பதிவு செய்த நாள்
23
ஜன
2018
11:01
கோவை: சகோதரி நிவேதிதை - 150 ரத யாத்திரை, கோவையில் நேற்று துவங்கியது. சகோதரி நிவேதிதை பிறந்து, 150 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அவரது கருத்துகள், போதனைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவரது உருவம் தாங்கிய ரதம், 27 மாவட்டங்கள் வழியாக, 30 நாட்கள், 3,000 கி.மீ., பயணித்து, இரண்டு லட்சம் மாணவியரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ரத யாத்திரை துவக்க விழா, கோவை நவஇந்தியா இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. திரைப்பட நடிகர் விவேக் பேசுகையில்,மறைந்த பின்னும் இளைஞர்களின் அடையாளமாக இருப்பவர் விவேகானந்தர். விவேகானந்தரின் பல்வேறு கொள்கைகளை, மாணவர்கள் பின்பற்ற வேண்டும்.
எப்போதெல்லாம் விவேகானந்தரின் நினைவு வருகிறதோ, அப்போது மனதில் புதிய உத்வேகம் பிறக்கும். இந்திய இளைஞர்களின் உள்ளத்தில் உத்வேகத்தை ஏற்படுத்தியவர் விவேகானந்தர். அவரது தவப்புதல்வியாக இருந்தவர், சகோதரி நிவேதிதை. வெளிநாட்டில் பிறந்து நம் நாட்டு மக்களுக்கு சேவை செய்தவர். அவர் போல், இன்றைய பெண்கள் சரித்தரம் படைப்பவர்களாக மாற வேண்டும், என்றார். உளுந்துார்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரம தலைவர் யதீஸ்வரி ராமகிருஷ்ணா ப்ரியாம்பா தலைமை வகித்தார். மாநில விழாக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வானதி சீனிவாசன், சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடம் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.