பதிவு செய்த நாள்
18
ஜன
2018
10:01
ஸ்ரீவில்லிபுத்துார்: நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில், 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அத்தாளபூஜை துவங்கியது. 108 வைணவதலங்களில் ஒன்றான, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில், இரவு, 8:00 மணிக்கு நடந்து வந்த அத்தாளபூஜை, 1990க்கு பிறகு நடப்பதில்லை
இதுகுறித்து, 2017 செப்.15 ல் நமது நாளிதழில், ஆண்டாள்கோவிலில் நைவேத்தியம் நிறுத்தம், படி அளக்கும் அன்னை பட்டினி என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதையடுத்து, மீண்டும் அத்தாளபூஜையை நடத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது. அதன்படி, 28 ஆண்டுகளுக்கு பின் நேற்று முன்தினம் முதல் அத்தாளபூஜை துவங்கியது. இரவு 7:45 மணிக்கு நித்யஉற்சவராகிய பெருமாள் சிறிய பல்லக்கில் எழுந்தருளி, மேளதாளங்கள் முழங்க கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வர, ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு ராஜு பட்டர் பூஜைகளை செய்தார். தினமலர் செய்தியால் மீண்டும் அத்தாளபூஜை துவங்கியிருப்பது மனநிறைவை ஏற்படுத்தி உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.