மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது.
மீனாட்சி கோயிலில் தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு: மீனாட்சி கோயிலில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தீவிபத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் மட்ட குழு அமைக்க வேண்டும் எனக்கூறினார்.
தடை: இந்த வழக்கை விசாரித்த கோர்ட், மீனாட்சி கோயிலுக்குள் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் தவிர பார்வையாளர்கள், பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்லக்கூடாது. கோயிலுக்கு மத்தியபடை பாதுகாப்பு அளிப்பது குறித்து மத்திய அரசுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்த வேண்டும். நவீன ரக தீ தடுப்பு சாதனங்களை அமைக்க வேண்டும். இதனை கையாள்வது குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மீனாட்சி கோயிலில் இருந்து 1 கி.மீ., சுற்றளவுகளில் 9 மீட்டர் மேல் உயரமுள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும். கோயிலில் அதிகளவில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். தேவைப்பட்டால் முழு மின் இணைப்பையும் ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறியதுடன், இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 12 நாளுக்கு ஒத்திவைத்தது.