பதிவு செய்த நாள்
05
பிப்
2018
11:02
மதுரை: மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலில், தீ விபத்தில் சேதமுற்ற கட்டடங்களின் ஸ்திரத்தன்மை, தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து கண்டறிய, பெங்களூரு ஐ.ஐ.டி., பொறியாளர்கள், நிபுணர் குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர். இக்கோவிலில், பிப்., 2, இரவு, 10:30 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில், வீரவசந்தராயர் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்தது.
ஸ்திரத்தன்மை : சுவாமி சன்னதி செல்லும் வழியிலிருந்த 50 கடைகள், தீயில் எரிந்து நாசமாயின. தீயணைப்பு படையினர், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி, தீயை அணைத்தனர். வீரவசந்தராயர் மண்டப இடிபாடுகளில் கிடந்த கல் துாண்கள், சுவர்கள், நேற்று, மூன்றாவது நாளாக வெப்பமாக இருந்தன. இச்சூட்டை தணிக்க, நேற்றும், மாநகராட்சி லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, கல்துாண்கள், இடிபாடுகளில் இருந்த வெப்ப சலனத்தை தணிக்க, தீயணைப்பு துறையினர், தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.உயர்மட்ட குழு ஆய்வு நடத்த ஏதுவாக, கட்டட இடிபாடுகள் அகற்றப்படவில்லை. தீ விபத்திற்கான காரணம், சேதமடைந்த கட்டடங்கள், மற்ற பகுதி கட்டடங்களின் ஸ்திரத்தன்மை போன்றவை குறித்து ஆராய, அறநிலையம், பொதுப்பணி, வருவாய் துறைகள், பெங்களூரு ஐ.ஐ.டி., பொறியாளர்கள் இடம்பெற்றுள்ள குழுவினர், இன்று வருகின்றனர்.இதற்கிடையில், நேற்று கோவிலில் வழக்கம் போல, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கூட்டம் குறைவாக இருந்தது. அம்மன் சன்னதியில் மட்டும், ஓரிரு பூக்கடைகள் தவிர, மற்ற கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு கருதி, புதுமண்டபத்தில் இருந்த கடைகளும் அடைக்கப்பட்டன.
கடைகள் அகற்றம் : கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, கடைகளை அகற்றுவது குறித்து, உயர்மட்ட நிபுணர் குழு அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்க, நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. கோவில் இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: ஏற்கனவே கடைகளை மூடக்கோரி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில், ஒன்பது கடைகளுக்கு எதிரான நோட்டீஸ், இணை கமிஷனர் தலைமையிலான தீர்ப்பாயத்தில், பிப்., 14ம் தேதி விசாரணைக்கு வருகிறது. உயர்மட்ட குழு ஆய்வுக்காக, கட்டட இடிபாடுகள் அகற்றப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது: எதிர்காலத்தில், கோவிலில் தீ விபத்து ஏற்படாதவாறு, தீ தடுப்பு முறைகள் மேற்கொள்வது குறித்து, தனி குழு ஏற்படுத்தப்படும். அக்குழு, கோவிலை முழுமையாக ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின்படி, கோவில் நிர்வாகத்துடன் ஆலோசித்து, நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது தீ விபத்தில் சேதமடைந்த கட்டடங்கள், துாண்களின் ஸ்திரத்தன்மையை கண்காணித்து வருகிறோம். உயர்மட்ட குழுவும் ஆய்வு செய்யவுள்ளது. கடைகளை அகற்றுவது குறித்து, கோவில் நிர்வாகத்துடன் ஆலோசித்து, ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.