பதிவு செய்த நாள்
17
ஜன
2018
10:01
வத்தலக்குண்டு: முத்துலாபுரம் ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோவில் திருவிழாவில்,பக்தர்கள் நள்ளிரவு வரை அரிவாள் ஏந்திநேர்த்தி கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே முத்துலாபுரத்தில் ஆயிரம் அருவாள் கருப்பணசாமி கோவில் திருவிழா,நேற்று நடந்தது. அதிகாலையில் பக்தர்களால் நுாற்றுக்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டப்பட்டு அன்னதானம் நடந்தது.
மாலையில் பூசாரிகள், அரிவாள்களுக்கு பூஜை நடத்தி, இரவு, 7:00 மணிக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கருப்பணசாமிக்கு செலுத்தப்பட்டது. ஊர்வலத்தின் போது, சாமியாடி வருபவர்களிடம் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டி கால்களில் விழுந்து வரம் கேட்பர். நினைத்த காரியம் நிறைவேறியதும் கருப்பணசாமிக்கு, 3 முதல் 15 அடி உயரம் வரை அரிவாள்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர். அரிவாள்களை முத்துலாபுரத்தை சேர்ந்த பெரியதம்பி, முருகன், தங்கவேல், சண்முகம் ஆகியோர் ஒரு மாதம் விரதமிருந்து தயார் செய்தனர். திருமங்கலத்தைச் சேர்ந்த கருப்பையா, அரிவாளில்தெய்வங்களின் படங்கள், பூக்கள், ஆன்மிக குறியீடுகள் அச்சில் வரைந்து அழகு படுத்தினார்.