பதிவு செய்த நாள்
23
டிச
2011
02:12
அனுமனாக அவதரித்த சிவபெருமான்: அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான்.எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். எல்லோரையும் கலங்கச்செய்யும் சனிபகவனையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. இவர் அவதரிக்க போவதான செய்தியை வாயுபகவானுக்கு, பரம்பொருள் அறிவித்த ஊர், மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூர் ஆகும். இந்த ஊரில் தான் திருவாசகம் தந்த மாணிக்க வாசகர் அவதரித்தார்.
பகைவரை அச்சமுறச் செய்யும் வலிமையும், மேருமலையைக் குன்றச் செய்யும் உறுதியான மனோதிடமும் உடையவர் ஆஞ்சனேயர். இவர் சிறந்த கல்விமான்; ஆயினும் அடக்கம் உள்ளிட்ட பண்புகள் நிரம்பப் பெற்றவர். வெற்றியிலும் இவருக்கு ஒப்பானவர் இவ்வுலகில் யாருமில்லை என்கின்றன புராணங்கள். ஆஞ்சனேயரின் அடக்க குணத்தை வெளிப்படுத்தும் வண்ணம் ஆலயங்களில் உள்ள அவரது அர்ச்சாவதாரத் திருமேனிகளில் பல விநய ஆஞ்சனேயராகக் காட்சியளிக்கின்றன. இணையற்ற ராமபக்தரான அனுமன் பிரம்மச்சரியத்தை முழுமையாகப் பின்பற்றுபவர். ஆற்றல், சீலம், அறிவு, பக்தி, வெற்றி, வீரம், புலனடக்கம் என்று நிகரற்ற தன்மைகளைக் கொண்டவர். தனது இளம் வயதிலேயே சூரியனைப் பிடிக்கப் பாய்ந்தவர். சத்குருவின் அனைத்து குணங்களையும் ஒருங்கே பெற்றவர் மாருதி. உலக மக்கள் அனைவருக்கும் ராம நாமத்தை உபதேசிக் கும் ஆசானாக இவர் விளங்குகிறார்.
அனுமனிடம் விஷ்ணுவின் குணநலன்களும் உண்டு. அதேசமயத்தில் ருத்ராம்சமாகவும் இவர் கருதப்படுகிறார். ராமன் எப்படி சிவ பக்தராய்த் திகழ்கிறாரோ அதுபோல சிவனும் சிறந்த விஷ்ணு பக்தராக விளங்குகின்றார். திருமாலுக்குத் தொண்டு செய்வதற்காகவே பரமேஸ்வரன் அனுமனாக வடிவெடுத்தார் என்று சில புராணங்கள் கூறுகின்றன. அனுமன், பரமாத்மாவைப் போன்று என்றும் நிலையானவர்.. என்றும் நம்முடன் சிரஞ்சீவியாய் இருந்து, நமக்கெல்லாம் ராம நாமத்தின்மீது ருசியை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார். இவரை வணங்கிய மாத்திரத்தில் தைரியமும் ஞானமும் நமக்கு வளரும்; காமம் நசிந்து விடும். தனது பக்தர்களுக்கு புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்கு வண்மை போன்றவற்றைத் தருபவர் அஞ்சனை மைந்தர்.
பாரதப் போரில் அர்ஜுனனின் தேர்க்கொடியில் அமர்ந்து, கிருஷ்ண பகவான் பார்த்தனுக்கு உபதேசித்த பகவத் கீதையை நேரில் கேட்டவர் ஆஞ்சனேயர். கீதைக்கு தத்துவமயமான ஒரு விளக்கத்தை அனுமன் அருளியிருப்பதாகவும் சில பெரியோர்கள் கூறுவதுண்டு. சுந்தரன் என்பது ஆஞ்சனேயரின் அன்னை அஞ்சனாதேவி அவருக்கு இட்ட பெயர். இந் நாமத்தை வைத்தே வால்மீகி சுந்தர காண்டத்தை எழுதினார். சுந்தரகாண்ட பாராயணம் நமக்கு எல்லா நற்பலன்களையும் அளித்து, சீதா, லஷ்மண, பரத, சத்ருக்கன, ஹனுமத் சமேத ஸ்ரீராமபிரானின் திருவருளைப் பெற்றுத் தரும். அனுமனின் பிரபாவம் சொல்லப்பட்டதால்தான் சுந்தர காண்டத்துக்கு ராமாயணத்தில் உள்ள மற்ற காண்டங்களைவிட அதிகமான பெருமை வந்தது. எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் ஆஞ்சனேயரின் அனுக்ரஹம் நிறைந்திருக்கும்.
