பதிவு செய்த நாள்
05
பிப்
2018
12:02
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் விபரீதம் ஏற்படுவதை தடுக்க, கோயிலுக்குள் செயல்படும் கடைகளை அகற்ற இந்து அறநிலையத்துறை முன்வர வேண்டும்.ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் 50 ஆயிரம் பக்தர் வந்து செல்கின்றனர். 2013ல் பாதுகாப்பு கருதி கோயில் ரதவீதியில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்து கோயில் கிழக்கு, மேற்கு வாசல் வழியாக செல்லும் பக்தர்களை சோதனைக்கு பிறகு கோயிலுக்குள் செல்ல அனுமதித்தனர்.பிரசித்தி பெற்ற இக்கோயில் மேற்கு கோபுர வாசல் இருபுறமும் 44 கடைகள் பல ஆண்டுகளாக உள்ளது.
கோயிலை உருவாக்கிய முத்துராமலிங்க சேதுபதி மன்னர் சிலையும் வணிக கடைக்குள் புதைந்து கிடப்பதால்,வசந்த உற்சவத்தன்று மன்னர் சிலைக்கு பரிவட்டம், பூஜை செய்ய முடியாத அவலம் உள்ளது.இக்கடைக்கு வாடகை வசூலித்த கோயில் நிர்வாகம், பக்தர்கள் சிரமமத்தால் சில ஆண்டுக்கு முன்பு கடைகளை அகற்றி கொள்ள நோட்டீஸ் அனுப்பியும், பலனில்லை.இக்கடையில் பிளாஸ்டிக், மர பொம்மைகள் விற்பதால், பிப்.,3ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஏற்பட்ட தீ விபத்து போல், ராமேஸ்வரம் கோயிலில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கோயிலுக்குள் அசம்பாவிதம் ஏற்படும் முன் கடைகளை அகற்ற, இந்து அறநிலையதுறை ஆணையர் உத்தரவிட வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கூறுகையில்:ராமேஸ்வரம் கோயில் மேற்கு நுழைவு வாசல் இருபுறமுள்ள வணிக கடைகள் பிரகார நடைபாதையை ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் சிரமபடுகின்றனர். இக்கடையில் எளிதில் தீ பிடிக்க கூடிய பொம்மைகள் விற்பதால், மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட விபரீதம் போல், இங்கும் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது. எனவே கோயிலுக்குள் உள்ள கடைகளை அகற்ற இந்து அறநிலையதுறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.