பதிவு செய்த நாள்
09
பிப்
2018
11:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தீ விபத்துக்கு காரணமான கடைகள், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இன்று காலி செய்யப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் முடுக்கிவிட்டு உள்ளது. கோவிலின் நான்கு கோபுரங்களின் கீழ் பகுதிகள், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, வீர வசந்தராய மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில், 115 கடைகள் நடத்தப்படுகின்றன.
வீர வசந்தராய மண்டபம் பகுதியில் மட்டும், 86 கடைகள் இயங்கின. பிப்., 2 இரவு, 10:15 மணிக்கு, கடை எண்: 75, 76ல் இருந்து கரும்புகை வெளியேறியது. தீ, அருகில் உள்ள மற்ற கடைகளில் வேகமாக பரவியது. பல மணி நேர போராட்டத்திற்கு பின், தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்துக்கு காரணமான கடைகளை, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்குள் காலி செய்யும்படி, கோவில் இணை கமிஷனர், நடராஜன் உத்தரவிட்டார்.கடைகளை காலி செய்ய அவகாசம், மாற்று இடம் ஒதுக்கும்படி, கடை உரிமையாளர்கள் கோரினர். இதை, இணை கமிஷனர் ஏற்கவில்லை. இதையடுத்து, கடை உரிமையாளர்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதில் கடைகளை, இன்று மதியம், 12:00 மணிக்குள் காலி செய்ய உத்தரவிட்டது. அதன்படி, கடைகள் இன்று காலி செய்யப்படுகின்றன. தீ விபத்து நடந்த பகுதியில் உள்ள கடைகளை, பாதுகாப்புடன் காலி செய்ய, கோவில் நிர்வாகம், ஊழியர்கள், தீயணைப்பு குழுவினரை நியமித்துள்ளது. மாநகராட்சி சார்பில் கட்டப்படும், குன்னத்துார் வணிக வளாகத்தில், தங்களுக்கு கடைகள் ஒதுக்க, கலெக்டர் வீரராகவ ராவ், மாநகராட்சி கமிஷனர், அனீஷ் சேகர் ஆகியோர் மனது வைக்க வேண்டும் என, கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.