அனுமனின் குரு: அனுமனுக்கு குருவாக இருந்து கல்வி கற்றுக்கொடுத்தவர் சூரிய பகவான். அவருக்கு நன்றி கடன் பட்டிருந்த அனுமன், தங்களுக்கு குருதட்சணையாக என்ன தர வேண்டும்? என கேட்டார். சூரியன், தன் மகன் சுக்ரீவனுக்கு மந்திரியாக இருந்து அவனை வழிநடத்திச் செல்லும்படி கூறினார். அதன்படியே ஆஞ்சநேயர் சுக்ரீவனுடன் இருந்து, சூரியனுக்கு தன் நன்றியை செலுத்தினார்.
அனுமனும் ராமனும்: அனுமன் பிறர் நலமே தன்னலம் என நினைத்தவர். சுயநலமில்லாமல் ராமனுக்கு சேவை செய்தவர். அப்படிப்பட்டவர்களுக்கு கடவுளின் அருகில் இடம் பதிவு செய்யப்படும் என்பதை உணர்த்தவே, ராமன் அனுமனை தன்னருகில் அமரச் செய்துள்ளார்.
கிருஷ்ணனுக்கும் பிரியமானவர்: அனுமன் ராமனுக்கு மட்டுமல்ல! ராமாவதாரத்தை அடுத்து வந்த கிருஷ்ணாவதாரத்தில், அர்ஜுனனின் கொடியில் இருந்தவர் அவர். அவரது முன்னிலையிலேயே, கிருஷ்ணன் கீதையைப் போதித்தார். கண்ணனுக்கும் அனுமனுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. கண்ணன் அர்ஜுனனின் தேரில் சாரதியாக அமர்ந்து இருந்தார். மாருதி பார்த்தன் தேரில் வெற்றிக் கொடியாக இருந்தார். கண்ணன் பாண்டவர்களுக்காக துரியோதனனிடம் தூது சென்றார். ஆஞ்சநேயர் ராம லட்சுமணர்களுக்காக ராவணனிடம் தூது சென்றார். கண்ணன் கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து கோகுலத்து மக்களைக் காப்பாற்றினார். ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்து லட்சுமணனைக் காத்தார். இருவருமே விஸ்வரூப தரிசனம் தந்தவர்கள்.
ராமனுக்கு நிகரான புகழ்: தசரத மகாராஜாவுக்கு குழந்தைகள் இல்லை. புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, பாயாசம் பெற்று தன் தேவியருக்கு கொடுத்தார். ராம சகோதரர்கள் பிறந்தனர். இதன் ஒரு பகுதியை, வாயுபகவான், அஞ்சனையிடம் கொடுத்தார். அவளும் கர்ப்பவதியாகி ஆஞ்சநேயரைப் பெற்றெடுத்தாள். எனவே, சம வலிமையுள்ளவர்களாக ராமனும், ஆஞ்சநேயரும் உள்ளனர். இதனால் ராமனின் அளவுக்கு, ஆஞ்சநேயருக்கும் புகழ் ஏற்பட்டது என்று மராட்டிய மாவீரர் சிவாஜியின் குரு ராமதாசர் ஒரு கதையில் கூறியுள்ளார். சத்குரு தியாகப்பிரம்மம் தனது கீர்த்தனையில், அனுமனை ருத்ரனின் அம்சம் என்கிறார். அதாவது சிவாம்சம் பொருந்தியவர் அனுமன்.
