மீனாட்சி அம்மன் கோவிலில் பிரசாதம் சமைக்கும் புகையால் மாசடையும் புராதன கோபுரங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2018 04:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சமையல் புகையால், புராதன கோபுரங்கள், கலைநயமிக்க கோயில் கட்டடங்கள் மாசடைந்து வருகின்றன. மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளம் கிழக்கு பகுதியில் பிரசாதம் தயாரிக்கும் பெரிய சமையல் கூடம் உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட சமையல் மாஸ்டர்கள் வேலை பார்க்கின்றனர். இங்கு சமையல் காஸ் பயன்படுத்தி அப்பம், லட்டு தயாரிக்கப்படுகின்றன.
புளியோதரை, பொங்கல் உள்ளிட்டவை தயாரிக்க விறகை எரிபொருளாக பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து கிளம்பும் கரும்புகை கோபுரங்கள் மற்றும் கோயில் உள் பிரகாரங்களில் பரவி மாசடைய செய்கிறது. கலைநயம் மிக்க கோபுரங்கள், கோயிலின் புராதன கட்டடக்கலையை காற்று மாசடைவில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு சித்திரை வீதிகளில் டீசல், பெட்ரோல் வாகனங்கள் நுழைய தடை உள்ளது. எனினும் கோயிலுக்கு வி.ஐ.பி.,க்கள் வரும்போதெல்லாம் ஏராளமான வாகனங்கள் கிழக்கு சித்திரை வீதிகளில் அணி வகுப்பது வழக்கமாகி விட்டது. வாகனங்கள் நுழைய தடை இருக்கும்போது, கோயிலுக்குள் விறகு அடுப்பு தாராளமாக பயன்படுத்தப்படுகிறது. சமையல் கூடம் நவீனமயமாகி வரும் நிலையில் கோயிலுக்குள் எரி பொருளாக விறகு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். மாற்று ஏற்பாடாக சமையல் காஸ், மின்சார சமையல் கூடம் அமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.