பதிவு செய்த நாள்
22
ஜன
2018
12:01
திம்மராஜம்பேட்டையில் சுப்ரமணிய சுவாமி பார்வேட்டை நிறுத்தப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில், உற்சவம் மீண்டும் நடைபெற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், பர்வத வர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு, வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த ஒருவர், சரவண முதலி தெருவை ஒட்டி இருக்கும் பகுதியில், 1 ஏக்கர் நிலம் தானமாக வழங்கியுள்ளார். இதற்கான சான்று, உற்சவ மண்டப கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. மேலும், ஆண்டு தோறும் மாசி உத்திரத்தில் சுப்ரமணியசுவாமி பார் வேட்டை உற்சவம் நடத்த வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உற்சவம், 40 ஆண்டுகளாக நடைபெறவில்லை; ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. தானமாக வழங்கிய நிலத்தின் மதிப்பு, பல கோடி ரூபாய் இருக்கும் என, கூறப்படுகிறது. எனவே, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு, பார் வேட்டை உற்சவத்தை நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - நமது நிருபர் -