கர்ணனைப் போல அனுமன்: காதில் ஸ்வர்ண குண்டலங்களுடன் பிறந்த குந்திதேவியின் மகன் கர்ணனைப் போலவே, அனுமனும் காதணிகளுடன் அவதரித்தவர்தாம்! கிஷ்கிந்தாவின் இளவரசனாக இந்திரனின் புத்திரன் வாலி இருந்தபோது, பிற்காலத்தில் தன் மரணத்துக்குக் கார்ணகர்த்தாவாக அஞ்சனா தேவியின் கருவில் உதிக்கப்போகும் அனுமன் இருக்கப்போகிறான் என்பதை ஜோதிட வல்லுநர்கள் மூலம் அறிந்தான். அந்த எதிரியை முளையிலேயே கிள்ளியெறிய கங்கணம் கொண்டு ஒரு வஞ்சக வழியைத் தேர்ந்தெடுத்தான். தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு மற்றும் வெள்ளியம் ஆகிய உலோகக் கலவையினால் அம்பு ஒன்றைத் தயார் செய்தான். அஞ்சனாதேவி ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது, அந்த அம்பை அவள் வயிற்றில் எய்தான். ஆனால், அஞ்சனை சுமப்பது சிவனருள் பெற்ற கருவல்லவா!
அம்பு வயிற்றில் பட்டவுடன், முக்கண்ணனின் கோபப் பார்வையால் அந்த அம்பு உருகி, எவ்வித சேதத்தையும் ஏற்படுத்தாமல் போனது. பதிலாக அது கர்ண குண்டலங்களாக உருமாறி, கருவிலிருந்த குழந்தையின் காதுகளில் அற்புத அணிகலன்களாக அணிவிக்கப்பட்டுவிட்டது. அவையே அனுமனின் முதல் வெற்றிச் சின்னங்களாக அமைந்துவிட்டது. கெட்ட மதி கொண்ட வாலியால், கடைசிவரை விதியை மட்டும் வெல்ல முடியவில்லை.
ராமனைப் பற்றி அனுமன்: ராம பக்தனான அனுமன், தானைத் தலைவனின் சரிதையைத் தானும் தன் பங்குக்கு எழுத விரும்பினார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த இடம் இமயமலைச் சாரல். ராமரின் வீரதீர பராக்கிரமச் செயல்களைச் சுவைபட, தன் விரல் நகங்களாலேயே இமயமலைப் பாறைகளின் மீது பொறித்தார். அதைப் படித்துப் படித்து மகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் விடுவார். இதையறிந்த வால்மீகி முனிவர், அனுமன் எழுதியுள்ள கதை எப்படி இருக்கும் என்று அறிய விரும்பினார். இமயமலைச் சாரலுக்குச் சென்று அனுமனின் வாய்வழியே படிக்கக் கேட்டு, எல்லையில்லா மகிழ்ச்சியும் அதேசமயம் ஆற்றொணாத் துயரமும் அடைந்தார் வால்மீகி. ஆனால் இதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அனுமனின் கவித் திறமையைக் கண்டு மகிழ்ந்தார். பின் புகழ்ந்தார். தான் இயற்றிய காவியத்தைவிட பல விதத்தில் உயர்ந்து விளங்குவதையும் கண்டு மன சஞ்சலமும் கொண்டார். இதை எப்படியோ அறிந்துவிட்ட அனுமன், வால்மீகி கவிக்குக் களங்கம் ஏற்படாமல் இருப்பதற்காக, தான் ராமகாதை எழுதிய பாறைகளையெல்லாம் பொடிப்பொடியாக உடைத்தெறிந்துவிட்டார். வால்மீகி முனிவரின் ராமாயணத்தைப் படிப்பதிலும், அதைப் பிறர் சொல்லிக் கேட்பதிலும்தான் தனக்குப் பெருவிருப்பம் என்று வால்மீகிக்குச் சொல்லாமல் சொல்லிவிட்டார். அனுமனின் செயலால் நெகிழ்ந்த வால்மீகி, அவரை ஆர அரவணைத்து ஆசி வழங்கினார்.
