பதிவு செய்த நாள்
12
பிப்
2018
02:02
இந்து மதம் குறித்து எதிர்கருத்து தெரிவித்தால், அதை அறிவால் கையாள வேண்டும், என, கே.பி.தேவராஜர் சுவாமி கூறினார். சென்னை, தி.நகரில், லாங் லிவ் ஹிந்து தர்மா அமைப்பு சார்பில், இந்து தர்மத்தில் இளைஞர்களின் பங்களிப்பு எனும் தலைப்பில், சிறப்பு கருத்தரங்கு, நேற்று நடந்தது.
வன்முறை கூடாது: இதில், கருத்தரங்க நடுவராக இருந்த, கே.பி.தேவராஜர் சுவாமி பேசியதாவது: இந்து தர்மம் என்பது, தனிப்பட்ட இந்து மதம் அல்ல; இது, பல மதங்களின் கூட்டு. இதில் சைவம், வைணவம், அத்வைதம், இஸ்கான் போன்ற இயக்கங்கள் என, பல உண்டு. இத்தனை வேறுபாடுகள் இருந்தும், இவற்றுக்குள்ளே சண்டை வராது. ஒன்றின் உரிமையில் இன்னொன்று தலையிடும் போது வரும். இந்து தர்மம், வெகுகாலங்களுக்கு முன், வைதீக தர்மம், சனாதன தர்மம் என பெயருண்டு என்கின்றனர்; எத்தனை பெயர் இருந்தாலும், கோட்பாடு ஒன்று தானே. இப்படிப்பட்ட இந்து மதம், தற்போது வாட்டம் அடைந்திருக்கிறது. இந்து தர்மம் தொடர்பாக, ஒத்தக்கருத்தை யாராவது சொன்னால், அவரிடம் உணர்ச்சியை வெளிப்படுத்துங்கள். எதிர்கருத்தை சொல்பவர்களிடம், உங்கள் அறிவை காட்டுங்கள். அதைவிடுத்து, வன்முறை செயல்களில் ஈடுபட போவதாக, யாரும் சொல்லக்கூடாது. இந்து மதம், ஒருபோதும் அப்படி சொன்னது கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.
பெண்கள் பாதிப்பு: திரைப்பட இயக்குனரும், நடிகருமான விசு பேசியதாவது: நான், டிவி நிகழ்ச்சிகளுக்காக, 22 ஆண்டுகள், ஊர் ஊராக சென்றேன். அங்கெல்லாம், இந்து தர்மத்தை ஒவ்வொருவரிடமும் சொல்வேன். இது, ஒரு தொடர் ஓட்டம் போல், அவர், இன்னொருவரிடம் சொல்வார். டிவி தொடர்களால், பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சீரியலை விட்டு வெளியே வந்தால், குழந்தைகள், கணவர் நன்றாக இருப்பர்.இந்து தர்மத்திற்காக, நான் தொடர்ந்து மேடையில் பேசுவேன். அதற்கான சக்தியை, கடவுள் தருவார்.இவ்வாறு அவர் பேசினார். எஸ்.வி.சேகர் பேசுகையில், இந்து மதம், எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல. அதற்காக, இந்து மதத்தை, யார் என்ன சொன்னாலும், அதைக்கேட்டு நகைப்பவர், இந்து மதத்தினர் கிடையாது. சாம, தான, பேத, தண்டம் எங்களுக்கும் தெரியும். நம்முடைய நேர்மைதான் நம் தைரியம், என்றார். - நமது நிருபர் -