பதிவு செய்த நாள்
23
ஜன
2018
10:01
கீழக்கரை : உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலின் முதல் பிரகார மண்டப பணிகள் இதுவரை முடிக்கப்படாமல், இழுத்தடிப்பில் இருந்து வருகிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த சிவன் கோயிலுக்கு பாண்டிய மன்னர், சேதுபதி மன்னர்களால் அந்தந்த காலகட்டங்களில் திருப்பணிகள் நடந்தேறியுள்ளது. மங்களநாதர் சுவாமியின் கருவறையை சுற்றியுள்ள தெற்கு, மேற்கு, வடக்கு பகுதிகளை உள்ளடக்கிய முதல் பிரகார மண்டபம் திறந்த வெளியில் இருந்து வருகிறது. 13வது மாநில நிதிக்குழு மூலம் ரூ.75 லட்சம் சீதளி மண்டபத்திற்கான மதிப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கருவறையை ஒட்டியுள்ள சீதளி மண்டபத்திற்கான பணி கடந்த 2011ல் ஆரம்பிக்கப்பட்டு 2015ல் நிறைவு பெற்றது. முதல் பிரகாரத்திற்கு தேவையான கருங்கல் வேலைப்பாடுகளுடன் கூடிய துாண்கள், மேற்கூரை கற்கள், சித்திர மண்டப கால், பால் கல், தரைக்கல், சுருக்கி, தட்டோடு உள்ளிட்டவை செய்து முடிக்க ரூ.2 கோடி மதிப்பீடாக இருந்து வருகிறது.
சிவகங்கையை சேர்ந்த பக்தர் சிவராம கிருஷ்ணன் கூறியதாவது: மங்களநாதர் சுவாமியை தரிசனம் செய்து விட்டு, இடதுபுறமாக கோயிலை வலம் வரும் முதல் பிரகாரம் கருங்கல் மேற்கூரை இல்லாமல் திறந்த வெளியாக காட்சிதருவது வேதனையளிக்கிறது. மழைகாலங்களில் வழிந்தோடும் நீர், பிரகாரங்களில் தேங்கி, சேறும் சகதியுமாக அமைந்து விடுகிறது. மழை, வெயிலால் இதர துாண்களில் கருமை படிகிறது. பழமையான கருங்கல் துாண்களின் மீது நேரடியாக சூரிய ஒளிபடுவதால், கட்டடத்தின் உறுதித்தன்மை பாதிப்பிற்குள்ளாகிறது. இந்துசமய அறநிலையத்துறை மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் இணைந்து, பழமையான பிரகாரப்பணிகளை முடிக்க வேண்டும். கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை, குறைபாடாக உள்ள வேலையினை நிறைவு செய்து, பூர்த்தியாக்கிட வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஓதுக்கப்பட்ட நிதியின் மூலம் முதல்பிரகார பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.