பதிவு செய்த நாள்
23
ஜன
2018
10:01
தஞ்சாவூர்: சுவாமிமலை முருகன் கோவில், திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவில்களில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அறுபடை வீடுகளில் நான்காம்படை வீடாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் சிறப்புடையதும், ஓம் எனும் பிரணவ மந்திரத்தை தந்தையாகிய சிவபெருமானுக்கு முருகப்பெருமான் உபதேசம் செய்த தலமாக விளங்குவது சுவாமிமலை. இக்கோவிலில் தைப்பூச விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக மூலவர் சுவாமிநாதசுவாமிக்கும், உற்சவர் சண்முகசுவாமிக்கும் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவர் சண்முகசுவாமி வள்ளி - தெய்வானையுடன் கொடிமரம் அருகே எழுந்தருளினார். அப்போது கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மங்களவாத்தியம் முழங்க விழா கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலைக்கோயிலில் இருந்து வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினார். தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி வீதிவுலா நடைபெறுகிறது.
தொடர்ந்து வரும், 29ம் தேதி காலை, 9:15 மணிக்கு தேரோட்டமும், 31ம் தேதி தைப்பூச நாளன்று மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், தொடர்ந்து காலை, 10:௦௦ மணிக்கு காவிரியில் தீர்த்தவாரியும், வெள்ளி மயில் வாகனகத்தில் சுவாமி வீதிவுலாவும் நடைபெறவுள்ளது. திருவிடைமருதுார்: திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானதும், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும், 27 நட்சத்திரங்கள் ஒரே இடத்தில் அமையப் பெற்றதால், நட்சத்திர தோஷம் நீங்கும் தலமாகவும் விளங்குகிறது மகாலிங்கசுவாமி கோவில். இக்கோவிலில் தைப்பூச விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 30ம் தேதி காலை, 9:15 மணிக்கு தேரோட்டமும், 31ம் தேதி மதியம் காவிரியில் தீர்த்தவாரியும் நடக்கிறது.