பதிவு செய்த நாள்
22
ஜன
2018
03:01
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள எமதர்மராஜன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் எமதர்மராஜனுக்கு தனிக்கோவில் உள்ளது. சுமார் 700 ஆண்டுகளுக்கு பழமைவாய்ந்தது. தேவர்கள், சிவபெருமானை வேண்டுவதற்காகச் சென்றபோது, அவர் நிஷ்டையில் இருந்தார். அப்போது, மன்மதனை வரவழைத்து சிவனின் தவத்தை தேவர்கள் கலைத்தனர். இதனால் கோபம் கொண்ட சிவன், மன்மதனை அழித்தார். பின்னர், ரதிதேவியின் வேண்டுதலுக்காக மன்மதனை உயிர்ப்பித்தார். அப்போது எமதர்மன், சிவனிடம் தனக்கு அழிக்கும் பணி கொடுக்கப்பட்டு இருக்கும்போது, அதைச் செய்ய தனக்கு உத்தரவிடும்படி வேண்டினார். சிவனும் அவ்வாறே அவருக்கு அருள்புரிந்ததாக புராண வரலாறு கூறுகிறது. இத்தகையை சிறப்புமிக்க கோவில் கும்பாபிஷேக பணிகள் கடந்த சில மாதங்களாக சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வந்தன. பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், கடந்த 19ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று. இதனை தொடர்ந்து இன்று(22ம் தேதி) காலை நான்காம் கால பூஜைகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கடம் புறப்பாடு முடிந்து, மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தீபாரதனையைத் தொடர்ந்து அருள் பிரசாதமும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் மூலஸ்தானத்தில் 6 அடி நீளமுள்ள எருமை வாகனத்தில், 7.25 அடி உயரத்தில் எமதர்மராஜன் சிலையும், 9 பரிவார தெய்வங்களின் சிலையும் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.