பதிவு செய்த நாள்
22
ஜன
2018
01:01
காஞ்சிபுரம் : ஏகாம்பரநாதர் கோவிலில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முன்னிலையில், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி, உற்சவர் சிலைகளை, நேற்று ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், நாயன்மார்களால் பாடல் பெற்ற தலமாகவும், பஞ்சபூத தலங் களில் முதன்மையானதாவும் விளங்குகிறது.இந்த கோவிலில் உள்ள பழமையான உற்சவர் சிலை சிதிலம் மற்றும் அதை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதாக கூறி, அறநிலையத் துறை உத்தரவின்படி, புதிய சிலையை செய்தனர்.
அந்த உற்சவர் சிலையில், தங்கம் கலந்திருப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பழைய மற்றும் புதிய சிலைகளை, நவீன கருவி மூலம் ஆய்வு செய்தனர். இரு சிலைகளிலும் தங்கம் இல்லை என, அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் மற்றும் போலீசார் முன்னிலையில், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி, கோவிலில் உள்ள பழைய, புதிய உற்சவர் சிலைகளை ஒப்பிட்டு, நேற்று ஆய்வு செய்தார். உடன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, டி.எஸ்.பி., சிவசங்கரன், கோவில் செயல் அலுவலர் முருகேசன் ஆகியோர் இருந்தனர்.அதன் பின், பத்திரிகையாளர்களிடம் தொல்லியல் முன்னாள் இயக்குனர் கூறுகையில், ”பழைய சிலையின் பழமையை அறிய, நுண் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய சிலையில் தங்கம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை,” என்றார்.
கடந்த ஆண்டு, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சென்ற, தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி, பழைய உற்சவர் சிலை, 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.அந்த சிலை, பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என, தெரிவித்தார். மேலும், பழைய சிலையை வழிபாட்டுக்கு பயன்படுத்துவது குறித்தும் விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.