மீனாட்சி அம்மன் கோயிலில் புனரமைப்பு பணி துவக்கம் : கலெக்டர் தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2018 04:02
மதுரை: ”மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தராய மண்டபம் பகுதியில் புனரமைப்பு பணி துவங்கியுள்ளது. இதை தவிர கோயிலில் வேறு எங்கும் சேதம் ஏற்படவில்லை,” என கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.தீ விபத்து சம்பவத்துக்கு பின் சேதமடைந்த வீர வசந்தராய மண்டபத்தின் மேற்கூரைகளில் இரும்பு கர்டர் கொண்டு முட்டுக்கொடுக்கும் பணியை கலெக்டர் வீரராகவராவ் நேற்று ஆய்வு செய்தார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த பிப்.,2ல் ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசந்தராய மண்டபத்தின் 7,000 சதுர அடி இடிந்தது. இதை சீரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. துாண்களை முட்டுக் கொடுக்கும் பணிகள் தற்போது நடக்கிறது. அரசு உத்தரவுப்படி, அனைத்து துறைகளை உள்ளடக்கிய சிறப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை கமிஷனர் தலைமையில் 12 வல்லுனர்கள் அடங்கிய உயர் தொழில்நுட்பக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் உள்ள ஒரு சில துறைகளின் வல்லுனர்கள் ஆய்வினை துவக்கியுள்ளனர்.இக்குழுவினர் தீ விபத்தில் சேதமடைந்த மண்டபத்தின் உறுதித்தன்மை மற்றும் சீரமைப்பு குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிப்பர். தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் உள்ள கட்டட கழிவுகளை அகற்ற ஏற்ற சூழல் குறித்து ஆய்வுகள் நடக்கிறது. கோயில் முழுவதும் பாதுகாப்பு குறித்து ஆய்வுகள் செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தீ விபத்தில் வீர வசந்தராய மண்டபம் தவிர மற்ற இடங்களில் பாதிப்புகள் ஏற்படவில்லை. பசுபதிநாதர் சன்னதியில், எவ்வித பாதிப்பும் இல்லை. ஏற்கனவே இடிந்த இடத்தில் சில இடங்களில் மேற்கூரை விழுந்துள்ளது. தொழில்நுட்ப குழுவின் முதல் கட்ட ஆய்வில் ஆயிரங்கால் மண்டத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது, என்றார்.ஆய்வுக்குழு தலைவர் பொதுப்பணித்துறை ஓய்வு முதன்மை பொறியாளர் பாலசுப்பிரமணியன், கோயில் இணை கமிஷனர் நடராஜன் உடனிருந்தனர்.