நமக்கு யாரேனும் இம்சை செய்தாலும், அதைப் பொறுத்துக் கொண்டு, அவர்கள் மனம் திருந்த வேண்டும் என்பதற்காக இறைவனிடம் ஜெபிக்க வேண்டும். மாறாக பழி உணர்வைக் காட்டக்கூடாது. அவர்களுக்காக ஜெபிப்பது எப்படி?
* எங்களை நேசித்து வழிநடத்தி பாதுகாத்து பராமரித்து வருகிற எங்கள் அன்பின் ஆண்டவரே! இம்மட்டுமாக, எங்களுக்கு அளித்து வருகிற எல்லாவிதமான இரக்கங்களுக்காகவும், நன்மைகளுக்காகவும் நன்றியோடு உம்மைத் துதிக்கிறோம். பலவிதமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலே நெருக்கப்பட்டு, அநேக சமய ங்களிலே உம்மை மறந்தவர்களாகக் காணப்பட்டாலும், நீர் எங்களை மறக்காமல் எங்கள் காரியங்களிலே மிகவும் அக்கறை உள்ளவராய் இருக்கிறபடியால், உம்மைத் துதிக்கிறோம். * விசேஷமாக இந்த நேரத்தில், பிசாசுகளை ஏவிவிட்டு, மற்றவர்களை துன்புறுத்தி அவர்கள் வேதனைப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிற நிர்ப்பந்தமான மக்களுக்காகவும், அவர்களுக்கு உதவி செய்கிற பூஜாரிகளுக்காகவும் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கிறோம். * உம்மைச் சிலுவையில் அறைந்து துன்புறுத்தியவர்களுக்காக பிதாவிடம் மன்றாடிய விண்ணப்பத்தின் ஆவியை எங்களுக்கும் தாரும். உங்களை நிந் திக்கிறவர்களுக்காகவும், துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் என்ற உமது அன்புக்கட்டளையை கடைபிடித்து ஜெபிக்க உதவி செய்யும். * யார் யாருக்காக ஜெபிக்கிறோமோ, அவர்களை நீர் சந்தியும். பிறருக்கு தீமை செய்வதை விட்டுவிட்டு மனம் திரும்பி, உமக்கு சாட்சியாக மாற உதவி செய்யும். வயிற்றுப்பிழைப்புக்காக என்று சொல்லிக் கொண்டு துணிகரமாக செயல்படுகிற பூஜாரிகளைச் சந்தியும். * பிசாசின் தொந்தரவினால்தவிக்கிற மக்கள் உம்மை ஏற்றுக்கொண்டு, விடுதலை பெற்று, உம்மிலே மகிழ உதவி செய்யும். இந்த ஜெபத்தை செய்கிற ஒவ்வொரு வரோடும் நீர் பேசும். தேவையான நன்மைகளை அருளிச் செய்யும். உமது ஆசிர்வாதத்தைப் பெற்று, அநேகருக்கு ஆசிர்வாதமாக விளங்க அருள்புரியும். இந்த நன்மைகளை எங்கள் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஜெபம் கேளும் நேச பிதாவே! ஆமென்,”. தினமும் காலையிலும், இரவில் படுக்கச் செல்லும் முன்பும் இதை ஜெபியுங்கள். உலகில் சமாதானம் பிறக்கும்.