துக்கள். பல நாகரிகங்களின் வரலாற்றுப் பின்னணியில் இந்துக்களின் வருகைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
ஒரு பேரரசு தன்னுடைய ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ஒரு நாட்டை ஆட்கொள்ளும் போது,தன்னுடைய அடையாளத்தை நிலைநாட்டுவது அவசியம். குறிப்பாக சமயம் என்பது முக்கிய அடையாளங்களில் ஒன்று. தன் ஆட்சியின் கீழ், தான் பின்பற்றும் சமயத்தைதான் மக்கள் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அங்கு கோயில்கள் அமைக்கப்படும். அதேவேளையில் காலங்களின் மாற்றத்திற்கேற்ப ராஜ்ஜியங்கள் மாறும்போது, பழைய அடையாளங்கள் அழிக்கப்பட்டு ஆட்சியில் இருக்கும் அந்த குறிப்பிட்ட ராஜ்ஜியத்திற்கான அடையாளங்கள் நிலை நாட்டப்படும். ஆனால் இந்த கால ஓட்டத்தையும் கடந்து கம்பீரமாக நிற்கும் இந்து கோயில்கள் ஏராளம் உள்ளன. இதுபோல் வெம்பக்கோட்டை குகன்பாறையில் இருந்து சாத்துார் செல்லும் வழியில் செவல்பட்டி நடுச்சத்திரத்தில் காசிவிஸ்வநாதர் கோயில் பண்டைய கால தொன்மையைபறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
எங்கும் இல்லாத சிறப்பு: மதில் சுவர் 1089 ல்கட்டப்பட்டுள்ளதாக கல்வெட்டுஉள்ளது. 1000 ஆண்டு பழமையான இக்கோயிலில் காசிக்கு அடுத்தப்படியாக நந்தி பகவான் அன்னபூரணியை பார்த்தபடி உள்ளார். சிவன் கோயில்களில் நந்தி சிலைஎப்போதும் சிவன் சன்னதியை பார்த்தபடி தான் இருக்கும். இங்கு மட்டும் காசியில் இருப்பது போல் இருப்பது மிகவும் சிறப்பு. இதுபற்றி பல்வேறு சரித்திர கதைகள் கூறப்படுகின்றன. அதாவது, சிவனுக்கே அன்னமிட்டது அன்னபூரணி என்பதால் நந்தி பகவான் திரும்பி இருப்பதாக பூசாரி ஞானகுரு தெரிவித்தார். இதுதவிர சூரியனும், சனீஸ்வரரும் ஒரே சன்னதியில் இருப்பது மிகவும் பாக்கியம். அந்த வகையில் சூரியன்கிழக்கை நோக்கியும், சனீஸ்வரர் வடக்கு திசையிலும் கேட்பதை விட அதிகம் அள்ளிக் கொடுக்கும் அட்சயபாத்திரம் போல் வீற்றீருக்கின்றனர். இதுதவிர எந்த கோயில்களில் இல்லாத சிறப்பு இங்கு உள்ளது. அதாவதுமன்மதக் கடவுளுக்கு கல்துாணில் சிற்பமாகஉள்ளார். இவரை வணங்கிச் சென்றால் விரைவில் திருமணமாகும் என்பது ஐதீகம். இத்தகைய பெருமை வாய்ந்த கோயில் இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தும் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றிமுடங்கி உள்ளது. கோயில் மூலஸ்தான கோபுரம் செப்பனிடாமல் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகிறது.
கெடுகிறது அழகு: திருவிழாக்காலங்களில் வீதி உலா வரவேண்டிய அன்னம், மயில் போன்ற வாகனங்கள் துருப்பிடித்து வீணாகி வருகிறது. மரச்சிற்ப வாகனங்கள் பூச்சரிப்பில் நாசமானது. தேர் மண்டபச் சுவர்கள் பாதிக்கும் மேல் கற்கள்இடிந்து விழுந்துள்ளது.தெப்பக்குளத்தின் மண்டகபடியை சுற்றி புதர்மண்டி காட்சி அளிக்கிறது. கோயிலை சுற்றி செடி, கொடி வளர்ந்து கோயிலின் அழகை கெடுத்து வருகிறது. பிரதோஷம், சனிப்பெயர்ச்சி போன்ற விசேஷ நாட்களில் வெளி மாவட்டங்களில் வரும் மக்கள் தங்க இடமின்றி சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு தீர்வாக அறநிலைத்துறை அதிகாரிகள் கோயிலை புனரமைக்க நல்லதொரு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே பக்தர்களின் வேண்டுகோளாகும்.
அனுமதிக்காக காத்திருப்பு: சிவன் கோயில் மிகவும் பழமையானது. அதனால் எந்த ஒரு புனரமைப்பு பணிகள் செய்தாலும் தொல்லியல் துறையில் அனுமதி பெற வேண்டும். ஏற்கனவே தொல்லியல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அனுப்பி வைத்து பதிலுக்காக காத்திருக்கிறோம். திருப்பணிகள் செய்வதற்காக எங்கள் துறை சார்பிலும்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. அனுமதி கிடைத்தவுடன் புனரமைப்பு பணிகளுடன் கும்பாபிேஷகம் செய்வதற்கானநடவடிக்கை எடுக்கப்படும். - சுமதி, இணை ஆணையர் ,இந்து அறநிலைத்துறை
ஏன் மறுக்கிறது அறநிலைய துறை?: சிவகாசியில் பணி நிமித்தமாக வந்த நான்,கோயிலின் சிறப்பை உணர்ந்து தரிசிக்க வந்தேன். கோயில் துாண்களில் இருக்கும் சிற்பங்கள் பார்க்கவே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. காசிக்கு நிகராக இங்கு சிவன் சன்னதி உள்ளது. பாண்டிய மன்னர்கள் இக்கோயிலை கட்டியதாகவும் ஆய்வு குறிப்புகள் கூறுகின்றன. பல பெருமைகள் வாய்ந்த இக்கோயிலின் நிலை பரிதாபத்திற்குரியதாக உள்ளது. இதற்கு தீர்வாக தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கோயிலைபுனரமைக்க ஏற்பாடு செய்தால் பக்தர்கள் மனம் குளிர்ந்து இறைவன் அருளும் பெற முடியும். பூஜைகள்நல்லபடி நடந்தால் பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும். விழாக்காலங்களில் கோயில் உண்டியல் வருமானமும் பெருகும். இதனால் அரசிற்கு வருவாய்தானே. இதை செய்ய ஏன்அரசு மறுக்கிறது. அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும். - முரளி , பக்தர், திருப்பூர்.
நடவடிக்கையில் தாமதம்: கடந்த 18 ஆண்டுகளாககோயிலை புனரமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறேன். மாதம் ஒருமுறையாவது அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பேன். தமிழக முதல்வருக்கும் தபால் மூலம்மனு அனுப்பி உள்ளேன். நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துகின்றனர். கோயில் புனரமைத்தால் தென்தமிழகத்தில் தென்காசிக்கு அடுத்தப்படியாக கீழச்சத்திரம் சிவன் கோயிலும் பெருமை பேசும்.
- பொன்ராஜ், சமூக ஆர்வலர், கீழச்சத்திரம்