பதிவு செய்த நாள்
06
பிப்
2018
11:02
மதுரை : மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுலபமாக தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வர இயலாதபடி, வழித்தடங்கள் அனைத்தும், தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் தடுப்புகள் தீயணைப்பு வாகனம் சுலபமாக வர வழியில்லை வி.ஐ.பி.,க்கள் வருவதற்காக மட்டும், கிழக்கு மற்றும் தெற்கு சித்திரை வீதி சந்திப்பில் உள்ள வழித்தடம், 24 மணி நேரமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தாமதம்: மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரம் முன், தீயணைப்பு மினி வாகனம் நிறுத்தப்படுவது வழக்கம். கடந்த பிப்.,2ல், தீ விபத்து நடந்தது. மினி வாகனத்தில் போதுமான தண்ணீர் இல்லாததால், தீயை அணைக்க இயலவில்லை. அடுத்தடுத்து தண்ணீர் வாகனங்கள், கிழக்கு மற்றும் தெற்கு சித்திரை வீதிகளின் சந்திப்பு வழியாக வர, 2 கி.மீ., சுற்றி வந்ததால், தாமதம் ஏற்பட்டது. இதனால், தீயை உடனடியாக கட்டுப்படுத்த இயலவில்லை. மேற்கு கோபுரம், வடக்கு கோபுரம், அம்மன் சன்னதி, மேற்கு மற்றும் தெற்கு சித்திரை வீதி சந்திப்பு உள்ளிட்ட, அனைத்து முக்கிய வழித்தடங்களை, தடுப்புகளால் நிரந்தரமாக அடைத்து விட்டனர்.எனவே, விபத்து காலங்களில் துரிதமாக செயல்பட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தெற்கு மற்றும் மேற்கு சித்திரை வீதி சந்திப்பில் இருந்து, நேதாஜி ரோடு வரை, சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் ஏராளமாக உள்ளன.
கப்பம்: கண்டுகொள்ளாமல் இருக்க, போலீசாருக்கு ஆக்கிரமிப்பாளர்கள், கப்பம் கட்டுகின்றனர். சுலபமாக தீயணைப்பு வாகனம் வர இயலும் வழித்தடமாக, இது இருந்தாலும், தடை செய்யப்பட்டிருந்ததால், பிப்.,2ல் நடந்த பயங்கர தீயை, உடனடியாக தடுக்க இயலாமல் போனது. முக்கிய வழித்தடங்களை திறந்து விட்டால் மட்டுமே,விபத்து காலங்களில் தீயணைப்பு, ஆம்புலன்ஸ் சுலபமாக வர இயலும். முக்கிய வழித்தடங்களில், தேவைக்கு ஏற்ப திறந்து மூடுவது போல் கேட் அமைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம் என, பக்தர்கள் கருதுகின்றனர்.
கடைகளை மூட நீதிமன்றத்தில் வழக்கு: கன்னியாகுமரி வழக்கறிஞர், அப்துல் கலாம் ஆசாத் சுல்தான், தாக்கல் செய்த மனு: அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ், 30 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. பல கோவில்கள் பராமரிப்பின்றி, சிதிலமடைந்துள்ளன. சமூக, பொருளாதார செயல்பாடுகளில், இந்து கோவில்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. கோவில்களை முறையாக பராமரிக்காமல், அவற்றின் வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்த, அறநிலையத் துறை அனுமதித்துள்ளது.
வரலாறு, கலாசாரத்தை கருத்தில் கொள்வதில்லை. முதல்நிலை கோவில்களில், காற்றோட்ட வசதியுடன் கட்டுமானம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், ஆகம விதிகளுக்கு புறம்பாக, குளிர்சாதனம் உட்பட, பல்வேறு மின்சாதனங்களை பொருத்தியுள்ளனர். இவை, தீ விபத்திற்கு வழி வகுக்கின்றன. மீனாட்சி அம்மன் கோவில், பழங்கால பாரம்பரியமிக்கது. இங்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணியர் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல, தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிப்.,2 இரவில், அங்குள்ள கடைகளில் பற்றிய தீ, பெரிய அளவில் பரவியது. கோவில் கட்டுமான விதிகளை பின்பற்றாமல், கடைகளை வாடகைக்கு அனுமதிக்கின்றனர்.
வணிக நோக்கில் கோவில் வளாகம் பயன்படுத்தப்படுவதால், விபத்து நேரிடுவதற்கு, முன்னுதாரணமாக இது உள்ளது. கோவில் வளாகங்களை, வணிக நோக்கில் பயன்படுத்தும் வகையில், பழமையான கட்டுமானங்களை சட்டவிரோதமாக மாற்றியமைக்கக்கூடாது. மாற்றியமைக்கப்பட்ட கட்டுமானங்களை, பழைய நிலைக்கு கொண்டுவரும் வகையில், கோவில் உள்பகுதி கடைகளை மூட, நடவடிக்கை எடுக்க, அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்துள்ளார். மனு, விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்பட உள்ளது.