உலகை எப்படி பார்க்கிறீர்கள்: ராமதாசர், ராமாயணம் எழுதிக் கொண்டிருந்த போது தனது சீடர்களுக்கு, அதைப் படித்துக் காட்டுவார். அப்போது யாரும் அறியாமல் அனுமன் அங்கு வந்து அமருவார். ஒரு முறை அசோகவனத்தில் வெள்ளை மலர்களை அனுமன் பார்த்ததாக ராமதாசர் சீடர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அனுமன், நான் வெள்ளை மலர்களை பார்க்கவில்லை, சிவப்பு மலர்களை தான் பார்த்தேன் என்றார். ராமதாசர் அதை மறுத்தார். பார்த்த நானே சொல்லும் போது திருத்திக் கொள்ள வேண்டியது தானே என அனுமான் வாதிட, வழக்கு ராமனிடம் சென்றது. அவர், ஆஞ்சநேயா! நீ பார்த்து வெள்ளை மலர்களைத் தான் என தீர்ப்பளித்தார். அதற்கான விளக்கத்தையும் அவர் சொன்னார். அசோகவனத்தில் நீ இருந்த போது, உனது கண்கள் கோபத்தால் சிவந்திருந்தன. அதனால் அந்த மலர்களும் சிவப்பாக தோன்றின. நாம் உலகை எந்த நோக்கில் பார்க்கிறோமோ அதன்படி தான் நமக்கு அது தெரியும் என்றார்.
அனுமனுக்கு ஏன் குரங்கு முகம்: உலக நன்மைக்காக அனைவராலும் கேலி செய்யப்படும் குரங்கின் முக வடிவை விரும்பி ஏற்றுக் கொண்டவர் அனுமன். தன்னிலும் தாழ்ந்தவர்களை ஆதரித்து, பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை இந்த வடிவம் வலியுறுத்துகிறது. அவரிடம் தன்னைப் பற்றிய நினைப்பதென்பது சிறிது கூட இல்லை. உலக ஜீவன்கள் எல்லாரிலும் உயர்ந்தவர், தெய்வமகன், புத்திமான். எந்த இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்க கூடியவர், புண்பட்ட உள்ளங்களுக்கு மருந்து தடவும் மாருதி. நல்லவர்களைக் காப்பாற்றும் சமய சஞ்சீவி.
துவங்குவது ஆனைமுகனிடம் முடிவது அனுமனிடம்: விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை ஆத்யந்த பிரபு என்பர். ஆதி+அந்தம் என்பதையே இவ்வாறு சொல்கிறார்கள். ஆதி என்றால் முதலாவது. முதல் கடவுள் விநாயகர். அந்தம் என்றால் முடிவு. விநாயகரை வணங்கி ஒரு செயலைத் துவங்கினால், அனுமன் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பார். ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது ஆத்யந்த பிரபு வடிவம். பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்டுள்ளோர், இந்த இரண்டு பிரம்மச்சாரிகளும் இணைந்த வடிவத்தை தங்கள் இஷ்ட தெய்வமாகக் கொண்டுள்ளனர். அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர். சென்னை தரமணி அருகிலுள்ள மத்திய கைலாஷ் கோயிலில் ஆத்யந்த பிரபுவுக்கு சந்நிதி உள்ளது.
சிலை வடிப்பது எப்படி: ஆஞ்சநேயரை நான்கு வகையாக சிலை வடிப்பதுண்டு. இரண்டு கரங்களையும் இணைத்து கூப்பி தலைமேல் வைத்து வணங்கும் நிலையில் உள்ளவர் பக்த அனுமான். கூப்பிய கையை மார்புக்கு நேராக வைத்திருந்தால், அபயஹஸ்த அனுமான். ஓரு கையில் கதையும் மற்றொரு கையில் சஞ்சீவி மலையும் கொண்டிருந்தால் வீர அனுமான். ராமனை தன்தோள் மேல் சுமந்தபடி ஐந்து முகங்கள் கொண்டிருந்தால் பஞ்சமுக ஆஞ்சநேயர். பத்துகைகளுடன் விளங்கும் ஆஞ்சநேயர் தசபுஜ ஆஞ்சநேயர்.